logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

Thangavel Pandian M

சிறுகதை வரிசை எண் # 104


பெண்ணின் பெருந்தக்க யாவுள! ஆக்கம்:மு.தங்கவேல் பாண்டியன் இராமநாதன் பரபரப்பாக இருந்தார். "சரஸ்வதி! மாப்பிள்ளை வீட்டார் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துருவாங்க! இப்பத்தான் போன் வந்தது.டிபன் எல்லாம் ரெடியா? தர்ஷினிக்கு பட்டுச்சேலை கட்டிவிட்டு ரெடி பண்ணு!" என்று மளமளவென உத்தரவிட்டார். "டிபன் ரெடிங்க! தர்ஷினி ரெடியாகிக்கிட்டு இருக்கா! நான் பார்த்துக்கிறேன் " என்றாள் சரஸ்வதி. ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியரான இராமநாதனுக்கு தர்ஷினி,நிரஞ்சனா என இரு மகள்கள்.மூத்த பெண் தர்ஷினி படித்து முடித்து சென்னையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். பெண் பார்க்கும் படலத்துக்காக நேற்றே ஊருக்கு வந்துவிட்டாள். இளையவள் நிரஞ்சனா பட்டப்படிப்பு முடித்துவிட்டு குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாள். வீட்டுக்கு வெளியே கார் சத்தம் கேட்டது.மாப்பிள்ளை வீட்டாரை கும்பிட்ட கரங்களுடன் வாசலுக்கே சென்று வரவேற்றனர் இராமநாதன் தம்பதியினர். மாப்பிள்ளைக்கு சொந்த ஊர் மதுரை என்றாலும் கோவையில் அரசுப்பணியில் பெரிய அதிகாரியாக இருக்கிறார், தனி குவார்ட்டர்ஸ் மற்றும் கார் வசதிகளோடு.மாப்பிள்ளையோடு அவர் தம்பி, அம்மா, அப்பாவும் வந்திருந்தார்கள்.மாப்பிள்ளையின் தம்பி வங்கியில் பணிபுரிகிறார்.எல்லோரும் அமர்ந்து பொதுவான விசயங்களும்,ஒருவருக்கொருவர் தெரிந்த சொந்தங்கள் பற்றியும் பேசிக் கொண்டனர். தர்ஷினி பட்டுச்சேலை சரசரக்க வந்து எல்லோருக்கும் வணக்கம் வைத்தாள். சரஸ்வதியும் நிரஞ்சனாவும் டிபன் எடுத்து வைத்தார்கள்.நிரஞ்சனா செம வாலு! மாப்பிள்ளையை வம்புக்கிழுத்தாள். " மாப்பிள்ளை சார்! நல்லா பொண்ணப் பார்த்துக்கங்க.அப்புறம், சரியாப் பார்க்கல, திரும்பப் பார்க்கணும்ன்னு சொல்லக்கூடாது!" எனச் சொல்ல அனைவரும் சிரித்தனர். இப்படியே சிறிது நேரம் கடக்க, மாப்பிள்ளை தன் தாயிடம் மெதுவாக ஏதோ சொல்ல -அவர் மகனை முறைக்க, பின்னர் நால்வருமே எழுந்து வெளியே வந்தனர்.அவர்களுக்குள்ளாக மெதுவாக ஏதோ வாக்குவாதம் செய்வது தெரிந்தது.பின் ஒரு முடிவெடுத்தது போல் உள்ளே வந்து," சரி அப்ப நாங்க கிளம்புறோம்.எல்லோரும் கலந்து பேசிட்டு நாளைக்கு உங்களுக்குச் சொல்றோம்" என்று கூறி புறப்பட்டனர். வழியனுப்பி விட்டு வந்து , இராமநாதன் மனைவியைக் கேட்டார்," என்ன சரஸ்வதி! உனக்குப் பிடிச்சிருக்கா? நம்ம தர்ஷினி என்ன சொன்னா?" " நல்ல குடும்பமாத் தெரியுது.மாப்பிள்ளையும் நல்லாருக்கார்; நல்ல குணமாத் தெரியுது.தர்ஷினி ஒன்னும் சொல்லல; உங்க விருப்பம்ன்னு சொன்னாள்" என்றாள் சரஸ்வதி.தர்ஷினி அன்று இரவே சென்னை புறப்பட்டு விட்டாள். மறுநாள் காலை டிபன் முடித்துவிட்டு இராமநாதன் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.அலைபேசி அழைத்தது; மாப்பிள்ளை வீட்டில் இருந்துதான்! மகிழ்ச்சியோடு காதில் வைத்து வணக்கம் சொன்னார். எதிர்முனையில் பேசப் பேச அவர் முகத்தில் மகிழ்ச்சியும், குழப்பமுமாக உணர்வுகள் தோன்றின. "என்னங்க! அது எப்படிங்க!நல்லா இருக்காதே!" என்றார். மறு முனையில் ஏதோ சொல்ல," சரிங்க! வீட்ல பேசிக்கிறோம்!" என்று சொல்லி போனை வைத்தார். " என்னங்க! மாப்பிள்ளை வீட்ல என்ன சொன்னாங்க?" "கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க.ஆனா....." " என்னங்க ஆனா?" எனக் குழப்பமானாள் சரஸ்வதி. இராமநாதன் தயங்கித் தயங்கி, " அவுங்களுக்கு நம்ம நிரஞ்சனாவைத்தான் பிடிக்குதாம்! சரின்னு சொன்னா உடனே நிச்சயம் பண்ணலாம்ன்னு சொல்றாங்க!" என மெதுவாகச் சொன்னார்.நிரஞ்சனாவுக்குக் கோபம் தலைக்கேறியது. "என்னப்பா விளையாடுறாங்களா? அக்காவப் பெண் பார்க்க வந்துட்டு என்னையப் பிடிக்குதுன்னா என்னா அர்த்தம்! நான் ஒத்துக்கவே மாட்டேன்.அது அக்காவுக்குச் செய்யிற துரோகம்! " எனக் கொந்தளித்தாள். " இது என்னங்க அநியாயமா இருக்கு! மூத்தவ இருக்கும்போது இளையவள எப்படி கல்யாணம் பண்றது " என்று தன் கவலையைப் பகிர்ந்தாள் சரஸ்வதி. " அதுக்கும் ஒரு தீர்வு சொல்றாங்க சரஸ்வதி! சரின்னு சொன்னா பெரியவுங்கள வச்சு பூ பழம் மாற்றி உறுதி பண்ணிருவோம்.உங்க மூத்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து முடிவான பிறகு இந்தக் கல்யாணத்த வச்சுக்கலாம்ன்னு சொல்றாங்க!" என்றார் இராமநாதன். " அப்பா! இவுங்க நல்ல குடும்பமாத் தெரியல! எனக்கு இது வேணாம், அதுதான் வேணும்ன்னு ஏதோ நகை நட்டு வாங்குற மாதிரி சொல்றாங்க.இந்த விசயம் தெரிஞ்சா அக்கா மனசே உடைஞ்சு போயிருவா!" என்று சொல்லி கண் கலங்கினாள் நிரஞ்சனா.அவளால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. " மாப்பிள்ளை ரெம்ப ஜாலி டைப்பாம்; நீயும் நல்லாப் பேசவும் உன்னைப் பிடிச்சுப் போச்சாம்! நல்ல குடும்பம்.மாப்பிள்ளை பெரிய வேலைல இருக்காரு. நாங்க தர்ஷினிகிட்ட பேசி சமாதானம் சொல்லிக்கிறோம்.நீ சரின்னு சொன்னாப் போதும் " என்று சின்ன மகளிடம் சிறிது கெஞ்சலாகப் பேசினார் இராமநாதன். அவர் பேசியதில் நியாயம் இருப்பதாக சமாதானம் ஆனாள் சரஸ்வதி. தர்ஷினிக்குப் போன் போட்டு விசயத்தைச் சொன்னாள் சரஸ்வதி." அப்படியா!" என்ற தர்ஷினி சில நொடிகள் இடைவெளிக்குப் பிறகு " சரிம்மா! உங்களுக்கு சம்மதம்ன்னா தங்கச்சிக்குக் கல்யாணத்தப் பண்ணுங்க.எனக்கு மெதுவாப் பார்த்துக்கலாம்" என்று சொல்லி வைத்துவிட்டாள். தர்ஷினி சம்மதம் சொல்லி விட்டாள் என்று மகிழ்ச்சியோடு சரஸ்வதி, பேசியதைச் சொல்ல, அந்த வார்த்தைகளில் இருந்த வலி நிரஞ்சனாவுக்குப் புரிந்தது. மனம் கலங்கி அழுதது. அப்பா அம்மாவுக்குப் புரியவில்லையே என வருந்தினாள். மீண்டும் மீண்டும் இராமநாதன் மகளிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். "நிரஞ்சனா! சரின்னு சொல்லும்மா.அக்காவுக்கு வேற நல்ல இடம் பார்க்கலாம்.இந்த சம்பந்தம் நம்மளத் தேடி வருது! விட்டுறக் கூடாதும்மா" என்றார். என்ன சொன்னாலும் இவர்கள் கேட்கப் போவதில்லை எனத் தெரிந்தது நிரஞ்சனாவுக்கு. அவள் மௌனத்தை சம்மதம் என எடுத்துக்கொண்டு மாப்பிள்ளை வீட்டாருக்குச் சொல்லி விட்டார். குறிப்பிட்ட ஒரு நல்ல நாளில், இராமநாதனின் நெருங்கிய உறவுகள் கூடியிருக்க, மாப்பிள்ளை வீட்டார் தங்கள் நெருங்கிய சுற்றங்களுடன் நிரஞ்சனாவைப் பேசி முடிக்க வந்து விட்டார்கள்.தனக்கு வேலை இருக்கிறது என்று கூறி ஊருக்கு வருவதைத் தவிர்த்து விட்டாள் தர்ஷினி.சந்தோசமாகப் பேசிச் சிரித்தார்கள் பெரியவர்கள் ‌.நல்ல நேரம் நெருங்கியதும், இரண்டு நாற்காலிகளைத் தனியாக எடுத்துப் போட்டு பொண்ணு மாப்பிள்ளையை அமரச் சொன்னார்கள்.மாப்பிள்ளை மாலையுடன் அமர்ந்தார்.முகத்தில் மகிழ்ச்சி மின்னியது. நிரஞ்சனாவை அழைத்து கழுத்தில் மாலையிட்டு மாப்பிள்ளை அருகில் அமரச் சொன்னார்கள். வந்தவள் அமரும் முன்பாக, " தயவு செய்து ஒரு விசயம்.எனக்குக் கல்யாணத்தில் பூரண சம்மதம்.ஆனால் இவரைப் பிடிக்கவில்லை; இவரது தம்பியைத்தான் பிடிக்குது! சம்மதம்ன்னா ஓகே" என்று தீர்மானமாகச் சொல்ல மொத்த சபையும் அதிர்ந்தது. இராமநாதன்," நிரஞ்சனா! உனக்கென்ன பைத்தியமா?என்ன பேசுற!" எனக் கண்டித்தார். "இல்லப்பா.இதுதான் என் முடிவு!" என்றாள் நிரஞ்சனா. மாப்பிள்ளை வீட்டாருக்கு வந்ததுபார் கோபம்! "என்னம்மா விளையாடுறியா? மூத்தவன் இருக்கும் போது இளையவனுக்கு எப்படி நிச்சயம் பண்ண முடியும்" என்று காட்டமாகக் கேட்டார்கள்.இதற்காகவே காத்திருந்தது போல, நிரஞ்சனா பேசத் தொடங்கினாள்: "கரெக்ட்! அப்படின்னா என் அக்கா இருக்கும்போது என்னைய எப்படி நிச்சயம் பண்ணமுடியும்? அவளைப் பொண்ணு பார்க்க வந்துட்டு, எனக்குத் தங்கச்சியத்தான் பிடிக்குதுன்னு சொன்னீங்களே.அவ மனசு என்ன பாடுபட்டிருக்கும்! அந்த நிராகரிப்பின் வலி என்னன்னு உங்களுக்கு இப்பத் தெரியுதா! இது கல்யாணங்க; மாட்டுச் சந்தையில்ல! உங்களுக்கு பிடிக்கிற மாட்ட கயிறப் பிடிச்சு ஓட்டிட்டுப் போறதுக்கு. பொம்பளை பொம்மையோ பொருளோ இல்லீங்க! உயிருள்ள உணர்வுள்ள மனித ஜீவன்! ஆம்பளைக்கு இணையாகப் படிச்சு - அவுங்க அளவுக்கு சிலநேரம் அதைவிட அதிகமாகவே சம்பளம் வாங்கினாலும், பொம்பளைன்னா சீப்பாத் தெரியுது உங்களுக்கு! முதல்ல மதிக்கக் கத்துக்கங்க! பொம்பளைக்கும் மனசு இருக்கு; சுயமரியாதை, விருப்பம்ன்னு இருக்கு! புரிஞ்சுக்கங்க " என்று பொரிந்து தள்ளினாள். வாயடைத்துப் போன மாப்பிள்ளை வீட்டார், மெதுவாக எழுந்து எதுவும் பேசாமல் தலை குனிந்து புறப்பட்டுப் போய் விட்டனர். நிரஞ்சனா அப்பாவைப் பார்த்தாள்.அவர் கண்கள் கலங்கி இருந்தன." நிரஞ்சனா! நீ சொன்னதெல்லாம் அவுங்களுக்கு இல்லம்மா; எனக்குச் சொல்லியிருக்க! நீ பேசுன ஒவ்வொரு வார்த்தையும் ஊசியா என் மனசத் தச்சிருச்சும்மா! அக்கா இருக்கும்போது உன் கல்யாணத்த முடிவு பண்ணுனது மிகப் பெரிய தவறும்மா! தர்ஷினிக்கு இப்பவே போன் போட்டு மன்னிப்பு கேட்டால்தான் என் மனசு ஆறும் " எனக் கண்ணீருடன் கூறி தர்ஷினிக்குப் போன் போட்டார்.நிரஞ்சனாவுக்கு மனம் ஆறியிருந்தது!

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.