logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

ஜெயா சிங்காரவேலு

சிறுகதை வரிசை எண் # 103


அன்றில்களின் கூடு லீலா அந்த மலைக்கோயில் சிற்பத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். எப்பவும் பிறந்த வீட்டை விட அவளுக்குத் தாத்தா ஊர் தான் பிடிக்கும். அதற்குக் காரணம் ராசு மாமா. ராசு மாமாவை அவளின் நினைவுகளில் இருந்து பிரித்தெடுத்தால் அவளுக்கு பால்யம் என்ற ஒன்றே கிடையாது. மாமா என்றவுடன் மனதில் ஒரு அன்பு பொங்கிப் பிரசவிக்கும். "லீலா" என்று கூறியபடியே பின்னாடி வந்து கட்டிக் கொண்டான் சரவணன். "என்ன இன்னிக்கு ஆபிஸில் இருந்து சீக்கிரம் வந்துட்டியா?" "ஆமாம் சரவணா. இரு,இரண்டு பேருக்கும் காபி எடுத்துட்டு வரேன்." "உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே" "என்ன பீடிகை எல்லாம் போடுற!" "உன்னோட மலைக்கோயில் கும்பாபிஷேகம் அடுத்த வாரம்" என்று கயல் சொன்னாள். "அப்படியா" என்றபடி வேறு ஒன்றும் சொல்லாமல் மௌனமானாள். "நம்ம போறோமா,இல்லையா?" "நான் வரல. நீயும்,பாப்பாவும் போங்க." "ஏன் லீலா? நான், நீ, குழந்தை எல்லோருக்கும் டிக்கெட் போடுறேன். ஒருமுறை போயிட்டு வரலாம் ப்ளீஸ். எல்லாரையும் பார்த்தது போல இருக்கும்." மௌனமாக இருந்த லீலாவின் தோளில் கை வைத்தான் சரவணன். "இன்னுமா பழசை நினைச்சு கவலைப்படுற. எல்லாம் சரியாயிடும்." விரக்தியுடன் சிரித்தாள்."சரவணா உன்ன ஏன் கல்யாணம் செய்தேன் தெரியுமா?" "நான் அழகா இருக்கேன். நல்ல வேலையில் இருக்கேன். அப்புறம் மாமா பையன். அதனால தானே" "உன்னோட சேர்த்து எல்லாரும் ஒண்ணா இருப்போம் என்று தான். ராசு மாமா எப்பவும் எனக்கு மாமாவா இருப்பாருன்னு தான். உங்க குடும்ப சண்டைல என்னோட மாமாவை இழந்துட்டேன். எங்க தாத்தாவுக்கு நாலு மகன்கள், ஒரு மகள். முதல் மகனின் மகனைத் தான் நான் திருமணம் செய்து இருக்கிறேன். கடைக்குட்டி எங்க ராசு மாமா. சின்ன வயசுல கை உடைந்து போனப்ப புத்தூர் போயி கட்டுப் போடக் கூப்பிட்டு போனார். எனக்கும் அவருக்கும் 15 வயது வித்தியாசம். சைக்கிள் பழக என் பின்னாடியே ஓடி வருவாரு. அக்கா மகள் என்று பாசமாய் இருப்பார். கண்மணி நாவல் வாங்கி கொடுப்பார்.அவருக்கு சிவாஜி தான் ரொம்ப பிடிக்கும். வசந்த மாளிகை படம் நிறைய தடவை பார்த்தார்.யாரையாவது காதலித்து இருப்பார் என்று இப்ப தோணுது. சீட்டு விளையாடுவது, எங்களோட கிட்டிப்புல் விளையாடுவது, எங்களை பாதுகாப்பா தியேட்டர் கூட்டிட்டு போறது, தீனி வாங்கித் தருவது எல்லாமே ராசு மாமா செய்வார். மலைக்கோயிலுக்கு பாறையின் வழியாகத் தினமும் மேல ஏறிச் செல்வோம். தாத்தா திருவாசகம் எல்லாம் பாடிட்டு வருவார் .அர்த்த ஜாம பூஜை முடிந்த பின்னர் அப்பம் பிரசாதம் தருவார்கள். அதைச் சாப்பிட ஒரு போட்டி நடக்கும். மாமாவுக்கு திருமண வயது வந்தது. அக்கா கவிதா பார்க்க அழகாக இருந்தார். அவரின் மேலும் ஒரு இனம் புரியாத பாசம் வந்தது. எல்லா மாமாவுக்கும் தாத்தா சொத்துப் பிரித்துக் கொடுத்தார். இந்தக் குடும்பம் என்னோடதாகவே இருக்க வேண்டும் என்று மாமா மகன் சரவணனைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தேன். மாமா கட்சிப் பதவியில் இருந்தார். வீட்டுக்கு அருகில் தண்ணீர் டேங்கின் சுவர் பெரியதாக இருக்கும்.அங்கே கட்சி சின்னம் வரைய மாமா ஏற்பாடு செய்தார். ஆனால் வேறொரு கட்சியின் சின்னம் ராத்திரியோடு ராத்திரியாக யாரோ வரைந்திருந்தார்கள். யார் என்பது மாமாவுக்கும் தெரியும் போல! நடுராத்திரி எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்க மாமா பெருசா சத்தம் போட்டுட்டு இருந்தார். முதன்முறையா மாமா சத்தம் போட்டு கத்திக்கிட்டு இருந்ததைப் பார்த்தேன். தாத்தா,எங்க அம்மா, பெரிய மாமா எல்லோரும் மாமாவின் கையைப் பிடித்து சமாதானம் செய்து கொண்டிருந்தார்கள். மாமா விவசாயம் தான் பார்த்துக் கொண்டிருந்தார். "என்னாச்சு ஒரே மவுனமா போயிட்ட. இப்ப என்னதான் சொல்ல வர லீலா, உங்க மாமா செஞ்சது எல்லாம் மறந்து போச்சா? அதுவும் உங்க அக்கா நம்ம வீட்டுக்கு வரவே இல்ல." "கோபப்படாமல் சொல்றத கேளு. மாமா பேசுறாரோ இல்லையோ அவர் எனக்கு தாய் மாமா இல்லன்னு ஆயிடுமா! எல்லா மாமாவும் இறந்து போயிட்டாங்க." "உன்ன அவங்க கூப்பிட்டாங்களா லீலா? நான் சித்தி கூப்பிட்டாங்கன்னு தான் போலாம்னு இருந்தேன். அக்கா அவமானப்படுத்தியது எல்லாம் மறந்து போச்சா?" "எனக்கு எதுவுமே மறக்கல சரவணா! எல்லாம் ஞாபகம் இருக்கிறதுதான் பிரச்சனை" "சரி மூஞ்ச தூக்கி வச்சுக்காம இரு. கிளம்பி வா பாத்துக்கலாம்!" சரவணன் நல்லவன்தான். கொஞ்சம் ஈகோ புடிச்சவன். பணத்துக்குப் பிரச்சனை இல்ல. ஆனால் சொந்த சித்தப்பா சொத்துக்கு கேஸ் போட்டது பிடிக்கல. ஆனால் ராசு மாமாவுக்கும் இதில் விருப்பம் இருக்காது.அதைச் சொன்னா புரியல. மாமாவுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூவர் படிப்பு,விவசாயத்தில் சரியான வருமானம் இல்லை என்பதால் அக்கா சொத்துப் பிரச்சனையைக் கிளப்பி விட்டுட்டார். "லீ உனக்குக் கவிதாவைப் புடிச்சிருக்கா? நீ சரின்னு சொன்னா தான் இந்த கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லுவேன்." "மாமா அவங்கள பாத்தா நல்லவங்க மாதிரி தான் இருக்கு. நீ சரின்னு சொல்லிடு" "ஆளப் பார்த்த உடனே நல்லவங்கன்னு கண்டுபிடிச்சிட்டியா லீ " என்று சிரித்து விட்டு சம்மதம் சொன்னார் மாமா. "லீ" இப்படித்தான் மாமா என்னைக் கூப்பிடுவார். அக்கா ஆரம்பத்தில் என்னுடன் நன்றாகத் தான் பேசினார். "உன் மாமா உன்னைக் கேட்டுட்டு தான் என்னைக் கல்யாணம் கட்டிக்க சம்மதம் சொன்னாராம்" என்று கேட்க, நானும் "ஆமாம் அக்கா" என்று சந்தோஷமாக சொல்ல, அதுவே அவருக்கும் எனக்குமான இடைவெளிக்கான காரணம் என்பது அப்போது புரியவில்லை. உங்க மாமாவுக்கு இனி உன் கூட பேச எங்க நேரம் இருக்க போகுது. கவிதா சொன்னாதான் பேசுவான் என்று வீட்டில் உள்ளவர்கள் கேலி பேசினார்கள். "என் மூஞ்சி சின்னதாக மாற, மாமா கிட்ட வந்து அப்படி எல்லாம் இல்லை. நீ இப்ப ஊருக்கு போனா நான் அடுத்த லீவுக்கு கூப்பிட வருவேன்" என்றார். அதற்குப் பிறகு எந்த லீவிலும் மாமா அழைக்க வரவில்லை. ஏன் மாமா நீங்க என்ன வந்து கூப்பிடவே இல்ல என்று லெட்டர் போட்டேன். "உன்னை எனக்குப் பிடிக்கும். என் பொண்ணு போல நீ. அதனால தான் உன்னை விட்டு விலகி இருக்கேன்". "பிடிச்சிருந்தா யாரும் விலகி இருப்பாங்களா மாமா!" "அது உனக்குப் புரியாது. நீ நல்லா படி. நல்ல வேலைக்குப் போ சரியா." என்று போனில் ஒரு முறை பேசினார். ஆனா நான் எப்பவும் மாமா கூடவே இருக்கணும் என்று சரவணனைக் கட்டிக்க சம்மதித்தேன். என்னுடைய திருமணத்தின் போது கூட அவ்வளவு பிரச்சனை இல்லை. மாமா தான் முதல் பட்டு சேலையும், மாலையும் போட்டார். அக்கா ஓரமாக நின்றிருந்தார். எனக்கு அப்பாவின் இன்னொரு முகமாகத்தான் இருந்தார் ராசு மாமா. "நீ எப்படி சரவணனைத் திருமணம் செய்த லீ?" "எல்லாம் உனக்காகத்தான் மாமா.நம்மை யாரும் பிரிக்க முடியாதுன்னு நினைச்சி மாமா" என்றேன். ராசு மாமா கொஞ்சம் அழுத்தமானவர்தான். ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். சரவணனுக்கும், எனக்கும் சண்டை வரும் போதெல்லாம் ராசு மாமா போனில் சரவணனிடம் அது சின்ன பொண்ணுடா. விவரம் பத்தாது பாசமா பேசினா, எல்லாம் சரியாயிடும் என்று சொல்வாராம். "அப்படி இரண்டு பேருக்கும் என்னதான் பாசமோ?" என்று கேலி செய்வான் சரவணன். தாத்தா வீடு, மாமா வீடு என்றானது. இப்போது அக்கா வீடு. அதன் பிறகு அக்காவோட சமையல் எனக்குப் பிடிக்கவில்லை என்று சாப்பாடு கடையில் வாங்கிக் கொடுத்த மாமா அக்காவிடம் திட்டு வாங்கினார். "அவதான் உங்களுக்கு முக்கியமா என்ன இருந்தாலும் அக்கா பொண்ணு இல்ல, வெள்ளை தோல் வேற..." "சரி இனி ஒன்னும் வாங்கல வேற எதுவும் பேசாத!" என்று சொல்லிவிட்டு போய்விட்டார். சில சமயங்களில் அக்கா சுடு சொல் சொல்ல ஆரம்பித்தார். மாமா அதைக் கண்டும் ஒன்றும் கேட்காமல் சென்றுவிட்டார். எப்போது மாமா என்னைப் பெயர் சொல்லி அழைத்தார் என்று எனக்கு மறந்து போய்விட்டது. மாமாவுக்காக அக்காவைப் பொறுத்துக் கொண்டேன். “நீ பெரிய படிப்பு எல்லாம் படிக்கணும். இனி லீவுக்கு எல்லாம் இங்க வராத" என்று மாமா சொன்ன அந்த நாளில் நான் உடைந்து அழ, அவர் எனக்கு எந்தச் சமாதானமும் சொல்லவில்லை. பின் ஏதாவது விழா என்றால் தான் ஊருக்குப் போவது வழக்கம் என்றானது. முன்னும் பின்னும் நினைவுகள் என்னை அலைகழிக்கிறது. மாமாவிடம் பேசாதது ஏக்கமாக இருந்தது. மாமாவின் குழந்தைகளைக் கொஞ்சும் போது எட்டி நின்று பார்ப்பார். மாமாவுக்கு முதலில் பொண்ணு தான் பிறந்தாள். அவளைக் கைகளில் ஏந்தும் போது அவள் விழிகள் விரிந்து பளபளப்பதைப் பார்த்தால் மாமா குழந்தையாக இருப்பது போல் இருந்தது. ஆசையோடு அதன் அருகில் ஓடிப் போய்த் தொட்டு மகிழ்வேன்.மெத்தென்ற அக்குழந்தையின் கால்களைத் என் கன்னத்தில் பதித்து பூரித்துப் போவேன். குறுகுறுக்கும் வட்ட கருவிழிகள் சுருள் சுருளான கருங்குந்தல், சிரித்த முகம், சிவந்த மேனி, சின்ன மூக்கு என்று மாமாவின் சாயலில் அழகாக இருந்தது நான் வியந்து கொண்டிருந்தேன். எல்லாம் கொஞ்ச காலம் தான்! அதன்பிறகு தலைகுனிவுகள், மறுதலிப்புகள், ஏமாற்றங்கள், வெற்றுப் பார்வைகள் எல்லாம் கடந்து போனேன். அம்மாவின் இறப்பிற்கு வந்து பிறந்த வீட்டுக் கோடித் துணி போட்ட போது மாமா என்னைப் பார்த்து அழுதார். அழுகையில் கரையக் கூடியது தான் எங்கள் பாசமும். சேர்ந்து அழுதேன். என்னுடைய வசந்த காலம், இலையுதிர் காலம், பூப்பது,உதிர்வது, ஒன்றுமில்லாமல் போவது என எல்லா பருவக் காலத்திலும் மாமா இருந்திருந்தார். அப்படித்தான் எனக்குத் தோன்றியது. "என்னங்க மாமாவை ஐசியூவில் வைச்சிருக்காங்களாம் நெஞ்சுவலியாம். எனக்குப் பயமா இருக்கு" என்றாள் லீலா. "நம்ம போய் பார்த்தால் அவங்களுக்கு பிடிக்குமோ? இல்லையோ?"என்றான் சரவணன். "இந்த நேரத்தில் கூடவா பழைய சண்டை எல்லாம் யோசிக்கிறீங்க! அவர் உங்களுக்கும் சித்தப்பா தானே அதை மறந்துட்டீங்களா?" "உங்க அக்கா நம்மளை வெளியே போனு சொன்னா என்ன பண்றது?" "அப்படியெல்லாம் சொல்ல மாட்டாங்க! நம்ம மேல ஒண்ணும் தப்பில்ல. அவங்க தானே நம்ம வீடு குடி போறதுக்கு பத்திரிக்கையில் பேரு போடலன்னு வரல. அது கூட அக்காதான் சண்டை போட்டாங்க. மாமாவையும் வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க" "எங்க சித்தப்பா வந்திருக்கலாம் கூடப்பிறந்த அண்ணன்,அக்கா எல்லாரும் போன பிறகு அவர் தான் வீட்டுக்குப் பெரியவரா இருந்தார். ஆனாலும் வரல" "சரி! இது இப்ப பேசுற நேரமா? எனக் கடிந்து கொண்டாள். "விசேஷத்துக்கு வரலைன்னு நீ தான் அவங்க கூட பேசாம இருந்த, அவங்க பொண்ணு சடங்குக்கு கூட நம்மள கூப்பிடல" "அதெல்லாம் போகட்டும்.நான் ராசு மாமாவைப் பார்க்கப் போறேன். அப்புறம் நீங்க வாங்க". பழங்கள் வாங்கிக்கொண்டு பஸ்ஸில் சென்றாள். பஸ் என்னவோ முன்னோக்கிப் போனாலும் அவள் பயணம் பின்னோக்கிப் போனது. நினைவு தெரிந்த நாள் முதல் மாமா,மாமான்னு சொல்லிட்டு ராசு மாமாவோட கைபிடித்து தான் நடப்பேன். 'மலைக்கோயில் சிவனே எத்தனை நாள் உன்னை வேண்டி இருக்கிறேன். எங்கள் குடும்பத்தை ஒன்று சேர் என்று. எங்கள் அடுத்த தலைமுறைக்கும் எங்கள் பாசம் தொடர வேண்டும். தயவு செய்து ராசு மாமாவைக் காப்பாற்று! அவர் எங்கோ நலமா இருந்தால் போதும். என்னிடம் பேசக்கூட வேண்டாம்' என்று மனதார சிவனிடம் வேண்டிக் கொண்டாள். ராசு மாமா அழகான ஒரு மாட்டு வண்டி வைத்திருந்தார். வண்ணம் தீட்டிய கொம்புகளும், உச்சியில் நீல குஞ்சரமும், கழுத்தில் கோத்த குண்டுமணிகளும் கொண்ட ஒரு வெள்ளை நிற காளை மாடு இழுக்கும். உட்புறத்தில் உட்காருவதற்கு கோரை பாய் இருக்கும். அதன் அடியில் வைக்கோல் போட்டு நிரப்பி வைத்திருப்பார். அங்கங்கே வண்டியில் சலங்கை கட்டியிருக்கும். வண்டி வரும் சத்தம் கேட்கும். அதில் அழகான விளக்கு ஒன்று வைத்திருப்பார். புதன்கிழமை சந்தைக்கு அதில் எங்களையெல்லாம் கூட்டிப் போவார். சரவணன் அப்பா பெங்களூரில் இருந்ததால் அவன் வந்தால் இரண்டு நாளுக்கு மேல் இங்கே தங்க மாட்டான். இங்குள்ள வெயில் அவனுக்கு ஒத்துக் கொள்ளாது. இரண்டு மாதம் லீவு எல்லாம் மாமாவோட சுத்திறதுலயே போயிடும்! கிரிக்கெட் விளையாடும் போது நான் பந்து பொறுக்கிப் போடுவேன். சினிமாக்கு என்னையும் கூட்டிட்டு போகும். திருச்சிக்கு ஒருநாள் நடிகர் விஜயகாந்த் வந்தார் என்று அழுது, கூட்டிட்டு போய் பார்த்த அனுபவம் எல்லாம் இருந்தது. மாமா மடியில் காது குத்திய ஞாபகம் இல்லை. மாமா தம் அடிப்பதை தாத்தாவிடம் சொல்லுவேன் என்று மிரட்டி ஐஸ்கிரீம் சாப்பிட்டது. எத்தனையோ நினைவுகள் அலை அலையாய் வந்து போனது. நான் பெரிய மனுசியானதும் மாமா சீர்வரிசையோடு வந்து எனக்கு மாலை போட்டார். என் முதல் புடவை மாமா தந்தது! "இன்னும் சின்னப் பிள்ளை போல விளையாட்டா இருக்கக் கூடாது" என்று சொல்லி அறிவுரை சொன்னார்கள். வயது காரணமாக சிறு விலகல் இருந்தாலும், கேலி, கிண்டல், பாசம் எதுவும் குறையவில்லை. மூத்த மாமா மகனை நான் திருமணம் செய்து கொண்டு வந்தவுடன் தான் சிறு பிரச்சனைகள் வந்தது. சில உறவுகளை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. பல பிரச்சனைகள் வந்தபோது கூட என் மாமாவை நான் திட்டியது கிடையாது. யாரையும் ஒண்ணும் சொல்லவும் விடமாட்டேன். எப்போதும் என் ராசு மாமா நல்லா இருக்கனும் என்றுதான் கடவுளிடம் வேண்டுகிறேன். முதன்முதலாய் வீடுகட்டிக் குடி போகும் போது மாமா வரவில்லை. அக்கா வர விடவில்லை. என்னுடைய பாசம் எல்லாம் கோபமாய் மாறி நேரில் பார்த்தாலும் பேசாமல் இருந்து விட்டேன். கிள்ளி எறிய வேண்டிய சிறு செடியை பெரிய மரம் ஆக்கி விட்டோம். ஆனால் இப்போது என் மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டதும், தாங்க முடியாமல் ஓடி வருகிறேன். இதோ மருத்துவமனை நெருங்கி விட்டேன். பயம் வேறு , அக்கா என்ன சொல்வாரோ? என்று. "லீலா" என்று ஓடி வந்து கட்டி அழுவது அக்கா தானா? என்னால் நம்ப முடியவில்லை! "வா லீ" என அழைத்தார் அக்கா. "இவ்வளவு நாள் நீயும் பேசாம இருந்துட்ட" என கைகளைப் பற்றியதும் கஷ்டப்பட்டு சிரித்தேன். மனிதர்கள் அற்பர்கள் தான். அக்கா சொன்ன சொல் இப்போதும் கற்பூரம் போல நின்று எரியத் தொடங்கியது. அவசரமாகத் தண்ணீர் குடித்துக் கொண்டேன். "அக்கா, மாமா எப்படி இருக்கார்? டாக்டர் என்ன சொன்னாங்க?" "நெஞ்சுவலி, ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க" "இப்ப இதயத்தையே மாற்றி வைத்து ஆபரேஷன் பண்றாங்க கவலைப்படாதீங்க" கைபிடித்து அழைத்துக் கொண்டு வந்த மாமா இப்படி நெஞ்செல்லாம் கருவி கொண்டு சுவாசிக்கிறார். முகமெல்லாம் கறுத்து ஆளே மாறிவிட்டார்."ராசு மாமா" என்று அழைத்தேன். "லீ" என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. தொண்டைக்குள் என்னவோ அடைத்தது. கால்கள் பலவீனமாய்த் துவல்வது போல் இருந்தன. எத்தனை வருடம் கழித்து லீ என்று அழைத்திருக்கிறார். "மலைக்கோயில் கும்பாபிஷேகம் நடக்கப் போகுது" என்றார் கவிதா அக்கா. "தெரியும் அக்கா. சரவணனும்,குழந்தையும் அடுத்த ரயிலில் வருகிறார்கள்". எவ்வளவோ பேச இருந்தும் என்ன பேசுவது என்று தெரியாத நிலை தான் இருந்தது. எல்லாத்தையும் பேசித்தான் புரிய வைக்க முடியுமா? ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வந்து அண்ணாந்து பார்த்தேன். ஒரே மேகக் கூட்டம். வானம் பாளம் பாளமாய் வெடித்திருந்தது. மலைக்கோயிலை ஏக்கமாக பார்த்தாள் லீலா. கும்பாபிஷேக தீர்த்தம் அவள் கண்ணீருடன் சேர்ந்து கொண்டது. உண்மையில் அழைக்க முடியாத தொலைவில் எங்கோ மறைந்து போனாலுமே இலையுதிர் காலத்தில் வேர் போல தாங்க வேண்டும் என்பது எனக்கும் புரிந்தது. அன்றில்களின் கூடு மீண்டும் நிறைந்தது! - ஜெயா சிங்காரவேலு.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Shyamala Avatar
    Shyamala - 2 months ago
    பால்ய கால நினைவுகளை அசைபோட வைத்தது அன்றில்களின் கூடு. கால ஓட்டத்தில் கரைந்து போகும் உறவுகளையும், மனித மனங்களில் நினைவுகளாய் நிழலாடும் பாசத்தையும் வெளிப்படுத்தும் கதையின் ஓட்டம் பேரழகு.

    jayasingaràm Haribala Avatar
    jayasingaràm Haribala - 2 months ago
    மிக்க நன்றி♥️🙏