பெண்ணாகடம் பா.பிரதாப்
சிறுகதை வரிசை எண்
# 108
வணக்கம்.
உறுதிமொழிக் கடிதம்:
'தாயுமானவர்' என்ற தலைப்பில் நான் எழுதி தங்களுக்கு அனுப்பி வைக்கும் இச்சிறுகதை என் சொந்த கற்பனை படைப்பு என்று உறுதி அளிக்கிறேன். இச்சிறுகதைப் போட்டி முடிவு வெளியாகும் வரை என் சிறுகதையை வேறு எங்கும் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.என் சிறுகதையை பரிசீலனை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
'தாயுமானவர்'
'ராம கிருஷ்ணன்' தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தார்.கார் மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது. ராம கிருஷ்ணனுக்கு அருகில் அவர் மகன் 'நரேன்' அமர்ந்திருந்தான்.
ராம கிருஷ்ணன் கடந்த முப்பது வருடங்களாக சென்னையில் உள்ள கேளம்பாக்கம் என்கிற பகுதியில் தான் வசித்து வருகிறார். கேளம்பாக்கத்தில் அவருக்கென்று சொந்தமாக 50 ஏக்கர் நிலம் உள்ளது.அவர் நினைத்திருந்தால்,தன் தேவைக்கு போக மீதி நிலங்களை ஃப்ளாட் போட்டு விற்பனை செய்திருக்கலாம். இல்லையேல்,ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்,தியேட்டர், அபார்ட்மெண்ட் என கட்டிடங்கள் கட்டி காசு பார்த்திருக்கலாம்.ஆனால், அவர் அதையெல்லாம் செய்யாமல் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.நெல்,கம்பு, கேழ்வரகு,சோளம் முதல் மா,பலா,வாழை,தென்னை மூலிகைத் தோட்டம் என பயிரிட்டு வளர்த்து வருகிறார்.
'சென்னையில் ஒரு சொர்க்கம்' என்று சொல்லும் அளவிற்கு அவர் பண்ணை எழில் மிகுந்து காணப்படுகிறது.ராம கிருஷ்ணனின் மனைவி பெயர் 'ராதா'.பதினேழு வருடத்திற்கு முன்பு பிரசவத்தின் போது நரேன் என்னும் ஆண் குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு அந்த மகராசி இறந்துவிட்டாள்.
ராம கிருஷ்ணனுக்கு உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.அவர் உடைந்து போனார். இருப்பினும்,தங்கள் இல்லற வாழ்க்கைக்கு சான்றாக பிறந்த மகனை நல்லபடியாக படிக்க வைத்து,இந்த சமூகத்தில் ஒழுக்கம் மிக்க சிறந்த மனிதனாக உருவாக்கி வாழ வைக்க வேண்டுமென உறுதி எடுத்துக் கொண்டார்.தன் மகனின் நலனுக்காகவே மறுமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.
இன்று நரேனிற்கு பிறந்த நாள்.அதுமட்டுமின்றி,நாளை முதல் நரேன் கல்லூரிக்கு செல்ல இருக்கிறான்.நடந்து முடிந்த பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற காரணத்தினால் ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரியில் அவனுக்கு சீட் கிடைத்தது.தற்சமயம் 'கம்யூட்டர் இஞ்சினியரிங்' பிரிவிற்கு நிறைய பணியிடங்களும் உள்ளன. அதுமட்டுமின்றி,நரேன் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் படிக்கவுள்ள கல்லூரியில வருடம் தவறாமல் மிகப்பெரிய கம்பெனிகள் மூலம் கேம்பஸ் இண்டர்வீயூம் நடத்தப்படுகிறது.நரேனிற்கு இஞ்சினியரீங் படிக்கும் ஆசை இருந்தாலும், பிற்காலத்தில் தன் தந்தையைப் போல இயற்கை விவசாயம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்பது அவன் இதய அறைக்குள் ஒளிந்திருக்கும் ஆசை !
இதுவரை தன் மகனின் பிறந்த நாளை ராம கிருஷ்ணன்
கொண்டாடியதே இல்லை.ஏனெனில்,தன் மகனின் பிறந்த நாளும்,தன் மனைவியின் நினைவு நாளும் ஒரே தினத்தில் வருவதால் தான்.ஆனால்,இன்று தன் மகன் நரேனின் பிறந்த நாளை முதன் முறையாக கொண்டாட எண்ணி,அவனை காரில் அழைத்துக் கொண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நோக்கி தன் காரை செலுத்திக் கொண்டிருந்தார்.
கபாலீஸ்வரர் கோயில் !
அவர்கள் இருவரும் கோயிலுக்குள் நுழையும் போது,கோயில் மணி கணீர் என ஒலித்தது.கோயில் கோபுரத்தில் ஆங்காங்கே அமர்ந்திருந்த புறாக்கள் சர்ரென்று பறந்து சென்றன.இருவரும் இறைவனை தரிசனம் செய்துவிட்டு கோயில் மண்டபத்தில் ஒரு ஓரமாக அமர்ந்தனர்.
"நரேன் !" என ராம கிருஷ்ணனன் அழைத்தார்.
"சொல்லுங்கப்பா..."
"உன் மனசு இப்போ எப்படி இருக்கு?"
"மனசு நிம்மதியா இருக்குப்பா.ஏன்ப்பா திடீர்னு இந்த கேள்வி கேக்குறீங்க?" என்று ஐயத்தோடு,நரேன் வினவினான்.
"நரேன் ! வாழ்க்கையில் ஒண்ணு மட்டும் புரிஞ்சிக்கோ...ஆசை நமக்குள்ள இருக்கணும்.ஆசைக்குள்ள நாம இருக்கக் கூடாது.நிம்மதி போயிடும்" என்று தத்துவ ரீதியாக ஒரு பதில் அளித்தார்.
நரேன், தன் தந்தை சொன்னவற்றை மனதில் அசைபோட ஆரம்பித்தான்.
அவரே தொடர்ந்தார்.
"சரி ! புறப்படலாமா?"
"போகலாம் பா" என்றான்,நரேன்.
இருவரும் கோயிலை விட்டு வெளியே வந்துக் கொண்டிருக்கும் போது,கோயிலின் கோபுர வாசல் அருகே இருந்த நான்கு யாசகர்கள் ஒரே குரலில் "ஐயா ! சாமி,எதாவது தர்மம் செய்யுங்க !" என்று ராகம் பாடினர்.
உடனே,நரேன் சற்றும் தாமதிக்காமல் கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு கடைக்கு சென்று நான்கு பிரட் பாக்கெட்டுகள் வாங்கி அவர்களுக்கு கொடுத்தான்.
அவர்கள் நரேனை பார்த்து,"நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும் தம்பி !" என்று மனம் குளிர வாழ்த்தினர்.
அடுத்து ராம கிருஷ்ணன் காரை அடையார் பகுதி நோக்கி செலுத்தினார். நரேனுக்கு ஒன்றுமே புரியவில்லை !
ஏனெனில்,இதுவரை அவன் தந்தை அவனை இந்த மாதிரியெல்லாம் வெளியே அழைத்து வந்ததில்லை.ஒருவேளை,தன் தந்தை தன்னை அடையாரிலுள்ள 'ஆனந்த பவன்' கடைக்கு அழைத்து செல்லப் போகிறாரா? என யோசிக்க ஆரம்பித்தான்.
ஆனால்,கார் ஆனந்த பவன் கடையையும் தாண்டி,அடையார் 'கேன்சர்' மருத்துவமனைக்கு முன் போய் நின்றது.
இருவரும் காரிலிருந்து இறங்கி மருத்துவமனை வாயிலிற்கு அருகே நின்றனர்.
"அப்பா ! இப்ப இங்க எதுக்கு?" என்று நரேன் சற்று குழப்பத்தோடு கேள்வி எழுப்பினான்.
"வா ! சொல்றேன்" என்று ராம கிருஷ்ணன்,நரேனின் இடக்கையை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தார்.
மருத்துவமனைக்குள் வயது வித்தியாசம் இல்லாமல் பெரியவர்கள்,சிறியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பலர் கேன்சர் என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு தங்கள் மரணத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தனர். பல இளைஞர்கள் சிகரெட்,ஹான்ஸ்,புயலை போன்ற போதை வஸ்துக்களை பயன் படுத்தியதால் வாய்,தொண்டை மற்றும் நுரையீரல் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
சிலர் பார்ப்பதற்கே விகாரமாக காட்சியளித்தனர்.நரேனுக்கு ஒரே சமயத்தில் அருவருப்பாகவும், பயமாகவும், பாவமாகவும் இருந்தது.ஆனால்,ராம கிருஷ்ணனோ...எந்த வித சலனமும் இன்றி மருத்துவமனையில் இருந்த அனைவரையும் பார்த்து அன்பாக பேசி நம்பிக்கை அளித்தார்.
நரேன் பேச வார்த்தைகளின்றி மருத்துவமனையை விட்டு வெளியேறி காரில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.
ராம கிருஷ்ணன் மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம், நோயாளிகளின் செலவுக்காக ரூபாய் 50,000 நன்கொடை கொடுத்துவிட்டு அவரும் மருத்துவமனையை விட்டு வெளியேறி காரை இயக்க ஆரம்பித்தார்.
பின்பு,நரேனும் ராம கிருஷ்ணனும் தங்கள் காரில் பயணிக்க தொடங்கினர்.
கார் சிறிது நேரத்தில் ஒரு பிரபலமான ஹோட்டலில் போய் நின்றது.இருவரும் தங்கள் காலை சிற்றுண்டியை உண்டு மகிழ்ந்தனர்.
பின்னர்,அவர்கள் சென்ற இடம் பெசன்ட் நகர் பீச் !
நண்பகல் நேரம் என்பதால், வானில் பகலவன் பல்லை இளித்துக் கொண்டு இருந்தான்.மக்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை ! கடற்கரை ஓரமாக இருந்த ஒரு பழுதடைந்த படகின் நிழலில் இருவரும் அமர்ந்தனர்.
'நம் வாழ்க்கையில் எத்தனை முறை பார்த்தாலும் சிறிதும் சலிப்பு உண்டாக்கதவை யானை,விமானம்,ரயில் மற்றும் கடல் என்று தாராளமாகக் கூறலாம்' சில நேரங்களில் மனம் சங்கடத்தில் தவிக்கும் போது பெசன்ட் நகர் பீச்சுக்கு தனிமையில் வருவது ராம கிருஷ்ணனின் வழக்கம்.ஏனெனில்,கடல் அலைகள் ஒவ்வொரு முறையும் அவரின் மன பாரத்தைக் கேட்டறிந்து அவருக்கு ஆறுதல் சொல்வது போல அவருக்கு தோன்றும்.
தன் தந்தையின் ஒவ்வொரு செயலும் இன்று முற்றிலும் மாறுபட்டு காணப்படுவதைக் கண்டு நரேன் வியப்படைந்தான்.
"நரேன் ! நாம அடையார் கேன்சர் ஹாஸ்பிடல் போயிட்டு வந்தோமே அதைப் பற்றி என்ன நினைக்குற?" என்று ராம கிருஷ்ணன் ரத்தின சுருக்கமாக கேள்வி எழுப்பினார்.
"அப்பா ! என்னால அந்த ஹாஸ்பிடல்ல ரொம்ப நேரம் நிற்க முடியல.எனக்கு பயமாகவும் பரிதாபமாகவும் இருந்துச்சு."
அவனே தொடர்ந்தான்.
"கேன்சர் என்பது எவ்வளவு பெரிய கொடிய நோய்ன்னு புரிஞ்சிக்கிட்டேன்.அங்க பார்த்த ஒவ்வொரு முகமும் என் மனசுல பதிஞ்சுப் போச்சு ! இனிமேல் யாரும் இந்த மாதிரி நோயால் பாதிக்கப்படக் கூடாதுன்னு கடவுளை வேண்டிக்குறேன்" என்று உணர்ச்சி பொங்க கூறினான்.
"ஒரு மனுஷனுக்கு நோய்,பிணி,இன்பம்-துன்பம் வர்றதுக்கு கடவுள் காரணம் இல்லை.அவனோட அறியாமை தான் காரணம்.நமக்கு ஆறாவது அறிவு இருக்கறதே எதை செய்யனும் எதை செய்யக்கூடாதுன்னு சிந்திச்சு முடிவு எடுக்க தான்.கேன்சர் வர வாய்ப்பு இருக்கும்ன்னு தெரிஞ்சே அதை பயன்படுத்தி நோயை உண்டாக்கிக் கிட்டு மரணத்தோடு போராடுற மனுஷன் எவ்வளவு பெரிய முட்டாள்" என்றார்.
ராம கிருஷ்ணனின் வார்த்தைகள் நரேனின் இதயத்தில் கல்வெட்டு வரிகள் மாதிரி பதிந்தது.
ராம கிருஷ்ணன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள தன் வசம் வைத்திருந்த சில்வர் வாட்டர் பாட்டிலை திறந்து தண்ணீரை அருந்த ஆரம்பித்தார்.
அடுத்து,அவர்கள் சென்றது ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த அரசு மதுபானக் கடைக்கு தான்.
மதுபான கடைக்கு எதிர் திசையில் காரை நிறுத்திவிட்டு இருவரும் கீழே இறங்கினார்கள்.
ராம கிருஷ்ணன்,தன் பர்சில் இருந்து ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து,"நரேன், ரெண்டு சரக்கு பாட்டில் வாங்கிட்டு வா!" என்று சொன்னார்.
நரேனுக்கு தன் தந்தையின் செயல் அதிர்ச்சியாக இருந்தது.நரேனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதுவரை தன் தந்தை சிகரெட் புகைத்தோ அல்லது மது அருந்தியோ அவன் பார்த்ததே இல்லை.பின் ஏன்?தன்னை மதுபாட்டில்கள் வாங்கி வரச் சொல்கிறார் என்று குழம்பி தவித்தான்.
"அப்பா...என்ன சொல்றீங்க?" என அதிர்ச்சி பொங்க நரேன் கேள்வி எழுப்பினான்.
"நான் சொல்றதை செய் !" என்று கூறிவிட்டு,ராம கிருஷ்ணன் யாரிடமோ அலைபேசியில் தன் வியாபார விஷயமாக பேச ஆரம்பித்தார்.
நரேனும் வேறு வழியின்றி மிகுந்த தயக்கத்தோடு அரசு மதுபானக் கடைக்கு சென்றான்.இதுவரை மது வாசனையே அறியாத நரேனுக்கு அந்த சூழலும் வாசமும் குடலை குமட்டிக் கொண்டு வாந்தி வருவது போல இருந்தது.
மதுபானக் கடையில் வியாபாரம் அமோகமாக நடந்துக் கொண்டிருந்தது. 'ரேஷன் கடையை விட நீளமான வரிசையில் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுப் பிரியர்கள்,மது பாட்டில்களை வாங்க காத்துக் கொண்டிருந்தனர்.
நரேனும் அந்த நீண்ட...வரிசையில் நிற்க ஆரம்பித்தான்.வரிசை நத்தை வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருந்தது.வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஒரு குடிமகன் திடுரென பம்பு செட் கணக்காக வாந்தி எடுத்தான்.நரேனால் அந்த காட்சியை சகிக்க இயலவில்லை.
வரிசைக்கு அப்பால் ஒருவன் மது அருந்தி விட்டு தலைகீழாக யோகாசனம் செய்துக் கொண்டிருந்தான். மற்றொருவன் அகராதியில் இல்லாத வார்த்தைகளால் யாரையோ வசைப்பாடிக் கொண்டிருந்தான்.
இன்னொருவன் ஒரு படி மேலே போய் சக குடிமகன்களிடம் மது வேண்டி யாசித்துக் கொண்டிருந்தான்.
நரேன் தட்டுத்தடுமாறி வரிசையில் முன்னேறி சென்றுக் கொண்டிருந்தான்.
கூட்டத்தில் ஒருவன் நரேனின் காலை மிதித்து விட்டான்.வலி தாங்க முடியாமல் நரேன் "அய்யோ...கால் போச்சே !" என்று அலறினான்.
இருபது நிமிட போராட்டத்திற்கு பிறகு நரேன் கவுண்டரை அடைந்தான்.
கவுண்டரில் இருந்த விற்பனையாளர் நரேனை ஏற இறங்க பார்த்துவிட்டு,"தம்பி ! என்ன சரக்கு வேணும்?" என்று காட்டமான குரலில் கேட்டார்.
"அண்ணே ! நீங்களே பார்த்து ஏதாவது ரெண்டு பாட்டில் கொடுங்க" என்றான் நரேன்.
அந்த விற்பனையாளர் நரேனை பார்த்து ஒரு முறை முறைத்து விட்டு,இரண்டு பீர் பாட்டிலையும் மீதி சில்லரையையும் அவன் கையில் திணித்தார்.
நரேன் அந்த இடத்தை விட்டு கிளம்பியதும் விற்பனையாளர் அவனை பார்த்து,"என் உயிரை எடுக்கவே வருவானக போலிருக்கு.சாவுகிராக்கி" என்று அர்ச்சனை செய்யவும் தவறவில்லை.
கசங்கிய ஆடையோடு வியர்த்து விறுவிறுத்திருந்த நரேன் இரண்டு பீர் பாட்டில்களையும் மீதி சில்லரையையும் தன் தந்தையிடம் நீட்டினான்.
"நரேன் ! உனக்கு இந்த அனுபவம் எப்படி இருந்ததுபா?" என்று ராம கிருஷ்ணன் மிக சாதாரணமாக கேட்டார்.
"அப்பா ! சொல்லவே எனக்கு நாக்கு கூசுது. குடிக்கற ஆளுங்களைப் பற்றி நான் புத்தகத்துல படிச்சிருக்கேன்,சினிமாவுல பார்த்திருக்கேன்.முதல் முறையாக இன்னைக்கு தான் பல குடிகாரங்களை ஒரு இடத்துல நேர்ல பார்த்தேன்.குடி மனுஷனை மிருகமாக்கி கேவலப்படுத்திடும் அப்படிங்கறதை புரிஞ்சிக்கிட்டேன்" என்று வருத்தத்தோடு கூறினான்.
ராம கிருஷ்ணன் பதில் ஏதும் பேசாமல் நரேன் வாங்கி வந்த இரண்டு பீர் பாட்டில்களையும் சாலையோரமாக தூக்கி வீசி எறிந்தார்.
பின்னர்,இருவரும் ஒரு வேப்ப மரத்திற்கு அடியில் இருந்த ஒரு கையேந்தி பவனில் மதிய உணவை உண்டு முடித்தனர்.
மாலை நேரம் !
'ஆகாயம் ஆதவனை விழுங்கிவிட்டு அம்புலியை உமிழ்ந்திருந்தது.'
சிதறிக்கிடந்த வெள்ளிக் காசுகளைப் போல வானெங்கும் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.
ஈ.சி.ஆர் சாலையில் இருந்த ஒரு 'நைட் கிளப்' ஒன்றிற்கு ராம கிருஷ்ணனும் நரேனும் நுழைந்துக் கொண்டிருந்தனர்.
அங்கே குறைந்த வெளிச்சத்தில் பதினெட்டு வயதிலிருந்து நாற்பது வயது வரை இருக்கும் ஆண்களும் பெண்களும் மதுவை அருந்தி விட்டு,போதை ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.
ஆண்கள் சிலர் பெண்களிடம் சில்மிஷம் செய்துக் கொண்டிருந்தனர். பெண்களில் சிலர்
தங்கள் ஆடை நழுவி,தங்கள் அங்கங்கள் தெரிவது கூட அறியாமல் தங்கள் பெற்றோர்களின் கனவுகளை பொசுக்கிக் கொண்டிருந்தனர்.
அங்கு அரங்கேறிய காட்சிகளை காண சகிக்காத நரேன்,தன் தந்தையின் கையைப் பிடித்து காரை நோக்கி அவரை அழைத்துச் சென்றான்.
ராம கிருஷ்ணனும் காரை வீடு நோக்கி இயக்கினார்.
கார் வீட்டை அடைந்தது.
ராம கிருஷ்ணன்,தன் மகன் நரேனை அழைத்து அவன் பிறந்த நாளுக்காக வாங்கி வைத்திருந்த பரிசு ஒன்றை கொடுத்து விட்டு,பேசத் தொடங்கினார்.
"நரேன் ! நாளையிலிருந்து உன் கல்லூரி வாழ்க்கை தொடங்குது.மது,மாது,சூது மட்டுமில்ல நம்மை நம்ம கட்டுப்பாட்டுல இருக்க விடாமல் செய்ற எந்த ஒருவிஷயமும் போதை தான்.இதுக்கு செல்ஃபோனும் விதிவிலக்கு இல்ல" என்று கூறினார்.
நரேனுக்கு தான் வாங்கி வைத்திருந்த பரிசை அவன் அறைக்கு சென்று பிரித்து பார்க்க சொன்னார்.
அவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு தன் அறை நோக்கி உறங்கச் சென்றார்.
நரேனும் மிகுந்த ஆவலோடு பரிசு பொருளை திறந்து பார்த்தான்.
உள்ளே,ஒரு அழகான ஓவியம் காணப்பட்டது.
அதில்,நரேன் தன் தாய்-தந்தையுடன் இருப்பது போல அழகாக தீட்டப்பட்ட ஓவியம் ஒன்று காணப்பட்டது.
நரேன் தன்னை அறியாமல் கண்ணீர் சிந்த ஆரம்பித்தான்.
நரேனின் கண்ணீர் துளிகள் ஓவியத்தில் இருந்த அவன் தாய்-தந்தை பாதங்களை நனைத்தன.
நன்றி.
என் முகவரி:-
பெண்ணாகடம் பா.பிரதாப்,
53/2,மெயின் ரோடு,
தாலுகா அலுவலகம் எதிரில்,
திட்டக்குடி-606106
கடலூர் மாவட்டம்.
அலைபேசி எண்:9944996267
மின்னஞ்சல் முகவரி: prathap.pandiyan@gmail.com
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்