Gandhidurai
சிறுகதை வரிசை எண்
# 113
உனக்குத் தேவையா…?
என்னவோத் தெரியில? மனசு அமைதியா இருக்கு. என்னடா, நமக்குத்தான் எந்தப் பிரச்சனையுமில்லையேன்னு நினைச்சுட்டு இருந்தேன்.
எதையாவது எங்கயாவதும் பொருளையோப் புத்தகத்தையோப் பேனாவையோச் செல்போனையோ வச்சுட்டு. வச்சயிடம் தெரியாமத் தேடவேண்டியது. இப்படியே எதுனாலும் தேடுறப் பொழப்பாப் போச்சுன்னு அழகு மனசுக்குள் புலம்பினான்.
இரவு மணி எட்டுயிருக்கும்… ரிங்ரிங்ன்னு கைப்பேசி சிணுங்கிய வேகத்தில் எடுத்தேன்.
இல்லாட்டிச் செல்லுக்குக் கோவம் வந்துரும். நான் எவ்வளவு நேரம்தான் கூப்பிடுறது. அப்படி என்னதான் வேலயோன்னு சொல்லுவா. சண்டை போடுவா… கூப்பிட்டது சரஸ்வதி?
அய்யோ! எங்கின வாரன்னுத் தெரியலயே…ன்னு தனக்குத்தானே புலம்பிக்கிட்டே எடுத்து ஹலோ. ஹலோ; எங்கின வாரன்னுக் கேட்டதும் பைப்பாஸ் விட்டு கீழே வண்டி இறங்கிருச்சு. வேகமா வாங்கன்னு… சொல்லிட்டு கட் பண்ணிட்டா சரஸ்வதி.
“ஆக்டிவா” எடுத்துட்டுக் கிளம்பிட்டேன். பாத்திமா காலேஜ் ஸ்டாப்பில வந்து “ஆகடிவாவில்” அமர்ந்த கோலத்தில்… தலயிலேச் சூட்டியிருந்தக் கிரீடத்தை (தலைக்கவசம்) எடுக்காமல் தெக்கு முகமாகப் பார்த்து நின்னுட்டு இருந்தேன்.
கிழக்கயும் மேற்கயும் மதுரை டூ திண்டுக்கல், சேலம், கோவை, பெங்களூர் போறப் பஸ், கார், மோட்டார் பைக், ஆட்ட நாயகர்களின் ஆட்டோ, விதவிதமான லாரிகள், சும்மா ஒண்ணு ரெண்டு சைக்கிள் போயிக்கிட்டும் வந்துகிட்டும் இருக்கு.
இரவு மாதிரியாத் தெரியல… வண்டி நடமாட்டம், மனித நடமாட்டத்தைக் குறைச்சிருச்சுன்னுச் சொல்லனும். பாத்திமா கல்லூரி பஸ் ஸ்டாப்பில்ல என் மனைவியின் வருகைக்காகக் காத்திருந்தேன். பாவம் பசியோடு வருவாள். பசிப் பார்வையிலத் தெரியும்…. எல்லா பஸ்சும் நிற்கும் நிறுத்தமாக்கும். மதுரையில இருக்கிறப் பெண்கள் கல்லூரிகளில் முக்கியமானது. கிராமத்துப் பிள்ளகப் படிக்கத் தொடங்கப்பட்டு அரை நூற்றண்டைக் கடந்த கல்லூரி… காலயில் அவ்வளவு நெருக்கடியானப் போக்குவரத்து மிக்க சாலை.
அஞ்சு நிமிசத்துக்கு ஒரு மோபசல் பஸ் நின்னுப்போனது. இன்னும் என்னவள் வரக்கூடிய பஸ் வரல.
என்னடாயின்னும் காணமேன்னு… பஸ்சப் பாத்துட்டேயிருந்தேன். ஈரோடு பஸ் நின்னதும்.
அப்பாடா. பஸ் வந்துருச்சு… மெல்ல பஸ் படி விட்டு இறங்கி சரஸ்வதி என்னை நோக்கி வருவதற்குள்.. காக்கிச் சட்டைப் போட்ட மனிதர். என்னை உற்றுப் பார்த்தார்.
சார்! நல்லாயிருக்கீங்களான்னுக் கேட்டார். நான் உற்றுப் பார்த்தேன். எனக்கு அடையாளம் தெரிந்து சின்னப்பாண்டி.
அவ்வளவு தான் போங்க. ரொம்ப நாளாத் தேடியப் பொருள் தானே கிடைத்தது போன்ற மகிழ்ச்சி.
இருவருக்கும் கோடி ரூபாக் கிடைத்தாலும் வராதப் புன்னகையாக்கும்.
அவர் என் கைகளைப் பற்றிக்கொள்ள, நான் அவர் கைகளைப் பற்றிக் கொள்ள அவர்; சார் எப்படியிருக்கீங்கன்னு…. கேட்க.
என்னய்யா சின்னப்பாண்டி எப்படியிருங்கண்ணுக் கேட்டுட்டு… ரெண்டு பேரும் குசலம் விசாரிக்கிறோம். என் மனைவி இருவரையும் பார்த்தாள்.
அமைதியாகப் பசி நேரத்தில் இது தேவையா?ன்னுப் பார்வையில் பேசினாள்.
நானும் பார்வையிலேயே சிணுங்கினேன். செத்தப் பொறுப்பான்னு? என்ன சின்னப்பாண்டி,
நானும் பாத்திமா காலேஜ்கிட்ட வரும்போதும் போகும்போதும் உன்னயத் தேடாத நாள் இல்ல…? உங்க ஆட்டோ ஸ்டான்டில்ல… யாரும் சரியாப் பேசமாட்றாங்க. நானும் பல தடவ வந்து கேட்டிருக்கிறேன். யாரக் கேட்டாலும் பதில் வராது. சின்னப்பாண்டியா? ஆளப் பார்க்க முடியல. நைட் வருவார். நைட் பத்துமணிக்கு கேட்டா… இன்னும் வரல.
கேட்டா, எப்பயாச்சும் நினைச்சுக் கூடிப் பதில் சொல்லுவாங்க. சின்னப்பாண்டி குறுக்கிட்டு,
இடையில ரெண்டு ஒருதரம் உங்கள ஒருத்தர் தேடி வந்தாருன்னுச் சொல்லுவாங்க சார். எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கும். நம்மள யாரோ தேடுறாங்க. எதுக்குன்னுத் தெரியல? ம்… நம்ம இருக்கும்போது வரட்டும்ன்னு அப்படியேப் போயிருவேன் சார். நல்லாயிருக்கீங்கல்ல சார். பிள்ளக்குட்டி எல்லாம் நல்லாயிருக்கனும்.
நம்ம யாருக்கு கெடுதல் செய்து இருக்கோம்.
சார், இன்னொரு நாள் பாப்போம். தங்கச்சி நிக்கிதுன்னு... சொல்லவும் சரின்னு.
சின்னப்பாண்டிப் பார்ப்போம்ன்னுச் சொல்லிட்டு ‘ஆக்டிவாவிற்கு உயிர் கொடுத்தேன்’.
மனைவி வண்டியில ஏறும்போதே யார்ன்னுப் பார்வையிலேயே கேட்டாள். அடுத்து எப்படிப் பழக்கம்? யாரும் ரோட்டுலப் போயிறக் கூடாதே?ன்னு இழுத்தாள். வண்டியோட்டும் கவனத்தில் மறுமொழி பேசாமல் அமைதி காத்தேன்.
வண்டி வீட்டின் முன் நின்றதும்… ஆரம்பித்தால் யார் அவர்?
உங்கச் சொந்தக்காரறா?ன்னு இழுத்தா? எனக்குன்னா முகம் நெளிந்தது.
எனக்குச் சிரிப்பை அடக்க முடியல சிரித்தேன். ஏங்க நான் என்ன கேட்டேன்னு இப்ப எதுக்குச் சிரிக்கிறீங்க… சரஸ்வதி முறைச்சா?
உடனே நான் அது ஒரு பெரிய கதை. எப்படியும் பத்து பதிமூணு வருசமிருக்கும் என்றேன்.
சரஸ்வதி எந்தக் கதையும் வேணாம் சாமி ஆளவிடுங்க. எனக்குப் பசிக்குது சாமி சாப்பிடப் போறேன்னு சரஸ்வதி வீட்டிற்குள் போயிட்டா?
பழய விசயத்தை நெனச்சேன். எனக்கு மீண்டும் சிரிப்பு வந்தது?
எவ்வளவு கோமாளியா இருந்துருக்கேன். “சேவையின்றக் கிறுக்கு” மனுசனா ஆட்டிப்படைச்ச நேரம். யார் சொன்னாலும் கேட்கல?
ஓய்வு நேரத்தில் செய்வது அல்ல சேவை? சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம்… “சேவை செய்ய வேண்டுமென்று” எண்ணியிருந்த காலம்.
தமிழய்யாத் தண்டபாணி அறிவுறுத்தியது. படிக்கிற காலத்தில அதற்கான வாய்ப்பு மாதிரியாகக் கூட இருக்கலாம்.
நான் காலையும் மாலையும் தினந்தோறும் பரவை டூ தெப்பக்குளம் போய்வரும் ரோடுதான்.
எப்போதும்போலக் காலையில ஏழே முக்காலுக்கு வீட்ட விட்டுக் கிளம்பி வரும்போது பாத்திமா காலேஜ் பஸ் ஸ்டாப்பைக் கடந்து போகணும். நடு ரோட்டுல “வழிவிடும் நரசிங்கப் பெருமாள”க் கும்பிட்டுட்டு நெடுசாண் கிடையாக விழுந்து கிடக்கிற மாதிரி “ரெண்டு பாட்டியும் ரோட்டில கிடந்தார்கள். யாரோ டூவிலர்காரன் ரோட்டைக் கிராஸ் பண்ணும்போது நடுரோட்டில் தட்டி விட்டுப் போய்விட்டான். யாருன்னு தெரியல?
காலயில எட்டு மணிக்குப் பிசியான நேரம். கார் வண்டி நடக்கிறக் கல்லூரிப் பிள்ளைகள் விலகி விலகிப் போறாங்க.. “ஆனா ரெண்டு கிழவியும் அப்படியே கிடக்கு” யாரும் கிட்டப் போகல. பயம் கிழவிகச் செத்துட்டா? ஆக்சிடெண்ட் கேஸ்? போலீஸ்சுகக் கேக்கிறக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. உதவமனமிருந்தும் பயம்…. நமக்கு எதுக்கு வம்பு…
ஒருக்கிழவி கையில மஞ்சப் பையில துணிமணிகள் யிருக்கு… அப்பக் கட்டைப்பை ஏது? துணிப்பை தான். துணிக்கடைப் பெருகிப்போச்சு? விளம்பரம் பையிலப் பவனி வருது.
ஆனா, இன்னக்கி மாதிரியா ரோடு அன்னைக்கி கிடையாது. வழிவிடும் பெருமாளே. தரையில மழைக்கும் தண்ணிக்கும் வெயிலுக்கும் தன்னந்தனியாத் தன்னைப் பாதுகாத்துக்கிட்டு அமைதியா இருந்தார்.
இப்ப அப்படியில்ல. நல்லாச் சுகமா இருக்கிறார். காத்தாலேயே, பெருமாள் ரொம்பப் பிசியாயிருக்காரு. அத்தனப்பேரும் சொல்லுறக் குறையைத் தான் கேட்பாரு? சனிக்கிழமக் கேட்கவே வேண்டாம். மறிக்க முடியாத அளவுக்கூட்டம். உழைக்காமச் சம்பாரிக்கணும். பேச்சுத் தந்திரத்தில் தங்கம் எடுக்கணும். முதல் போடாம இலாபம் நூறு மடங்கு வேணும்.
இதில ரெண்டு மூணு பேர் பூணூல் போட்டு நெத்தியிலப் பெரிய ராமத்தைப் போட்ட அய்யர்க… அதுவும் வலுக்கத்தல வேறயா? நாமம் உச்சி மண்டை வரைக்கும் போகும். ரெண்டு தண்டவாளத்துக்கு இடையே தார் ரோடு கணக்கா செந்தூருக்கம். இதுல நல்லா ராமர் பச்சையில பஞ்சக்கச்சம் வச்சுக் கட்டியிருப்பாக… பாத்தாலே ஸ்ரீரங்கத்துல இருந்து வந்துருக்காங்களோன்னுத் தோணும். அந்த அளவு ஆச்சார அனுஷ்டானம். ஆறுகாலப்பூசை… சாமிக்கி நைவேத்தியம் பண்ணுறாங்க.
ரெண்டு மூணு கடைகள், பூக்கடை வேற இப்படியாக மிக வளர்ந்த நகருக்கான பெரிய கடவுளாக மாறிப்போனார். “வழிவிடும் நரசிங்கப் பெருமாள்.” இதுக்கு காரியக் கமிட்டிகள், இப்படியான இத்தியாதீகள் எல்லாம் வளர்ந்து பரிபூர்ணத்துவத்தை எட்டியிருக்கிறார்.
சாத்சாத் “நரசிங்கப் பெருமாளே” இப்படியாகச் “சடாரி துளசித்தண்ணீ” வளர்ந்துட்டார் பெருமாள்.
என்ன அழகு?
ரோட்டுலக் கிடக்கிறக் கிழவிய விட்டுட்டியேன்னு கேக்குது மனசு.
ரெண்டு கிழவியும் நட்ட நடுரோட்டில் கிடக்கிறாக. பொய்யல்ல நெசமேதான். யாரும் கிட்டப் போகல. கதை முடிஞ்சு போச்சு? கூட்டத்தில் பாவிப் பறப்பான். மோட்டார் பைக்கில பையப்போனா என்ன? அவன் கண்ணக் காக்காக் கொத்த. கட்டையிலப் போக. யாரோ காலயிலக் கிழவிக. யார் முகத்தில முழுச்சாகலோ தெரியல? இங்கினப் பேச்சுக்கு பஞ்சமில்ல.
ஆட்டோகாரர்கள் யாரும் போயித் தொடல. நான் பாட்டுக்கப் போயிருக்கணும். விதி வலியது. என் காலிஃபரை நிறுத்திட்டு, வேகமாய் போய் எட்டிப் பார்த்தேன்.
ஏய் யாராச்சும் வாங்கப்பா?ன்னு கூப்பிட்டேன். இருவரும் கிடப்பது ஒரு கணம் மனதைப் பதறவைத்தது. இன்னியாரம் கடவுள் கூப்பிட்டு இருப்பாறோன்னு தோணுச்சு. மற்ற யாருக்கும் அதப் பாத்துட்டே, நடந்து நடந்து, கடந்து கடந்து போனார்கள்… வந்தார்கள்.
மீண்டும் அய்யா, யாராவது வாங்கத் தூக்கி ஓரமா உக்கார வைப்போம்ன்னு… கேட்டுப் பார்த்தேன். யாரும் முன் வரல? யாரோ ஒருவர் குறுக்கிட்டார். உனக்கு இது தேவையா? போய்யா? நாங்க இங்கின இருக்கவுகப் பாத்துட்டே இருக்கோம். எங்களுக்குத் தெரியாதா? என்னம்மோ பெரிசாப் பேசுற? போவீயா? உம் வேலையப் பாத்துட்டு?
இன்னொரு குரல், யோவ், உனக்கு எதுக்கு வெட்டி வேலை. போயி, உம் வேலையப்பாரு. ஆட்டோகாரர் சொன்னார்.
உச்சச் உச்சுன்னு, அய்யோ பாவம் யாருன்னுத் தெரியலயேன்னுப் பெட்டைப் புலம்பலும். நெட்டை மரங்களுமாக நின்றார்கள். இருந்தார்கள். ஆட்டோகாரரிடம் போய் எனக்குத் தெரிந்த ஆட்டோகாரர் இருக்கிறார்.
அவர் பேரு ஏ.பி.நாகராஜன் தெரியுமான்னுக் கேட்டேன்.
ஒருவர் சார், அவர் ராத்திரி சவாரி முடிச்சிட்டுப் போயிட்டாரேன்னுச் சொன்னார்.
அண்ணே, யாராச்சும் வாங்க. பாட்டிக்கு முதலுதவி செய்யப் பக்கத்தில இருக்கிற டாக்டர்கிட்ட தூக்கிட்டுப் போவோம்.
சார், உங்களுக்கு ஏன் வீண் வம்பு. போங்க சார். போலீஸ் கேஸ்னு அழையனும்.
ஒரு குரல் அன்னியோன்யமாகப் பேசினார்.
அது சின்னப் பாண்டியின் குரல்.
ஆஸ்பத்திரி வரைக்கும் வாங்க… நான் வாத்தியார். அடையாள அட்டையைக் காட்டினேன். ‘யாரும் அதைப் பாக்க முன்வரல.’
நாகராசத் தெரியும்னு வேறச் சொல்லுறீங்க… ரெண்டு மனநிலையில் வந்தார்.
சார், உங்களுக்காக வர்றேன்.
ரெண்டு மனித உருவங்கள் ரோட்டின் மையத்தில் ஆஸ்டாங்கமாக விழுந்து கிடக்கிறார்கள். பஸ் விலகிச் செல்கிறது. அவர் அவருக்கு அவரவர் வேலை முக்கியம்.
நானும் சின்னப்பாண்டியும் அவர்களைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றினோம். யாரோ நாடியப்பார்த்து… உசுரு இருக்குன்னு சொன்னாங்க.
அப்ப எனக்கு உசுரு வந்தது.
யாரோ… கடவுள் காப்பாத்துவார்… “உயிருக்கு மோசம் வராது…” அங்ஙன பெருமாள் பேசாமப் பாத்துட்டு இருந்தார். அவர் வரமுடியாம? நம்மள அனுப்பி இருக்கிறார்ன்னு நானா நினைச்சுக்கிட்டேன்.
ஆட்டோ கிளம்பியதும்.
என்னுடைய காலிபரில் ஆட்டோ பின்னாடியே போனேன்.
ஆட்டோ “ராசி ஆஸ்பத்திரி” முன்நின்றது.
நானும் பின்னே போய் நிறுத்தினேன்.
சார், தூக்குங்க. ஆஸ்பத்தியில நர்ஸ் உதவியாளர் வந்தும் யார்? பாட்டிக்கு என்னவாம்?
அடிபட்டுட்டாங்கன்னுச் சொன்னேன். அய்யோ! இது போலிஸ் கேஸ்.
யாரோ இடிச்சுட்டுப் போயிட்டாங்கல.
அப்ப ஜி.ஹெச்க்கு போங்க. இங்கப் பார்க்க முடியாது.
சிஸ்டர், சார், “ஆக்சிடண்ட் கேஸ் பிரச்சினை வரும்.” போலீஸ் கேஸ் நேரே ஜி.ஹெச்சுக்கு கொண்டு போங்கன்னுக் கத்தியே நர்ஸ் பேசினார்.
மொதல்ல ஆஸ்பத்திரிய விட்டு வெளியே போங்கன்னு கழுத்தப்பிடித்து தள்ளாதக் குறை.
சின்னப்பாண்டி ஆரம்பித்தார்.
சார், இதுக்குத்தான் வேண்டாமின்னுத் தலயில அடிச்சிக்கிட்டேன். கேட்டாத்தானே.
சிஸ்டர் டாக்டா இருக்காறா?
டாக்டர் பன்னிரெண்டு மணிக்கு மேலே வருவார்.
அசோக் நகர்ல இருக்க டாக்டர் கோபிநாத். என் மச்சான். போன்ல பேசிட்டு.. வர்றேன்னு போனாச் சிஸ்டர் வேகமா வந்து,
நீங்க என்ன செய்றீங்க…
தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரி லெச்சரர்.
வாத்தியாரும்மா, அடையாள அட்டையை நீட்டினேன்.
வாங்கிப் பார்த்தார், அங்கயா வேலப் பாக்குறீங்க. சிஸ்டர் முகத்தில் ஒரு பிரியம்.
ரெண்டு பேருக்கும் வேகமா பி.பி., பிரசர் பார்க்கப்பட்டது.
சார், மயக்கத்துல இருக்காங்க.
அவசரப்படாதீங்க. காலையில சாப்பிட்டிருக்காது போல,
ஊசியப் போட்டு ரெண்டு பேத்துக்கும் குளுக்கோஸ் போடட்டும்மாங்க சார்ன்னு கேட்க.
போடுங்கம்மா, என்னமாச்சும் செய்யுங்க. என்னத்தையாச்சும் போட்டு ஆள எழுப்பும்மா மொத.
சார், பணம் இருக்கா?
வாங்க இப்படியே போட்டுப் போயிருவம். எனக்குக் கூட வாடகை வேண்டாம். சலிப்பா சொன்னார் சின்னப்பாண்டி.
சின்னப்பாண்டி ஒன்னும் நடக்காது. நான் இருக்கேன்.
சார், நமக்குத் தேவையா? ஆபிஸ் போறத விட்டுட்டு.
இரு சின்னப்பாண்டி
இன்னைக்கு சி.எல். சொல்லிட்டுப் பேசலாம்.
அப்பத்தான் செல்போன் வந்த காலம். என்னிடம் செங்கக்கட்டி நோக்கியா இருந்தது.
அலுவலகத்தில் ஒருநாள் லீவு சொல்ல, அழைத்தேன்.
கருப்பணன் எடுத்தார்.
சார் வணக்கம்? நான் அழகுன்னுப் பெயரைச் சொல்லவும், கூடுதலா வணக்கம் சார், அய்யாச் சொல்லுங்கன்னு;
இன்னைக்கி எனக்கு சி.எல்.ன்னு சொல்லி முடித்தேன்.
மீண்டும் சின்னப்பாண்டி இது நமக்குத் தேவையா?
இருங்க… இங்கன ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் ஏடிஎம் எங்க இருக்குன்னுக் கேட்டேன்.
சார், ஏ.பி.டி. பார்சல் சர்வீஸ் பெட்ரோல் பங்குக்கிட்ட இருக்குசார்.
பல முறை ரோட்டுலப் போய் வந்துருக்கேன். ஆனா; ஞாபகம் வரலன்னுச் சொல்லிட்டு… சின்னப்பாண்டி இங்க இருங்க. நான் போய் பணத்தை எடுத்துட்டு வர்றேன்.
சார், நீங்க பாட்டுக்கப் போயிட்டீங்கன்னா சார். நான் பிள்ளக்குட்டிக் காரன். வாடகை கூட வேண்டாம். என்ன ஆள விட்டாப் போதும்.
அவரின் நம்பிக்கைக்கு என்னோட பையையும், சாப்பாட்டுப் பையையும் செல்போன் எல்லாத்தையும் ஆட்டோவில் வச்சுட்டு பாத்துங்க சின்னப்பாண்டி என்றேன்.
சார்… உங்கள நம்பாம இல்ல…?
ரெண்டு பேருக்கு ஊசி போட்டார்கள். குளுக்கோஸ் ஏறிக்கிட்டு இருக்கு. அதுக்குள்ள நான் போயி பணம் எடுத்துட்டு வந்துருவேன்.
நர்ஸ்சிங் ஹோம்லப் பெரியதாகக் கூட்டமில்ல..
கொஞ்சம் கூடுதல் விபரம் தெறிந்த நர்ஸ். சார் வாங்க சார், பாட்டிக முணங்குதுகன்னு என்னைக் கூப்பிட்டார்.
சார், நீங்க என்ன வேலப் பார்க்கிறீங்க. அடுத்த கேள்வி நீங்க உண்மையிலேயே டாக்டர் மு.கோபிநாத் மச்சினன் தானா? இந்தப் பாட்டிய நீங்க இடுச்சிட்டீங்களா?
இல்லப்பா, நான் இடிக்கல. நான் வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கேன்.
ரெண்டு பேரும் அரை மயக்கத்துல இருக்காங்க…
ஒன்னும் இல்ல… இப்ப எந்திரிச்சுடுவாங்க சார்?
இதுக்கு பணம் யார் தருவா? அவுகப் பிரச்சனை.
சிஸ்டர் நான் தாரேன்.
அப்ப ஒன்னு செய்வோம். ஏன்? ரெண்டு பேத்துக்கும் இன்னொருப் பாட்டில் போடுவம். அப்பத்தான் தெம்பு கிடைக்கும்.
ரெண்டாவது பாட்டில் இறங்கிட்டு இருக்கும் போதே கண் முழித்தாள் ஒரு கிழவி.
நான் எங்க இருக்கேன். வண்டிக்காரன் தள்ளிவிட்டுப் போயிட்டான். சுயநினைவு வந்து திட்டினாள். இங்க எப்படி வந்தேன். முனங்கள் அதிகமாக சத்தம் வேற.
அய்யோன்னு அழுக. கூட வந்த கிழவியத் தேடுது.
இதுக்குள், நானும் சின்னப்பாண்டியும்...
சார், வாங்க டீக்குடிப்போம்ன்னு போய்ட்டோம். ரெண்டு மடக்கு உள்ள போயிருக்கும்.
நர்ஸ் வெளியே வந்து, அழகு சார் பாட்டி கண் முழிச்சுயிருச்சுன்னுக் கூப்பிட்டார்.
சத்தம் கேட்ட மறுநிமிசமே… ரெண்டு கெட்ட வார்த்தையை உதிர்த்தார் சின்னப்பாண்டி.
சார், நீங்க போயிப் பாக்க வேண்டாம். தப்பா போயிரும். எனக்கு உங்களத் தெரியும். உங்கள அவங்களுக்குத் தெரியாது. வம்பாப் போகும்.
முன்னப்போயி… கேட்டுட்டு, வீட்டு அட்ரஸ் வாங்குறேன். நீங்க மெதுவா வாங்கன்னுச் சொன்னார். உலகம் தெரிந்த மனுசன்னு சின்னப்பாண்டிய நினைத்துக்கொண்டேன்.
நமக்குப் புத்தகக் கல்வி, உலகியல் கல்வி குறைவுதானே.
கொஞ்ச நேரம் இருங்க. நான் போயிட்டு உங்களக் கூப்பிடுறேன். இதுக்குள்ள ரெண்டாவது பாட்டியும் எழுந்துவிட்டாள்.
இருவரும் சேர்ந்து நகை, தோடுகளைத்தான் முதலில் தடவிப் பார்த்தும், பையையும், பர்ஸ் எல்லாம் சரிபார்த்துட்டு, யார் இடுச்சவன்.
இடித்தவன ஏக வசனத்தில் பேச, ஆஸ்பத்தரியிலச் சத்தம் போடக் கூடாதுன்னு நர்சு சொல்ல,
“வேலியிலப் போற ஓணான, வேட்டிக்குள்ளத் தூக்கி விட்டக் கதை மாதிரியின்னு” தேவையா? உனக்குத் தேவையா? அழகு வேணும் வேணும் “சேவை யம்முள சேவைன்னு” நினைச்சுக்கிட்டேன்.
நானாப் போயி, பாட்டி முன்னாடி நிக்கல. யார்றா? இவன்தான் மோட்டார் வண்டியில இடிச்சவனா?
எனக்கு சர்வமும் அமைதியானது. ஆட்டோக்காரர் நர்ஸ் இருவரும் சமாதானம் செய்கிறார்கள். ரெண்டு கிழவியும் சத்தக்காடு போடுகிறாளுக.
சார், இந்தப் பொம்ளகள, இங்ஙண விட்டுட்டுப் போவோம் சார்.
இவுக எங்க ஏறியா. நடந்து போகட்டும். இந்தப் பேச்சுல்ல? கிழவி ரெண்டுபேரும் பேசுறாங்க. வாங்க சார் போவம்ன்னுச் சின்னப்பாண்டி அழைத்தார்.
நர்ஸ் சார் போயிறாதீங்க? எங்களுக்குப் பிரச்சினையாயிரும். நாங்கப் பணம் கட்டனும், பணத்துக்கு எங்க சம்பளம் போயிரும். “பில் போட்டு” அதற்குள் என் கைக்குள் திணித்தாள்.. சிஸ்டர் பணத்தைக் கட்டிட்டேன்னுச் சொன்னேன்.
சார், நீங்க கோபிநாத் சாரச் சொன்னது நாளதான் எடுத்துக்கிட்டோம்.
சார், கிட்டப் போன் பண்ணிக்கேட்டோம். ஆமான்னும், தங்கச்சி வீட்டுக்காரர்ன்னுச் சொல்லிட்டார் சார். மருந்துக்கு மட்டும் பணம் வாங்கியிருக்கிறோம். கிழவிகள நடந்து போங்கன்னுச் சொல்லிட்டுக் கோபத்தில சின்னப்பாண்டி வெளியே வந்து ஆட்டோவில் அமர்ந்து கொண்டார்.
சின்னப்பாண்டியச் சமாதானம் செய்து வாய்யா. நம்ம பிள்ளக்குட்டிக்கு யார் யாரோ “கடவுள் காப்பாத்துவான்”.
சார், வேலைக்கிப் போறத விட்டுட்டு. கடவுளாக் காப்பாத்துனார். “போங்க சார், விவரமில்லாத ஆளு நீங்க.” என்னிடம் கோவித்துக் கொண்டார்.
அப்ப, கஞ்சாக் கருப்பு நடிக்க வரல. அசல் பேச்சு நடை உடைப் பாவனை பாடிலாங்குவேஜ் எல்லாம் நடிகர் கஞ்சாக்கருப்புவே.
அங்கின, பெருமாளோடப் பத்துநூறு பேருக்கு மேல இருக்கும். யாராது கிட்டப் போனாங்கலா? நீங்கப் பாட்டுக்க போறத விட்டுட்டுக் காலையில யார் முகத்தில முழிச்சீங்க. தெண்டம் ஆயிரம் ரூபா… இது தேவையா உங்களுக்கு.
பேசிக்கிட்டே என்னையும் அரை நாள் வேலயக் கெடுத்துட்டீங்க.
யார் முகத்தில முழிச்சேன்னு யோசிச்சேன்.
எப்பயும் காலையில, சரஸ்வதி முகத்தில. எதுவாக வேணாலும் இருந்துட்டுப் போகட்டும். கிழவிகளை ஆட்டோவில் ஏற்றினோம்.
ஆட்டோ கிழவிகளின் வீட்டு வாசலில் போயி நின்னதும்
கிழவி மருமகப் போட்டச் சத்தத்தில. அங்ஙணப் பத்துப் பேர் கூடிட்டாங்க. என் நிலமை இன்னும் மோசமானது.
கிழவி மகன் மிலிட்டரி மேன். வந்ததும் நெஞ்சுச்சட்டையைப் பிடித்தான். நல்ல வேல என்ன அடிக்கல. நான் சொல்லும் விளக்கத்தைக் கேட்க யாருமே தயாராயில்ல. அங்ஙண நான்தான் வண்டியில இடிச்சவனாகி ஏக வசனத்தில் ஆளு ஆளுக்குப் பேசுறாங்க.
சின்னப்பாண்டி, ரெண்டு சவுண்டு விட்டுட்டே டேய், அந்த மனுசனுக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும். வேண்டாம் வேண்டாம்ன்னுச் சொன்னேன். சார், கேட்டீங்களா.
சின்னப்பாண்டி நடந்த விபரத்தைச் சொல்லி விளங்க வச்சதும் தான் சமாதானமானார்கள் கிழவி குடும்பத்தினர்.
அதுவரை குற்றவாளி போல என்ன நிக்க வச்சுட்டாங்க.
எனக்கு தர்மச் சங்கடமாப்போச்சு. வேறு வழியில்லச் சமாளித்துத்தானே ஆகவேண்டும்.
டேய், உம் வீட்டுக்கு நாலு தெருத் தள்ளிதான்னுச் சொல்லி அட்ரஸ் கொடுத்தார். அங்கே தாட்டியம் செய்யக்கூடிய ரெண்டு மூணுபேர் பெயரச் சொல்லிட்டு, சார் வாங்க போவம். சின்னப்பாண்டி ஆஸ்பத்திரியில இறக்கி விடுங்க என்ன.
பையும், வண்டியும் அங்க இருக்கே.
ஆட்டோவ ஓட்டிக்கிட்டே. சார் நான் இல்லாட்டி இன்னியேரம் உங்க கதி அதோ கதிதான். எனக்கு உயிர் இப்பதான் வந்தது. மானம் மருவாதை எல்லாம் போச்சு. காசச் செலவு செய்து நமக்கு நாமே சூனியம் வைச்சுக்கிட்ட மாதிரியான நிலை.
ஆமா, சின்னப்பாண்டி என்றேன்.
கொஞ்சம்கூடப் புத்தியில்லா முட்டா… நா…ன்னுச் சாதியச் சொல்லித்திட்டிட்டு.
ஏன்டா, இவன் எப்பிடி மில்டரியில வேலப்பாத்திருப்பான். கொஞ்சமாச்சும் நாலேஜ் வேண்டாமா?
ஒரு வழியா எல்லாம் முடிய சின்னப்பாண்டிக்கு உனக்கு எவ்வளவு வேணும் என்றேன்.
அந்தா இந்தான்னு மணி பன்னிரெண்ட நெருங்கிருச்சு. சின்னப்பாண்டி, சார் நூத்திஅம்பது கொடுங்க போதும். இன்னக்கி நான் யார் மொகத்துள்ள முழிச்சேன்னு தெரியல என்றாறேப் பார்க்கணும்.
சரியாப் பன்னிரெண்டு மணிக்கு மேல் இருக்கும் இடையில் ஒரு நாள் நான் டூவீர்ல… அவர் ஆட்டோல சவாரியோட போகயிலப் பார்த்தேன். கை அசைப்பு மட்டுமே.
அதுக்குப் பின்ன இப்பப் பார்த்தது. ஆள் வேண்டுமானால் அழுக்கடைந்த நிலையில் இருக்கலாம். சின்னப்பாண்டியின் “வெள்ளை உள்ளமும் கொள்ளப்ரியமுள்ள” மனிதர். ஆனா, ஏழை. எனக்கு நூற்றி அம்பது போதும் சார். ஆனா நட்பு. அந்த ஆட்டோ ஸ்டான்லக் கேட்டிருக்கேன்.
இப்பத்தான் பார்த்தேன். மனிதநேயமும் உதவும் குணமுள்ளவர். சின்னப்பாண்டி சொன்னத நினைச்சேன். நம்ம யாருக்கு துரோகம் செய்யப் பேறாம் சார். எல்லாம் நல்லதே நடக்கும் சார்.
ராத்திரி பதினோரு மணிக்கு நானாச் சிரிச்சா வீட்ல என்ன நினைப்பாக? என்னடா, அப்பா தனியா சிரிக்கிறாருன்னு மகனிடம் கேட்டாள் சரஸ்வதி.
இது தெரியாதா? பலநேரம் அப்படித்தான் என்றான்.
நான் எதுவுமே பேசல. சின்னப்பாண்டியை நினைத்தாலே கிழவி ஞாபகம், துன்பம் கலந்த இன்பமே.
சு.காந்திதுரை,
இராஜதுரை பவனம்,
3, முத்துநகர், பரவை – அஞ்சல்,
மதுரை மாவட்டம் – 625 402
9442026738
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்