கு. இலக்கியன்
சிறுகதை வரிசை எண்
# 105
| அன்பின் நறுமணம் |
உடம்பு ரொம்பவும் சடைத்துவிட்டது. எலும்பு துருத்தி கொண்டு சதைத் தேகம் உருக்கி, ஊன் தளர்ந்து விட்டது. யாரும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி மனதிற்குள்ளே தளு தளுத்து நின்றனர். அவள் தலைமாட்டில் மருந்து மாத்திரைகள் அடங்கிய ஒரு டப்பாவும், ஒரு பிளாஸ்க்கும், கூடவே சில்வர் சொம்பு, இரண்டு டம்ளர்கள் எப்போதும் இருந்தன. தலையணைக்கூட ஒரே வாட்டில் வைத்துப் படுத்திருந்ததில் பள்ளமாகி, அது ஒரு வடிவத்திற்கு மாறிவிட்டிருந்தது. இது எல்லாவற்றையும் தாண்டி, அந்த அறைக்குள் வீசும் ஒருவித நோய்மையின் வாடையை அவ்வளவாக எல்லோராலும் சகித்துக் கொண்டுவிட முடியாது. அந்த வாடை பெருகி இருந்தபோதுதான் என்னை எல்லோரும் வற்புறுத்தி அந்த அறைக்குள் அத்தையைப் பார்க்க அழைத்துப் போனார்கள். அவள் என் அத்தைதான். அப்பாவின் மூத்த தங்கை மங்கைவதி. இளையவள் சித்திரைவதி.
மூத்த அத்தை மங்கைவதி என்றால் அப்பாவுக்கு அவ்வளவு மரியாதை. பள்ளிக்கூடத்திற்குப் போகச் சொல்லி அப்பாவை கட்டாயப்படுத்தும் போதெல்லாம், தன் தலைமாட்டில் கறுக்கரிவாளை வைத்துக் கொண்டு உறங்கி, ஊர் விழிக்கும் முன்பே அறுவடை வயலில் நின்றவர் அப்பா. பள்ளிக்கூடமென்றால் அவ்வளவு கசப்பு. கணக்கு என்றால் ஆமணக்கு, இங்கிலீஷ் என்றால் காக்கா வலிப்பு என்று எழுதித் திரிந்தவர். வயல் அறுப்புக்குச் சென்று விட்ட அப்பாவை, இரவு வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து விரட்டும் ஆயாவுக்கு பயந்து பசியால் கிடக்கும் அப்பாவுக்கு மங்கைமதி அத்தை தான் திருட்டுச் சோறு போட்டுக் கொடுக்கும். அத்தைக்கும் தன் அண்ணன் மேல் அவ்வளவு பிரியம். சித்திரைவதியை அப்பாவுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. பிடிக்காததற்கு காரணமெல்லாம் ஒன்றுமில்லை. பிடிக்காது என்றும் சொல்லி விடவும் முடியாது. மங்கைவதியிடம் இருக்குமளவுக்கு ஈர்ப்பு சித்திரைவதியிடம் கிடையாது அவ்வளவுதான்.
மங்கைவதி அத்தைக்கு கல்யாணம் பேசி முடிவெடுத்துவிட்ட நாளிலும்கூட, அப்பா பொறுப்பற்ற தனத்தோடுதான் அலைந்து திரிந்தார். சீர்வரிசை, மேள தாளம், விருந்து, சடங்கு சம்பிரதாயங்கள் என்று எதற்கும் அப்பா உதவியாக இருந்ததில்லை. ஆனால் அத்தை மணம் முடித்துப் போகும்போது ஏனோ, தொண்டைக்குழி வறண்டுப் போகுமளவிற்கு கேவலெடுத்து அழுத அப்பாவை எல்லோரும் சமாதானப்படுத்தினார்கள். அதற்குப் பிறகான காலங்களில் அத்தையும் அவள் குடித்தனமும் என்று கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அத்தைக்கும் மூத்தவள், இளையவன் என்று இரண்டு பிள்ளைகளாகிவிட்ட வாழ்க்கை போராட்டத்தில் விரும்பியே தொலைந்து கிடந்தாள். இந்தக் காலக் கட்டத்தில்தான் அத்தை நோய்மைக்குள் விழுந்திருந்தாள்.
அதற்குப் பிறகான நாட்களில் மாமா, அத்தையை அழைத்துக் கொண்டு அலையாத நகரங்கள் இல்லை. ஏறாத மருத்துவமனைகள் இல்லை. யார் எது சொன்னாலும் அங்கு ஒரு முறை போய் பார்க்கலாமென்று அத்தையை அழைத்துக் கொண்டு, யாரையும் தொந்தரவு செய்யாமல் இருவருமே அலைந்து அலைந்து வெறுமையுற்ற போதுதான் அத்தைக்கு நடமாட்டம் குறைந்து பலமற்றுப் போகத்தொடங்கினாள். உணவு தள்ளிவிட்டது. விழித்திரைகளில் ரத்த ஓட்டம் குறைந்து கண்கள் வெள்ளரி விதையைப் போல வெளிறி விட்டன. அத்தையின் பிள்ளைகள் ஓரளவுக்கு வளர்ந்துவிட்டார்கள். அவர்களும் என் வயதுதொத்தவர்கள்தான். ஒன்றிரண்டு வயது மூத்தவர்கள்.
அத்தையால் முன்பு போல் ஆஸ்பத்திரிக்கு அலைய முடியவில்லை. நடப்பதே சவால் ஆகிவிட்ட பிறகு ஆட்டோ, கார் என்று மாமாவுக்கு முடிந்த அளவு அழைத்துப் போய் பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் என்று சிகிச்சை அளித்தும் அத்தையை தேற்ற முடியவில்லை. அத்தை இப்போது படுத்திருக்கும் இந்த அறைக்குள் சிறைப்பட்டு இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. முழம் கணக்கில் பூச்சூடும் அத்தையின் தலையில் ஈரும் பேணும் மண்டி கிடக்க, மொட்டையடித்து விட்டார்கள். அத்தை வீட்டு கொடிக்கால் வெற்றிலையோடு, லட்சுமி சீவல் சேர்த்து செவக்க செவக்குப் போடும் வாய், இப்போது வெடித்து வறண்டு போய் கிடக்கிறது. தெருமுக்கில் குடி தண்ணீர் சுமந்து வரும் அத்தையின் நீர் ஒழுகிய இடை, இப்போது ஒட்டி உருக்குலைந்து விட்டது. அச்சம் கொண்ட மனம் இருண்டு விடுவது மாதிரி, சாவுக்களை வந்துவிட்டவுடன் உடலும் சவத்துப் போய்விட்டது. எல்லாவற்றையும் விட, அவள் பேச்சொலி குறைந்து ஏதாவது சொல்வதற்கு படுகிற அவதிதான் அத்தனைப் பேரையும் கலங்கடித்தது.
ஒருமுறை அவள் படுக்கையின் அருகில் வைத்திருந்த பால், கீழே ஊற்றி விட்டதை யாரும் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அதில் நெருப்பு எறும்புகள் சூழ்ந்திருப்பது தெரியாமல் அத்தை புரண்டு படுக்க, அவள் முதுகு புறம் முழுக்க எறும்புகள் கடித்து திட்டுத் திட்டாக வீங்கிக் கிடந்தது. என்னவோ கடிக்கிறது என்று உணர்ந்த அத்தைக்கு அதை சொல்ல வார்த்தைகள் வரவில்லை. தன் கைகளை நீட்டி ஜாடையாக ஏதோ சொல்ல முயற்சிப்பதை அருகில் இருந்தவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் நின்றார்கள். ஒரு கட்டத்தில் அவள் சொல்வது என்னவென்று குழம்பிவிட்டவர்கள் பிறகு அலட்சியமாக விட்டு விட்டார்கள். அன்று மாலை, வெந்நீரில் துடைத்து விடுவதற்கென்று அத்தையை தூக்கி உட்கார வைத்து துணிகளை மாற்றி விடும்போதுதான் முதுகு முழுவதும் எறும்புகள் மொய்த்துக் கிடப்பதை அறிந்த மாமா கதறிக்கிடந்ததை அப்பா சொல்லிச் சொல்லி தேம்புவார்.
இந்த நிலையிலிருந்த அத்தையைதான் பார்க்க என்னை வற்புறுத்தினார்கள். அவர்கள் என்னை வரச்சொல்லி வற்புறுத்தியதற்கு ஒரு காரணம் இருந்தது. அதை அத்தை சொல்லிக்கொண்டே இருந்தது. "அண்ணன் மவனப் பார்க்கணும். வரும்போது கூட்டியாங்க. அவன வரச்சொல்லுங்க" என்று ஊருலிருந்து போகும் எல்லோரிடமும் இதே வார்த்தைகளை மாறாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறதென்று சொல்வார்கள். நான்தான் தவிர்த்துக் கொண்டேயிருந்தேன்.
காரணம், அத்தையின் உறவுக்காரர் மகள் திருமணத்திற்கு பத்திரிகை வந்திருந்தது. அப்பாவால் போக முடியாத சூழல். அம்மா காய்ச்சலில் கிடந்தாள். விடுமுறையில் இருந்த என்னை அந்த திருமணத்திற்கு போய் வரும்படி அனுப்பி வைத்தார்கள். நானும் விசேஷம் முடிந்தவுடன் அத்தை வீட்டிற்கும் போய் வரலாமென்ற ஆர்வத்தோடு போனேன். விசேஷத்தில் அப்பா கொடுத்தனுப்பிய மொய் பணத்தை கொடுத்துவிட்டு, அத்தையின் பிள்ளைகளோடே அத்தை வீட்டிற்கு சென்று விட்டேன். மாலை முழுவதும் ஒரே கொண்டாட்டம்தான். கடைத் தெருவை ஒட்டிய வீடு என்பதால் அப்பா கொடுத்த காசு பூராவும் காலியாகிவிட்டது. அத்தையும் மாமாவும் வீடு வருவதற்குள் இருட்டிவிட்டது. என்னால் ஊருக்கு திரும்பி வர முடியவில்லை. கையில் காசு இருந்தாலாவது பஸ் ஏறிவிடலாம். காசும் இல்லை. நாளை பள்ளிக்கூடம் போக வேண்டும். உடனே திரும்பி வந்துவிட வேண்டுமென்று அப்பா சொல்லித்தான் அனுப்பினார். சரி என்னவோ ஆகட்டும் அத்தை வந்த பிறகு காசு வாங்கிக்கொண்டு காலையில் முதல் பஸ்சில் ஏற்றிவிடச்சொல்லி போய்விட வேண்டும் என்று காத்திருந்தேன்.
விடிந்தது. அத்தையிடம் நான் ஊருக்குப் போகிறேன். ஸ்கூல் போகணும். அப்பா திட்டுவார் என்று சொன்னேன். அத்தை "ஊருக்குப் போகணுனா போ. உன்ன யாரு போக வேண்டான்ணு சொன்னது?" என்று அலட்சியமாக சொன்னாள். "பஸ்க்கு காசு வேணும் அத்த" என்ற என்னைப் பார்த்து " உங்க அப்பன் கொடுத்து விடலையா... கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு நாங்க காசு குடுத்துவிட எங்கள்ட்ட காசு இல்ல" என்று கோபமாக சொன்னாள்.
அப்பாவுக்கு பயந்து எப்படியாவது பள்ளிக்கூடம் போய் விட வேண்டுமென அத்தையிடம் கெஞ்சத் தொடங்கினேன். " பத்து ரூபா போதும் அத்த. கொடு அத்த... " என்று பத்து முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். இல்லை என்று மறுத்துவிட்டு, சட்டென்று ஒரு துண்டை எடுத்துக்கொண்டு வெற்றிலைக் கொடிக்காலுக்கு கிளம்பி விட்டது. அத்தை பிள்ளைகளும் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பி விட்டார்கள். விடியலில் போன மாமாவும் இன்னும் வீடு வரவில்லை. நேரமாக ஆக எனக்கு அழுகையும் கோபமும் வந்துவிட்டது.
யாருமில்லாத அத்தை வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. அதற்குப் பின், நான் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. நடந்தே ஊருக்குப் போய்விடலாம் என்று புறப்பட்டு கிளம்பிவிட்டேன். என்றாலும் மனமுழுவதும் பயமும் பதட்டமுமாக காலையில் புறப்பட்டவன், இருபது மைல் தொலைவை கடந்து விளக்கு வைக்கும் நேரத்திற்கு வீடு வந்தேன். நான் வந்து சேர்ந்த கோலத்தைப் பார்த்த அம்மா, என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுது தீர்க்கவும் தெருவே திரண்டுவிட்டது.
அத்தையும் அம்மாவும் வருடக்கணக்கில் பேச்சு வார்த்தைகள் இன்றி இருந்தார்கள். இதை சொல்லியே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கூட பல நாள்கள் சண்டை வந்துகொண்டிருந்தது. "எம் ஒத்த புள்ளைக்கு பஸ்சுக்கு பத்து ரூவா கொடுக்க முடியாதவங்ககிட்ட என்ன ஒட்டு ஒறவு?" எடுத்தெறிந்து பேசினாள். "எம் புள்ள வந்த வழியில எத்தன காரு, எத்தன வண்டி வாசி... அந்த ஆத்தாதான் எம் புள்ளைய வீடு கொண்டுவந்து சேர்த்திருக்கா " என்று மாரில் அடித்து அழுது கிடந்தாள்.
அதற்குப் பிறகான இத்தனை ஆண்டுகளில் ஒரு வார்த்தைகூட அவளிடம் நான் பேசியதில்லை. யாரவது என்னிடம் உங்க அத்தை என்று சொன்னால்கூட நான், அது எங்க அத்தை இல்லையென்று சொல்லியிருக்கேன். அத்தையோ "உன் மவனுக்கு நான் விரோதியாகிட்டேன்" என்று அம்மாவிடம் அடிக்கடி சொல்லிக்காட்டும். ஆனாலும் அப்பாவோ அம்மாவோ இது பற்றி என்னிடம் எதுவும் சொல்லிக்கொள்ளமாட்டார்கள்.
இது நடந்தற்குப் பிறகு எவ்வளளோ சந்தர்ப்பங்களில் அத்தையை சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம் இருபது மைல் தூரம் நடந்த கால்களின் வலியைவிட, அத்தை பத்து ரூபாய் கொடுக்கலையே என்ற வலி என்னை துளைத்தெடுத்து என்னிடமிருந்து அவளை தள்ளியே வைத்தது.
இதோ இப்போது எல்லோரும் என்னை வற்புறுத்திகிறார்கள். எனக்கு மட்டும் என்ன? அத்தையை பார்க்க வேண்டும்போல்தான் இருக்கிறது. என் அப்பாக்கூட பிறந்தவள்தானே. என் அத்தை தானே, அத்தை என்று கூப்பிட்டு பதினைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டன. அவள் எங்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம் "அத்த உன்ன கூட்டியாராச் சொன்னது" என்று தங்கைகள் அழைக்கும் போதெல்லாம் மனம் கிடந்து தவிக்கும். ஓடிப் போய் அவள் மடியில் ஏறி உட்கார்ந்து கொள்ளலாமா? அவள் கழுத்தைக் கோர்த்துக் கட்டிக்கொண்டு, என் கால்கள் எவ்வளவு வலித்தது தெரியுமா? ஏன் அத்த எனக்கு காசு கொடுக்கல...? என்று கேட்கலாமா எனத் தோன்றும். ஆனாலும் அவளை நெருங்க என் மனம் ஒப்புக்கொள்ளவே இல்லை. விலகியேதான் இருந்தேன்.
இப்போது, அவள் சாவுப் படுக்கையில் கிடக்கிறாள். அத்தையை பார்க்கப்போன அம்மாவும் கண்கலங்கியபடியே, அத்தை அவ்வப்போது நினைவு தப்பிப் போய்விடுவதாக சொன்னாள். அதைக் கேட்டு என் மனம் தவித்தாலும், ஏனோ போய் பார்க்க இரங்கவில்லை.
அத்தை ஊருலிருந்து ஆள் அனுப்பியிருந்தார்கள். "ரொம்ப அவதி படுது, உங்க முகத்த பார்க்கணுன்னு சொல்லுது, உங்கள கையோட கூட்டி வரச்சொன்னாங்க" என்று வந்தவர் சொன்னதும் எல்லோரும் கிளம்பினார்கள். என்னை கிளம்பச் சொல்லி யாரும் சொல்லவில்லை. ஆனாலும் நான் கிளம்பினேன். எல்லோரும் வியப்பு மேலிட பார்த்தவர்கள் அவர்களோடு என்னையும் அழைத்துப்போனர்கள். வீடும் வாசலும் முழுவதும் வேறு மாதிரி இருந்தது. தயக்கத்தோடுதான் அத்தையின் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தேன்.
எனக்கு முன்பே வீட்டிற்குள் நுழைந்த அம்மா, அத்தையைப் பார்த்ததும் ஓ...வென்று ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். நீர் பொங்கும் தனது கண்களை துண்டால் துடைத்து நின்றார் அப்பா. செய்வதறியாது நின்ற மாமா என்னைப் பார்த்து, "மாப்ள உங்க அத்தைய இப்பதான் பார்க்கனுன்ணு வந்தியாடா?" என்ற கணம்தான் தாமதம். "அத்த...." என்று ஓடி, அத்தையின் கால்களை பிடித்துக்கொண்டு அத்த... அத்த... அத்த... என்று ஒரு நூறு முறையாவது சொல்லியிருப்பேன். அவள் காதுகளில் அது விழுந்ததா என்று எனக்குத் தெரியவில்லை.
ஒரு கணத்தில் என்னோடு சேர்ந்து எல்லோரும் ஓலமிட்டுக் கதறினார்கள். அப்போது அப்பாவும், மாமாவும் என்னை தூக்கி கட்டிக்கொண்டு அழுதார்கள். கொஞ்ச நேரத்தில் அப்பா, அத்தையின் கண்களை முகத்தோடு வழித்து மூடிவிட்டார். அதற்குப் பிறகான நாள்களில், அத்தை படுத்திருந்த அந்த அறையின் ஒருவித வாடையும், அவள் கால்களில் உறைந்திருந்த சில்லிடலும் இத்தனை காலம் கடந்தும் மறையாமல் எனக்குள் தங்கியிருக்கிறது.
****
கு. இலக்கியன்
9865009984 / 6380387133
612, மேல் நிலைத் தெரு,
குணமங்கலம்,
சித்திரக்குடி - அஞ்சல்,
தஞ்சாவூர் -613602.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்