logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

இராஜதிலகம் பாலாஜி

சிறுகதை வரிசை எண் # 111


மனிதம் வயது அறுபதைக் கடந்த பாட்டி ஒருவர், தன் கன்னத்தில் கை வைத்த வண்ணம், கண்களில் வழியும் கண்ணீருடன் வானத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார். காலை பத்து மணிக்கு வேலைக்குச் செல்லும் போது மருத்துவமனை வாசலில் பார்த்த அதே பாட்டி, மாலை நான்கு மணி வரை அங்கேயே வருத்தத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்த அன்பழகன், பாட்டியின் அருகே சென்று விசாரித்தார். "பாட்டி…. என்னாச்சு? ரொம்ப நேரமா இங்கேயே இருக்கீங்க?" " ஆமாய்யா… ரொம்ப நாளாவே நெஞ்சு வலி தாங்க முடியல. அதான் ஆஸ்பத்திரிக்கு வந்தேன். டாக்டரு ஏதோ பெரிய ஸ்கேனுக்கு எழுதி கொடுத்திருக்காரு. விசாரிச்சுப் பார்த்ததுல, அந்த ஸ்கேனுக்கு மூவாயிரம் ரூபாய் தேவைப்படும்னு சொன்னாங்க. எனக்கு அந்த அளவுக்கு வசதியில்லய்யா… வலியையும் தாங்க முடியல. வலியைச் சமாளிக்க வழியும் தெரியல…" " ஏன் பாட்டி… உங்களுக்குப் பிள்ளைங்க யாருமில்லையா?" "எனக்கு நாலு பசங்கயா. என் வீட்டுக்காரர் இறந்ததும், என் பிள்ளைங்க என்னை தனியாத் தவிக்க விட்டுட்டு போயிட்டாங்க . பிறகு நான் ஒரு விடுதியில சமையல் வேலைக்குச் சேர்ந்துட்டேன். அதுல வரும் வருமானம் வீட்டு வாடகைக்கும், சாப்பாட்டுச் செலவுக்குமே சரியாப் போயிரும். இப்போ ஸ்கேன் எடுக்கற அளவுக்கு கையில காசும் இல்லையா… ஆனால் என்னால நெதமும் இந்த வலியையும் தாங்க முடியலயா…" " சரி, நீங்க வாங்க… நான் உதவி பண்ணுறேன்." " உனக்கு எதுக்குயா தேவையில்லாத சிரமம்?" "நீங்க வாங்க பாட்டி…" என்று கூறி, அப்பாட்டியைக் காரில் அழைத்துச் சென்று ஸ்கேன் செய்வதற்கான செலவைத் தானே ஏற்றுக் கொண்டார் அன்பழகன். சிறிது நேரத்தில் ஸ்கேன் ரிபோர்ட் வந்தது. அதில் அப்பாட்டிக்கு மார்பகத்தில் ஒரு கட்டி இருப்பது தெரிய வந்தது. "பாட்டி… ஸ்கேன் ரிப்போர்ட் வந்திருச்சு… மார்பகத்துல சின்னதா ஒரு கட்டி இருக்கு. ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டியது வரும். உங்களுக்கு அரசு காப்பீடு திட்டம் ஏதாவது இருக்கா பாட்டி?" "அப்படிலாம் எதுவும் இல்லையா… நீ இதுவரைக்கும் உதவி செஞ்சதே போதும்யா… பெத்தப் பிள்ளைங்களே தனியாத் தவிக்க விட்டுட்டு போயிட்டாங்க… உனக்கு எதுக்குய்யா தேவையில்லாத சிரமம்? என்று கதறிக் கொண்டு அழத் தொடங்கினார்." "என்னோட தொழிலே பிறருக்குச் சேவை செய்யறது தான் பாட்டி. நானும் ஒரு டாக்டர் தான் பாட்டி. நீங்க எதை நினைச்சும் கவலைப்படாதீங்க… உங்கள பூரணமா சுகமாக்க வேண்டியது என்னுடைய கடமை." தன்னிரு கரங்களையும் கூப்பிக் கொண்டு, அந்த மருத்துவருக்கு தன் கண்ணீரால் நன்றிக் கடனைச் செலுத்தினார் பாட்டி. முற்றும். இப்படிக்கு, திருமதி.இராஜதிலகம் பாலாஜி M.Tech புடாபெஸ்ட், ஹங்கேரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.