இரா.சாரதி
சிறுகதை வரிசை எண்
# 121
அமைதிமட்டும் அனுமதிக்கப்படும்
இரா. சாரதி
மின்னஞ்சல்: sarathystays@hotmail.com
அலைபேசி : 9884035494
தஞ்சை புறநகர் சாலையில் வாஞ்சை முகங்களுடன் ஒரு இன்னோவா கார் கர்ஜித்துக் கொண்டு அலுங்காமல் குலுங்காமல் சென்று கொண்டிருந்தது. சாலையில் இருபுறமும் சாய்ந்து கிடந்தன வாடினப் பயிர்கள். நீரற்று போனதால் உயிறற்று கேட்பாறற்றுப் போய்க் காய்ந்து சாய்ந்து வீழ்ந்திருந்தன. இக்காலம் அறுவடைக் காலம். இக்காலத்தில் இந்நேரம் எங்ஙனமும் முகத்தில் அணிகலன்கள் பூட்டிய நாணமிட்ட நங்கைகள் போல காட்சியளிக்க வேண்டிய குண்டுமணி கன நெற்பயிர்கள் யாவும் சாலையின் இருபுறமும் நாடி நரம்பற்ற கிழுவிகளாக காட்சியளித்தன. காரினுள் எட்டு மாந்தர்கள் எத்திசையும் தெரியும் சாய்ந்த வாடினப் பயிர்களை வேடிக்கை பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர்.
சாலையோரத்தில் இளநீர் விற்கப்படுவதைக் கண்டதும் கார் நின்றது. எல்லோரும் இறங்கினர்.
‘‘எயிட்’’
என குடும்பத் தலைவன் இளநீர் வியாபாரியை நோக்கி கூறினான். வியாபாரியும் உடனே எட்டு காய்களை சீவிக் கொடுத்தான்.
ஆசையாசையாக அமிர்தமாய் அனைவரும் அள்ளிப் பருகினர். உறிஞ்சியவாறு சுற்றுவட்டாரத்தைக் கைநீட்டி குறிப்பிட்டு ஒருவன் கேட்டான்.
‘‘ஒய் பிளான்ட்ஸ் டிரய்?’’
வியாபாரியும் குறியிடப்பட்ட இடத்தை பார்வையிட்டு அறிந்தவனாய் பதிலளித்தான்.
‘‘நோ பாணி, நோ கேணி, நோ ஆத்து.... ரிவர்பாணி’’
‘‘பட் வி ஹேவ்’’ என தன் கையில் பிடித்திருந்த வாட்டர் பாட்டிலை குறிப்பிட்டவாறு அக்குழுமத்திலிருந்த ஒரு குறும்புக்காரச் சிறுவன் கூறினான்.
தஞ்சை இளநீர் வியாபாரி வாஞ்சையுடன் அச்சிறுவனின் கன்னத்தை கிள்ளினான். வந்தோருக்கு தமிழ் தெரியாது, வியாபாரிக்கு ஆங்கிலம் அறியாவிட்டாலும் மொழிகளுக்கு அப்பாற்பட்டு, சைகை மொழியாலும் உடல் மொழியாலும் பரஸ்பர பேச்சு பரிவர்த்தனை அரங்கேறின. பேச்சு பரிவர்த்தனையின் முடிவில் பணத்தை பயபக்தியோடு பெற்றுக் கொண்டான் வியாபாரி.
கார் கிளம்பிற்று .காணும் இடமெல்லாம் காய்ந்த செடிகள்.எங்கும் தண்ணீர் இல்லை. நோக்கிய இடமெல்லாம் நைந்த நெற்பயிர்கள். 'ச்' கொட்டி நொந்து கொண்டான் குடும்பத் தலைவனான காரோட்டி . ஹிந்தி சினிமா பாடலுடன் குலுங்கியவாறு கார் சென்றுகொண்டிருந்தது. திடீரென கார் திடுதிடுப்பென நின்றது. காரோட்டி காரை ஸ்டார்ட் செய்தார். இன்ஜின் கர்ஜித்ததேத் தவிர நகரவில்லை. பலமுறை முயற்சி செய்தும் கார் கிளம்பவில்லை. எதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது என காரோட்டி கதவைத் திறந்து கீழறங்கினான். அருகில் எவருமில்லை. ஒரு வாகனம் கூட வரவில்லை. தொலைவில் ஒரு சிறு கூட்டம் வந்து கொண்டிருந்தது. பதாகைகள், கொடிகள், கறை வேட்டிகள் ஏந்திய ஒரு அரசியல் கட்சி, பேரணி என்ற பெயரில் ஆவேசமாக கூக்குரலிட்டு வந்து கொண்டிருந்தது. கூக்குரலிட்ட கூட்டம் அருகில் வர வர பதாகைகள் தெளிவாகத் தெரிந்தன. பதாகைகளைப் பார்த்ததும், படித்ததும் கார் நபர்கள் பதபதைத்தனர். அஞ்சினர். பதாகைகளில் கர்நாடாக அரசியல்வாதிகளைக் கண்டித்து வரைபடங்களும், ‘கிவ் காவேரி வாட்டர்’, 'காவிரியை ஓட வீடு, எங்களை வாழ விடு' போன்ற வாசகங்களும் தெரிந்தன.
கூட்டத்தின் முன்னே வழி நடத்தி சென்ற தலைவனின் காதுகளில் ஒருவன் கிசுகிசுத்தான்.
‘‘தலைவா, அங்க பாருங்க ‘கேஏ-47’ன்னு ஒரு கர்நாடக கார் நிக்கிது. இதுதான் தக்க சமயம். நம்ம தமிழர்களையும், நம்ம 'டி என்' வண்டிகளை அடிக்கிறானுங்க, நொறுக்குறானுங்க. நாம யார்ன்னு காட்ற நேரம் வந்திருச்சுத் தலைவா. என் கையிலே ஏகே 47 இருந்துச்சுன்னா இந்த கேஏ 47 காரை சுட்டுத் தள்ளுவேன். டேய் எடுறா உருட்டுகட்டைகளை, எடுறா வீடியோவை. இதை வைரலாக்கி நாம ஹீரோவாகிரலாம் தலை’’
ஆவேசமாக ஆர்பரித்தான் தொண்டனொருவன். வரைபடங்களையும், வாசகங்களையும் பார்த்த கார் நபர்கள் பயந்தனர். கண்களில் மரணபயம்.
தலைவர் அத்தொண்டனை அடக்கினர்.
‘‘டாய், சும்மா கிட அவனுக எதோ டூர் வந்திருக்கானுக. வந்த இடத்திலே கார் பழுதாகி போச்சு. உதவிசெய்வியா’’
‘‘நீ சும்மா இரு தலைவா. உனக்கு ஒண்ணும் தெரியாது. நெஞ்சு பொறுக்குதில்லையே தலைவா. இங்க இவனுங்களை அடிச்சா அங்க வலிக்கும். ஓசூர் பார்டரில் என்னா காட்டுமிராண்டித்தனம் காமிக்கிரானுங்க விடு தலை’’
‘‘அடச் சீ கம்முன்னு கிட. மிருகம் கடிக்கிறதுன்னு நாமளும் திரும்ப கடிக்கணுமா? போடா. அவனுங்க சில அரசியல் கட்சிங்க ஆதாயத்துக்காக கட்சி துண்டை சுத்திக்கிட்டு நம்ம வண்டிகளை நொறுக்குறானுங்க. தமிழர்களை அடிக்கிறானுங்க. அதை பெரிசா வீடியோ எடுத்து காமிக்கிறானுங்க. நாம அப்படியா... நாமல்லாம் தமிழர்கள்டா. இந்நாட்டு அரசியல்வாதிகள். எப்போதும் அறவழிதான், அடாவடி அடிதடி அரசியல் கூடாதுடா. அங்க யாரு எப்படி பயப்படுறானுங்க. குழந்தைகள் வேறு இருக்கு’’
‘‘அப்ப குழந்தைகளோட கண்ணைக் கட்டிட்டு நம்ம வேலையை காமிப்போம்’’
‘‘அடச் சீ, நம்ம தமிழ்நாட்டு அரசியலன்னா என்னன்னு காமிக்க வேண்டாம். கம்முன்னு வா’’
கூட்டத்தில் தலைவனுக்கும் ஒரு சிலத் தொண்டர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்படுவது போல் பேசிக் கொண்டு வருவதைப் பார்த்த காரிலிருந்தவர்கள் நிலைமையை யூகித்துக் கொண்டு குழந்தைகளைத் தூக்கி கொண்டு ஓடத் தயாரானார்கள். இதனைப் பார்த்த தலைவன் அவசரமாய் கூறினான்.
‘‘பாரு அவங்க ரொம்ப பயந்துட்டாங்க போல. நமக்கு மொழி தெரியாதேடா, நாம நல்லவங்கன்னு அவனுங்களுக்கு புரிய வைக்கணுமே..’’ எனப் பக்குவமாக யோசித்த தலைவன் விருட்டென்று தான் அணிந்திருந்த வெண்ணிற மேல் சட்டையை கழற்றி விரைவாக தொண்டன் ஏற்றிய கட்சிக் கொடி கம்பத்தில் கட்சிக் கொடியை கழற்றி அதற்கு பதிலாக வெள்ளைச் சட்டையை மாற்றிக் கட்டி ஆட்டினான். தன் தொண்டர்கள் அனைவரையும் அவ்வாறே செய்ய வலியுறுத்தினான். அனைத்து கம்பத்திலும் கட்சிக் கொடிகள் கழட்டப்பட்டு புனித சமாதானச் சின்னமான வெள்ளை சட்டைத் துணிகள் மாட்டப்பட்டு ஆட்டப்பட்டதும், மிரண்டிருந்து ஓட எத்தனித்த கன்னடர்கள் நின்றனர்.
தலைவன் ஒரு கையை ‘நிறுத்து’ என்ற சமிக்ஞையில் வைத்துக் கொண்டும் மற்றொரு கையில் வெண்கொடியை ஆட்டியவாறும் மெதுவாக அருகில் வந்தான்.
‘‘ஐ ஆம் நோ ஃபியர், ஐ’’
அருகில் ஒரு தொண்டர் கூறினான். ‘‘தலைவரே ஐ ஆம் பதிலா ‘வீ’ன்னு சொல்லுங்க தலைவரே’’
உடனே தலைவன் கூறினான்.
‘‘யெஸ் வீ ஆஃபர்... ஹெல்ப்’’
‘‘டிஸ்கவுன்ட் ஆஃபர்’’ என ஒருத் தொண்டன் காலையில் கடையில் பனியன் வாங்கின ஞாபகத்தில் குரலெடுத்தான்.
‘‘யெஸ் யெஸ் ஹன்டர்ட் பர்சன்ட் ஆஃபர் ஹல்ப்’’
கர்நாடகர்கள் முகங்களில் பயம் விலகி சிரிப்பும் சினேகமும் அப்பிக் கொண்டன. இவர்கள் முகங்களில் சினேகம் காட்ட, கூட்டத்தினரின் நடையடிகளும், வார்த்தை அடிகளும் வேகமாக சரளமாக முன்னேறின.
‘‘ஐ ஆம்’’
‘‘தலைவரே ‘வீ’ தலைவரே’’
‘‘யெஸ் யெஸ் வீ தமிழ்நாடு பாலிடிக்ஸ். ஒன்லி அறப்போர். நோ அடாவடி அடிதடி அரசியல்... ஓகே’’
உடனே ஒரு தொண்டன் தான் கொணர்ந்த மோர் பாட்டிலை தலைவரிடம் கொடுத்தான்.
‘‘டேய் நான் நோ மோர்ன்னுதானே சொன்னேன். கன்டிரி பூல்ஸ். எதாவது படிச்சிருந்தா தானே. நோ இங்கிலீஸ் அறிவு.. நாலேஜ்’’
என தலைவன் தொண்டனைத் திட்டினான். தொடர்ந்தான்
‘‘சகோ.... ப்ரோ.... ஐ ஆம்.... வீ... ஜென்டில்மேன்ஸ் பாலிடிக்ஸ். நோ ப்ராபளம் ஓகே. இது.. ஹவ் யூ கம் ஹியர்?’’
காரிலிருந்த குடும்பத் தலைவன் குழந்தையை இறக்கி விட்டு கூறினான். தாங்கள் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தனக்கு ஏழரையாண்டு சனிபெயர்ந்துள்ளதையடுத்து தனக்கு ஆருடம் அருமையாக அமையப்பெற முன்னெச்செரிக்கையாக திருநள்ளாறு சனீஸ்வரனை தரிசித்துவிட்டு வந்ததாகவும், வருகையில் கார் பழுதாகிவிட்டதையும் ஆங்கிலத்தில் கூறினான்.
‘‘ஓ, ஓ திருநள்ளாறு டிரிப்... குட் காட்... வீ குட் அரசியல்வாதி. டாய் வண்டியிலே என்னன்னுப் பாரூ’’ என தன் தொண்டன் ஒருவனை அதட்டினான் தலைவன். அவ்வப்பொழுது தன் பனியன் மேலிருந்த கட்சித் துண்டை வேண்டுமென்றே உலுக்கி கெத்து காட்டி சரி செய்தான்.
தொண்டன் உடனடியாக காரின் பானட்டைத் திறக்க, புகை பறந்தது.
‘‘அண்ணே, ரேடியேட்டரிலே தண்ணீ இல்லண்ணே ரொம்ப சின்ன ப்ராபளம்தான்’’ என கையையும், கண்களையும் காரினுள் விட்டு ஆராய்ந்தான்.
‘‘அண்ணே, இன்ஜின் ஸ்டக்ண்ணே தண்ணி ஊத்துனா சரியாப் போயிரும்’’
‘‘டேய் அந்த பாட்டில் தண்ணீயை ஊத்து’’
‘‘தலைவா இது நமக்கு குடிக்கிற தண்ணி’’
‘‘அடச் சீ போகும்போது எங்காவது வாங்கிக்கலாம். இவனுக கார் பவரா ஓட வேணாம். ஊத்து!’’
தொண்டன் தண்ணீரை ஊற்ற சிறிது வீணாக சாலையில் கொட்டியது.
‘‘டேய் தண்ணீயை வேஸட் பண்ணாதடா’’
தொண்டனைப் பார்த்து அதட்டினான். பின்பு கன்னடர்களைப் பார்த்துக் கூறினான். ‘‘ஐ... டிஸ்லைக் வேஸ்டிங் வாட்டர்’’
தண்ணீர் ஊற்றப் பட்டதும் புகை பறந்தது. புகை பறக்க, பகை பறக்க, பயம் இறங்க கன்னடர்கள் சினேகமாக உயிர் வந்தாற்போல ஊர் சென்றுவிட்டது போல் நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு விட்டனர். நன்றி கூறினர்.
‘‘மெனி தாங்க்ஸ்’’ என குடும்பத் தலைவன் கட்சித் தலைவனின் கைகளை பற்றிக் கூறினான்.
‘‘ஓய் ஒய் மெனி தாங்ஸ். ஒன் தாங்ஸ் இனப். ஐ டிஸ்லைக் வேஸ்டிங். ஓகே. ’’
தன் தோள் துண்டை உலுக்கி கெத்து காட்டி சரிசெய்தவாறு தலைவன் கூறினான்.
அப்பொழுது கர்நாடக குழுமத்தில் ஒருவன் காரின் நம்பர் பிளேட்டான ' கே ஏ-47 ' மீது ஒரு வெத்து வெள்ளைத் தாளை ஒட்டினான். கட்சித் தலைவன் இச்செயலை குனிந்து நோட்டமிட்டான். பின்பு பதறிப் போய் கூறினான்.
‘‘ஓய், ஒய் ஒய் ஒயிட் பேப்பர் கம் ஸ்டிக். ஆல் தமிழ்நாடு குட். ஓகே எக்ஸ் ஆப்பிள்... ச்சே சோறு தின்ன வாயில் எப்படி ஆப்பிள் பழம் வரும்... எக்ஸ் ஆம்பிள் மி பார் குட். லைக் ஒன் ரைஸ் இன் எ பாட் ஆப் ரைஸஸ். டோட்டல் தமிழ்நாடு குட். பிரண்டிலி. நோ ப்ராபளம் ரைஸ். ஓகே இப் போலீஸ் சி தென் பிக் பிராபளம், அபன்ஸ்! சோ நோ ஒயிட் பேப்பர்’’
தலைவன் கூறுவது புரிந்தாலும், கன்னடக் குடும்பத்தினர் தயங்கினர். உடனே தலைவன் புரிந்து கொண்டவனாய் கூறலானான்.
‘‘யு டூ ஒன் திங்.... நோ டூ திங். பஸ்ட் கிவ் செல் போன். சுவிட்ச் வீடியோ’’ என குடும்பத்தினருடன் மத்தியில் நின்றவாறு குடும்பத் தலைவனின் செல்போனை தன் தொண்டனிடம் கொடுத்து படமெடுக்கச் சொன்னான். தலைவன் தன் தலைமுடியை சரிசெய்து, தன் பின்னே கட்சிக் கொடி இருக்குமாறு பார்த்துக் கொண்டு உரையாடினான்.
‘‘மக்களே இதோ பாருங்க. இவங்க நம் நண்பர்கள். குஷன்ஸ்”
“தலைவா, கசின்ஸ் தலைவா”
“ஆ.. கசின் பிரதர்ஸ்... ம்.. இவங்க மேல கைவச்சீங்கன்னா அப்புறம் நான், என் கட்சியாளுங்க சும்மா இருக்க மாட்டாங்க. இவங்களை தொடக்கூடாது. டச் பண்ணி சேதாரம் ஆச்சுன்னா அப்புறம் என் கட்சி பேசிடும். பாத்துக்குங்க. தொண்டர்கள் கோதாவிலே குதிச்சிடுவாங்க. அப்புறம் நான் பொறுப்பில்ல. ஆமாம். அதனாலே நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க இவங்களை நல்லபடியா வழி அனுப்ப உதவுங்க. அறப்போர் அரசியல் பண்ண உதவுங்க. அடிதடி அரசியல் வேணாம்’’
தான் முடிச்சுட்டதாக படமெடுத்தலை முடிக்கச் சொன்னான். பின்பு குடும்பத் தலைவனிடம் கூறினான். ‘‘திஸ் பஸ்ட் திங் ஓவர். யு சி நெக்ஸ்ட் திங்....” தன் தொண்டர்களை பார்த்துக் கூறினான். “டேய் நீங்க ரெண்டு பைக்லே இவங்க கூட போங்க. போயி பார்டரிலெ விட்டுவிட்டு வாங்க. இந்தா இதை வச்சுக்கே பெட்ரோல், சாப்பாட்டுக்கு வச்சுக்கோ’’ என இரு 2000 தாள்களைத் தந்தான். பின்பு கடுமையாகக் கூறினான். ‘‘ஏய் இங்க பாரு பாதியிலே விட்டுட்டு வரக் கூடாது. ஒழுங்கா பார்டரிலே எதுனா மைல்கல் முன்னாடி இவங்களோட சிரிச்ச மாதிரி போட்டோ எடுத்து எனக்கு காமிக்கணும். எங்காவது சரக்கு அடிச்சு ஊர் சுத்தினதா தெரிஞ்சது தொலைச்சிடுவேன்’’ என ஆள்காட்டி விரலை ஆவேசமாக ஆட்டியவாறு பேசினான்.
உடனே கன்னடர்கள் தலைவனிடம் நன்றிக்காக ரூபாய்த் தாள்களைத் திணிக்க மறுத்தான்.
‘‘நோ, நோ மணி. ஒன்லி செல்ப் ரெஸ்பெக்ட். யு கோ, யு டூ கோ, ஆல் கோ’’ என தன் தொண்டர்களை பைக்குகளில் துணைக்கு வழியனுப்பினான்.
தலைவன் திடீரென மறித்தான்.
‘‘ஒன் நிமிட் யூ சி திஸ் லேண்ட் டிரை. பட் மை அவர், தமிழ்நாடு ஹியர்’’ தன் நெஞ்சின் இப்பக்கத்தினை குறிப்பிட்டு,‘‘ அவர் ஹார்ட் வெரி வெட் கூல். யு கோ டெல் யுவர் பீப்ல்ஸ்.’’
கன்னடர்கள் கண்ணீர் மல்க கைகுலுக்கி விடைபெற்றனர். காரினுள் இருந்தபடி சிறுவர்கள் தலைவனை பார்த்தபடி வெகுநேரம் கையசைத்தனர். கார் மறையும் வரை கையசைத்தான் தலைவன். தன் தொண்டர்களிடம் உரையாடினான்.
‘‘ஏன்டா இவனுக நம்மளை உயிர் உள்ளவரை மறக்க மாட்டானுகல’’
‘‘நிச்சயம் தலை. ஆனா என்ன பிரயோசனம்? அவனுக பக்கத்து மாநிலம். ஒட்டு இல்லை. இவனுக மேல கைவச்சு வீடியோ எடுத்தாலாவது நாம பேமஸ் ஆகியிருக்கலாம்.”
‘‘அடச்சீ சும்மா அதையே திரும்ப திரும்ப பேசிக்கிட்டு. ஒரு உயிரைக் கெடுத்து பேமஸ் ஆகக் கூடாதுடா. நம்ம உயிரை கொடுத்து சாதிக்கணும். அவன் உயிர் உள்ளவரை நம்மளை நினைக்கணும். இது தான் மனிதாபிமானம். சும்மாவா சொன்னாங்க பெரியவங்க. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடு‘ன்னு. அப்பதான் ப்ரீயா இருக்கலாம்... ஆனா இப்ப நெஞ்சு பாரமா இருக்குடா’’
‘‘நோ பீலிங்ஸ் தலை. அரசியல்ல இதெல்லாம் சகஜம் தலை’’
‘‘ம் எவன பாத்தாலும் அரசியல் ஒரு சாக்கடைன்னு சொல்றானுங்கல்லே. இனிமே இதை பாத்துட்டு அரசியல் ஒரு ஒரு சாக்லெட்டுன்னு சொல்லணும்டா’’
‘‘சூப்பர் தலைவா’’ கைத்தட்டல்கள் எழுந்தன.
‘‘தலைவரே நீங்க ஒரு சாக்லெட் ஹீரோ தலைவரே’’
‘‘என்னது சாக்லெட் ஹீரோவா. அப்படின்னா?’’
‘‘அதான் தலைவா. பல இளம் பெண்களின் மனதை கொள்ளைடிக்கிற நாயகன் நீ. பல முன்னணி ஹீரோயின்களோட டூயட் பாடும் இளம் ஹீரோ நீ’’
‘‘ஆ. ’’ என வாயைப் பொளந்த தலைவன் ஒருசில விநாடிகளில் வார்த்தைகளைக் கொட்டினான்.
‘‘சும்மா உசுப்பேத்தாதீங்கடா. எனக்கு ஏழு கழுதை வயசாகுது. தலையெல்லாம் டை. அடுத்த வருஷம் என் பொண்ணு காலேஜ் முடிக்கிறா. இப்ப போயி இளம் ஹீரோ சாக்லெட் ஹீரோன்னுட்டு கருப்பட்டி ஹீரோன்னுட்டு’’
சொல்லிக்கொண்டே தலைவன் தன் செல்போனில் செல்பி கேமிராவில் முகம் பார்த்தான். இப்படியும் அப்படியுமாக முகத்தை வெவ்வேறு கோணங்களில் பார்த்தான். பின்பு கறுப்பு கண்ணாடியை எடுத்து பெருமிதமாக அணிந்துகொண்டான்.
“தலைவரே, அவன் கார் பவரா ஓட உதவிட்டோம் இனி என்ன பண்ண?”
“ம் இப்பேரணியை அந்த ஊரணி வரைக்கும் உருட்டிட்டு போய் ரெஸ்ட் எடுத்துட்டு அப்படியே போக வேண்டியதுதான். சரி சரி ஸ்லோகம் சொல்லுங்கடா’’
‘‘தலைவரே அது ஸ்லோகன் (SLOGAN) தலைவரே’’
“மானத்தை வாங்காதீங்கடா. அதை சொல்லுங்கடா”
‘‘அடிக்காதே, அடிக்காதே தமிழர்களை அடிக்காதே!’’
‘‘ஓங்கிக் கத்து’’
‘‘கோர்ட் தீர்ப்பை மதித்து காவேரியை திறந்துவிடு!’’
‘‘ஒரக்கக் கத்து’’
‘‘அடிக்காதே அடிக்காதே.......’’
பேரணி ஆக்ரோஷமாக கூக்குரலிட்டபடி சாலையை கடந்து சென்றது.
வெகு தொலைவில் ‘கேஏ-47’ என்னும் எண் கொண்ட இன்னோவா கார் ‘டி என்’ பலகைகள் ஏந்திய கார்களுக்கு மத்தியில் லாவமாக கலக்கமின்றி கலந்து கடந்து சென்றது. காரினை ஓட்டிச் சென்ற குடும்பத் தலைவன் சாலையின் இருபுறமும் பார்த்துவிட்டு நெகிழ்ந்துக் கூறினான்.
‘‘லாங் லிவ் தீஸ் பீப்பில் , லாங் லிவ் டமில் நாடு’’
- முற்றும் -
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்