துவாரகா சாமிநாதன்
சிறுகதை வரிசை எண்
# 107
பூவராகர்
ஆதி வெள்ளம் அலை மோதிற்று. ஆதி என்பதே ஆபத்தானதா? அல்லது நல்லதா? என்று தெரியவில்லை. அவ்வளவு வெள்ளம். அத்தனை வெள்ளத்திலும் மிக அழகான கருநீல வண்ணத்தில் வராகர் பூமி தேவியை மீட்டு தனது மூக்கில் அமரவைத்து நீந்தி வந்தார். தேவியை கடத்தி வைத்திருந்த ஹிரண்டாகனை தோற்கடித்து வெற்றி வாகை சூடி கரைக்கு வந்தார். தேவியுடன் காதலுற்று பூமாதேவியையே மணக்கிறார்.
இதென்ன கனவு இப்படி வந்துள்ளது. வராகர் என்றால் பன்றிதானே. பன்றி கனவில் வருது நல்ல சகுனமா? இல்லையா?. பன்றி கனவில் வந்தால் பெருந்துன்பம் வந்து சேருமாமே என்ன இது இன்று இப்படி விடிந்துள்ளது. என்று நினைத்துக் கொண்டேன். எனக்கு இன்றைய மாணவர்களை சமாளிக்கின்ற பாடு துன்பமெல்லாம் தினப்பாடுதான். அதனால் பெருந்துன்பம் என்பது சிறிய துன்பம்தான். அதைப்பற்றிய சிறிது நேர சிந்தனைக்குப் பின் தெரு தாண்டி சர்ச் அருகிலிருக்கும் டீக்கடைக்கு சென்றேன். நல்ல டீ கிடைக்கும் என்றால் எனக்கு எத்தனை தூரம் வேண்டுமானாலும் நடக்க துணிச்சல்தான். நியூஸ் பேப்பரில் பெரிய பன்றி உண்டியல் படம் போட்டு தங்க காசுகள் சிதறுவதாக இருந்தது.
“இயேசுவே உன்னதமான தேவனுடைய குமாரனே. என்னை காப்பாற்றும் என்று அந்த பேய்ப்பிடித்தவன் கேட்டான். இயேசு அவனது கண்களை உற்றுப் பார்த்தார். அவனுக்குள் இருந்த பேய்கள், ‘ எங்களை அந்த பன்றிகளுக்குள் அனுப்புங்கள் அவற்றில் நுழைய விடுங்கள்’ என்று சொல்லின”. என்று பாதிரியார் பிரசங்கம் வைத்து மாற்கு அத்தியாயம் 5: 1.20 என்ற அந்த கதை முழுதையும் விளக்கினார். என் காதிலும் விழுந்தது. டீக்கடையில் பாடலும் வராக நதிக்கரையோரம் என்று ஆரம்பித்தது.
வராக நதி எது? என்ற கேள்வி எழுந்தது. பன்றி மலைதானே பழனி மலையானது. அப்போ அங்கு எதுவும் நதி ஓடுகிறதா? என எனது ஆய்வு மூளை வியர்த்தது. முருகனுக்கும் பன்றிக்கும் ஏதும் தொடர்பு இருந்திருக்கும்தானே. பன்றி என்ற பதம் ஏன் காலையிலிருந்து நம்மை சுற்றுகிறது.
வராகத்தின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் எழுந்து வீட்டிற்கு வந்து சில புத்தகங்களை எடுத்தேன். அதில் ஒன்றில் ‘முட்டத்து பன்றி முளரி திருப்பாதம்’ என்று இருந்தது. எனது மனம் ஆன்மீக புனைவு கதைகளுக்குள் சென்றது. வரலாற்றின் படி, ஆறாம் நூற்றாண்டில் சாளுக்கிய வம்ச சின்னம் பன்றி என அறியப்பட்டுள்ளது. தமிழில் தொல்காப்பியர் நாட்டின் பிரிவுகளை சொல்லும் போது பன்றி நாடு என சில பகுதிகளை குறிக்கிறார்.
‘ஏங்க கல்லூரி கிளம்பலயா?’ என்று மனைவி சத்தமிட்டதும்தான் நான் நடப்பு நினைவுக்குள் வந்தேன். ஏன் இன்று பன்றி சிந்தனையாகவே போய்விட்டது என்ற கேள்வி மட்டும் எழுந்து கொண்டே இருந்தது. வெயில் சூட்டை தார் சாலைகள் உள்வாங்கி கொண்டிருந்தன.
கல்லூரி அலுவல்களில் பன்றியை மறந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். பி.காம் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் வந்தார்.
‘ஸார் என்னாச்சு அந்த சூர்யாவுக்கு……. ஒருவாரமா வரல”
“உங்களோடத்தானே ஒட்டி உறவாடுவான். உங்க செல்லம்தானே அவன்” என்றார். மூன்றாவது ஹவருக்கான பெல் அடித்தது.
அப்போதுதான் சூர்யா வரவில்லை என்பதே எனக்கு நினைவுக்கு வந்தது. என்ன நம்ப இப்படி இருக்கோம். ஒரு மாணவன் கல்லூரி வகுப்பிற்கு தொடர்ச்சியாக வரவில்லை அதைப்பற்றிய எந்த உணர்வற்றிருக்கிறோம் என்று நொந்து கொண்டேன். இன்னொன்று அந்த வகுப்பிற்கு வாரத்தில் இரண்டு முறைதான் செல்லுகிறோம் அதான் என என்னை நானே சமாதனப்படுத்திக் கொண்டேன்.
அவன் கொழு கொழுன்னு இருப்பான். கலையான முகம், கருத்த நிறம் அவ்வளவு வசீகரம். கருப்பு வைரம் போல இருப்பான். ஆனால் கூச்சப்படுவான். கிட்ட வந்து நின்னு பேச மாட்டான். நான் தோள் மேல் கைப்போட்டு பேசினால் தன்னை சுருக்கிக் கொள்வான். வகுப்பிலும் அப்படித்தான் இருப்பான் போல. அவனுக்கு நண்பர்களும் குறைவு.
அன்றைக்கு புதுக்கோட்டை டி.வி.எஸ் கார்னரில் இருக்கும் மஹாராஜா பேக்கரியில் பிள்ளைகளுக்கு சினாக்ஸ் வாங்கிக் கொண்டு வந்து வண்டியை எடுக்க முனையும் போது, பெரிய லாரி ஒன்று மறைத்து நின்றது. கொஞ்சம் ஓரங்க கட்ட சொன்னேன். முடியாதென்று சொல்லி விட்டார்கள். சத்தமிட்டேன். ‘என்னங்க இப்படி வண்டி எடுக்க முடியாம நிறுத்துனா என்ன பன்றது’. அந்நேரம் இரவு 8.30யைத் தொட்டிருந்தது. கடைகள் அடைக்கும் நேரம் அது.
அப்போது “என்னங்க இப்ப செத்த இருங்க, ஏத்திக்கிட்டு இப்ப கிளம்பிடுவோம்” என்று வண்டி மறைவிலிருந்து வந்த குரல் என்னைப் பார்த்ததும் பம்மியது.
“டேய் வண்டிய நகர்த்துங்கடா…அவரு எங்க சாருடா என்று சொல்லி விட்டு அந்தப் பக்கம் போய் மறைந்து கொண்டது அந்த உருவும். அது இருட்டும் நேரம் என்பதால் நானும் யாரென்று பார்க்க காத்திருந்தேன். வண்டி எடுக்கும் வரை பேசாமல் இருந்தேன். அது சூர்யாதான் என்று கணித்துதான் நின்றேன்.
பெரிய நீல வண்ண டின்னில் கழிவுச்சோறு நிரம்ப தூக்கிக் கொண்டு வண்டியில் ஏற்றினார்கள். இலைகளில் இருந்த நீர் தெளித்து சிதறின. ஏற்றிக் கொண்டிருக்கும் போதே பின்னாலிருந்து வந்தவன் சூர்யா முதுகில் ஒன்னு வைத்தான். இருவருக்கும் சண்டை போல.
“ஏத்துறா மயிராண்டி, இதானே பொழப்பு, இதிலென்ன வெக்க மயிருன்னு” சொன்னான் அந்த ஆளு. லாரிக்குள் நின்று கழிவு இலைகளை கொட்டினான் ஒருவன். அதற்குள் எல்லா வண்ணத்திலும் உணவுகள் இருந்தன. வாழை இலைகள் மட்டும் பளிச்சென நீட்டிக் கொண்டிருந்தன.
அன்று நான் எதுவும் அவனிடம் அப்போது கேட்கவில்லை. கண்டுகொள்ளாத மாதிரி வந்துவிட்டேன். மனைவியிடம் சொன்னேன். அவன் எனது மாணவன் என்று. அவள் ‘அவனா?’ என்று மட்டும் கேட்டாள்.
மறு நாள் வகுப்புக்கு வந்தவன் என்னை சந்திக்கவில்லை. எப்போதும் என்னை சந்தித்து, ஆங்கில சொற்கள் எழுதிய நோட்டை சம்ர்ப்பிக்க வேண்டும். இது எங்களுக்குள் ஒப்பந்தம். ஆனால் அன்று அவன் வரவில்லை. கேண்டீனில் வைத்துப் பார்த்தேன். பேசாமல் நின்றான்.
“ஏன்டா நான் என்ன நினைப்பேன். ஏன் மருவுற”
“இல்ல சார், டெய்லி சாயந்தரம் கழிவுச்சோறு பன்றிக்கு எடுப்போம்’ சார். எங்க ஏரியா ஆளுகளுக்கு அதான் பொழப்பு. லீவுன்னா நம்ப கல்லூரி பெண்கள் விடுதிக்கே வந்து எடுப்பேன் என்றான். இங்க ஆருக்கும் தெரியாது”.
“அதிலென்ன உனக்கு வெக்கம், நாம் செய்யும் வேலையில் நமக்கு எந்த குறையும் இருக்கக் கூடாதுடா” என்றேன். பிறகு இயல்பாகி விட்டான்.
அதன் பின் அவனது கல்வியில் நிறைய அக்கறை எடுத்துக் கொண்டேன். அவனுக்கு ஆங்கிலம் பேசவும் எழுதவும் பயிற்சி தினமும் கொடுக்கலானேன். வீட்டிற்கு வரச்சொன்னேன். மனைவி முகம் சுழித்தாள். ஒரு முறைதான் வந்தான். வரும்போது பிள்ளைகளுக்கு ‘கேட்பரி’ சாக்லேட்டும் எனக்கு லட்டும் வாங்கி வந்தான். அவன், எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தது. எனக்கு பெருமையாக இருந்தது.
ஆனாலும் சூர்யாவால் அவற்றை தொடர முடியவில்லை, அவனுக்குள்ளிருந்த கூச்சம் சுபாவம் ஒரு காரணம். அவனுக்கு பொருளாதார பாடமும் கணிதவியியல் பாடமும் படிக்கப் பிடிக்கும்.
என்னை, அவனது வீட்டிற்கு கூட்டிச் செல்ல சொன்னேன். எனக்கும் கூச்சமிருந்தது எப்படி பன்றி தொழுவத்தை பார்ப்பது. மனதில் பன்றி அசுத்தம், அசிங்கம் என்றுதானே ஏற்றி வைத்துள்ளோம் அதனால் என்னுள்ளும் உடனே மாற்றம் வரவில்லை. அவனும் கூப்பிடவில்லை.
ஒரு நாள் நானே துணிந்து சென்று பன்றி பராமரிப்பு, ஈனுதல் எல்லாவற்றையும் அறிந்து கொண்டேன். அவனும் பன்றி குட்டிகளை கொஞ்சுவதை பார்க்க தாய்ப்பன்றி குழந்தைகளை பேணுதல் போலவே இருக்கும். என்னிடம் ஒரு பன்றியை கொடுத்த போது முதல் முதலாக பன்றியைத் தொட மனம் உடல் எல்லாம் கூசி, அதுவே பின்பு சரியாகி கையில் ஏந்திக் கொண்டிருந்தேன். கதக்கதப்பாக இருந்தது. உர்..உர்.. என்ற சத்தங்கள் நிற்கவே இல்லை.
நூறு கருப்பு நாட்டுப்பன்றிகள் இருக்கும் கொஞ்சம் வெள்ளைப் பன்றிகள். கழிவுச்சோறு எல்லாம் கருப்பு பன்றிகளுக்குத்தான். வெள்ளைப் பன்றிகளுக்கு புற்கள் போட்டு தனி கொட்டடியில் வளர்க்கிறார்கள். ஒரு விசில் அடித்தால் அத்தனை பன்றிகளும் வந்து விடுகின்றன.
‘சார் எனக்கு எங்க மூப்பன் பன்றி நெய் செய்ய சொல்லிக் கொடுத்திருக்கு’
“தாதுமிகும் மெய்யலுக்குஞ் சாடுங் கிரணியறும்
லாதுசெயும் வெம்மூல வாயுவுடனே தீறு மிகத்
துன்றிரத்த மூலமதுந் தோகை நல்லாய் இப்புவியில்
பன்றிடக் காலகலும் பார்”
“பன்றி நெய் நீர்க்கடுப்பு பாயுமூ லத்திரத்தங்
கன்றிய வாதக் கடுப்புமுதல் துன்னிய நோய்
அக்கிதீப் புண்ணுடனே யாறாத கட்டுப்புண்
புக்கிடுமா சாகரத்திற் போம்”
சித்தர்கள் இப்படி பாட்டெல்லாம் எழுதியிருக்காங்க சார், எங்க மூப்பன் எழுதி வச்சிருக்கு இங்க பாருங்கன்னு ஒரு பழைய நோட்டை காண்பித்தான். எழுத்துக்கள் பழைய தமிழில் இருந்தன.
எனக்கு மூல நோய் இருப்பதால்தான் இந்த இடம் தேடி வந்தேன். அதுவுமில்லாமல் தாது புஷ்டி அடையனும். அதை சூர்யாவிடம் எப்படி சொல்வது என்று எனக்குள் ஒரு தடுமாற்றம்.
அவனே தொடர்ந்தான். எங்க கூட்டத்தின் அசுர பலத்தை பார்த்துட்டுதான் அரசமார்கள் எங்கள் சைவத்துல சேர்க்க இருபத்தியொரு சுடலை மாடனில் பன்றி மாடசாமியும் ஒன்னாகி வந்து எங்களை சைவத்தோடு இணைக்க நினைத்தார்கள். வைணவத்தில இணைக்கத்தான் பெருமாளு வராக அவதாரமே எடுத்தாருன்னு எங்கப்பத்தா சொல்லும் சார்.
“பெருமாலே எங்க கொலசாமியா இருந்தாலும் நாங்க பன்றி கறியைத்தான் படைப்போம் சார். பத்து பரண் வச்சு படுச்சு எல்லாரும் சாப்பிடுவாக. ஒவ்வொரு பரணுக்கும் ஒவ்வொரு வகை சாப்பாடு. அன்னைக்கு ஊரார் பெருமக்களும் பன்றி கறி சாப்பிட வருவாக” என்றான்
இன்றைக்கென்ன நம்மிடம் இவ்வளவு சொல்கிறான் என்று தோன்றியது. ஏதோ அவன் என்னிடம் சொல்ல வருகிறான் என நினைத்துக் கொண்டேன். அங்கே ஒரு பெரிய பன்றி சாய்ந்து படுத்து குட்டிகளுக்கு பால் கொடுத்தது.
“சார், பன்றிக்கறி சாப்பிட்டா தேக பலம் கூடும் அதனால் குடியானவங்க வந்து வாங்கிப் போவாங்க”
“வெக்கத்து விட்டு நானும் அவனிடம் கேட்டு விட்டேன் அந்த பன்றி நெய்யும் வேணும். கறி சமைத்தும் வேணுமடா சூர்யா. எனக்கு செய்து தருவியா” என்று கேட்டேன்.
“சார் உங்களுக்கு இல்லாமலா, நீங்க சாப்பிடுவீகளான்னு தெரியாது. அப்பத்தா நெய் வச்சிருக்கும் வாங்கியாந்து தாரேன். கறி சமைக்க சொல்லி எடுத்தாறேன் சார்” என்றான்.
வீட்டிற்கு கிளம்பு போது தயங்கி ஏதோ சொல்ல வந்தவன். தொண்டையை விழுங்கிக் கொண்டான்.
அது ஒதுக்குப் புறமான ஊர் எனலாம் ஆனால் தெரு எங்கிறார்கள். எந்த சாலை வசதிகளுமின்றி இருந்தன. நான் போன அன்று அவனது வீட்டில் பெற்றோர்கள் இல்லை. அதன் பின் சில நாள் சரியாக எல்லாவற்றையும் செய்து வந்தவன். திடீர் திடீரென விடுப்பு எடுக்கலான. கல்லூரிக்கு மிகவும் ஸ்டைலாக வரலானான். என் பேச்சை மீறி சில நடவடிக்கை தெரிந்தது. கண்டிப்பேன். வந்து சாரி கேட்டு பின் சரியாக படிப்பை தொடருவான்.
அதைத்தாண்டி என்ன நடந்தது எனத் தெரியவில்லை. தற்போது ஒரு வாரமாக அவன் வரவில்லை. தொழில் நிமித்தமாக போயிருக்கலாம் என்று நானே அனுமானித்துக் கொண்டேன்.
புதுக்கோட்டையில் பெரிய பன்றி வளர்ப்பு பண்ணை இருந்துள்ளது. ஆனால் அது இன்று மெடிக்கல் காலேஜ் ஆக மாறி விட்டது. அங்கிருந்த காடுகளும் இல்லை. ஒரு வளர்ச்சியின் உச்சத்தில், இன்னொரு எளிமையானது இல்லாமல் போய் விடுகிறது. நகரம் பெரிதாக பெரிதாக பன்றி வளர்த்த குடும்பகள் ஊரின் எல்கை பகுதிக்கு சென்று விட்டனர்.
சூர்யாவின் வீடு குறத்தெருவின் கடைசியிலிருந்தது. அந்த தெருவின் முகப்பில் ஒரு கோயில் அது அவர்களுக்கானதாக இருந்தது ஆனால் நவீன வடிவம் அடைந்திருந்தது. எதிர் முனையில் ஒரு டீக்கடை. அந்த தெருவுக்கு எதிரே தஞ்சை மெயின் ரோட்டில் புதுக்கோட்டையின் பேமஸான சர்பத் பாகு கலக்கும் இடம் இருந்தது. விளம்பர பலகையில் சிவப்பும் ரோஸ் வண்ணத்திலும் பாட்டில்கள் ஜொலித்தன. அருகிலேயே பழைய மரப்பொருட்கள் கடையும் இருந்தன. நிறைய பழைய வீட்டு ஜன்னல்கள் வகை வகையாக இருந்தன. எல்லாவற்றிலும் அழுக்கறிக் கிடந்தன.
அவனது வீட்டின் முன் சிலர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்தது. மௌனமாகினார்கள் எனக்குப் புரியவில்லை. அவனின் பெற்றோரை அழைத்து.
‘சூர்யா எங்கே. என்னாச்சு அவனுக்கு என்றேன். ஏன் கல்லூரி வரவில்லை’
நான் இப்படி கேட்டதும் அங்கிருந்தவர்களில் ஒருவன் ‘காலேசிக்கெல்லாம் இனி அவன் வரமாட்டான்’ என்றான். அப்போது காக்கைகள் இறந்த அணிலை கொத்திக்கொண்டிருந்தன.
‘ஏன் என்றேன் பதிலில்லை’
அவனது அம்மா ‘அவன் கல்யாணம் பண்ணிட்டு ஓடிட்டான்ப்பா ’ ஊட்டுக்கே வரலப்பா’. என்றார். அவரை அவனது அப்பா அடக்கினார்.
எனக்கு அச்சூழல் பிடிபட தாமதமானது. எதோ தப்பா தெரியுதே என உடனே அம்புக்கோயில் துரை.குணாவிற்கு போன் அடித்தேன். முதலில் எடுக்கவில்லை பிறகு லைனில் வந்தார். விபரம் சொன்னேன். மதுரை எவிடன்ஸ் கதிர் எண்ணும், வக்கீல் ரெத்தனவேல்பாண்டியன் எண்ணும் தந்தார். இருவருக்கும் தகவல் சொன்னேன். இருவருமே சேர்ந்து நாளை மறுநாள் அங்கிருப்பதாக வாக்களித்தபடி வந்து சேர்ந்தனர். திரும்பவும் அவனது வீட்டிற்கு வலுவான படையுடன் சென்றேன்.
எவிடன்ஸ் கதிர் சூர்யாவின் பெற்றோரிடம் பேசி நம்பிக்கையளித்தார். ஆட்கொணர்வு ரிட் போடலாமா என விவாதிக்கப்பட்ட அந்த சூழலில் பெரிய கருப்பு நிற ஜீப் மெதுவாக எங்களை பார்த்துக் கொண்டே கிராஸானது. பின்னாலேயே வந்த அந்த வார்டு கவுன்சிலர் பம்மிக் கொண்டு, சூர்யா வீட்டிற்கு ஆதரவாக பேசினார். அது பொய்யானதென பாண்டியன் வக்கீல் எனது காதை கடித்தார்.
சூர்யா என்னவாகிருப்பான் என்ற ஏக்கத்திலும் பயத்திலும் கல்லூரிக்கு சென்றேன். அங்கே செகரட்டரி அழைத்து. இதெல்லாம் உங்கள் வேலை இல்லை. நீங்கள் ஏன் அக்கறைப் படுகிறீர்கள். பாருங்கள் பொலிடிக்கல் பிரஸ்சர் ஜாஸ்தி ஆகுது. நான் என்ன உங்களை வேலையை விட்டா அனுப்ப முடியும் என மிரட்டல் தொனியில் பேசினார். கொஞ்ச நேரம் அமைதியாகிவிட்டு, ‘சார் கல்லூரி பேரை பயன்படுத்த மாட்டேன். உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது சார்’. ‘அப்படியானாலும், ஒரு மாணவனுக்காக வேலையை விட்டும் செல்லத் தயார்தான் சார்’ என்று சொல்லிவிட்டு, அங்கு நிற்காமல் வந்து விட்டேன்.
பிறகுதான் தெரிந்து கொண்டேன். சூர்யாவை காதலித்த பெண் எனது கல்லூரியில் விடுதியில் இருந்த மாணவிதான் என, அதுவும் பெரிய இடத்து பெண். அரசியல்வாதியின் உடன் பங்காளி வீட்டு பெண். சாதியில் பெரிய இனம் வேறு. எல்லாம் வைத்து பார்க்கும் போது என்று மனைவியிடம் சொன்னேன்.
‘ஏங்க நமக்கு இது தேவையா…’ உங்களுக்கு எதுக்கு வீண் வம்பு, கல்லூரி வேலை போனால் என்ன செய்வது. இதெல்லாம் சரிபட்டு வராது. நீங்க இதிலெல்லாம் ஈடுபடாதீர்கள். இல்லன்னா எனது அப்பாவைக் கூப்பிட்டு சொல்லவா”
“அவன் என்ன நமக்கு சொந்தமா, பந்தமா, நம்ம இனமா எதுவும் இல்ல அவனுக்கு எதுக்கு நீங்க உதவ முன்னாடி நிக்கிறீங்க” என்றாள்
எதுவும் சொல்லவில்லை அமைதியாக இருந்தேன். சூர்யாவின் கொழுத்த கருத்த முகம் நினைவில் வந்து போனது.
இரண்டு நாள் கழித்து எவிடன்ஸ் கதிர் போன் செய்தார். உண்மை அறியும் குழு ஒன்று வருகிறது. ‘நீங்களும் வாங்க’ என்றார். போய் வந்த போதுதான் தெரிந்தது.
சூர்யா அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கு வந்துள்ளான். பிரச்சனை பெரிதாகும் என்று அங்கேயே பக்கத்தில் அவனது நண்பன் தங்க வைத்து, போலீஸிடம் ஒப்படைக்க இருந்துள்ள நேரத்தில் இருவரையும் காணும் என்றால் எப்படி? எங்கோயோ இடிக்குது. இடையில் என்ன நடந்தது என்று விசாரிக்கனும் சார் என்றார் கதிர். துரை.குணாவும் நண்பர்களிடம் சொல்லி விசாரிப்பதாக சொன்னார். ஆட்கொணர்வு மனு போட்டாச்சு, எப்படியும் விசாரிச்சு பிடிச்சுருவோம். யாரும் தப்பிக்க முடியாது எல்லாருக்கும் தண்டனைதான். அங்க்கிருந்த சிலருக்கு எச்சில் வறண்டது போல் தொண்டையை செருமி விழுங்கினார்கள்.
சூர்யாவின் பெற்றோருக்கு எதுவும் தெரியவில்லை. அவர்களுக்கு எங்களையெல்லாம் பார்த்ததும் நம்பிக்கை வந்து, தைரியமாக பேசினார்கள். போலீசும் விசாரித்ததாக சொன்னார்கள்.
அந்த பகுதியின் எல்லா இடங்களிலும் சுற்றி பார்த்தோம். இந்த முறை ரெத்தினவேல் பாண்டியன் வரவில்லை. தடயம் ஏதும் சிக்குகிறதா? என்று பார்த்தோம். குழுவில் வந்த சிலர் எனது ஜாதி என்ன என தெரிந்துகொள்ள முயற்சித்தனர். அது எனக்கு பிடிக்கவில்லை. இப்ப சாதி தேவையா? வேண்டாமா?. அந்தந்த சாதிக்காரனுக்குத்தான் அந்த வலி புரியுமா? சாதிவிட்டு சாதி எந்த உதவியும் செய்யக்கூடாதா? என யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் எல்லோரும் என்னை தோழர் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அது நல்லாயிருந்தது.
வீட்டிற்கு வந்து எனது சிந்தனையிலிருந்து சூர்யாவின் முகம் அழியவில்லை. அவனது நினவுகள் எல்லாம் வந்து போயின. அசதியில் அப்படியே தூங்கிவிட்டேன்
மாடன் 1
அந்த இரவு பலி கேட்கும் இரவாக இருந்தனவா? பலி எடுக்கும் இரவாக இருந்தனவா? அரை நிலா மேலே உச்சிக்கு வந்த நேரம். இரண்டு உருவங்களை துரத்திக் கொண்டும் ஓடும் பல தடிமாட்டு உருவங்கள் அதில் ஒருவனின் முகம் அன்று காலேஜ்க்கு அவன் வரமாட்டான் என்று சொன்ன உருவம். பயந்த அந்த பிள்ளைகள் இரண்டும் மதகடி குழாயில் போய் மறைந்து கொண்டனர். தேடி வந்த பிசாசுகள் சுற்றி வளைத்தன. அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர். நெஞ்சின் படப்படப்புகளை இருவரும் உணர்ந்தனர்.
குழாயின் இரு பக்கத்தையும் கருவை முட்களால் அடைத்து கொளுத்தி விட்டனர். பயங்கொள்ளாதே நமக்கு பன்றி மாடன் துணை நிற்பான். ஆடைகளை கழட்டு அவர்கள் மீது வீசுவோம். இருவரும் ஆடையின்றிருக்க அவளை அவன் தோளில் சுமந்து கொண்டு நெருப்பு பத்தைகளை எட்டி உதைத்து வெளியில் வந்தான். பூவராகர் பூமாதேவியை சுமந்து வந்ததைப் போலவே இருந்தது. வெளியில் யாருமில்லை தப்பித்துப் போனார்கள்.
மாடன் 2
சூர்யாவின் நண்பன் சொல்லிவிட்டு போனான். இன்று இரவு நாம் வேறு இடத்திற்கு போய் விட வேண்டும். இங்கு சூழல் சரியில்லை என எச்சரித்து சென்றான். இரவு உயிர்க்குடிக்க தயாரானதோ? கருத்த மேகங்கள் சூழ்ந்திருந்தன. அவர்கள் செல்லும் போதே பின்னாடி ஒரு கும்பல் ஜீப்பில் துரத்தி வந்தது அன்று நான் பேசியக்கொண்டிருந்த போது கிராஸான அதே ஜீப். அந்த ஜீப்பில் அந்த வார்டு மெம்பரும் இருந்தான். கொலை பாதகம் பணத்தால் நிகழப்போகிறதா? சாதியால் நிகழப்போகிறதா? சாட்சிக்கு இன்று நிலவு கூட இல்லை. அதே குழாயடியில் ஒளிந்து கொண்டார்கள். குழாயின் இருபுறமும் கருவை முட்களை வெட்டி அடைத்து பல விறகுகளை வைத்து அடைத்து, மூச்சு முட்டி சாகட்டும் என கொளுத்தி விட்டனர். எரிந்தது ஆணவமா? காதலா? தெரியவில்லை.
அச்சப்படாதே அன்பே, மாடசாமி துணை நிற்பான். இரு நான் எனது பூவராகர்களை அழைக்கிறேன் என விசிலடித்தான். சடச் சடவென பாய்ந்து வந்த வராகர்களின் கூட்டம் அச்சமின்றி நெருப்பை முட்டிச் சாய்த்து அவர்களுக்கு ஒரு பக்கமாக வழி அமைத்தன. அவளை கட்டிப்பிடித்து தூக்கிக் கொண்டு வரும் போது வராகர்கள் அமைதியாக வழிவிட்டு நின்றன. அவர்கள் இரவோடு இரவாக நாடு கடந்தனர்.
அன்று காலை கதிர் போன் செய்து நரிமேடு காட்டு பகுதிக்குள் வரச்சொன்னார். போலீஸ் ஒரு இடத்தை அடையாளம் கண்டுள்ளது. அங்கு குழாயடியின் இருபுறமும் கொளுத்தப்பட்டிருந்தன. எரிந்த ஆடைகள் கிடந்தன ஆனால் எந்த உடலும் கிடைக்கவில்லை
பிள்ளைகளுக்கு என்ன கதிர் ஆகிருக்கும். தப்பிச்சுருப்பாங்கல்ல.
கதிர் சோகம் கனிந்த முகத்துடன் லேசாக சிரித்தார்.
சாதி அப்புடி விடுமா சார்.
அந்த நெருப்பு கங்கு எனது அடிவயிற்றில் அடித்தது போல இருந்தது.
துவாரகா சாமிநாதன்
9629272185
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்