logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Ay Tamizhmani

சிறுகதை வரிசை எண் # 117


பாய்ச்சி – சிறுகதை அய்.தமிழ்மணி கிபி 1981 இரண்டரை வயது பென்னியைக் காணவில்லை. இப்பொழுதுதான் பென்னியின் அம்மா அந்த ஊரின் தினச்சந்தைப் பகுதியான அரசமரத்தடிக்குப் போய் வாங்கி வந்த பொருட்களை அடுக்களையிலும் வராண்டவின் திண்டிலும் வைத்துவிட்டு தாங்கள் குடியிருக்கிற நான்கு குடித்தனங்கள் நிறைந்த அந்தக் காம்பவுண்ட் வீட்டின் பரப்பில் அவனை இறக்கி விளையாட விட்டு அடுப்படியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். பென்னிக்காகக் காய்ச்சிய பாலை ஈய டம்ளரில் ஆற்றிக் கொண்டே வராண்டாவிற்கு வந்தவள் அவனைக் காணவில்லை என்றதும் கோபம் உச்சிக்கேறிவிட்டது. இப்படி அடிக்கடி காம்பவுண்டுக்குள் யார் வீட்டிற்காவது அவன் ஓடிவிடுவான். ஓரிடத்தில் நிற்க மாட்டான். அப்படி நினைத்துதான் மற்ற வீடுகளில் அம்மா அவனைத் தேட அவன் எந்த வீட்டிலும் இல்லை. எல்லாம் பரபரப்பாகி விட்டார்கள். காம்பவுண்டைவிட்டு மற்ற வீடுகளிலும் தேடினார்கள். அவனைக் காணவில்லை. தெரு முழுக்கத் தேடியும் போவோர் வருவோரிடம் விசாரித்தும் எந்த விடையும் கிடைக்கவில்லை. பென்னியின் அம்மாவிற்கு அச்சமும் குழப்பமும் வந்து குடிகொண்டுவிட்டது. அவளது நெஞ்சு படபடத்தது., தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. பென்னி அவனது பெற்றோருக்கு மூன்றவதாகப் பிறந்தவன். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து விட்டிருந்தன. இவன் பிறந்ததும் பிள்ளை தங்க வேண்டுமென்று பக்கத்து வீட்டில் பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஏழு வீட்டில் தவிட்டை பிச்சையெடுத்து., அதைப் பிள்ளையை விட்ட வீட்டில் கொடுத்துவிட்டு பிள்ளையை வாங்கி மூக்குத்தி குத்தி மூக்கையா என்று பென்னிக்கு பெயர் வைத்தார்கள். பென்னியின் அப்பா தமிழ்ப்பற்றாளர் என்பதால் அவனுக்குத் தமிழரசன் எனவும்., அவனது அப்பாயி குலசாமி பெயரென்று மணிகண்டன் எனவும்., அவனது தாத்தா முல்லைப் பெரியாற்று அணையைக் கட்டி முடித்த பென்னிகுய்க்கின் மீது கொண்ட அன்பால் அவனை பென்னி எனவும் ஆளாளுக்கு ஒரு பெயர் சொல்லி அழைத்தும் கொஞ்சியும் வளர்த்து வந்தனர். அந்தப் பென்னியைத் தான் இப்பொழுது காணவில்லை. பக்கத்துவீட்டு நாகக்காளும் வளர்மதியும் தான் ஆறுதல் சொன்னார்கள். கொஞ்சம் நிதானிச்சு யோசிக்கச் சொன்னார்கள். “பொறும்மையா யோசிம்மா., பதறாத., இங்கிட்டுத்தேன் எங்கனயாவது இருப்பாய்ம்.,” என்றார் நாகக்கா. பென்னியென்றால் அவருக்கும் உசிரு. தன் பேரனென்று நினைத்தே அவனைக் கொஞ்சுவார். “வளர்மதியும் ஒங்க மாமியாளும் தேடிப் போயிருக்காக., நீ எதுக்கும் வீட்டுக்குள்ள ஒரு தடவப் பாரு., நாங் காம்பவுண்டுக்குள்ள எங்கயும் இருக்கானான்னு பாக்குறேன்.,” “பென்னி., பென்னி., கருவாப்பயலே., எஞ்செல்லக்குட்டி., எங்கருக்கீங்க., வந்துருங்க., ஆயா ஒனக்கு கோழி முட்ட எடுத்து வச்சிருக்கேன்..” எனக் கூவிக் கொண்டே தேடலானார். பென்னியின் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் தெரிந்தால் அவ்வளவுதான்., வரமிருந்து தவமிருந்து பெத்த பிள்ளையை இப்படித் தொலச்சுட்டு நிக்கிறீயே என ஆடித் தீர்த்துவிடுவார்களே என்ற பயம் வேறு பென்னியின் அம்மாவுக்குத் தொற்றிக் கொண்டது. பென்னியின் சிரித்த முகமும் அவனது மழலைப் பேச்சும் மாறி மாறி நினைவுக்கு வந்து அவன் அம்மாவை பாடாய்ப்படுத்தியது. கண்களும் கால்களும் அரக்கப் பறந்து கொண்டிருந்த அவளுக்குத் திடீரென யோசனை வந்தது.. அங்க ஏதும் போயிருப்பானோ., ஆனாலும் இதற்கு முன் அப்படி நடந்ததில்லையே. என யோசித்தவாறு.. “நாகக்கா., நாகக்கா.,” என சத்தமாய் அழைத்தாள் பென்னியின் அம்மா. “என்னம்மா கெடச்சுட்டானா..” என்றவாறு காம்பவுண்டின் புறப் பக்கத்திலிருந்து வேகமாக வந்தார். “இல்லக்கா., ஒருக்கா பிரேமா வீட்டுக்குப் போயிருப்பானோன்னு சந்தேகமா இருக்கு., ஒரெட்டு பாத்துட்டு வந்துறட்டாக்கா.,” “சின்னப் பய நாலு தெரு தாண்டி அங்க எப்படிம்மா போயிருப்பாய்ம்.,” “இல்லக்கா காலைல இந்தப்பக்கம் வந்தவ., எங்கூட வந்துறயான்னு கொஞ்சிகிட்டு இருந்தா அதேன்.,” “அதுவுஞ்சரித்தேம்மா., நீ இரு., புள்ள எங்கிருந்தாவது வீட்டுக்கு வந்துட்டா ஒன்னத் தேடுவாய்ம்., ந்நாம் போயிட்டு வர்றேன்.” பிரேமா., இந்தக் காம்பவுண்டில் தான் குடியிருந்தாள் ஆறு மாதத்திற்கு முன்னாடி வரை. அனைவரோடும் மிக அன்பாகப் பழகக்கூடியவள். தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்த அவளுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. ஆறு வருடங்களாக குழந்தையில்லாமல் இருந்தவளுக்கு நடந்த சோகம் அது. அவளுக்காக நாகக்கா அம்புட்டு அழுகை அழுதார். பென்னியின் அம்மா தான் பிரேமாவைத் தன் கதையைச் சொல்லித் தேற்றினாள். பால்க்காரர் வராத அந்த நாளில்., பென்னி பசியால் வீல்வீலெனக் கதறி அழுது கொண்டிருந்தான் தொட்டியில் போட்டு ஆட்டியும் அடித்தும் கொஞ்சியும் அவன் அழுவதை நிறுத்தவில்லை. ”பொழுதுக்கும் சொரந்துக்கே இருக்கும்மா., இந்தக்குடி குடிக்கிறாய்ம்.,” புலம்பினாள் பென்னியின் அம்மா. ”புள்ள பசியாத்துறதுல., பெத்தவளே இப்படிப் பேசலாமா., வாடா எஞ்செல்லம்..” நாகக்கா அவனைக் கொஞ்சியபடி அணைத்துக் கொண்டார், நாகக்காவின் மருமகள் அரிசிமாவுக் கஞ்சியைச் சூடு ஆற ஊதிக் கொண்டே சங்கில் ஊத்தி பென்னிக்கு ஊட்டினாள். வாயை இறுக மூடிக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்., ”ய்ச்சி ய்ச்சி.,” என அம்மாவைப் பார்த்து அழுதான். ”வாயிலேயே ரெண்டு போடு போட்டேன்னா.,யென்னா வீம்பு” உதட்டைத் துருத்தியவாறு மிரட்டினாள் பென்னியின் அம்மா. வேகமாக வந்த பிரேமா., பென்னியை நாகக்காளிடமிருந்து வெடுக்கெனப் பிடுங்கி அவனை மாரோடு அணைத்துக் கொண்டாள். அந்த வெடுக்கில் ஒரு தாய்க்கோழி தன் குஞ்சை கால்விரல்களால் அணைக்கும் அந்தப் பக்குவம் இருந்தது. பென்னியும் ய்ச்சி யிச்சி என்று முனங்கியவாறு முகம் புதைத்துக் கொண்டு பசியாற ஆரம்பித்தான் பிரேமாவின் மாராப்புக்குள். ஒரு கணம் அவள் கண்ணை இறுக மூடிக் கொள்ள அவள் கண்கள் கண்ணீரைத் தாரை தாரையாக ஊற்றின. உதட்டைக் கடித்துக் கொண்டு கண்ணீரை அடக்கினாள். செத்துப் போன தன் பிள்ளையே பசியாறுவதாய் நினைத்து ஆனந்தமடைந்தாள். அந்த அழுகை நாகக்காவினைத் திரும்பவும் தாய்மை உணர்வுக்கு அழைத்துச் சென்றது. பென்னியின் அம்மா பிரேமாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவளது தோளில் சாய்ந்துகொண்டாள். கால்களைச் சுண்டியவாறு பாலருந்தும் மகனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். பென்னி அவனது எட்டாவது மாசத்திலேயே எட்டு வைத்துவிட்டான். ஒன்றரை வயதிலேயே அவனுக்குள் வார்த்தைகள் முழுசும் முக்காலுமாய் முளைக்கத் தொடங்கிவிட்டன. ஒருமுறை அம்மாவின் மார்புக்குள் பசியாறிக் கொண்டிருந்தவன் அவனது முகம் மூடியிருந்த மார்ச்சேலைய விலக்கி ”..னா.. ம்மா..” என அவளது முகம் பார்த்து கேட்டுவிட்டான். முதன் முறையாக தொடர்ச்சியாக இரண்டு வார்த்தைகள் பேசியிருந்தான் பென்னி. அதில் வியந்தவள் ”எம்புள்ள கேள்வி கேக்குதுக்கா.,” என நாகக்காளிடம் பொங்கி மகிழந்தாள். ”எம்புள்ளக்கி இது என்னன்னு தெரியனுமாக்கும்.. ம்..” எனப் பென்னியைக் கொஞ்சினாள். ”வ்..ம்..” தலையாட்டினான் பென்னி. என்னம்மோ ஏதோவென்ற அவனது பால் கண்கள் மின்னின அம்மாவின் பதிலுக்காக. ” பாய்ச்சிடா செல்லமே பாய்ச்சி., எங்க சொல்லு., பாய்ச்சி., பாய்ச்சி.” என அவனிடம் கண்களில் குறுகுறுத்தாள் அம்மா. ”ய்ச்சி..” என மழலை உதிர்த்தான் பதிலுக்கு. அவன் நெற்றியில் முத்தமிட்டாள். வயிறு நிறைந்த பென்னி பிரேமவின் மார்சீலை விலக்கி ”..ம்மா” என்றான். பிரேமா அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். அந்தப் பார்வையில் மாரின் சுமை இறங்க அவளது மனச்சுமையும் இறங்கி இவன் தன்னோடவே இருந்து விடக்கூடாதா என்ற பரிதாபம் ஒட்டிக் கொண்டிருந்தது. ”ய்ச்சிதேன் வேணுமாடா செல்லம்..” என பென்னியின் அம்மா அவனை வாஞ்சை நிரம்ப தூக்கிக் கொண்டாள். பிரேமாவுக்கு அவனை விட மனமில்லை. பென்னியின் அம்மா அவளின் தலையை வருடிகொண்டே பிள்ளையோடு அவளையும் அணைத்துக் கொண்டாள், அந்த பிரேமா தான்., ”எனக்கு இங்க வந்துதாம்மா., மூனாவதா பென்னி பெறந்தான்., அப்படில்லாம் நெனக்காத., அண்ணன்கிட்ட நாங்கூட பேசுறேன்னு.” என எவ்வளவோ சமாதானம் சொல்லியும் ”வீடு ராசியில்லை.” என்ற குடும்பத்தார் பேச்சில் வீடு மாறிப் போய் விட்டாள். தலையில் கைவத்து கண்ணீர் கோர்க்க அமர்ந்திருந்த பென்னியின் அம்மாவை பிரேமாவின் குரல் கலைத்தது. வீட்டில் போட்டது போட்ட படியே பதறியடித்து வந்திருந்தாள் பிரேமா. ”ஏன்டி கொஞ்சம் பொறுத்துதேன் வர வேண்டியது தான., ஒம் புள்ள கணக்கா.,” என்றவாறு பின்னாடியே நாகக்கா வந்து சேர்ந்தார். ” எக்கா., பதறாத புள்ள கெடச்சிரும்., காலைல இருந்து நடந்ததச் சொல்லு.,” என்றாள் பென்னியின் அம்மாவிடம் பிரேமா. நாகக்கா செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கண்ணீர் வற்றி வீங்கியிருந்த பென்னியின் அம்மாவின் முகத்தைக் கழுவி தன் முந்தானையால் துடைத்து விட்டார். நாகக்காவின் மருமகள்., ”போலிஸ் ஸ்டேசனில் கம்ப்ளைண்ட் கொடுத்திரலாம்” என்றதும். பென்னியின் அம்மாவிற்கு திரும்ப அழுகை முட்டிக் கொண்டது. ”இவவொருத்தி சும்மாருடி., ஆம்பளைக வர்ற வரையத் தேடிப் பார்ப்போம்., பெறகு பார்த்துக்குவோம் ஸ்டேசன் வேலைய.” என்று நாகக்கா அவளை அடக்கினார். ”அழாதக்கா., காலைல இருந்து நடந்ததச் சொல்லு.,” என்றாள் திரும்பவும் பிரேமா. கடந்த மூன்று நாட்களாக பென்னிக்கு இருமலும் கக்கலும் கண்டிருந்தது., எதைக் குடித்தாலும் உடனே கக்கிவிடுவான். நாகக்காதான் சொன்னார்., ”இது கக்குவான் இருமல்ம்மா., எதுக்கும் கட்டுப்படாது., குரங்கு விட்டைய எடுத்தாந்து நல்லாக் கரச்சு அதுல ரெண்டு மெளக நசுக்கிப் போட்டு தெனமுங் காலைல ஒரு சங்கு குடுத்து வந்தா., நாலே நாள்ல சொகங்கண்டிரும்.” ”குரங்கு விட்டைய எங்கக்கா போயி தேடுறது., வேற மருந்தில்லையா.,” ”இதுக்கேங் கவலப்படுற., அரசமரத்துல பூக்கடை வச்சிருக்காள நீலா., அவகிட்டச் சொன்னா எடுத்து வச்சுறப் போறா., அங்கதேன் குரங்குக ஆய்ஞ்சுக்கிட்டுக் கெடக்குகலே..” ”எனக்கே ஒமட்டிக்கிட்டு வருதுக்கா., வேற இருந்தா சொல்லுக்கா.,” என்ற பென்னியின் அம்மாவிடம் யோசித்த நாகக்கா., ”ம்., கக்குவான் இருமைக்கு காலங்காலமா இதேம்மருந்தாக் கொடுப்பாக ஒடனே கேக்கும்., ம்.. இல்லைன்னா ஒன்னு செய்யலாம்., அதே அரசமரத்தடியில இப்ப சீசங்கிறதால அயிரமீன் விப்பாக., அதக் காப்படி வாங்கிட்டு வந்து இட்லிச்சட்டியில நல்லாக் கொழைய வேகவச்சு., ரெண்ட ஊட்டி விடு.,” என்றார். ”இதச் செஞ்சிடலாக்கா.,” உடனே கிளம்பி அரசமரத்தடிக்கு சென்ற பென்னியின் அம்மா., அங்கே பூக்கடை நடத்தி வரும் நீலாவிடம்., “நீலா., ஒம்பிள்ளைக்கி கக்குவானிரும கண்டிருக்கு., அயிரமீன அவிச்சுக் கொடுத்தா சரியாப் போகும்ன்னு நாகக்கா சொல்லுச்சு., இந்தா தூக்குச்சட்டி காலைல வெள்ளனமா அரப்படி வாங்கி வச்சுரு..” “கக்குவான்னா., புள்ள துடிச்சுப் போவானே., சரி குடு வாங்கி வைக்கிறேன்..” என வாங்கிக் கொண்டாள் நீலா. “எதுக்கும் குரங்கு விட்டையையும் நாலப் பெறக்கி வச்சிரு., இதுல்லாடி அதுன்னு எதுலயவது சரியாசுன்னா போதும்.” எனச் சொல்லிவிட்டு வந்த பென்னியின் அம்மா., எப்படா பொழுது விடியுமென்று காத்திருந்து அதிகாலை ஐந்து மணிக்கே அஹ்ரகாரச் சந்து வழியாகப் பென்னியையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அரச மரத்தடிக்கு வந்து சேர்ந்தாள். நீலா தன் பூக்கடைக்கு முன் கூட்டி தண்ணீர் தெளித்து சந்தனத்தைப் பிடித்து பூக்கள் பரப்பிக்கிடக்கும் அந்த மேஜையில் வைத்து அதன் மீது இரண்டு பத்திக்குச்சிகளைப் பற்ற வைத்து வைத்திருந்தாள். பென்னியைப் பார்த்ததும், ”வாடா வாடா அத்தகிட்ட வா.,” என கட்டிக்கொண்டிருந்த மாலையை வைத்துவிட்டு இவனைக் கட்டிக்கொண்டாள். “இப்படி ஒக்காருக்கா., மாமா குரங்கு விட்டையப் பெறக்கப் போயிருக்கு., இப்ப வந்துரும்.” என இடம் ஒதுக்கிக் கொடுத்தாள் நீலா. பத்திகுச்சியின் வாசனையும் மலர்களின் வாசனையும் ஏகாந்த வெளிக்கு அழைத்துச் சென்றது பென்னியின் அம்மாவை. மூச்சை இழுத்து விடுத்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். “என்னா நீலா பொழப்பு தளப்புல்லாம் எப்படிப் போகுது..” “எங்கக்கா., ஏதோ இந்த எடத்த அன்னிக்கு எங்க மாமியா புடிச்சு வைக்கப் போயி பரவால்ல., இல்லன்னா இந்த மனுசன வச்சுக்கிட்டு எப்படி இழுக்கிறது..” “அடிக்கடி எவிசன் அதிதுன்னு வந்து வச்சுருக்கிற நாலு தகரத்தியும் புடுங்கிப் போட்டுட்டுப் போயிறாக., ஒரு பக்கம் பிரிக்கவும் கட்டவும்ன்னே வர்ற வருமானம் போயிருது., இன்னோரு பக்கம் கடனுக்குத்தேன் பூ வாங்கி கட்டுறோம்., வித்தாப் போச்சு., இல்லன்னா அதுவும் பள்ளந்தேன்.,” ”ஏம்புள்ள., அக்காட்ட என்ன சொலசொலன்னு பேசிக்கிட்டு இருக்க., காலையில நல்ல வார்த்த பேசுறத விட்டுட்டு., சொமையச் சொல்லிக்கிட்டிருக்க., இந்தாங்க்கா., புதுசாப் பாத்துப் பெறக்கணும்க்கா இல்லன்னா என்னா கரச்சாலும் செரகா கணக்கா இருக்கும்., அதேங் கொஞ்சம் தாமசமாயிருச்சு.,” என்றான் நீலாவின் கணவன். “ரொம்ப நன்றிப்பா., யாரும் சங்கடப்படுவாக., நீங்க எங்களுக்காக மெனக்கட்டிருக்கீக.,” என்ற பென்னியின் அம்மாவிடம்., “அதெல்லாம் இல்லங்க்கா., அப்படியே செத்த ஒக்காருங்க., மாரியப்பன் இப்ப அயிரயக் கொண்டு வந்துருவான்., மத்தாளுககிட்ட கொறவையும் கலந்து வந்துரும்., சிலது தவுடாவும் இல்லன்னா மொரட்டாவும் இருக்கும்., சின்னப்புள்ளக்கின்னு வேற சொல்லிருக்கீங்க., மாரியப்பங்கிட்ட கிளீனா இருக்கும்..” என்றவன். “புள்ள அந்தத் தூக்கெடு., டீ வாங்கிட்டு வர்றேன்.” என்று தூக்கை வாங்கிக் கொண்டு கிளம்பினான். அவன் டீ வாங்கி வரவும் மாரிமுத்து வரவும் சரியாக இருந்தது., துள்ளிக் கொண்டிருந்த அயிரைகளை தண்ணீரும் மீனுமாய் தூக்குச்சட்டியில் அளந்துபோட்டு காசைப் பெற்றுக்கொண்ட மாரிமுத்து கிளம்பினான். “ஏய் ஒனக்குஞ் சேத்தாண்ணே டீ வாங்கிருக்கு., குடிச்சுட்டுப் போ.,” என்றாள் நீலா. அப்படியே பென்னியின் அம்மாவுக்கும் டீயைக் கொடுத்தாள். நீலாவின் கணவன் பென்னியிடம் பன்ரொட்டியை நீட்டினான். பென்னி வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டான். பிடுங்கும் போதே சிறு இருமல் இருமினான். நீரும் சளியுமாய் வாயிலிருந்து வழிந்தது. “ஒன்னுமில்லப்பா ஒன்னுமில்லப்பா” என நீலா தன் முந்தானையால் துடைத்துவிட்டாள். “சரி வர்றேன் நீலா.,” என பென்னியின் அம்மா அயிரை மீனோடும் குரங்கு விட்டையோடும் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வீட்டை நோக்கிக் கிளம்பினாள். பென்னியோடு பேசிக் கொண்டே வந்தாள். “ இந்தாப்பாரு., இதக் கரச்சு அம்மா ஒனக்கு கொடுப்பேனாம்..” “வ்ம்..” “நீ நல்ல பிள்ளையா குடிப்பியாம்..” “வ்ம்..” ”அந்தாப் பறந்து போகுதுல காக்கா..” பென்னி வானத்தைப் பார்த்து “வ்ம்..” என்றான். “அதுமாதிரி வொம் இருமாலும் பறந்திடுமாம்..” “வ்ம்..” என்று அவள் முகத்தைப் பார்த்தான். அப்படியே அயிரை மீன் மிதக்கும் அந்தத் தூக்குச் சட்டியைப் பார்த்து.. “வ்ம்.. வ்ம்..” எனக் கையை நீட்டினான். அம்மாவும் பிள்ளையும் இப்பொழுது சூரியனின் சுடர் பரவத் தொடங்கியிருக்கும் வேளையில் அஹ்ரகாரச் சந்திற்குள் நுழைந்து விட்டிருந்தார்கள். அயிரையும் குரங்குவிட்டையும் கிடைத்த மகிழ்ச்சியில் பென்னிக்கு குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் நடந்து கொண்டிருந்தாள் பென்னியின் அம்மா. இடுப்பிலிருந்த பென்னி திரும்ப “வ்ம்.. வ்ம்..” எனக் கையை நீட்டினான் அயிரை மீன் மிதக்கும் அந்தத் தூக்குச் சட்டியைப் பார்த்தவாறு. “இதுவா., இது அயிரை மீன்றா செல்லம்., அந்தா அந்த வீடு தெரியுது பாரு., அது அய்யராளுக வீடு., இந்தாத் துள்ளுற அயிர மீன எடுத்து.. “வ்ம்..” ஆவல் மிளிர கேட்டுக் கொண்டிருந்தான் பென்னி. “ஒந்தொண்டகுள்ள விட்டு., ஒந்தலைய மூனு சுத்து சுத்தி அந்த வீட்டுக்குள்ள போட்டா., வோம் இரும சுக்காப் பறந்திரும்டா., எம்மவனே..” என்று விளையாட்டாய்ச் சொல்லியவாறு அந்த வீட்டைக் கடந்தாள். “வ்ம்..” என்ற பென்னி தன் கண்ணில் இருந்து மறைந்து கொண்டிருக்கும் அந்த வீட்டையே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். பிரேமா சட்டென்று யோசித்தவளாய்., “அயிரமீனு தூக்குச் சட்டிய எங்கக்கா..” என்றாள். “இந்தா வெளிவாசத் திண்டுலதேன் வச்சிருந்தேன்..” அனைவரும் திண்டுக்கு ஓடினார்கள். தூக்குவாளி கவிழ்ந்து கிடந்தது. அயிரைமீன்கள் திண்டில் துடித்துச் செத்துக்கிடந்தன. ஒன்றிரண்டு பரவிக்கிடக்கும் தரையொட்டிய தண்ணீரில் உயிருக்குப் போராடியவாறு மெல்லத் துடித்துக் கொண்டிருந்தன. “இத நாம கவனிக்காம எப்படிப் போனேம்., இம்புட்டு ஒயரத் திண்டுக்கு மேல எப்படி எட்டிப் பிடிச்சுச்சுன்னு தெரில கழுத., கெட்டிக்காரந்தாண்டி ஒம்புள்ள.,” நாகக்கா பிரமித்தார். “எக்கா., வோம் பாராட்டுல்லாம் பெறகிருக்கட்டும்., வாங்க அந்த அய்யமாரு வீட்டுக்குப் போவோம்.,” என்றாள் பிரேமா. மூவரும் அரக்கப் பரக்க ஓட்டமும் நடையுமாய் நடந்தார்கள் அஹ்ரகாரத்தை நோக்கி. அஹ்ரகாரத்தில் அந்த வீடு திறந்திருந்தது. பென்னி துள்ளும் அயிரையை இறுகப் பிடித்துக் கொண்டு வந்ததில் அது உயிரை விட்டிருந்தது. ஒவ்வொரு படியாய் தத்தித் தத்தி ஏறினான். வராண்டா வந்துவிட்டிருந்தது யாரையும் காணவில்லை. அயிரையைப் பார்த்தான் துடிக்கவில்லை. ”வ்ம்.. வ்வா..” என்ற மெல்லிய குரலில் ஒலித்துவிட்டு., அயிரையை அன்ணாந்து தன் தொண்டைக்குள் விட்டு எடுத்தான். சளியும் நீரும் ஒழுக தன் தலையைத் தத்தக்கா பித்தக்கா என்று சுற்றி அப்படியே உள்ளே முடிந்த மட்டும் தூக்கிப் போட்டுவிட்டு ரெண்டடி உள்ளே நடந்தான். ”யாரது..” என்ற அந்தப் பெண்குரலுக்கு “வ்ம்.. ம்.,” என்று தன்னைத் தானே நான் தான் என நெஞ்சில் கையால் தட்டிக் கொண்டான். யாரையும் காணவில்லை. திரும்ப குரல் மட்டும் வந்தது. குரல் வந்த திசை நோக்கி நடந்தான். அதற்குள் அந்தப் பெண்மனி வந்துவிட்டாள். “வ்ம்.. ய்ச்சி., ய்ச்சி..” என்றான் குதூகலிப்பாய். அவள் மாராப்போடு அவளது குழந்தையை அணைத்திருந்தாள். பென்னியின் சைகையைப் பார்த்தவள்., மாரோடு அணைத்திருந்த குழந்தையை டக்கென்று இறக்கிவிட்டாள்., சரேலென பென்னியை நெருங்கினாள். பயந்து போய் பாவமாய் விழித்தான் பென்னி. அந்தக் குழந்தை பென்னியைப் பார்த்துச் சிரித்தது. மூக்கும் வாயும் ஒழுகும் பென்னியைப் பார்த்ததும் அந்த அஹ்ரகாரத்துப் பெண் முந்தனையின் தலைப்பால் “நீங்க யாருங்க செல்லம்., எங்க வந்தீங்க.,” எனறபடி துடைக்க ஆரம்பித்தாள். பென்னியும் தன் அம்மாவிடம் முகத்தைக் கொடுப்பது போல் கொடுத்துக் கொண்டு ய்ச்சி என்ற அவனது ஆவலாதி வார்த்தையை இப்பொழுது மூக்கால் பேசிக் கொண்டிருந்தான். தாய்மையின் கருணை அவளின் முந்தனையாலும் கண்களாலும் பென்னியைத் தழுவிக் கொண்டிருந்தது. இப்பொழுது அவளது கணவன் வந்துவிட்டிருந்தான். அருவருப்பானான். தூரத்தில் வராண்டாவில் செத்துகிடக்கும் அயிரையைக் கண்டதும் குமட்டலும் கோபமும் ஒன்றாய் வந்தது அவனுக்கு., “சனியனே யார் நீ., எப்படி ஆத்துக்குள்ள வந்த.,” என்றவாறு பென்னியை மனைவியிடமிருந்து பிரித்தான். “ஏங்கோன்னா” என்றவளை எட்டி உதைத்தான். “கண்டவாள இப்படி கட்டி அணைக்கிறீயே., எல்லாம் தீட்டாயிடுத்துடீ.,” திரும்ப அவளை உதைத்தான். அழாமல் அத்தனையையும் வாங்கிக் கொண்டிருந்தாள். பென்னியின் இருமல்தான் அதிகமாகிக் கொண்டிருந்தது. ”குழந்தைன்னா., அதுக்கு என்ன தெரியும்..?!” “எதுத்தா பேசுற., பொம்மனாட்டிக்கு., ஆம்பளையான எதிர்த்துப் பேசுற அதிகாரம் நோக்கு இல்லனனு தெரியாதா என்ன.” திரும்ப உதைத்தான். “யார் வீட்டுப் பய நீ., வீட்ட இப்படி தீட்டுப் பண்ணிணதுமில்லாம..” பென்னியைக் கையைப் பிடித்து வெளியே தள்ள இழுத்து வந்தான். அதோடில்லாமல் முதுகில் ரெண்டு அடியும் அடித்தான். பென்னி அழ ஆரம்பித்துவிட்டான். “என்ன தன்னால தீட்டுப் பட்டிருச்சாம் வொம்வீட்ல., பச்சப் பிள்ளைய இந்த அடி அடிக்கிற.,” என அவனின் கையைத் தட்டிவிட்டு பென்னியை வாரி அணைத்துக் கொண்டாள் சரேலென உள்ளே நுழைந்த பிரேமா. “ஏதோ சின்னப்புள்ள., தெரியாமப் பண்ணிட்டாய்ம்., அதுக்குப் போயி.,” என்றாள் பென்னியின் அம்மா கோபமாய். “சின்னப் புள்ளையாம் சின்னப்புள்ள., அவன் என்ன செஞ்சான்னு தெரியுமா., நோக்கு., ஆளும் மொகரயும் கன்னங்கரேல்ன்னு” எனப் பென்னியைப் பழித்தான். “இங்கவாருங்க ஐயரய்யா நெரத்தப் பத்திப் பேசுற சோலிய வச்சுக்கிட்ட., ஏடாகூடமாகிடும்.,” நாகக்கா கொதித்தார். “அப்படி என்னதான்ய்யா செஞ்சுட்டான்..” பிரேமா கேட்க., “ எம் பொம்மனாட்டி பால் கொடுக்குறத இப்படவா ஒளிஞ்சு நின்னு பார்த்தா.. கோவம் வராதா..” என்றான் மூச்சிறைத்துக் கொண்டு. சரிந்த முந்தானையை எடுத்து மாராப்பில் போட்டுக் கொண்டபடி சரேலென வந்த அவன் மனைவி., “என்னப் பேச்சுப் பேசுறேள்., அது கொழந்த.” என்றவள் சட்டென அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். சற்றும் எதிர்பாராத அறைதலில் ஆடிப் போனான். நாகக்காவுக்கும் பிரேமாவுக்கும் பென்னியின் அம்மாவிற்கும் திக்கென்று ஆகிவிட்டது. பிள்ளையைத் தூக்கிக் கொண்டு டக்கென அங்கிருந்து மறைந்துவிட்டவர்கள் அஹ்ரகாரத்தை கடந்து நடந்து கொண்டிருந்தார்கள். பிரேமாவின் இடுப்பிலிருந்த பென்னி.. “ய்ச்சி.. ம்மா., ய்ச்சி..” என அஹ்ரகாரப் பெண்மணியைப் நோக்கிக் கையைக் காட்டினான். நீட்டிய கையை பிரேமா இழுத்துவைத்தாள். பென்னியின் அம்மா அவன் உதட்டிலேயே ஆட்காட்டி விரலால் ரெண்டு போடு போட்டாள். இப்படியாகக் கடந்து போன இந்நாளின் மறுநாளில் காலைக் கதிரவனின் கசியும் ஒளி பல கதைகளைக் கூற நீண்டு கொண்டிருந்தது. முற்றும்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in