logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

G POUNRAJ GURUSAMY

சிறுகதை வரிசை எண் # 118


ஊனமான மனசு ஞாயிறு சற்று ஓய்வாக இருக்கலாம் என்ற நினைப்பில் இருந்த என் சிந்தனையை, உதவி ஆசிரியரிடமிருந்து வந்த அலைபேசி அழைப்பு கலைத்தது. ஹலோ சார்... என்று நான் துவங்கியதும், "எனக்கு வேண்டிய நபர் இயக்குநராக உள்ள அறக்கட்டளையின் சேவை திட்ட விழா, தேனி பஸ் ஸ்டாண்டு அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் நடக்கிறது... அதை விரிவாக 'கவர்' பண்ணி விடு", என்று கூறி இணைப்பை துண்டித்தார். நிருபர் பணியில் இதெல்லாம் சகஜம் என்று, என்னை நானே தேற்றி கொண்டேன். அலைபேசியிலிருந்த வாட்ஸ் ஆப் தகவலில் வந்த தொண்டு நிறுவன அழைப்பில் இருந்த கால அட்டவணையை பார்த்து நிகழ்ச்சிக்கு செல்ல ஆயத்தமானேன். அவசரகதியில் கிளம்பினாலும் சரியான நேரத்திற்குள் செல்ல முடியவில்லை. அதற்குள் முகாமை துவக்கி வைத்த தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர், தன்னை, உலகை காக்கும் ஒரு ரட்சகன் என்ற எண்ணத்தில் பேசி கொண்டிருந்தார். 'ரிலாக்ஸ்' செய்து கொள்ளலாம் என்று அரங்கை விட்டு வெளியேற நினைத்த போது... தற்செயலாக பயனாளர் வரிசையில் அமர்ந்திருந்த பெண்ணை பார்க்க நேர்ந்தது. நல்ல அறிமுகமான பெண்ணை போல தெரிந்தாலும்... பெயர், விபரங்கள் உடனடியாக நினைவில் வரவில்லை. யோசனையோடு வாசல் நோக்கி சென்ற என்னை... அந்த பெண்ணும் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரது பார்வையில்.... பளீரிட்ட ஒளி, என்னை நீண்ட நாட்களாக தேடிய விபரத்தை உணர்த்தியது. சிறு புன்முறுவலுடன்... ஒரு நிமிடம் என்ற பாணியில் கையை உயர்த்தி... என்னை நோக்கி வந்தார். விழா முடிந்த பின் பார்க்கலாமே என்ற எண்ணத்தில்... அவரை இருக்கையில் அமருமாறு சைகை செய்தேன். அதை நிராகரித்து விட்டு, அருகே அமர்ந்திருந்த பையனை தூக்கி கொண்டு வேகமாக என்னை நோக்கி வந்தார். அந்த பையனின் இடது கால் ஊனமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அருகில் வந்த அந்த பெண், தன்னை நினைவிருக்கின்றதா... என்று வினவினார். அடையாளம் கண்டறிய முடியாமல் நெற்றி சுருக்குவதை பார்த்து, "சார், நான் பொட்டிப்புரம் வீரலட்சுமி", என்றார். சட்டென்று அந்த பெண் நினைவுக்கு வருவதற்கு முன், அந்த கோர விபத்து தான் என் கண்முன் வந்து அச்சமூட்டியது. நான் மெல்ல அந்த பெண்ணின் இடுப்பில் தூக்கி வைத்திருந்த பையனை பார்த்து... இவன் வெற்றி வேந்தனா... என்று கேட்கும் போதே குரல் வலுவிழந்து அடைத்து கொண்டது. அப்போது பயனாளர்கள் பெயர்கள், அரங்கிலிருந்து ஒலிபரப்பானதால்... "நிகழ்ச்சி முடிந்ததும் என்னை சந்திப்பதாக", கூறி விட்டு மீண்டும் அரங்கினுள் சென்றார். மூன்றாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை அசை போட்டு கொண்டே... மர நிழலை நோக்கி நடந்தேன். தேனி மாவட்ட, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள நிலங்கள் சீரமைப்பு என்ற பெயரில் மணல் அள்ளுவது ஜோராக நடந்த சமயம் அது. டிப்பர் லாரிகள் குறுகலான கிராம ரோடுகளில் மணல் ஏற்றி செல்வது சகஜமாக நடைபெற்றது. இவ்வாறு செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்து அபாயம் உள்ளதென்று செய்தி எழுத வேண்டும்... என்ற கோரிக்கை எழுந்தது. அதையேற்று, போடி தாலுகா பகுதியில் செய்தி சேகரிக்க சென்று, வந்தேன். நிலம் சீரமைக்க வழங்கப்படும் அனுமதியை மணல் கடத்தலுக்கு பயன் படுத்துவதையும், இலகுரக வாகனங்களின் போக்குவரத்திற்கு அமைக்கப்பட்ட ரோடுகளில்... அதிகபாரம் ஏற்றிய டிப்பர் லாரிகள் செல்வதால், அவை விரைவாக சேதமடைவதையும் விலாவாரியாக விவரித்து செய்தி எழுதினேன். அதிர்வலையை ஏற்படுத்திய அந்த செய்தியை... சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூடி மறைக்க என்ன செய்ய வேண்டுமோ... அவற்றை கன கச்சிதமாக செய்தனர். ஆனால் பொட்டிப்புரம் கிராமத்தில் நடந்த விபத்து அவர்களின் தவறை வெளிச்சம் போட்டு காட்டியது. திருமணமாகி மூன்றாண்டுகளில் கணவனை இழந்த வீரலட்சுமி... தனது ஒரே நம்பிக்கையான, மகன் வெற்றி வேந்தனை நன்றாக படிக்க வைத்து, கவுரவமான வேலையில் அமர்த்த வேண்டும் என்ற சிந்தனையில் போடியில் உள்ள தனியார் பள்ளிக்கு படிக்க அனுப்பினார். ஞாயிறு விடுமுறை முடிந்து திங்களன்று பள்ளி செல்ல ரோட்டோரமாக நடந்து சென்ற வெற்றி வேந்தன் மீது அதிவேகமாக சென்ற டிப்பர் லாரி மோதியதாக வந்த தகவல், வீரலட்சுமியின் லட்சியத்தில் பேரிடியாக விழுந்தது. போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வெற்றி வேந்தனை அருகில் இருந்து கவனித்த, வீரலட்சுமியிடம் பேட்டி வாங்க சென்ற போது முதன்முறையாக சந்தித்தேன். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற... ஒரு தாயின் சீற்றத்தை கண்டு உருகி போனேன். இது போன்ற விபத்து மறுபடியும் ஏற்பட்டு விடக்கூடாதென்பதற்கு எந்த ஆழமும் செல்ல அவர் தயாராக இருந்ததால்.... அவருக்கு சில நிருபர்கள் பக்க பலமாக இருக்க தயாரானோம். வழக்கு, விசாரணை என்ற தகவல்களை கூறிய வீரலட்சுமி, சில காலம் சென்ற பின் தொடர்பை துண்டித்து கொண்டார். நாங்களும் வேறு விபரங்களில் கவனம் செலுத்தியதால், வீரலட்சுமியின் நினைவு மறந்து போனது. இன்று ஊனமாக்கப்பட்ட மகனுடன் பார்த்த பின் கூனி, குறுகிய என் மனது பெரும் பாரமாகி போனது. சார்... என்ற வீரலட்சுமியின் அழைப்பில் திரும்பி பார்த்தேன். என்ன நடந்தது... என்ற, என் பார்வையை புரிந்து கொண்ட வீரலட்சுமி கூறியது: விபத்து நடந்த போது பக்கபலமாக இருந்த கிராமத்தினர், பணத்திற்காக... மணல் மாபியாக்களின் கை கூலிகளாக மாறி விட்டனர். உறவினர்கள் குவாரி குத்தகைதாரரிடம் சமரசம் செய்து கொண்டனர். விபத்தில் வெற்றி வேந்தனின் காலின் கீழ்பகுதி சிதைந்ததால்... அதை அப்புறப்படுத்தி விட்டனர். என் நிலையை சாதகமாக்க பணம் கொடுத்து சமரசம் செய்த முயற்சித்தனர். நான் ஒத்து கொள்ளாததால் உறவினர்கள் மூலம் தொல்லை கொடுத்தனர். உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் உபத்திரம் கொடுத்ததால்... அங்கிருந்து போடிக்கு குடி பெயர்ந்து விட்டேன். ஏலக்காய் தரம் பிரிக்கும் வேலை பார்த்து கொண்டு, மகனை படிக்க வைக்கிறேன். அவனது பள்ளி தாளாளர் வேண்டுகோளையேற்று, இந்த தொண்டு நிறுவனத்தினர் தானியங்கி சற்கரநாற்காலி வழங்குகின்றனர். அதை வாங்க தான் இங்கு வந்தோம். எங்களுக்காக அதிகாரிகளின் தவறை தயங்காமல் சுட்டிக்காட்டிய உங்களிடம்.... எனது நிலையை கூற வேண்டும் என்ற நீண்டநாள் பரிதவிப்பு தீர்ந்தது.... என்று கூறி கை கூப்பியவாறு தனது மகனை நோக்கி நடந்தார். ஊனமானது வெற்றி வேந்தனின் கால் அல்ல, அலட்சிய அதிகாரிகளின் மனது. அந்த ஊனத்தை எந்த அரசு தடுக்கும் என்ற எண்ணம் தான் மேலோங்கியது. அந்த தாயின் நடையில் இருப்பது நேர்மையின் திமிர் என்றுணர்ந்த விழியோரம் வழிந்த கண்ணீரை துடைக்க மனமில்லாமல் சிலையாக நின்றேன். குரு.பவுன்ராஜ் 303,மெயின்ரோடு தேவாரம் தேனி மாவட்டம். 625 530 8110869754

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.