logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

கி.சரஸ்வதி

சிறுகதை வரிசை எண் # 116


ரோஷச் சோறு கடல் காற்றுக்கு வெவ்வேறு பொழுதுகளில் வெவ்வேறு சுவையுண்டு. கடலோடு வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கே அது தெரியும். சில்லிட்டிருக்கும் உப்பின் சுவையைத் தாங்கி, கடல்காற்று தேனுவின் வீட்டுக் கதவை அசைத்தபோது அவள் விழித்துக் கொண்டாள். மணி நாலு இருக்கும். ஐந்து மணிக்கெல்லாம் அளத்தில் இருந்தால்தான் பத்துப் பதினோரு மணிக்கு வேலையை முடித்துத் திரும்பலாம். தொடையிடுக்கில் எரிச்சல் பிழிய, பாதங்களில் பொத்துப்போன கொப்பளங்கள், தாம் இருப்பதை நொடிக்கொரு முறை இடைவெளியே இல்லாமல் நினைவூட்ட, நேற்று வேலை முடிந்து வந்தபிறகு நாலு தெரு தள்ளியிருக்கும் அடிபைப்பில் அடித்துத் தள்ளுவண்டியில் வைத்து விற்றுக்கொண்டு வந்த சன்னாசியிடம் காசு கொடுத்து வாங்கி வைத்த தண்ணீரில் கொஞ்சம் செலவழித்து மேலுக்கு ஊத்திக்கொண்டாள். கைகால்கள் தேய்த்துக் கழுவிய பின், உள்ளங்கையில் தேங்காய் எண்ணையை ஊற்றித் தொடைகளில் தடவிக்கொண்டு, நேற்றிரவு உடம்பை எழுப்ப முடியாமல் எழுப்பிச் சமைத்த கருவாட்டுக் குழம்பையும் சோற்றையும் தூக்குவாளியில் போட்டு எடுத்துக் கூடையில் வைத்தாள். மறக்காமல் செத்துப்போன புருஷன் விட்டுச் சென்ற சொத்துகளில் ஒன்றான சட்டையை எடுத்து வைத்தபடி, சும்மாட்டுக்குத் துணியையும் எடுத்துக்கொண்டு, ரப்பர் செருப்புகளைப் போட்டபடி கதவைச் சாத்திவிட்டு நடக்கத் தொடங்கினாள். இருள் பிரியாத வேளையிலும் கூடாரத்துக்குள் இவளுக்கு முன்பாக ஆட்கள் வந்து விட்டிருந்தனர். ராணி, சமனசு மேரி, பெட்ரீசியா, சுமதி என இன்னும் பெண்கள் வந்தபடி இருந்தனர். கங்காணி வந்து வேலை ஏவிக் கொண்டிருந்தான். பல வருடங்களாகப் பழக்கப்பட்ட இடம்தான் என்பதால் மெல்லிய வெளிச்சத்திலேயே ஆண் பாத்தி, பெண் பாத்தி பார்த்து அவரவர் இடத்துக்குப் பெண்கள் பிரிந்து சென்று வேலையை ஆரம்பித்தனர். முள்ளங்காட்டில் வெகு காலமாக இந்த உப்பளத்தில் பம்ப்பிங் , கோடு போடுவது , உப்பு வாருவது, உப்பைக் குவிப்பது என எல்லாமே பெண்கள் தான். ஆறு மாதமே சோறு போடும் இந்த வேலையை விட்டால், வானம் பார்த்த பூமியில் வேறு பிழைப்பு ஏது? மிச்ச ஆறு மாதங்களுக்கு கடல் அலைகளைப் போலவே ஓய்ச்சலின்றி கதறிக் கொண்டே இருக்கும் கடன் வாழ்வு. வேம்பார், தருவை, குளைச்சல், முத்தையாபுரம் என அளங்களை நம்பி வாழ்க்கையை ஓட்டும் பெண்கள் ஏராளம். மக்களின் சப்புக்கொட்டும் உப்புச் சுவைக்குப் பெருமளவு இந்தப் பெண்களின் கடும் உழைப்பும் அயராத மன உறுதியும் தான் காரணம். அந்தப் பெருமையை மட்டும் தாராளமாகச் சுமந்தபடி வெயிலோடு போட்டி போட்டு ஓடிக் கொண்டிருப்பவர்களில் தேனுவும் ஒருத்தி. சிறு வயதில் சர்க்கஸில் பார் விளையாடும் அப்பா அம்மாவோடு இந்த ஊருக்கு வந்தவள், சர்க்கஸ் நொடித்துப் போகும் தருவாயில், இங்கேயே தங்கி இப்போது ஐம்பதைத் தொடும் வயதிலும் உப்பள வேலையில் கிடந்து வாழ்வின் கரிப்பில் காலத்தைத் தொட்டு விழுங்கி செரித்துக்கொண்டிருக்கிறாள். புருஷன் உப்பளத்திலேயே சுருண்டு விழுந்து செத்த பிறகு மூன்று பெண்களைக் கரையேற்றிவிட்டு, இப்போது தனியாகக் குடிசையில் கடற்காற்றோடு பேசியபடி இரவைக் கழிக்க விதித்திருக்கிறது அவளுக்கு. வெயில் ஏறத் துவங்கியிருந்தது. உப்பும் தன் வெண்மையைப் பளீரெனத் துலங்கச் செய்து, வேலை செய்பவர்களின் கண்களைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. தேனுவுக்கு அடிக்கடி மூச்சுப் பிரச்சனை தலைகாட்டத் துவங்கியிருந்தது. உப்பளத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும் இளம் வயதிலிருந்தே இது தொற்றிக் கொள்ளும். தோல் தடித்துப் போவதும், கண்பார்வை குறைந்துவிடுவதும் சாதாரணம் இங்கு. தேனுவும் மற்ற அனுபவசாலிப் பெண்களும் பெரிய பெரிய கூடைகளில் உப்பைச் சுமந்து சென்று குவிப்பார்கள். ஒரு கூடை 25 கிலோ உப்பு பிடிக்கும். இது போல இருபுறமும் உயர்ந்திருக்கும் உப்பு மலைகளுக்கிடையில் ஒற்றையடிப் பாதையில் 250 நடை வரை உப்புத் தூக்கிச் சுமக்க வேண்டும். தினம் கிடைக்கும் 250 ரூபாய்க்காக மூன்று நான்கு டன் உப்பை தினம் சுமக்கும் மனிதக் கிரேன்கள் இந்தப் பெண்கள். பதினோரு மணிக்கு வேலை முடித்து கூடாரத்துக்குள் வந்து சாப்பிடத் தொடங்கினார்கள். இதற்கு மேல் வெயிலில் வேலை செய்தால் உடம்பு பொத்துப் போகும். தேனுவுக்கு சுமை தூக்கித் தூக்கிக் குடல் இறங்கிவிட்டது என்று அரசு ஆஸ்பத்திரியில் சொல்லிவிட்டார்கள். எத்தனையோ வேதனையில் மூன்று பெண்களுக்கும் பிறந்த வீட்டுச் சீர்கள் செய்து குவிக்க வேண்டி இன்னும் சுமை சுமந்து கொண்டிருக்கிறாள். சாப்பிட்டுக் கிளம்பும்போது சமனசு சொன்னாள்.அவள் புதுக்கோட்டையிலிருந்து இங்கு வந்தவள். 'யக்கா, ஏதுக்கு இம்புட்டுப் பாடு? பொண்ணுகளப் பெத்து அரும பெருமயாக் கட்டிக் குடுத்துப்புட்ட. பேரப் புள்ளைக கூடப் போயி இருந்துக்கிட்டு காலத்தக் கழிக்காம இப்புடி கஸ்டப்பட்டு கிட்டு கெடக்கணுமா? காலுல பொத்துப்போக எடம் மிச்சமிருக்கா? காலு வலி தொட வரைக்கும் வந்துருச்சு ஒனக்கு. ஒரு புள்ள கூட வா வந்து எங்கூட இருன்னு சொல்லமாட்டுது?' என்று அங்கலாய்த்தாள். தேனுவும் மதுரைப் பக்கப் பூர்விகக்காரிதான். இன்னும் கூட உப்பள பாஷை பேச வராது. பெண்களைக் கட்டிக் கொடுத்ததும் திருச்சி, கரூர் பக்கமாகப் போனது. ஆதங்கமாக அவளுக்கு பதில் தந்தாள். 'இல்ல மேரி, கூப்புடக் கூடாதுன்னு ஆராச்சும் நெனப்பாகளா? அவக சூழ்நிலை சமய சந்தர்ப்பம் அப்புடி கெடக்குதும்மா ' என்றாள். 'ஆமாமா, அம்புட்டுப் பேருக்கும் சீரு செஞ்சாத்தான ஒன்ன ஒறவுன்னு ஒத்துக்குவாக, நீ நடத்து, நா கெளம்பறேன்' என்று இருமியபடி நடையைக் கட்டினாள். தூத்துக்குடி தவிர வேறு மாவட்டங்களும் உப்பளத் தொழிலுக்கெனப் பெண்களை நேர்ந்துவிட்டதில், அங்கு ஒரு தமிழ்நாடே குழுமியிருந்தது. வெவ்வேறு பாஷைகள், பல்வேறு கவலைகள், எப்போதும் வாழ்க்கைக்கான போராட்டங்கள் என்று நகர்ந்து கொண்டிருந்தது அவர்கள் காலம். மதியமே வீட்டுக்கு வந்துவிட்டாலும் உப்பள வேலை தரும் உடல் உளைச்சலும் வீட்டு வேலைகளும் தண்ணீருக்காக அலைய வேண்டிய இம்சையுமாக இரவு வரை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உடலும் மனமும் உழன்றபடிதான் இருக்கும். தேனு அசந்துபோய்ப் படுத்தாள். உடல் சுத்தமாக ஒத்துழைக்கவில்லை. மூன்று மகள்களுக்குமாக வாங்கிய கடனை நினைத்தால் உடம்பு உதறியது. இன்னும் பேரப் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை என்று சம்மந்திகள் குத்தி இழுக்கும் வார்த்தைகளை நினைத்தால் சோறு இறங்கவில்லை. லேசாகக் கதவைத் திறந்து வைத்ததும் அடித்த இரவு நேரக் கடற்காற்றுக்கு மீனின் ஈரச்சுவையிருந்தது. அசதி கூட, அப்படியே கண்ணயர்ந்தாள். தேனு உப்பள வேலையை விட்டுவிட்டு மீண்டும் சர்க்கஸில் சேர முடிவெடுத்துக் கிளம்பி விட்டாள். அன்று என்னவோ வழக்கம்போலில்லாமல் சர்க்கஸில் விளையாடும் பார்கள் மூன்று மடங்கு உயரத்திலிருந்தன. இவளும் சமாளித்து ஏறி பாரைப் பிடித்து உந்திப் பறந்து எதிரில் ஆடும் இவளது அம்மாவின் கையைப் பிடிப்பதற்காகத் தான் பிடித்திருந்த பாரை விட்டு விட்டு அவளது கரம் பற்றப் போகையில் அம்மா இரண்டு கைகளையும் சட்டென்று உதறி விடவே, கீழே வேகமாக விழத் தொடங்கினாள் அவள். கீழே கயிற்றுக் கட்டு இருக்கிறதா எனக் குனிந்து பார்க்கையில் உப்பு வழித்தெடுத்து மிச்சமான கட்டாந்தரை மட்டும் தென்படவே, ஆ வென்று அலறி விழிக்கையில் உப்புக்காற்று கதவைத் தட்டிக் கொண்டிருந்தது. வியர்த்துக் கொட்டிய உடலோடு, உப்புக் கீறிய எரிச்சல் சேர வேதனையோடு எழுந்தாள். இந்த வயிறு வேறு இறங்கிக்கொண்டு பாடாய்ப்படுத்துகிறது என நினைத்து வேதனை அதிகமானது. உப்புச் சூட்டில் வேலை செய்துதான் குடும்பத்தை வளர்த்தெடுத்தாள். உப்பு லட்சுமி என்பார்கள். கடலில் பிறப்பதால் அது லட்சுமிக்குச் சமம். உப்பை யாருமே களவாடவும் மாட்டார்கள். அப்படிப்பட்ட இடத்தில் வேலை செய்வது பெருமைதான் தேனுவுக்கு. முதல் இரண்டு மகள்களையும் சாயப் பட்டறைக் காரர்களுக் கட்டிக் கொடுத்தாள். உழைப்பைப் பிழிந்து செய்து வைத்த கல்யாணங்கள் அவை. கரூரில் இருவரும் வாழ்க்கைப்பட்டதும் மூன்றாவது பெண்ணுக்குத் திருச்சியில் லேத் பட்டறையில் வேலை செய்யும் மாப்பிள்ளை கிடைத்தான். சொல்லி வைத்தாற் போல மூன்று சம்மந்திகளுமே ஆதரவு இல்லை. அவரவர் வழக்கப்படி சீர் செனத்தி சரியாக வந்துவிடுகிறதா என்பதை மட்டும் சரிபார்த்துக் கொள்வார்கள். தேனுவின் அம்மா சிறு வயதிலிருந்தே சர்க்கஸ் வித்தைகள் பழகி பார் விளையாட்டில் புகழ்பெற்று சர்க்கஸில் வேலை செய்பவரையே கல்யாணம் முடித்தவள். தூத்துக்குடிக்கு வந்தபோது சர்க்கஸ் இனி சோறு போடாது என்ற நிலையில் இவளை அழைத்துக் கொண்டு வேலை தேடித் திரிந்து அளத்து வேலையைத் தஞ்சமடைந்தது நினைவுக்கு வந்தது. கூட வேலை செய்த மாயனை விரும்பிக் கட்டிக் கொண்டு, அப்பா, அம்மாவோடு ஒரே குடும்பமாக இருந்த பழங்கதையும் அவர்களுக்குப் பிறகான தலைகீழ் மாற்றமடைந்த வாழ்வையும் எண்ணிக் கொண்டாள். பெற்ற பிள்ளைகள் என்ன தான் இந்தப் பாவப்பட்ட ஜீவனுக்கு இரங்கினாலும், அவர்களும் குடும்பம் குழந்தைகள் என்றான பிறகு யாரைக் குறை சொல்ல முடியும்? அவர்கள் குடும்பத்தை எதிர்த்தா இவளைக் கவனிக்க முடியும்? அவர்கள் பாடும் சாயப் பட்டறையில்தான் வெளுத்துக் கொண்டிருந்தது. இனி வேலைக்குப் போக முடியாதெனத் தோன்றியது. கங்காணியிடம் சொல்லச் சொல்லி ராணியிடம் சொல்லிவிட்டாள். சிவகங்கைப் பக்கத்துக் காரியான ராணி இவள் மேல் பாசமாக இருப்பாள்.'அக்கா, நாஞ் சொல்றேன்னு தப்பா நெனக்காத.பொண்ணுக வீட்ல இல்லன்னாலும் அவுக பக்கத்துல ஒரு குடிசயப் போட்டுக்கிட்டாச்சும் அங்க போயிரு. இனி இந்த உப்பு வாருற வேல செய்ய ஒனக்குச் சுத்தமாத் தெம்பு இல்ல. ஊருக்கே ருசிக்கிற உப்பு, நமக்கு மட்டும் கரிச்சுக் கெடக்கு. என்னத்துக்கு இனியும் கெடந்து அல்லாடுற? யோசிக்காம பொண்ணுக கூட போயி இரு. கூட மாட ஒத்தாச பண்ணிக்கிட்டு, பேரப்புள்ளைகளப் பாத்துக்கிட்டுக் கெட' என்று அடுப்பிலிட்ட உப்பு கணக்காகப் பொரிந்தாள். வேலைக்குப் போக இனி முடியாது என்றான பிறகு மகள்கள் வீட்டுக்குச் சென்று என்ன தான் செய்வது ? யார் சும்மா வைத்துச் சோறு போடுவார்கள் என்ற கேள்விகளோடு படுத்திருந்தவளுக்கு மூத்த மகளிடமிருந்து போன். பட்டன்கள் தேய்ந்த அந்தப் பழைய போனை கவனமாக எடுத்துப் பேசினாள் தேனு. ' அம்மா, நல்லாருக்கியா ?' என்ற மகளின் கேள்விக்கு அழுகையைத் தான் தர முடிந்தது இவளால். 'ஒரு வாரமா வேலக்கிப் போகல மகளே' , என்றதும், ' அம்மா, ஆஸ்பத்திரிக்குப் போயிப் பாத்துக்கம்மா . இங்க மாமியா என்னப் போகவுட மாட்றாம் மா. தயவுசெஞ்சு மன்னிச்சுரு. ஒடம்பப் பாத்துக்கம்மா ' என்று அழுதபடியே போனை வைத்துவிட்டாள் மூத்த மகள். தேனுவுக்குத் தெரியும். மற்ற இரண்டு பேரின் நிலை இதை விட மோசம் என்று. மீண்டும் சுருண்டு படுத்தவளுக்கு உப்பு நெடி படிந்த நுரையீரல் வலி கொடுத்தது. மூத்தவள் போன் செய்து மூன்றாவது மகளிடம் ஏதோ பேசியிருப்பாள் போல. அவளிடமிருந்து அழைப்பு. எடுத்துப் பேசியவளுக்கு ஒரே ஆச்சரியம். பேசியது சம்மந்தி. 'ஆமா, எல்லாப் பொண்ணுகளுக்கும் போன் பண்ணி அழுகிறிகளாமே. ஒங்க மவ இங்க புழிஞ்சு அழுவுறா. செய்ய வேண்டிய சீரை செய்யத் துப்பு இல்ல. இங்க வரவா அங்க வரவான்னு ஒரே இம்சையாப் போச்சு ஒங்க கூட. ஒங்க மவளுவ மாத்தி மாத்தி போன் போட்டுப் பேசி அழுவுறாளுவ . வெல வாசி தெரியுமா ஒங்களுக்கு. ஒரு ஆளு சாப்புட ரெண்டு பேரு ஒழைக்கணும் பாத்துக்குங்க. கட்டிக் குடுத்தாச்சுன்னா செவனேன்னு இருக்கணும். யாரு வூட்ல யார அதிகாரியாக்கறது? உப்பு அள்ளுற வேல செஞ்சாப் போறாது. உப்புப் போட்டுச் சாப்புடுங்க', என்று பதில் என்ற ஒன்றை எதிர்பார்க்காமல் கொட்டி முழங்கிவிட்டு வைத்தாள் சம்மந்தி. மூன்று பெண்களும் போனில் பேசிக் கொண்டதை வைத்து, இவள் அவர்கள் வீட்டில் தங்கப்போவதாக நினைத்து , இவ்வளவு ஆர்ப்பாட்டம். உப்பைப் போட்டு சாப்பிட்டதில்லையா தான் ? உப்பைத்தானே சுவாசித்துக் கொண்டிருக்கிறது இங்கிருக்கும் குடும்பங்கள்? உப்புக்கு அரிக்கத் தங்கள் உடம்பையே தத்தம் செய்யும் பொண்ணுகளைப் பார்த்தா உப்புப் போட்டுத் தின்னு என்று சொல்கிறார்கள்? நினைக்க நினைக்க வேதனை கரை மீறியது. மாலை மங்கும் சமயத்தில் கதவைச் சாத்திவிட்டு உப்பளம் பார்க்கக் கிளம்பினாள். கடல் ஓசையைக் கேட்டபடி அமைதியாய் நின்றிருந்த உப்புக் குவியல்களில் ஏறி இறங்கினாள். வயதுக்கு மீறிய உழைப்பால் குழிவிழுந்த கண்களில் இருந்து சத்துக் கெட்ட கண்ணீர் உப்பளத்தில் சொட்டியது. உடல் உபாதைகளை மிஞ்சிய மன வேதனையைத் தாள மாட்டாது விம்மல் எழுந்தது அவளிடமிருந்து. உப்புப் போட்டுச் சாப்பிடுங்க என்ற வார்த்தைகள் ஓங்கி ஒலிக்க, உப்பு மலைகளில் இருந்து உப்பை அள்ளியள்ளி வாய்க்குள் திணித்தாள் தேனு. குமட்டி வந்து குடல் வலித்தது. கொஞ்சநஞ்சமாக உள்ளே சென்ற உப்பு, தண்ணி தண்ணியாக வாந்தியெடுக்க வைத்தது. நாள் முழுக்க சாப்பிடாததும் மயக்கம் தர, உப்புக் குவியலை முடிந்தவரை வாருகம்பியால் தோண்டி அதில் படுத்துக் கொண்டாள். இன்னதென்று புரியாத மயக்கம் தோன்ற, தேனுவின் அம்மா வந்து உயர உயர பார் விளையாட்டுக் காட்டித் தேனுவைச் சிரிக்க வைத்தாள். இந்த முறை பாரை விட்டுத் தாவிய அவளது கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டு காற்றில் லாவகமாகப் பயணித்தாள். விடியற்காலையில் முள்ளங் காட்டின் அந்த உப்பளத்தில் , தேனக்கா என்ற கதறலோடு கூடிய வேதனைக் குரல்கள் எழுந்து கடல் நோக்கிப் பறந்து கலந்தன. உறுதிமொழி: இது என்னுடைய சொந்தப் படைப்பு எனவும் இதுவரை வேறெங்கும் பிரசுரமாகவில்லை எனவும் உறுதியளிக்கிறேன். கி.சரஸ்வதி, ஈரோடு🌹🦋 Mail id: ameech2004@gmail.com

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in