logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Vasanth Prabakar

சிறுகதை வரிசை எண் # 123


தலைப்பு : கருவேலமரத்தின் காதல் அதோ வருகிறான்… முன்னை விட மிக அழகாகத் தெரிகிறான். கருப்புக் கண்ணாடியும் அந்த முறுக்கிய மீசையும் அவனது மாநிறத்துக்கு மிகவும் எடுப்பாக இருக்கிறது. முன்பெல்லாம் லுங்கி கட்டிக்கொண்டு சுற்றித்திரிந்தான் இப்போது வெள்ளை வேஷ்டியும் அதற்கேற்றாற்போல் அடர் நிறத்தில் சற்றே இறுக்கமான அரைக்கை சட்டையும் அவனது புல்லட் வண்டி பிராயாணம் எனக்கு ராஜா நகர்வலம் வருவதை நினைபடுத்துகிறது. அவன் போட்டிருக்கும் கருப்புக்கண்ணாடி தான் எனக்கு எரிச்சலைத் தருகிறது. முன்பெல்லாம் என்பக்கம் அவன் திரும்பிப் பார்க்கும்போது ஒருவித சிலிர்ப்பு ஏற்படும். ஆனால் இப்போது அவன் எந்தப்பக்கம் பார்க்கிறான் என்றே தெரியவில்லை. அந்தப் பட்டாம்பூச்சிக்குத்தான் தலைகால் புரியவில்லை. அன்றொருநாள் அவன் இந்த வழியாக சென்ற போது அவனது வேகத்துக்கு ஈடுகொடுத்து பறந்து அவனது தோள்பட்டையில் சென்று ஒரு நொடி அமர்ந்துகொண்டதாம்... அவனும் அந்த பட்டாம்பூச்சியைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தானாம். அவ்வளவுதான் இருப்புகொள்ளவில்லை அந்தப் பட்டாம்பூச்சிக்கு. நேரே என்னிடம் வந்து வந்தமர்ந்து பெருமையடித்துக்கொண்டது. எனக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் அவ்வளவாய் பழக்கமில்லை. என்னிடம் இருக்கும் மலர்களில் உறிஞ்சிக்கொள்ள தேனும் இல்லை ஆகவே எந்தபட்டாம்பூச்சியும் என்னை சீண்டுவதில்லை. நான் அதைபற்றிக் கவலைப்படப்போவதில்லை. என் மலர்களுக்கென்ன குறைச்சல். நீளமாக சரம் தொடுத்தாற்போல்... மற்ற செடிகளின் மலர்களைக்கூட அள்ளிக்கோர்ப்பதற்கு ஆள் வேண்டும். எனக்கு அப்படியில்லை. என்னவோ அந்த பட்டாம்பூச்சிக்கு என் மேல் கரிசனம் அவ்வப்போது என் கிளையில் வந்தமர்ந்து ஊர்க்கதை பேசிவிட்டுச் செல்லும். எனக்கு பொறாமையில்லை... இருந்தாலும் ஏக்கமாகத்தான் உள்ளது. பட்டாம்பூச்சியாய் பிறந்திருக்கலாம். அவனை தொட்டுபார்த்திருப்பேன். எதிர்பாரா நேரத்தில் சிறகுகளால் படபடத்து அவன் கன்னத்தில் வருடி அவனது இமைகள் படபடக்க முகம் பின்வாங்குவதை ரசித்திருப்பேன். ஆசை யாரை விட்டது. அடிக்கடி இந்த வழியாய்த்தான் வருகிறான் போகிறான். கொஞ்சம் முயன்று பார்த்து அவனை தொட்டால் தான் என்ன. இந்தப் பிறவியில் மோட்சம் பெறுவேனே... அதனாலேயே கொஞ்சநாட்களாய் வேர்களை பரப்பி என்னால் இயன்ற மட்டும் நீரை உறிஞ்சிக்கொள்ளப்பார்க்கிறேன். இதோ இப்போது நான் பாதையிலிருந்து சில அடிதூரம் தான் தள்ளி இருக்கிறேன். கொஞ்சம் வளர்ந்தால் என் கிளைகள் நீண்டு அவனை தீண்டி ஸ்பரிசத்தை உணருவேன். நான் நினைத்தது போலவே எல்லாம் நடந்தது. இதோ என் கைகள் நீண்டு பாதைக்கு குறுக்கே இரண்டடி தூரம் வரை பரந்துவிட்டது. காற்றிடம் உதவி கேட்டிருக்கிறேன். அவன் வரும்போது மட்டும் கொஞ்சம் என்னை அசைந்து கொடுக்கச்செய்வாயா என்று. இல்லையென்றால் அவன் உயரத்திற்கும் மேலாக இருக்கும் என் கிளைகளால் அவனைத் தீண்ட முடியாதே... காற்று கொஞ்சம் அலுத்துக்கொண்டது. கெஞ்சினேன். அந்த மாமரத்தைப் பார். அந்த ஆலமரத்தைப் பார். அவைகளது இலைகள் எவ்வளவு நெருக்கமாக உள்ளன. உன்னை என்றாவது இலகுவாக கடக்க அவை அனுமதித்திருக்கின்றனவா? ஒவ்வொருமுறையும் உன் வேகத்தைக் குறைத்து தானே அனுப்புகின்றன? ஆனால் என்னை பார். என் இலைகள் அவ்வளவு நெருக்கமில்லை. கிளைகளும் தடிமனாய் இல்லை. என் பூக்கள் கூட நீ கொஞ்சம் கடுமை காட்டினால் உதிர்ந்துபோகும். என்னைப்பார்த்தால் பரிதாபமாக இல்லையா. எனக்காக கொஞ்சம் இரக்கம்காட்டமாட்டாயா? என்றேன். புரிந்துகொண்டது போன்று என் தலையை சிலுப்பிவிட்டுச்சென்றது. இன்று அவன் வருவதாய் செய்தி. அதனால்தான் காத்திருந்தேன் அவனும் வந்தான். காற்றும் முயன்றமட்டும் என் கிளையை அவனிடம் கொண்டுபோய் சேர்த்தது. ஆனால்... அப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் சற்று நிதானித்திருக்க வேண்டும். முன்னமே யூகித்திருக்க வேண்டும். அவன் மோட்டார் சைக்கிளில் சென்ற வேகத்தில் என் கைகள் அவனைத் தீண்டியதுதான் தாமதம் அதிலிருந்த முள்ளொன்று அவன் கையைக் கீறிவிட்டது. அவனைத்தீண்டிய சந்தோஷம் ஒரு நொடி கூட நிலைக்கவில்லை. வேகத்தில் சென்றவன் கையை உதறிக்கொண்டே சென்றது மட்டும் தெரிந்தது. ஐயோ அவனுக்கு வலித்திருக்குமே. அவனிடம் நான் எப்படிச்சொல்வேன் அவனைக் காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லையென்று. குளத்தை தூர்வாரும் பணி கொடுக்கப்பட்டவர்களில் சிலர் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து என்னை வெட்டிச்சாய்க்கப்போவதாய் அறிகிறேன். ஒருவேளை அவன் சொல்லி அனுப்பியிருப்பானோ. ச்சே ச்சே இருக்காது. அவன் மிகவும் மென்மையானவன். கையில் கோடாலியை வைத்திருந்தவன் சொன்னதிலிருந்து தெரிந்துகொண்டேன். கோவில் குளத்திலிருக்கும் தண்ணீர் என்னைப்போன்ற கருவேல மரங்களால் தான் வற்றிவிடுகிறதாம். உண்மையாக இருக்கலாம். அவனைத் தீண்டும் வேட்கையில் சற்றே அதிகமாக நீரை உறிஞ்சிக் குடித்திருக்கிறேன் கொஞ்ச காலமாக. எனக்கு சாவைக்குறித்து பயமில்லை. சாகும்முன் ஒருமுறையேனும் அவனைப் பார்த்துவிடவேண்டும். அந்தப் பட்டாம்பூச்சியை தூது அனுப்பி அவன் காயம் என்னாயிற்று எனப் பார்க்கலாமென்றால் அதையும் காணவில்லை. பட்டாம்பூச்சியே எங்கிருக்கிறாய்? காற்றே காற்றே... அவனிடம் சொல்வாயா உயிர்போகும் தருவாயிலும் நான் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன் என்று? அவன் வந்து ஒரு வார்த்தை சொல்லிவிடமாட்டானா அந்த மரத்தை வெட்டாதீர்கள் என்று? ச்சே எப்படிச்சொல்லுவான் நான் தான் அவனை அப்படிக் காயப்படுத்தியிருக்கிறேனே... எப்படிச் சொல்லுவான்? அங்கே என்ன சத்தம்... ஐயோ அந்த காக்கைக்குஞ்சுககளை மறந்தேவிட்டேனே... இரைதேடிச் சென்ற தாய்க்காக்கை திரும்பி வந்தால் என்ன பதில் சொல்வேன்... உன்னை நம்பித்தானே கூடு கட்டினேன், என் குஞ்சுகளை உன் பொறுப்பில் விட்டுச்சென்றேன் இப்படிச் செய்துவிட்டாயே... உன் ஆசைக்காக என் குஞ்சுகளை பலிகொடுத்துவிட்டாயே எனக் கேள்வி கேட்குமே...எங்கு சென்று என் முகத்தை வைத்துக்கொள்வது? என்னை மன்னித்துவிடு காக்கையே காதல் என் கண்ணை மறைத்துவிட்டது. என் தகுதிக்கு மீறி காதல்கொண்டது என் தவறு தான்... அனால் உன் குஞ்சுகளை கொல்லும் எண்ணமில்லை. குஞ்சுகளின் அலறலுக்கு இடையில் என்னால் அந்த சத்தத்தை கேட்க முடிந்தது... தூரத்திலிருந்து மோட்டார்சைக்கிள் ஒன்றின் சத்தம்... அவனாக இருக்குமோ? காற்று அவனுக்கு சேதி சொல்லியிருக்கவேண்டும். ஒருவேளை அது அவனாக இல்லாதுபோனால்... இல்லையில்லை அது அவனாகத்தான் இருக்கவேண்டும். என்னை வெட்ட ஆரம்பித்துவிட்டார்கள்... கடுமையான வலிதான் ஆனால் அவனைக் காயப்படுத்தியதை காட்டிலும் பெரிய வலியில்லை... முயன்ற மட்டும் ஒற்றைக் காலில் பிடிவாதத்தோடு நிற்கிறேன் நான் வீழ்வதற்குள் அவனை ஒருமுறையாவது பார்த்துவிடுவேனென்ற நம்பிக்கையோடு... அவனிடம் மன்னிப்பு கேட்பேன்... என் முட்களை நினைத்து என்னை வெறுக்காதே... என் கொழுந்துகளைப்பார் எவ்வளவு மென்மையாக உள்ளன... அவைகளே என் விரல்கள் என்பேன். என் விரல்களால் அவனது காயத்தை வருடிக்கொடுப்பேன்... சந்தடி சாக்கில் அவன் விரல்களுக்குள் என் விரல்களை நுழைத்துக்கொள்வேன்... எனக்கும் வேருக்குமான தொடர்பு அற்றுக்கொண்டே வருகிறது... என்னால் நிலைகொண்டு நிற்கமுடியவில்லை. என்னை வெட்டியவர்களில் ஒருவன் பலம்கொண்டமட்டும் என்னை மிதித்து தள்ளுகிறான். கடைசி மூச்சை உள்வாங்கிக்கொண்டே சரிந்து விழுகிறேன் பாதையில் என் கைகளை பரப்பி... என்னால் பார்க்கமுடியவில்லை. யாரோ என் தலையை வருடுவதுபோல் தெரிகிறது... குஞ்சுகளைத் தூக்கிச்செல்ல வந்த காக்கையாக இருக்கலாம்... யாரோ என் விரல்களை நசுக்கியது போன்று தோன்றியது... அவனது மோட்டார்சைக்கிளாக இருக்கலாம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.