ஆன்றனி அரசு
சிறுகதை வரிசை எண்
# 110
பட்டம் பெரியப்பா
................................
செல்போன் சிணுங்கிகொண்டிருந்தது.அதன் ஒலி கனவில் கேட்பதுபோல இருந்தது.அது "குக்கூ" படத்தின் அவனுக்கு பிடித்த இசை.மீண்டும் மீண்டும் அந்த இசை வர...
செல்வா தூக்கத்திலிருந்து விழித்தான்.செல் இசை வந்துகொண்டேயிருந்தது.மொபைலை தேடினான்.அது போர்வையின் அடியில் மறைந்து கொண்டிருந்தது.எடுத்து பார்த்தான் .திரையில் 'வின்சி சித்தி'என்றிருந்தது."என்ன சித்தி..சொல்லுங்க..'
"மக்களே தூங்கிட்டா இருக்க..? அவன் குரல்கேட்டு சித்தி கேட்டார்கள்.
'ஆமா..சொல்லுங்க..'
'மணி சாயங்காலம் நாலு ஆகப்போவுது ,இன்னும் தூங்கிட்டு...எந்திரி கழுத....'
'ம்...சொல்லுங்க..'
'மக்க ஸ்கூல்ல இருந்து வரலியா.?...'
'வார நேரந்தான் என்ன சொல்லுங்க..'
'ஒரு ஆறுமணிபோல வீட்டுக்கு வா...பெரியப்பா கண்ணாடி ஒடஞ்சி போச்சி.நீ அவுங்கள கடைக்கு கூட்டிகிட்டு போயி புது கண்ணாடி வாங்கிட்டு வா...'
'சரி...வாறேன்.'
போனை வைத்தான்.மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது.இன்னும் சிறிது நேரத்தில் மனைவியும் மக்களும் பள்ளியிலிருந்து வந்துவிடுவார்கள்.
மனைவி டீச்சராக இருப்பதால் காலை எட்டரைமணிக்கு பின் வீடு வெறிச்சோடிவிடும்.வெளிநாட்டில் வேலை செய்து விடுமுறைக்கு வந்திருப்பவன் , காலையில் வெளியே ஏதாவது வேலை இருந்தால் முடித்து வருவான்.மதியம் சாப்பிட்டுவிட்டு குட்டி தூக்கத்தில் ஆரம்பித்த பழக்கம்,இப்போ கும்பகர்ண தூக்கமாக மாறிக்கொண்டிருக்கிறது.
சாயங்காலம் பெரியப்பா வீட்டுக்கு போனான்..பெரியப்பா வீட்டு வராண்டாவில் சேரில் அமர்ந்துகொண்டு ரோட்டை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார்.
அவனை கண்டதும்...
'வா....மோனே...ஏய் வின்சி.... செல்வகுமார் வந்திருக்கான்...'
என்று சித்தியை அழைத்தார்.
பொதுவாக அனைவரும் செல்வா என அழைக்கும் போது, பெரியப்பா எப்போதும் அவன் முழு பெயரான செல்வகுமார் என்றே அழைப்பார்.
எழுவது வயதை கடந்துவிட்ட பெரியப்பாவின் பெயர் அவனைப்போல அநேகருக்கு தெரியாது.அவரைபட்டம் என்றே அழைப்பர்.தென்தமிழக கடற்கரை கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் புனித அந்தோனியாருக்கு வேண்டுதல் வேண்டி கோவிலில் தலையில் மொட்டைபோடுவது வழக்கம். இது வழக்கமான முழுவதும் வழித்த மொட்டை கிடையாது.மொட்டை தலையில் ஒரு குக்கர் கேஸ்கட்டை மாட்டிவிட்டது போல வளையம் போல இருக்கும்.தேர்ந்த சிகை அலங்காரம் செய்பவர்களால் மட்டுமே அப்படி செய்ய முடியும்.அதை பட்டம் என்று சொல்லுவார்கள்.அதை ஒரு வருடம் முதல் 13 வருடம் வரை வைத்துக்கொள்வது வழக்கம்.அப்படி அந்தோனியார் பட்டத்துடன் தலைநிறைய எண்ணைய் வழிய வலம் வரும் சிறுவர்களை அவர்கள் பெயர் சொல்லி அழைக்காமல் 'பட்டம்'என்று சொல்லியே ஊரில் அழைப்பதால் அந்தப் பெயரே நிலைத்துவிடுகிறது.
பெரியப்பா அருகில் போனான்.அவர் காபி குடித்து வைத்த கப் அருகில் இருந்தது.
அதில் சில ஈ -க்கள்
'பெரியவர் ஏதாவது மீதம் வைத்திருக்கிறாரா.'என தேடுதல் வேட்டையில் இருந்தன.
'ஏ...இவள...வந்து காப்பி கப்ப எடுத்துட்டு போ...ஈ மிச்சிட்டு இருக்கு..'
சித்தியை நோக்கி சத்தமிட்டார்.
'என்ன பெரியப்பா...எப்படிஇருக்கிய..'
'இன்ன இருக்கமில்ல...வா மோனே...எப்படி இருக்க...காலையில கண்ணாடி கீழவிழுந்து ஒடஞ்சி போச்சி,அத மாத்தனும்..அதான் ஒன்னிய வரச்சொன்னேன்..'
சித்தி உள்ளே இருந்து வந்தார்கள். செல்வாவிடம்...
'டேய் நீ காபி குடிக்கியா.?...'
'நீ...ஒருத்தி அவங்கிட்ட கேட்டுகிட்டு...காப்பி எடுத்துட்டுவா...புள்ள குடிப்பான்..'
பெரியப்பா சித்தியை அவசரப்படுத்தினார்.
'நீங்க எதுக்கு இப்ப வெப்றாளப்பட்டுகிட்டு...அவன் தேவைனா வாங்கிகுடிப்பான்..'சித்தி பெரியப்பாவிடம் கோபித்துகொண்டார்.
செல்வாவின் அப்பா சிலுவை பர்னாந்தின் சித்தி மகன்தான் பட்டம் பெரியப்பா.
சித்தியோ செல்வா அம்மாவை விட வயதில் சின்னவர்.
பொதுவாக பெரியப்பா, பெரியம்மா என்று அழைப்பதற்கு பதிலாக பெரியப்பா -சித்தி என்று அழைப்பது வெளியாட்களுக்கு கொஞ்சம் குழப்பமாகவே இருக்கும்
"
கடற்கரைகாரான பெரியப்பா,கடல் சார்ந்த தொழில் செய்யாமல் கரை வேலை செய்துகொண்டிருந்தார்.வினோத்,விக்ரம் என இரு ஆண்பிள்ளைகள்.இருவரையும் நன்கு படிக்க வைக்கவேண்டும் என்ற கனவு இருந்தது.அது தூக்கத்தில் வரும் கனவு அல்ல..தன்னை தூங்கவிடாம் செய்கிற கனவு.ஊரில் பார்க்கும் வேலையால் இந்த கனவு சாத்திய படாது என தெரிந்தது பெரியப்பாவுக்கு.
ஒரே வழி அரபுதேசத்துக்கு பயணப்படுவது.ஒட்டகம் மேய்த்தாவது மகன்கள் இருவரையும் படிக்கவைத்து நல்ல நிலையில் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்தில் ஏஜென்ட்யிடம் பணம் கொடுத்து சவுதிபோய் சேர்ந்தார்கள்.
அங்கு கிடைத்ததோ ஓட்டல் வேலைதான்.பாத்திரம் கழுவுவது.பாத்திரத்தை போல நம்வாழ்வு துலங்காதா என்ற எண்ணத்துடன் வேலை செய்துகொண்டிருந்தார்.
சில மாதத்தில் ஓட்டல் முதலாளி அரபின் சகோதரர்களுக்குள் பிரச்சனை.ஓட்டல் இழுத்து மூடப்பட இப்போது பெரியப்பாவுக்கு வேலையில்லை.அதை வீட்டுக்கு சொல்லவுமில்லை.இவ்வளவு நாள் பழக்கத்தில் ஒருவர் வேறு வேலைஏற்பாடு செய்து கொடுத்தார்.
அது சாலைபணியாளர் வேலை..
சாலையில் வேலைநடந்து கொண்டிருக்கும் போது வண்டிகள் மாற்றுபாதையில் செல்ல கொடி அசைக்கும் வேலை.கொழுத்தும் வெயிலில் கொடிபிடித்து கொண்டிருப்பதாக ஊருக்கு வந்த ஒருவர் சொன்னார்.
இப்படி பல வேலைகள்..
பெரியப்பா பட்ட கஸ்டமும் கனவும் வீணாகவில்லை.பிள்ளைகள் இருவரும் இஞ்சினியர்களாக மஸ்கட்ல் வேலைகிடைத்தது.
பெரியப்பா வெளிநாடு வேலைவிட்டு வீட்டுக்கு வந்தபோது தலைமுடியோடு சேர்த்து பழைய உடல்நிலை காணாமல் போயிருந்தது.
'மகன்கள் இருவரும் மஸ்கட்ல வேலை பாக்கானுக' சொந்தங்களிடம் சித்தி சொல்லி பெருமைபட்டுக்கொண்டிருந்தார்.இருவருக்கும் சொந்தத்தில் கல்யாணம் தடபுடலாக நடந்துமுடிந்தது.இருவரும் மனைவியை அழைத்துக்கொண்டு மஸ்கட் பறந்துபோயினர்.
வருடத்துக்கு ஒருமுறை அல்லதுஇருமுறை வருவதோடு சரி.
இதனிடையில் பெரியப்பாவுக்கு சர்க்கரைநோய் வந்து காலில் ஒரு விரல் எடுக்கப்பட்டது.மகன்களிடம் சூழ்நிலை சொல்ல அவர்கள் இருவரும் தங்கள் மனைவி மக்களை ஊருக்கு அனுப்பமுடியாத நிலமை என்று சொல்லிவிட்டார்கள்.
இங்கு பெரியப்பாவை பார்த்துக்கொள்ள சித்தியை தவிரவேறு யாரும் இல்லை.மகன்களிடமிருந்து மாசாமாசம் பணமும்,தினமும் இரண்டு முறை போனும் வந்துவிடும்
செல்வா பெரியப்பாவை கைத்தாங்கலாக பிடித்து ஆட்டோவில் ஏற்றினான்.தெரிந்த ஆட்டோகாரர்தான்.அவர்'தாத்தா எங்க போவனும்..?'
'வேப்பமூடு போகனுமையா,கண்ணாடி ஒடஞ்சிபோச்சி மாத்தனும்..'
'சரி..சரி..பாத்து மெதுவா ஏறுங்க...'ஆட்டோகாரரும் ஒரு கை பிடிக்க பெரியப்பாவுடன் பின் சீட்டில் செல்வா அமர்ந்தான்.ஆட்டோ வேகமெடுத்தது.
'வீட்ட விட்டு வெளியவந்து ரொம்ப நாளாச்சி...இப்படி வாரது நல்லாதான் இருக்கு மோனே....'
செல்வா கைபிடித்து பெரியப்பா சொன்னார்.
'அப்போ இனி அடிக்கடி வருவோம்...பழைய காதலிகள் கண்ணுல படுதான்னு பார்ப்போம்...'
செல்வா சொன்னது கேட்டு பெரியப்பா சிரித்தார்.பல நேரங்களில் பெரியப்பாவுடன் அவன் உரையாடல்கள் இப்படித்தான் இருக்கும்.பெரியப்பா குலுங்கி சிரிப்பது ஒரு குழந்தையை போல இருக்கும்.
'என்ன தாத்தா பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருதா..?'
ஆட்டாகாரர் கேட்டார்.அதற்க்கும் பெரியப்பாவிடம் அதே சிரிப்புதான்..
. கண்கண்ணாடி கடைமுன் ஆட்டோ வந்து நின்றது.ஆட்டோ காரருடன் சேர்ந்து பெரியப்பாவை கை பிடித்து செல்வா இறக்கினான்.கடையில் இருந்தவர் கவனித்து விட்டார்.
'வாங்க சாச்சா....ரொம்பநாளா ஆள காணும்....எப்படி இருக்கிய..?'
பெரியப்பாவிடம் நலம் விசாரித்தார்.
'நல்லா இருக்கேன் பாய்...வயசாச்சில..சுகர் வந்து ஒரு வெரல எடுத்தாச்சி..முன்னமாதிரி தேகம் சரியில்லயே..' என்று காலை காட்டினார்.
காலில் ஒருவிரல் இல்லாதுகண்ட கடைமுதலாளி ஜமாலின் கண் ஒருமுறை சுருங்கி விரிந்தது.அது ஒரு சின்ன கண்கண்ணாடி கடைதான்.
'முதல்ல சேர்ல உட்காருங்க....ஒரு டீ..சொல்லட்டா சாச்சா..'
'அட நீங்கவேற....சுகர் இருக்குல்லா அதெல்லாம் சாப்பிடக்கூடாது..'
'அப்புறம் இது யாரு.' செல்வாவை காட்டி ஜமால் கேட்டார்.
'எந் தம்பி பையன்.இவந்தான் நம்மள அங்க இங்க கூட்டிகிட்டு போறது..'
'அது சரி...நம்ம பசங்க இப்போ எங்க தாமசம்..?'
'அவனுக பொண்டாட்டி புள்ளைகளோடு மஸ்கட்ல செட்டிலாயிட்டானுவ...'
'ஊருக்கு வருவானுவளா..?'
'எப்போதாவது வருவானுவ...ஏர்போர்ட்ல இருந்து அவனுவ மாமியார் வீட்டுக்கு போயிடுறானுக...'
' மக்க ரெண்டும் மஸ்கட்ல இருக்கானுவன்னு முன்னாடி பீ்த்தினியளே..'
'அது அப்போம்..இப்போ நானும் பொண்டாட்டியும் ஒத்தயில கஷ்டப்படுறோம். பேரபிள்ளைகளோட கடைசிகாலத்துல வாழ கொடுத்து வைக்கல பாய்....'
'அப்போ....நீங்க அங்க போகவேண்டியதுதானே..?.'
'அவனுக ரெண்டுபேரும் எங்கள அங்க கூப்புடுறானுக...இங்க ஒண்ணுக்கே ஒத்தயில போகமுடியல..இதுல மஸ்கட் போகணுமாம்....நம்ம கடமை புள்ளைகள நல்லா படிக்கவச்சோம்.இப்போ நல்லா இருக்கானுக..அதுல ஒரு சந்தோசம்.அதுகளாவது நல்லா இருக்கட்டும்...சரி,அத விடுங்க, நம்ம விசயத்துக்கு வருவோம்,கண்ணாடி ஒடஞ்சிபோச்சி மாத்தி தாருங்க பாய்..'
'மாத்திருவோம் சாச்சா...நாங்கயெல்லாம் பழைய தோஸ்த்தாக்கும்...'
ஜமால் பாய் செல்வாவைப் பார்த்து சொன்னார்.
அவன் மாலைநாளிதழை புரட்டிக்கொண்டிருந்தான்.அதில் 'களியக்காவிளையில் கல்லூரி மாணவி வாலிபரிடம் ஓட்டம்'என்றிருந்த செய்தியை ஆர்வமாக படித்துகொண்டிருந்தான்.இந்த மாலை பத்திரிகைக்கு எப்படித்தான் இப்படிபட்ட செய்திகள் தினமும் கிடைக்குமோ..?
ஜமால் பாய் சில கண்ணாடி பிரேம்களை கொடுத்து போட்டுக்காட்ட ..
அதைபோட்ட பெரியப்பா முகத்தில் திருப்தி வரவில்லை.
'சாச்சா...இப்போ இத போட்டுப்பாருங்க,உங்களுக்கு செமயா இருக்கும்..'
ஜமால் பாய் ஒரு கண்ணாடி பிரேமை எடுத்து பெரியப்பா முகத்தில் மாட்டிவிட்டார்.கூடவே முகம்பார்க்கும் சின்ன கண்ணாடியை முகத்திற்க்கு நேராக வைத்து பெரியப்பாவை பார்க்க சொன்னார்.பின்னாடி பெரிய நிலைக்கண்ணாடியிலிருந்த தன் பார்வையை இப்போது இந்த சின்னகண்ணாடிக்கு மாற்றியிருந்தார்.
பின் செல்வாவைப் பார்த்து...
'டேய் ....அங்க என்ன பேப்பர் படிச்சிகிட்டு...இங்க பாரு...இந்த கண்ணாடி எப்படி இருக்கு.?'
'சூப்பரா இருக்குபெரியப்பா.'
'லே...சும்மா வௌயாடக்கூடாது..'
'நெசமாத்தான் சொல்லுறேன்.'
.'அப்போ பாய்...இதயே தாருங்க....'
''அப்பாடா..."என்றிருந்தது ஜமால் பாய்க்கு..
கண்ணாடியை வாங்கி மீண்டும் ஆட்டோவில் வீட்டுக்கு வந்துசேர்ந்தார்கள்.
'சரி பெரியப்பா...இனிநான் வீட்டுக்கு புறப்படுறேன்...'
'டேய்...மோனே..செல்வகுமாரு....'
'சொல்லுங்க.......'
'இந்த கண்ணாடிய போட்டபின்னாடி வயசான மாதிரி என்ன காட்டுது...'
பெரியப்பா சொன்னபோது சிரித்துகொண்டே வெளியே வந்தான்
அடுத்த சில மாதங்களில் பெரியப்பா படுத்தபடுக்கையாகிவிட்டார்.செல்வா தினமும் பெரியப்பாவை போய் பார்த்துவருவான்.மக்களும் பேரபிள்ளைகளும் பக்கத்தில் இல்லாத கவலையை புலம்பலாக சொல்லிக்கொண்டிருந்தார்.பின் அந்த புலம்பலும் கொஞ்சம் கொஞ்சமாக நின்று நினைவுகள் தட்டி வராமல்போயின.
மகன்கள் இருவருக்கும் தகவல் சொல்லப்பட்டது.
"எத்தனை நாள் லீவு எடுத்துட்டு வரணும்..."
இருவரிடமும் இருந்து ஒரேகேள்வி வந்தது..
இந்த கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை..
படைச்சவனத்தான் கேட்கனும்.
ஒரு நாள் அதிகாலை செல்வா செல் ஒலிக்க,எடுத்து பேசினான்.பெரியப்பா இறந்துவிட்டதாக செய்தி சொன்னது.
பதட்டத்துடன் பெரியப்பாவை காண ஓடினான்.பெரியப்பா தலை அருகில் சித்தி அழுதுகொண்டிருந்தார்.செல்வாவை கண்டதும் சித்தியின் அழுகை அதிகமானது.செல்வாவின் கண்களிலும் நீர்முட்டிவெளியேரியது.தன் சட்டையில் கண்ணை துடைத்துகொண்டிருந்தான்.நீர் வந்துகொண்டிருந்தது.
சற்று நேரத்தில் வெளியே வந்து ஒரு சேரில் அமர்ந்தான்.
'மக்க ரெண்டுபேரும் மஸ்கட்ல இருந்து பொறபப்புடுறாங்களாம்..'
அங்கு நின்றவர்கள் பேசிக்கொண்டார்கள்.அங்கு மிகபரபரப்பாக நின்று கொண்டிருந்த இன்னொரு முகம்
ஜெயக்கொடி அண்ணன்.
இவர் பெரியப்பாவின் உறவினர்.அவர் செல்வாவிடம்...
'அவனுவ ரண்டுபேரும் திருவனந்தபுரம் வரும்போது ..ஏர்போர்ட் க்கு கூப்பிட நீ போகனும்...'
'எதுக்கு போவணும்.? கார் அனுப்பிவச்சா அதுல ஏறிவரப்போறானுக..ஆளுபோவனுமுன்னு அவசியமில்ல...'
'அப்படியில்லடா தம்பி,ஏர்போரட் பிக்கப் பண்ண நம்மள்ள ஒருத்தர் போகணும்.'
'என்னால முடியாது ...நீங்க வேற யார்கிட்டயாவது சொல்லுங்க.'
'எதுக்குடா தம்பி கோபபடுற..'
என்று செல்வாவின் இருகன்னத்தில் தன் இருகைகளையும் பரிவோடு வருடி கேட்டார்..
'கோவமில்லண்ணா...என்னால போவமுடியாது..அவ்வளவுதான்..'
'சரி...விடு ...வேற ஆள பாக்கலாம்..'
இங்கு ஏர்போர்ட்லிருந்து யார் வந்தாலும் சரி..போனாலும் சரி ,யாராவது உடன் செல்வது என்பது மூக்கு இருந்தா சளி வருவதுபோல சம்பிரதாய சடங்காகிவிட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக உறவினர்களும் தெரிந்தவர்களும் வரதொடங்கினார்கள்.வீட்டினுள் அப்பப்போ அழுகை பெரிதாகவும்,பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியும் கேட்க கொடங்கியது.புதியதாக யாராவது வரும்போது சத்தம் கொஞ்சம் பெரியதாகவே கேட்டது...
ஜெயக்கொடி அண்ணன்
செல்வாவிடம்....' தம்பி ...சாமினா பத்தலுக்கும்,சேர்க்கும் சொல்லு,எட்டு டியுப் லைட்டு கட்ட சொல்லு,வந்தவஙகளுக்கு ஐயப்பன் கடையில டீ சொல்லு..
அவனுக ஏர்போட்டிலிருந்து பொறப்புட்டாச்சாம்,
அவனுக கொண்டுவார சாமானுகள கார்ல வச்சி கட்ட கயிறு வாங்கணும்..
மாலைக்கி சொல்லி அட்வான்ஸ் கொடுக்கணும் என்று அந்த இடத்தை பரபாக்கிகொண்டிருந்தார்.'
'அண்ணே...நீங்க மொதல்ல உக்காருங்க..ஒரு காப்பி குடியுங்க..'
'அதுக்கெல்லாம் நேரம் கிடையாது..'
டாம்....டீம்...படபடப்பு....பப்படப்பு...இதுதான் ஜெயக்கொடி அண்ணன்.வம்படியாக எல்லா வேலைகளையும் வாலன்டரியாக இழுத்துப்போட்டு செய்வதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்.அநேக நிகழ்வுகளில் இத்தகைய குணம் கொண்ட மனிதர்களை காணலாம்.
ஜெயக்கொடி அண்ணன் சொன்ன வேலைகளில் செல்வா பிஸியாக இருந்தான்.அவ்வப்போது பெரியப்பாவை எட்டிப்பார்த்தான்.ஜமால் பாய் கடையில் வாங்கிய கண்ணாடியுடன் கண்ணாடி பெட்டிக்குள் படுக்கவைக்கப்பட்டிருந்தார்.பெரியப்பா கையில் ஒரு ஜெபமாலை சொருகப்பட்டிருந்தது.பாதி எரிந்த நிலையில் ஊதுபத்தி அணைந்து கிடந்தது.சித்தி அழுவதற்கு கண்ணீர் இல்லாது பெரியப்பாவை பார்த்த படி உட்கார்ந்து இருந்தார்.
செல்வா வெளியே வந்து நின்றான்.ஒரு பரபரப்பு ...
'மக்கமாருக மஸ்கட்ல இருந்து வந்துட்டானுவ...'
செல்வா ரோட்டை எட்டிப்பார்த்தான்..
பெரியப்பாவின் பேத்தி ஒன்று ஒற்றை ரோஜா ஒன்றை (அதன் பெயர் சிங்கிள் ரோஸ் பேங்கட்டாம்) கையில் ஏந்தியபடி முதலில் வர பின்னாடி மகன்களும் மருமக்களும் மற்ற குழந்தைகளுடன் வீட்டினுள் நுளைந்தனர்.வீட்டினுள் அழுகை சத்தம் பெரிதாக கேட்டு வழக்கம்போல அமைதியானது.
சிறிது நேரத்திற்கு பின் பெரியப்பாவின் உடல் இறுதி ஊர்வலத்திற்காத வீட்டின் வெளியே எடுத்துவைக்கப்பட்டது.சாயங்கால வெயில் சாமியானா பந்தலை தாண்டி வெளியே விழுந்து கொண்டிருந்தது.அதை மறைக்க சில பெண்கள் முக்காடிட்டு கொண்டிருந்தனர்.சிலபேர் நிழல்பக்கம் ஒதுங்கிகொண்டனர்.
அமைதியான அந்த சூழலில் ஒரு சலசலப்பு...
அங்கிருந்த பெரியப்பாவின் மச்சான் ஒருவர்
'ஏய் போட்டோகாரன் வந்தாச்சா.?..இன்னும் அவன காணல...எங்கப்பா...அவனுக்கு போண போட்டா எடுக்காமுல..'
ஒருவித படபடப்புடன் சொல்லிக்கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் புகைப்படகாரர் வந்தார்...
அவரிடம்
' எங்க போன ....உன்னத்தான் தேடிட்டு இருக்கோம், இப்போ சாமியாரு வார நேரமாச்சி...போட்டோ எடுக்கனுமில்ல..'
'சரி...சரி...எடுத்துடுவோம் அண்ணாச்சி.'
'இங்க பாரு...பாடியையும்மக்களையும்,மருமக்களையும் ,பேரபிள்ளைகளையும் சேர்த்து நல்ல போஸ்ல போட்டோ எடுக்கணும்..'
'சரிங்க அண்ணாச்சி....'
.'ஏய் வாங்கப்பா...போட்டோ எடுக்கணும்..'என பெரியப்பாவின் மச்சான் இருமகன்களையும் அழைத்தார்.அவர்கள் மனைவி மக்களுடன் பெரியப்பா உடல் அருகில் வந்து நின்றார்கள்.
மக்களும்,மருமக்களும் ,பேர பிள்ளைகளும் எப்போதும் தன் பக்கத்தில் இருக்கவேண்டும் என்பது பெரியப்பாவின் ஆசையல்லவா..அவரை பொருத்த வரை பேராசைதான்.அதுஅவரது மரணத்தில்தான் சாத்தியமாகிறது.
பெரியப்பாவின் மச்சான் போட்டோவுக்கு போஸ் நல்லா தெரியும் படி அவர்களை சரியாக நிறுத்தி புகைப்படகாரருக்கு உதவி செய்து கொடுத்தார்.
நான்கைந்து 'கிளிக்...கிளிக்..' சத்தத்துடன் போட்டோ எடுத்துவிட்டதாக போட்டோகாரர் தன்
கட்டை விரலை உயர்த்தி காட்டினார்.
செல்வா எதேச்சயாக பெரியப்பாவின் கை யை பார்த்தான்.பெரியப்பாவின் கட்டைவிரல் உயர்ந்திருந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்