logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Rajarajacholan

சிறுகதை வரிசை எண் # 115


பால் வங்கி... அவனின் உண்மை முகம் இதுவல்ல... மயிர் மழிக்காத முகம். அவன் முகத்தில் வளர்ந்து நீண்டிருக்கும் தாடிக்குப் பதினைந்து தினங்களுக்கு மேலான வயதிருக்கும். தாடிக்குச் சற்றுக் குறைவில்லாது போட்டியிட்டுத் தலைமுடியும் வளர்ந்து வகுடெடுத்து வாராமல் பரந்து கிடந்தது. பிறர் பார்த்து விரும்பத்தக்க புன்னகையைக் கூட அவனது உதடுகள் உதிர்த்து உலர்ந்து போய்க் கிடந்தது. வாழ்க்கை வழக்கத்துக்கு மீறிய சோகத்தை, அயர்வை அவன் உடலெங்கும் ஆக்கிரமித்து நின்றதை அவன் செயல்கள் காண்பித்தன. ஜிப்மர் மகப்பேறு மருத்துவக் கட்டிடத்தின் எதிரில் இருக்கும் பெரிய ஆஸ்பிராஸ் சீட் கொட்டகையில்தான் பதினைந்து நாட்களும் அவன் தங்கித் தவம் கிடக்கிறான். அந்த ஆஸ்பிராஸ் கொட்டகை பற்றிச் சொல்லாமல் போய்விட்டால் அந்தக் கொட்டகை செய்த உதவியை மறைத்ததாக ஆகிவிடும். மிக நீளமான அந்தக் கொட்டகை, சுற்றுச் சுவர் இல்லாத திறந்த உட்பரப்பைக் கொண்டிருந்தது. அதன் உட்பரப்பு முழுவதும் எப்போதும் உயிர்த்த மனித உடல்கள் நிரம்பிக் கிடந்தன. அந்த உடல்களின் இயக்கத்தால் அந்தக் கொட்டகை எப்போதும் உயிர்ப்போடு ஓய்வின்றி இயங்கிக் கொண்டே இருந்தது. அந்த மனிதர்கள் அந்தக் கொட்டகையின் ஆன்மாவாகவே மாறியிருந்தனர். கொட்டகைக்கு உயிர்ப்பைத் தந்த மனிதர்களில் பலர் நடைபிணமாகத்தான் வலம் வந்து கொண்டிருந்தனர். வலம் வரும் அந்த மனிதர்கள் யார்? ஏன் நாள் முழுதும், மாதங்கள் முழுதும் இங்கேயே தங்கிக் கிடக்கிறார்கள்? ஏறத்தாழ எல்லா ஆண்களின் முகங்களிலும் அவன் முகத்தைப் போலவே மழிக்காமல் தாடி மயிரும், சோகமும் அப்பிக் கிடக்கின்றன. ஆண் பெண் என்ற பேதத்தை அந்தக் கொட்டகை உடைத்துப் போட்டிருந்தது. விடியல், இரவு என எல்லா நேரத்திலும் ஆணும் பெண்ணும் அந்தக் கொட்டகையில்தான் சாப்பிடுவது, ஓய்வெடுப்பது, சுகத்துக்கங்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்வது என எல்லாவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். இது ஆண்கள் பகுதி, இது பெண்கள் பகுதி எனக் கொட்டகையின் குறுக்கே கோடோ, கயிறோ, தடைச்சுவர்களோ இல்லை. எல்லா நாடுகளிலும் தேசிய எல்லையைப் பங்குபோடும் கற்பனைக்கோடுகள் இருக்குமே! அந்தக் கற்பனாக் கோடுகளைக்கூட தன் முதுகில் சுமக்கவில்லை. தேசிங்கு அண்ணனும் அவர் மனைவியும் ஒருபுறத்தில் அவனுக்கு அருகில்தான் படுத்து உறங்குவார்கள். இன்னொரு புறத்தில் அருண் அண்ணனும் அவர் மனைவியும் படுத்திருந்தார்கள். இப்படித்தான் பக்கம் பக்கமாக அறிமுகமே இல்லாத பலர் இரவு பகலாய்த் தங்கி ஓய்வெடுக்க அந்தக் கொட்டகை தன் பரந்த நிழல் பரப்பைக் கருணையோடு தந்து கொண்டிருந்தது. மனைவியையோ தங்கையையோ யாரோ ஒருவரைப் பிரசவத்திற்கு, எதிரே இருந்த மருத்துவக் கட்டிடத்தின் உள்ளே அனுப்பி வைத்துவிட்டு, இந்தக் கொட்டகையில் பிரசவ வலியோடு காத்துக் கிடக்கும் மனிதர்கள்தான் இவர்கள். அந்த மனிதக் கூட்டத்தில் அவனும் ஒருவனாகப் பிரசவ வேதனையை உணர்ந்து கிடந்தான். " சார் .... வாங்க வள்ளலார் கோயில்ல இருந்து சாப்பாட்டு வண்டி வந்துருச்சு, சாப்பாடு வாங்கிட்டு வரலாம் வாங்க" இது அருண் அண்ணனின் குரல். அவன் தங்கிக் கிடந்த நாட்களில் பெரும்பாலான நேரங்களில் அவரோடுதான் நேரத்தைச் செலவழித்தான். "நீங்க ஏன்ணா இங்க தங்கி இருக்கிங்க? யார்கு உடம்பு முடியல? " எனக் கேட்டதுதான் தாமதம், சற்று நேரத்தில் தன் 15 வயது மகன் நோயுற்று மருத்துவமனைக்குள் ஐந்து மாதங்களுக்கு மேலாகச் சிகிச்சை பெற்று வரும் கதையைச் சொல்லி முடித்தார். அங்கே இருக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் இப்படி ஒரு பெருங்கதை, ஒரு பெரும் சோகம் உறைந்து வாழ்ந்தது. அங்கே புன்னகைப் புதைத்துக் கிடந்தவர்களில் சிலர் பைகளையும், பொருட்களையும் எடுத்துக்கொண்டு, இத்தனை தினங்கள் உறவாகவும் ஆறுதலாகவும் இருந்தவர்களிடம் கண்ணீர்மல்க நன்றி கூறிவிட்டுக் குழந்தையும் தாயுமாகத் தொலைத்த மகிழ்வைத் தேடி எடுத்து உதடுகளில் ஒட்டிக்கொண்டு பயணப்படுகிறார்கள். இதற்கு முரணான புன்னகையை ஆழப்புதைத்துக்கொண்ட நிகழ்வுகளும் தினமும் அந்தக் கொட்டகையின் ஏதோ ஒரு மூலையில் ஒப்பாரி சத்தத்தோடு அரங்கேறிக்கொண்டும் இருந்தது. பிறப்பும் இறப்பும் ஒருசேர அந்தக் கொட்டகையின் எதிரே நிற்கும், மருத்துவக் கட்டிடத்தில் இரவுபகல் ஓய்வின்றி நிகழ்ந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு பிறப்பும் ஒவ்வொரு இறப்பும் வாழ்வின் இருத்தலையும் நிலையாமையையும் விளக்கிக் கொண்டேயிருந்தன. மருத்துவர்களும் செவிலியர்களும் காவலர்களும் கண் உறங்கி விடவில்லை என்பதை ஒவ்வொரு மணித்துளியும் அந்தக் கட்டிடத்தின் வாசலில் நிற்கும் பெரிய வேப்பமரத்தில் மாட்டப்பட்டிருந்த ஸ்பீக்கர் ஒலித்து அறிவிப்பைச் சொல்லிக்கொண்டே இருந்தது. குழந்தை பிறந்தாலோ? அல்லது உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிக்கு மருந்து, உணவு தேவை என்றாலோ? காவலர்கள் உள்ளிருந்து நோயாளியின் பெயர் சொல்லி அந்த ஸ்பீக்கரின் வழிதான் அழைப்பார்கள். நள்ளிரவிலும் நாம்தான் செவிகளைத் திறந்து வைத்துவிட்டுக் கண்களை மூடி உறங்கவேண்டும். "பூங்காவனம் முருகேசன் அட்டெண்டர் உள்ளே வரவும். பூங்காவனம் முருகேசன் அட்டெண்டர் உள்ளே வரவும்" இப்படித்தான் அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் நாம் பெயர் சொல்லி வைத்திருந்தால் நாம் இரவில் தூங்கி விட்டால் கூட விழித்து இருப்பவர்கள் தூங்குபவர்களை எழுப்பி விடுவார்கள். இப்படியான உதவிகளை ஒருவருக்கொருவர் எந்தக் கைமாறும் இன்றிச் செய்து கொண்டார்கள். " என் மகனுக்கு ஆம்பள பிள்ளை பெறந்திருக்கு. ஒரு நல்ல பேரா சொல்லுங்களேன்" என்று நடுத்தர வயதை ஒட்டிய தாய் கேட்கிறாள். அவள் தோற்றம் கடின உழைப்பாளி என்பதைக் காட்டுகிறது. அந்த இடத்தில் இருக்கும் எல்லோரும் ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்கிறார்கள். அருண் அவனைப் பார்த்து "சார் ஒரு நல்ல பேரா சொல்லுங்க" என்கிறார். அவனும் தாமதிக்காமல் "பூவிழியன்" எனப் பெயரைச் சொல்கிறான். "நல்ல பேரு இதையே வச்சுடுங்க" எனப் பெயர் பற்றிய பெரிய விவாதம் நடந்து முடிகிறது. பெயர் வைத்த அன்றிலிருந்து மூன்று நாட்கள் கழித்துப் பூவிழியனையும் அவனின் தாயையும் அழைத்துக் கொண்டு ஊருக்குச் செல்கையில் "சார் நீங்க சொன்ன பெயரையேதான் குழந்தைக்கு வெச்சிருக்கோம்" எனக் கூறிவிட்டு மகிழ்வோடு செல்கிறாள் அந்தப்பெண். அவன் சிரித்துக்கொண்டே தலையசைத்துவிட்டுப் பேசிக்கொண்டிருக்கிறான். அவன் மனைவி பெற்றெடுக்க போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைவிட குறை மாதமாய் தாயின் கருவறையில் மூச்சு முட்ட உயர் இரத்த அழுத்தத்தோடு போராடிக் கொண்டிருக்கும் குழந்தையின் வளர்ச்சி மீதே இவனின் சிந்தனை உறக்கம், விழிப்புகள் தாண்டி நிலைத்திருந்தன. ஒவ்வொரு முறையும் அந்த ஸ்பீக்கர் ஒலிக்கும் போதெல்லாம் அவன் இதயம் பெரும் இரணமாகி உயிரோடு உள்ளுணர்வுப் போராட்டத்தை நடத்தி முடிக்கும். எப்போது தன் மனைவிக்குப் பிரசவம் நடக்கும் என்பதை அறியாதவனாய்ப் பெரும் துயரத்தோடு அந்தக் கொட்டகையில் பல வருடங்களுக்கு முன்பு நிரந்தரமாக அமைக்கப்பட்ட மூன்று பேர் அமர்கின்ற மரப்பலையில் காத்துக் கிடந்தான். பல ஆண்டுகள் அந்த மரப்பலகையில் பலர் அமர்ந்தும், படுத்தும் சென்றதில் அது உறைந்துபோய் கிடந்தது. அந்த இடத்தில் நிரந்தரமாக ஊன்றப்பட்டுப் பல வருடங்கள் ஆகியிருக்கும் என்பதைப் பலகையில் கோர்க்கப்பட்டிருக்கும் மரச் சட்டங்களின் இழைவுகளின் தேய்தல் காட்டிற்று. மரச்சட்ட கோர்வைகளின் இடுக்குகளில் ஆயிரக்கணக்கில் மூட்டைப்பூச்சிகள் குடும்பம் குடும்பமாக வசிக்கிறது. அவைகளுக்கு மட்டும் எந்தப் பிரசவக் கட்டுபாடுகளும் விதிக்காமல், அந்த வளாகத்தில் தன் இனத்தைப் பல்கிப் பெருக்கி வைத்திருக்கின்றன. அவைகள் கடித்து அமருவோரின் இரத்தத்தை உறிஞ்சாமல் இருக்க, பெஞ்சு மேல் அட்டைப்பெட்டியின் அட்டையை வைத்துச் சரியாகப் பொருந்துமாறு சரி செய்து, அந்த அட்டையைப் படுக்கையை விரிப்பாகப் போட்டு அதன் மீது ஒரு துண்டை விரித்துப் படுக்கையாக மாற்றியிருந்தான். இரவில் அந்த மரப்பலகையில் படுத்தும், பகல் பொழுதில் அந்தப் பலகையில் அமர்ந்தும் வேடிக்கை பார்த்தும் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தான் என்பது சரியல்ல. சோகமும், மௌனமுமாய் நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தான். ஒரு விடியற்காலை நான்கு மணிக்கு அவன் மனைவியின் பெயரைக் கூறி அழைத்தனர். இரண்டு மூன்று முறை ஸ்பீக்கர் சத்தமிட்டு ஓய்ந்தது. அவன் உறக்கத்தில் கிடந்ததில் அழைத்தது அவனுக்கு தெரியவில்லை. அப்பொழுது அவன் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டு வார்டில் இருந்து பிரசவ அறைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். 4. 30 மணி இருக்கும். அவன் தங்கை, "அண்ணா எழுந்திரு அண்ணா எழுந்திரு" என்று உறங்கிக் கொண்டிருப்பவனை அவசரப்படுத்தித் தட்டி எழுப்புகிறாள். திடுக்கிட்டுத் துடித்து எழுந்தவன். "என்ன பாப்பா என்னாச்சு? எனக் கேட்கிறான். "அண்ணிக்குப் பிரசவ வலி எடுத்துடுச்சாம். டாக்டர் உள்ள கூப்பிடுறாங்க. வா போகலாம்" எனக் கூறி மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் சென்று கொண்டிருக்கிறாள். அவன், அவள் பின்னே நடந்து செல்கிறான். உள்ளே சென்று பிரசவ அறையின் வாயிலில் கிடக்கும் இருக்கையில் இருவரும் அமர்ந்து இருக்கிறார்கள். பெண் மருத்துவர் ஒருவர் வந்து "நீங்க?" என்று கேட்டதும்; இவள், "மணிமேகலை பேஷண்ட்" என்று கூறுகிறாள். அவள் கூறியதும். அவனைப் பார்த்து "நீங்க தான் அந்தப் பெண்ணின் கணவரா? உள்ள வாங்க. இதில ஒரு கையெழுத்துப் போடுங்க. உங்க மனைவிக்கு ஆபரேஷன்தான் பண்ணனும். சுகப்பிரசவமாகும்னு வெயிட் பண்ணினோம். ஆகல" எனக்கூறி கொண்டிருக்கையில் அவன் கையொப்பத்தைப் போட்டு முடித்துவிட்டான். கையொப்பமிட்ட ஐந்தாவது மணித்துளிகளில் அவன் மனைவியை, அவன் பார்க்க பிரசவ அறையிலிருந்து ஆப்பரேஷன் அறைக்கு மாற்றுகிறார்கள். அவள் வலி பொறுக்கமாட்டாமல் வலியை முகத்தில் காட்டி, உடலை நீட்டிக் கிடக்கிறாள். வண்டியில் படுக்க வைத்து இழுத்துச் செல்கிறார்கள். ஆப்பரேஷன் அறைக்கு வெளியே அவனும் அவன் தங்கையும் காத்துக் கிடக்கிறார்கள். வாழ்வு அவனுக்குக் கண்ணாம்பூச்சி விளையாட்டுக் காட்டுகிறது. இது அவளுக்குப் பிறக்கும் இரண்டாம் குழந்தை... உயிர்த்திருக்கும் முதல் குழந்தையாகவும்கூட இதுதான் இருக்க வேண்டும். தெய்வங்களை எப்படி வேண்டிக் கொள்வது? முதல் முறை கைவிரித்த கடவுளால் இரண்டாம் முறை என்ன செய்துவிட முடியும். இவனுக்கு நம்பிக்கை எல்லாம் அந்த யூனிட்டின் தலைமை மருத்துவர் பார்வதியின் மீது படிந்திருந்தது. அரை மணி நேரம் கழித்து மருத்துவர் அழைக்கிறார். அவனும் அவள் தங்கையும் ஓடிப் பார்க்கிறார்கள். ஒரு வெள்ளைத்துணியில் எடை குறைவான குழந்தையை காட்டுகிறார்கள். அவன் அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்க்கிறான் குழந்தை விழித்துக் கண்ணை மூடுகிறது. குழந்தையின் இமைகளின் அசைவுகள் இவனின் தலைமுறை வருகைக்கான பெரும் வரவேற்பாக உணர்கிறான். "நீங்க யாரு மா? அவருக்கு என்ன வேணும்? தங்கை. ‘’பாருங்க குழந்தை ஆணா? பெண்ணா?’’ வெள்ளைத் துணியை நீக்கி விட்டு அடையாளப்படுத்திக் கொள்வதற்காகக் குழந்தையைக் காட்டிக் கேட்கிறார்கள். அவன் தங்கை "பெண் குழந்தை" என்கிறாள். மீண்டும் மருத்துவர் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அழுத்தமான குரலில் "நல்ல பார்த்துவிட்டீர்களா? பெண் குழந்தை தானே? என ஒருமுறைக்கு இரண்டு முறை அவளிடம் கேட்கிறார். அவளும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள். குழந்தையை எடை போட்டுப் பார்த்தோம். ‘’குழந்தை எடை குறைவா இருக்கிறதால மேல இருக்கிற ஐ.சி.யூ வார்டில வைச்சி வைத்தியம் பாப்பாங்க. அம்மா கீழ வார்டுல இருப்பாங்க. நீங்க போகலாம்" என்று கூறி மருத்துவர் அவனையும் அவன் தங்கையையும் வெளியே அனுப்பிவிட்டார். மீண்டும் எப்பொழுது ஒலிபெருக்கி அவனை அழைக்கும் எனக் காத்துக் கிடக்கிறான். இப்போது ஒன்று உறுதியாகிவிட்டது அவன் தலைமுறை தாய்மையில் தொடங்குகிறது. அன்று மாலை 3 மணிக்குக் குழந்தையைப் பார்க்க ஐ.சி.யூ விற்குள் அவனை அனுமதித்தனர். உள்ளே செல்கிறான் குறைமாத குழந்தைகளை வைத்துப் பாதுகாக்கும் வெப்பமூட்டிப் பெட்டி, அறை முழுதும் நிறைந்திருக்கின்றன. எல்லாப் பெட்டிகளுக்குள்ளும் குழந்தைகள் கைகால்களை அசைத்துக் கொண்டு படுத்திருக்கின்றன. அவன் இதுவரையில் கேள்விப்பட்டுப் பார்த்திராத அறை இது. இப்பொழுதுதான் முதல்முறையாக அந்த அறையைப் பார்க்கிறான். அத்தனை வியப்பை உண்டாக்குகிறது குழந்தைகள் நிரம்பிய அந்தப் புதிய சூழல். வெப்ப மூட்டிப் பெட்டிக்குள் குழந்தை படுக்க வைக்கப் பட்டிருக்கிறாள். எல்லாக் குழந்தைகளின் கைகளிலும் பெற்றோர் பெயர் எழுதப்பட்ட அடையாள அட்டை மாட்டப்பட்டிருக்கிறது. பார்த்துக்கொண்டே போகிறான்; இதோ! இவன் குழந்தை இதுதான் என அடையாள அட்டைபெயர் சொல்லுகிறது. அடையாள அட்டை மட்டும்தான் இது இவர்கள் குழந்தை என்பதை அடையாளப்படுத்துகிறது. மற்றபடி குழந்தைகள் ஒன்றாகவே இருக்கிறார்கள். அவன்தன் குழந்தையைக் கண்ணாடி அடைப்புகளால் ஆன வெப்பமூட்டிப் பெட்டிக்குள் பார்க்கிறான். இரண்டு குழந்தைகளோடு மூன்றாவது குழந்தையாகப் படுத்திருக்கிறாள். கழுத்து நேராக இருப்பதற்காகக் கழுத்துக்குக் கீழே கட்டுத்துணியைச் சிறிதாக உருட்டி மெத்தென செய்து தாங்கலாக வைத்திருக்கிறார்கள். அப்போதும் குழந்தை கைகால்களை நீட்டி சோம்பல் முறித்தவாறு கண்ணை விழித்து அவனைப் பார்க்கிறது. மருத்துவர் வருகிறார். "சார் இவள் என் குழந்தை" என்று சோக முகத்துடன் மூன்றுக்குழந்தைகளில் அவன் குழந்தையைக் கைநீட்டிக் காட்டுகிறான். மருத்துவர் குழந்தையைப் பார்த்துவிட்டு "அப்சர்வேஷன்ல வச்சிருக்கோம்; நல்லாதான் இருக்கு; நான்கு அவுன்ஸ் பால் கொடுத்து இருக்கோம்; இன்னும் ஒருநாள் பார்த்துட்டு அம்மாகிட்ட குழந்தையைக் கொடுத்து விடுவோம்" என்கிறார். கைகூப்பி மருத்துவரை வணங்கிவிட்டு வெளியே வருகிறான். வெளியே வந்தவன் வலப்பக்கம் திரும்பிப் பார்க்கிறான். அறை வாசலின் மேல் 'பால் வங்கி' என எழுதப்பட்டிருக்கிறது. விழிகள் பால் வங்கி என்ற பலகையின் மீதிருந்து அகல மறுக்கிறது. அந்தச் சொற்களில் இருந்து வெள்ளைக் கருணை வழிந்து ஒழுகுவது அவன் கண்களுக்கு மட்டுமே தெரிகிறது. அப்போது தான் அவன் குழந்தை குடித்த நான்கு அவுண்ட்ஸ் பால் எங்கிருந்து வந்தது எனப் புரிந்தது அவனுக்கு. பால் வங்கியின் வாசலில் போடப்பட்டிருக்கும் பலகையில் பல பெண்களும் ஒன்றிரண்டு ஆண்களும் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே சென்று அவர்களுள் தானும் ஒருவனாக அமர்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் ஒரு இளம் வயது பெண்மருத்துவர், பால் வங்கி அறைக்கு உள்ளிருந்து வருகிறார். வந்தவர் அங்கே அமர்ந்து இருப்பவர்களுக்கு வணக்கம் சொல்லி பெண்களைப் பார்த்துக் கேட்கிறார். "எல்லாரும் தினமும் உங்க மார்பகத்தில் இருந்து பால் பீச்சி எடுக்குறீங்களா?" சில பெண்கள் "எடுக்கிறோம் டாக்டர்" எனப் பதில் கூறுகின்றனர். அங்கே அமர்ந்திருப்பவர்களில் பலர் புதிதாக வந்தவர்கள். சிலர் தினமும் வருபவர்கள். புதிதாக வந்திருக்கும் ஆண்களிடமும், பெண்களிடமும் அந்த மருத்துவர் மார்பகம் பற்றியும், குழந்தை பிறப்பிற்குப்பின் பால் எப்படி மார்பகங்களில் சுரக்கிறது என்பது பற்றியும், குழந்தைக்கு ஏன் தாய்ப்பால் அவசியம்? என்பது பற்றியெல்லாம் விளக்குகிறார். "ஐ.சி.யூ ல இருக்கிற உங்கள் குழந்தை பால் குடிக்கிறாங்கல, அந்தப் பால் எங்கிருந்து எப்படி வந்ததுனு உங்களுக்குத் தெரியுமா? யாரோ ஒரு தாய் தன் குழந்தைக்கு ஊட்டிய பால் போக மீதமுள்ள பாலைப் பீச்சி பால் வங்கிக்குக் கொடுக்கறாங்க. நாங்க அந்தப் பாலை வாங்கிவந்து உங்க குழந்தைக்குக் கொடுக்கிறோம். நீங்களும் உங்கள் மார்பில் சுரக்கிற பாலைப் பீச்சி வார்டில் இருக்கிற நர்சுக்கிட்ட கொடுத்தீங்கன்னா அவங்க நேர பால் வங்கியில கொடுத்துடுவாங்க. அந்தப் பாலையும் பாதுகாத்துப் பால் இல்லாத மற்றக்குழந்தைக்கும் கொடுக்க வசதியா இருக்கும். இரத்தானம் போல, கண் தானம் போலத்தான் தாய்ப்பாலைத் தானம் செய்றதும்." எனக் கூறிமுடிக்கிறார். அவனுக்கு இது புதுமையாக இருக்கிறது, வியப்பாகவும் கவனமாகவும் கேட்கிறான். குழந்தையைப் பிரிந்து மருத்துவமனையில் தன் குழந்தைக்குப் பாலூட்ட முடியாமல் இருக்கும் தன் மனைவியிடம் இதனையெல்லாம் சொல்லிப் புரிய வைத்து அவள் மார்பகத்தில் சுரக்கும் பாலையும் பீச்சி பால்வங்கிக்குக் கொடுக்க சொல்ல வேண்டும் என்ற சிந்தனையோடும், தன் குழந்தை குடித்த உயிர்ப்பால் யாரோ ஒரு கருணை மிகுந்த தாயின் மார்பகத்தில் சுரந்ததையும் நினைத்து வியக்கிறான். இத்தனை காலம் உள்ளத்திலிருந்த முலை பற்றிய குறியீட்டு எண்ணம் சுக்கல் நூறாய் உடைந்து விழ, அவன் குழந்தைக்குமான உயிர்ப்பால் எங்கோ ஒரு தாயின் முலையில் இந்நேரம் சுரந்து பீறிட்டிருக்கும் என்ற நம்பிக்கையோடு மருத்துவமனை விட்டுக்கடந்து போகிறான்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.