logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

GRACY MARY.A

சிறுகதை வரிசை எண் # 120


*புதிய கோலம்* யாழிசை... பெயருக்கு ஏற்றவாறு உருண்டை முகம்.... மைத்தீட்டிய உருட்டு விழிகள். மூக்கும் அளவாக அம்சமாக... ஒரு கை , தலைமுடியை நான்கில் ஒரு பங்கு வெட்டி வீழ்த்திய சிகை அலங்காரம்... உதட்டில் லேசான சாயம். பேசும் அவ்வப்போது வெளிப்படும் பற்கள்... கோர்த்து வைத்த முத்துகளைப் போல.... சுடிதாருக்குச் சால்வை சூட்டும் விதமே அழகு தான். புடவையில் சொல்லவே வேண்டாம்.... அடுக்கு அடுக்காக மடிப்பு கலையாத முந்தானை பேரழகைப் புரண்டு புரண்டு நிலமகளிடம் கூறும். இன்றும் அதே அழகு தான்...‌சற்றே கூடுதல் பொலிவோடு இருந்தாள். வெளிர் மஞ்சள் சுடிதார். மெல்லிய பூக்கள் சிரித்து அழகாக்கின அவளது ஆடையை. அழகான புன்னகையோடு உள்ளே நுழைந்தவள், கண்களால் அச்சிறு அறையை அளவெடுத்தாள். ஒரு வார விடுப்பில் இருந்ததோ என்னவோ ... எல்லாம் புதிதாக தெரிந்தன. அவள் கைகளால் உருவாக்கிய பச்சைக் கிளி எட்டிப் பார்ப்பது போல் இருந்தது. இரவு பகலாக அவள் வண்ணம் தீட்டிய இளம்பெண் சிலை கைக்கூப்பி வணக்கம் சொல்வது போல் இருந்தது. அடுக்கிய மயிலிறகுகள் மேலும் அழகாகிப் போயிருந்தன. குழலி மெல்லிய பருத்தி ஆடை அணிந்திருந்தாள். செந்நிற பூக்கள் புல்வெளியில் மலர்ந்தது போன்ற புடவை....காற்றில் புடவையோடு, பூக்களும் அசைந்தன. அவரவர் கண்களை அகற்ற அவகாசமின்றிக் கடினமாக இயங்கிக் கொண்டிருந்தனர். கைகள் தூரிகை கொண்டு கடல் அலையை உருவாக்கின. தேங்காய் நார்கள் தான் எவ்வளவு உபயோகம் ஆனவை. அதை நேர்த்திப் படுத்திக் கொண்டு இருந்தார் ஒருவர். அலங்காரம் செய்யப்பட்ட பரிசுப் பொருட்கள் எண்ணிக்கை அடிப்படையில் பெட்டியில் அடைக்கப் பட்டுக் கொண்டிருந்தன.... இந்த பரபரப்பான உலகில் தான் மட்டும் மகிழ்ந்து இருப்பது போன்ற மனவுணர்வு யாழிசைக்கு. கீதா.....சிக்கென்ற உருவம்; சிறுமுறுவல் தாங்கிய உதடு; முதுமை எட்டிப் பார்ப்பதை உணர்த்த அங்கொன்றும் இங்கொன்றுமாக வெண்ணிற தலைமுடி. மூக்கு தாங்கி நிற்கும் கண்ணாடி...‌ உடுத்திய‌ ஆடை தாண்டிப் பெண்மைத் தென்பட்டது. இடையின் வளைவு உடலின் எடையைக் குறைத்துக் காட்டியது. நிமிர்ந்த காரணத்தை நிறைவு‌செய்ய, மார்பு சேலையைச் சரி செய்து குனிந்தாள். வேலை தலைக்கு மேல் இருந்தாலும், கணப்பொழுதில் இசையின் வருகையை உறுதி செய்த திருப்தி. அடடே... யாழிசையா... எப்படி இருக்க? நல்லா இருக்கேன்‌ கீதா அக்கா.. என்றவாறு.... நேராகச் சென்று குழலியின் கைகளைப் பிடித்தாள்.... இருவரும் மாறி மாறி புன்னகைத்துக் கொண்டனர். இருந்த இடத்தை விட்டுச் செய்பொருள் இருக்கும் இடம் நோக்கி சென்றனர். குடும்பக் கதைகளைப் பரிமாறிக் கொண்டனர். அவள், யாழிசை வயது முப்பதுக்குக் கீழ் தான் இருக்கும் .அவள்‌ நெருங்கிய குழலி முப்பதைக் கடந்தவள். நெற்றியில் பட்டையும் , தெய்வீக சிரிப்புத் தாங்கிய முகம். தலைமைப் பொறுப்பாளர் சொல்வதை மறுப்பின்றி செய்பவர்.நண்பிகள் பேசிக் கொண்டிருக்கும்போதே.... யாழிசை " ஏய் ....குழல் என் வயிறை தொட்டுப் பாரேன்" என்று சொல்லிக் கொண்டே தன் வயிற்றில் தோழியின் கரங்களை எடுத்து அணைத்தாள். குழலி நிலைத் தடுமாறினாள்.பரவாயில்லை என்று கூறும் முன் .... குழலிக்கு விரல்கள் நடுங்கின ;உடல் வியர்த்தது; உலகம் தலைகீழாக தெரிந்தது.... ஆனந்தம் கண்ணீராய் பெருக்கெடுத்தது. இருக்காதா... என்ன... திருமணம் ஆகி 20 ஆண்டுகள் கடந்து விட்டன. கண்‌முன்னே தான்‌ நிறைவாக சென்ற சீமந்த விழா நிழலாடியது. உறவினர் வீடு தானே என‌ இழுத்துப் போட்டு வேலைகளைச் செய்த குழலியை.... வளையல் போட அழைக்கவே இல்லை.... அவமானம் தாங்காமல் உடனே வீடு வந்த நினைவு... " எத்தனை குழந்தைங்க குழந்தை என்ன படிக்றாங்க கல்யாணம் ஆகி எத்தனை வருசம் ஆகுது? பரிசோதனை பண்ணலாம் ல.. உங்க மாமியார் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா? ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம் தானே........ கேட்பவர்களுக்கு எல்லாம் பதிலற்ற வெற்றுப் புன்னகையை வார்த்தைகளாக நிரப்பி விட்டுச் செல்வது குழலியின் இயல்பு. யாழிசை குழலியிடம் அப்படியே கைய வைச்சிரு... என்றதும் சுயநினைவு மீண்டது. .. கைய எடுக்காத ! கொஞ்ச நேரத்துல பாரேன் . பாப்பா உனக்குக் கைக் கொடுக்கும், காலால எட்டி உதைக்கும் இரு இரு என்றாள். மழலை தன் பிஞ்சு கால்களால் உதைத்ததை உணர்ந்த குழலி இசையைக் கட்டி அணைத்தாள் ... பின்பு நாளை முதல் வேலைக்கு வருவதாகக் கூறிச் சென்றாள் இசை . அது தனி நபரால் வழி நடத்தப்படும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பகம். புதிய உணர்வில் உறைந்து போனவள்....செய்யும் வேலையை விட்டு ஓடி சென்று குடிக்க தண்ணீர் கொடுத்தாள். முக மலர்ந்த இசையின் கால் தடங்கள் பயணத்தைத் தொடங்கின. அடுத்த நாள் வேலைக்கு வந்த யாழிசைக்கு மிகவும் உதவியாகக் குழலி இருந்தாள். இவர்கள் இருவர் மட்டுமின்றி இருபதுக்கும் மேற்பட்டோர் பணி புரியும் இடம் அது. பணியிட மேலாளர் இசையை அழைத்து நலம் விசாரித்ததோடு, பணிகளையும் திட்டமிட்டுக் கொடுத்தார் .யாழிசைக்குக் கீதா துணையாளராக நியமிக்கப்பட்டார் . பணி புரியும் நேரம் தவிர மற்ற நேர ஆறுதல் குழலி மட்டும் தான். நாட்கள் மாதங்களாக உருண்டன .பிரசவ காலம் நெருங்கியது . கைகளில் வளையல்களோடு உட்கார்ந்த இடத்தில் அலங்கார பொருட்களுக்கு வண்ணமிடல் என்பது யாழிசைக்கு பழகிய ஒன்றுதான்... என்றாலும் சற்றே சிரமமாக இருந்தது. எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நாள் வந்தது . குழலி யாழிசை வேலைக்கு வராததால் அலைபேசியை எடுத்து அழைத்தாள். எதிர்முனையில் இசையின் கணவர் "பெண் குழந்தை" பிறந்துள்ளது என்றார் .மிகுந்த மகிழ்ச்சி என்று கூறி வேலையில் மூழ்கினாள் குழலி. வயிற்றின் உள்ளே காலால் உதைத்த அந்த பிஞ்சு முகத்தை பார்ப்பதற்கு மனதால் ஏங்கினாள் குழலி. மறுநாள் கீதாவும்,குழலியும் சென்று குழந்தையைப் பார்த்தனர் .அதே ஸ்பரிசத்தை மீண்டும் உணர்ந்த குழலி விரல் நடுங்கினாள் மலர்ச்சியோடு... ‌. மூன்று மாத நிறைவிற்குப் பிறகு யாழிசை திரும்பவும் வந்தாள். அப்போது அதுவரை நன்கு பழகிய கீதாவின் வார்த்தைகளின் தரம் மாறி இருந்தது. சற்றே மனக்குழப்பம் காட்டிக் கொள்ளாத இசையின் எண்ணத்தில் இடி விழுந்தது... கீதா இசையிடம் " நீ ஏன் அதுக்குள்ள வேலைக்கு வந்த ? உன் புள்ளைய யாரு பார்த்துப்பா? ஏற்கனவே இரண்டாவது கல்யாணம். வேலைக்கு போனா தான் சோறு என்று உன் மாமியா சொல்லிருச்சா என்ன??" என்றாள். கண்ணீர் பெருக குழந்தையை நோக்கி விரைந்த இசை வாய்விட்டு கதறினாள்.‌ வார்த்தைகளே இல்லை. உடனே வீட்டிற்குச் சென்றாள் . ஒன்றுமே புரியாத குழலி மாலை பொழுதில் இசையை பார்க்க அவள் வீட்டிற்கு சென்றாள். இசை வீட்டில் இல்லை. குழந்தையுடன் அக்கா வீட்டிற்குச் சென்று இருப்பதாக அவளது மாமியார் கூறினார். உட்காரச் சொன்னதோடு தேநீரும், சிற்றுண்டியும் கொண்டுவந்து சாப்பிடுமா... இசை இப்போ வந்துடும் என்றார். பெருத்த சங்கடம் ..எப்படி கேட்பது? என்ன நினைப்பார்கள்? கேட்பதற்கு முன் பெருமூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு , கேட்டே ஆக வேண்டும் என பலமுறை போராடி எடுத்த முடிவை ஆரம்பித்தாள். அம்மா இசைக்கு இது இரண்டாவது திருமணமா? புன்னகை மாறாத இசையின் மாமியார் தங்கமான புள்ள மா யாழிசை. என் பையன் கூட ஒன்னா தான் படிச்சது .அதுக்கு வீடு காரைக்கால் ,அடிக்கடி போயிட்டு வர முடியாதுன்னு , நம்ம வீட்ல தான் தங்கும். விரும்பி தான் திருமணம் நடந்துச்சு. அந்தப் பையனும் என் மகனும் ஒண்ணா படிச்சவங்க தான். திருமணம் ஆகி மூணு மாசத்துல ...ஒரு நாள் இசை என் பையன் கிட்ட போன் பண்ணி , கல்யாணம் பண்ணவனுக்கு இன்னொரு பொண்ணு கூட பழக்கம் இருக்குன்னு சொல்லி அழுது இருக்கு. என் பையன் என்கிட்ட போன கொடுத்து, பேச சொன்னான் . நானும் விசாரிச்சிட்டு, இசையோட கணவன் கிட்ட பேசினேன். அவனுடைய பேச்சு சரியில்ல, மரியாதையும் இல்லை. உடனே இசையை வீட்டுக்கு வாம்மா என்று கூப்பிட்டேன் எல்லாரும் கலந்து பேசி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தோம். எந்த பயனும் இல்லை. இரண்டு வீடும் மாறி, மாறி பேச பேச முடிவு விவாகரத்தில் முடிந்தது. கண்ணீரோடு காரைக்காலுக்கு கிளம்பிய இசை கிட்ட... நான் கணவனை இழந்தவள். தனியா இருந்து என் பிள்ளைய வளத்து இருக்கேன். இழப்பின் வலியும் வேதனையும் எனக்கு நல்லா தெரியும்.‌ இந்த சமூகத்தைப் பத்தியும் நல்லாத் தெரியும். நீ நல்ல பொண்ணு. உனக்கு விருப்பம்னா நீ ஏன்‌ என் மகனை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு கேட்டேன். உனக்கு விருப்பம் இல்லேன்னா வேண்டாம் மா. இரண்டு பேரும் நல்ல நண்பர்கள், சேர்ந்து வாழ்ந்தா நல்லா இருக்கும்னு நான் ஆசைப் படுகிறேன் என்றேன். இசை என் காலில் விழுந்து கதறினாள்.... ....... குழலி எப்ப வந்த என்று குழந்தையுடன் யாழிசை உள்ளே நுழைய, சிறிது நேர பேச்சிற்குப் பிறகு விடை பெற்றேன்..... கீதாவும், இசையின் அத்தையும் என் சிந்தனையை ஆக்கிரமிப்பு செய்தனர். பெண்ணிற்கு பெண்ணே கரம் நீட்டவில்லை என்றால், வேறு யார் செய்வது என்று வழிந்த நீரைத் துடைத்து...‌குழலி பெருமித புன்னகையோடு வீடு நோக்கி நடந்தாள். கடந்து செல்வது தானே வாழ்க்கை.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.