logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

K.M.Karthikeyan

சிறுகதை வரிசை எண் # 109


அரிதாரம் - இந்த ஊரின் சந்து, பொந்து, இங்கு, இடுக்கு என எல்லாம் எனக்குத் தெரியும், இந்தத் தெருவில் இருக்கும் எல்லா மனிதர்களையும் எனக்குத் தெரியும். அதோ அந்த பெரியவீட்டு முக்கில் ஒரு பால்சொசைட்டி இருந்ததே அது இன்னும் அங்கு தான் இருக்கிறதா!! லைப்ரரிக்கி எதிரில் இருந்த உப்புத் தண்ணி கிணத்தை மூடிவிட்டாதாக எப்போதோ நண்பன் சொன்னான், அதன் மீது இன்று சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதோ பஜனை கோயில், இங்கு தானே இந்து முண்ணனி சாகா மைதானம் இருந்தது . இந்த மைதானத்தை இப்போது பார்த்தாலும் சிரிப்பு தான் வருகிறது. மகமாயி அக்கா கடை எங்கள் தெருவிற்கான அப்போதைய சூப்பர் மாக்கெட். "மகமாயி அக்கா கடையை, நம்பி உலை வைக்கலாம்" என்று என் அம்மா சொன்ன வார்த்தை அந்தக் கடையை கடக்கும் போதெல்லாம் ஒலித்துக் கொண்டே இருக்கும். பிழைப்புக்காக எங்கோ வேலைக்குப் போனவர்களின் நினைவுகளில் சொந்த ஊர் என்றுமே சொர்க்கம் தான். நெய்க்காரபட்டி - பழனிக்கு அருகே உடுமலை சாலையில் அமைந்திருக்கும் ஒரு பேரூராட்சி. ஜமீன் பங்களா தான் எங்கள் ஊருக்கு கம்பீரம். இன்று அந்த பங்களா சினிமா சூட்டிங் பங்களா. சூர்யவம்சம், ப்ரண்ட்ஸ், வேல், உத்தம புத்திரன் இந்த சினிமாக்களையெல்லாம் எங்கள் ஊரைப் பார்ப்பதற்காகவே அதிகமுறை பார்த்திருக்கிறேன். அருகிலிருக்கும் நண்பர்களிடமெல்லாம் இது எங்க ஊர், எங்க ஊர் என்று கூறி பெருமை பட்டிருக்கிறேன். அன்றெல்லாம் சூட்டிங்கின் போது கேட்டுக்கு உள்ளேயே விட மாட்டார்கள், அதுவும் பெரிய நடிகர் யாராவது வந்து விட்டால் கூட்டம் கொள்ளாது. கடைசியாக விஜயகாந்துக்கு அப்படி ஒரு கூட்டம் கூடியது. பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வந்தார்கள். ஊரே அடைத்து விட்டது. ஆனால் இன்று மக்களுக்கு சூட்டிங் பழகி விட்டது. ஒரு மாட்டுக்கு லாடம் கட்டுவதை எப்படி யாரும் நின்று வேடிக்கை பார்ப்பதில்லையோ அதேபோல இன்று சூட்டிங்கையும் யாரும் பார்ப்பதில்லை. இப்போதும் கூட ஏதோ சூட்டிங் நடக்கிறது. கேட் பூட்டியிருக்கிறது. வெளியில் ஒரு மனிதரையும் காணோம். பெரிய வீட்டை எப்போது நினைத்தாலும் அந்த கேட் தான் முதலில் நினைவுக்கு வரும். கூடவே நண்பன் செல்வராஜும் நினைவுக்கு வருவான். அவனது திருமணத்திற்குத்தான் இப்போது வந்திருக்கிறேன். ஊருக்குள் இருந்த செம்மண் சாலைகள் எல்லாம் தார்ச்சாலைகளாக மாறியிருக்கிறது. வீடுகள் ஒவ்வொன்றும் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணின மாதிரி புதுவிதமாக மாறிப் போயிருக்கிறது. தெருவுக்குத் தெரு கருப்பு வண்ண தண்ணீர் டாங்கிகள் முளைத்திருக்கிறது. இத்தனை ஆச்சர்யங்களுக்கு நடுவிலே நண்பனுக்கு கல்யாணமும் கூடியிருக்கிறது. கல்யாணம் ஊருக்குள் புதிதாக உருவாகியிருந்த திருமண மண்டபத்தில், "பஞ்சாயத்து ஆபிஸுக்கு போற வழியிலேயே மெயின் ரோட்டிலிருந்து ஒரு 300 மீட்டரில் வலதுபுறத்துல இருக்கு கல்யாண மண்டபம், கரெக்டா வந்திருடா" என்று நண்பன் மண்டபத்தின் முகவரியை விளாவாரியாகவே சொல்லியிருந்தான். நான் தான் ஊரை ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டு போகலாம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறேன். பஞ்சாயத்து ஆபிஸையும் தாண்டி வந்து விட்டேன். மண்டபத்துக்கு இனி திரும்பிச் செல்ல வேண்டும். போகும் வழியில் தான் விநாயகர் கோவில், வரும்போதே கவனித்தேன் சில மக்கள் கோவிலுக்கு வெளியே பாதையை மறைத்தபடி நின்றிருந்தார்கள், கோபுரம் புதிதாக இருந்தது. கலசங்கள் ஏற்றப்பட்டிருந்தது. கோவிலின் புதுப்பொலிவு உள்ளே போய்ப் பார்க்க வேண்டுமென்ற ஆசையைத் தூண்டியது. விநாயகர் கோயிலைக் கண்டவுடன் பழைய ஞாபகங்கள் முளைவிட்டது. விநாயகருக்கு நாம தான் முதல் தண்ணி ஊத்த வேண்டும் என்பதில் செல்வராஜ் எப்போதும் பிடிவாதமாக இருப்பான். சொன்னதுமாதிரி மார்கழி மாதம் முப்பத்தியோரு நாளில் ஒருநாள்கூட அடுத்தவர்களை முந்த விட்டதில்லை. போதாக்குறைக்கு என்னையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போவான். அதிகாலையில் சிறிய சில்வர் குடம் போல ஒன்றை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவோம். சாணி உருண்டையை புள்ளையாராக புடித்து வைத்தது போன்ற வடிவத்தில் கல்லால்லான சிலை தான் விநாயகராக இருந்ததார். விநாயகருக்குண்டான யானை முகமோ, தொப்பை வயிறோ இல்லாத விநாயகர் அவர். அதிகாலையில் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்பதற்காக இரவே குளித்து விடுவோம். அப்படி இருந்தும் நல்லதண்ணி அடி பைப்புக்கு அழைத்துச் சென்று குட்டி குளியலும் போடுவோம். அந்த அடிபைப்பைச் சுற்றியும் அருகம் புற்கள் பரவியிருக்கும், அதை வரக் வரக்கென்று பிடிங்கி நன்றாக கழுவி குடத்திற்குள் நிரப்பிக் கொள்வோம். பிறகு குடம் முழுவதும் நீரை நிரப்பிக் கொண்டு நடந்தால் குளிரில் கை, கால்களெல்லாம் பிண்ணும். மேற்பல்லும் கீற்பல்லும் கீரியும் பாம்புமாய் சண்டைபோடும். உடலைக் குறுக்கி நடுங்கிக் கொண்டே தான் கோவிலுக்குப் போவோம். திலகா அக்கா வீட்டின் செம்பருத்திச் செடி, மதில்ச்சுவரையும் தாண்டி வெளியில் பூத்திருக்கும். ஆளுக்கொரு பூ பறித்துக் கொள்வோம். பெரிய கோபுரமாகவும் இல்லாமல், சிறிய விமானமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் மத்தியில் இருக்கும் கோவிலின் மேற்புரம். சுற்றியும் சிமெண்ட் தரை, வாசலிலிருந்து நேரே கர்ப்பகிரகம், இரண்டுக்கும் இடையில் மட்டும் ஓடுகளால் வேய்ந்த மேற்கூரை. கர்ப்ப கிரகத்திற்கு வெளியே வலது பக்கம் முருகன் சிலை, இடதுபக்கம் ஒருசாமி சிலை, அது என்ன சாமியென்று இப்போது வரை பெயர் தெரியவில்லை. கதவை தினமும் செல்வராஜ் தான் திறப்பான். பூட்டியெல்லாம் இருக்காது, சும்மா சாத்தியிருக்கும் அவ்வளவு தான். மின் விளக்குகள் இரவு முழுவதும் எரிந்து கொண்டே இருக்கும். கோயிலுக்கு எதிரில் தான் பஞ்சாயத்து ஆபிஸ் இருந்தது. கோவிலுக்கு உள்ளேயே இருக்கும் கிணற்றில் நீர் இரைத்து கர்ப்பகிரகத்திற்குள் இருக்கும் விநாயகரை சுத்தமாகக் குளிப்பாட்டுவான். வெளியிலிருக்கும் முருகனையும், அந்த பெயர் தெரியாத சாமியையும் நான் குளிப்பாட்டுவேன். பிறகு தான் எங்களது குடத்திலிருக்கும் நீரால் அபிஷேகம் செய்வான். அழகாக அலங்கரிப்பான். செம்பருத்தியாலும், துளசியாலும், அருகம்புல்லாலும் அழகான விநாயகர் பத்து வயது குறைந்தது போலாகிவிடுவார். எல்லாம் முடிந்து கொஞ்ச நேரம் அங்கேயே உக்கார்ந்திருப்போம். ஒன்றிரண்டு அக்காக்கள் ஈரத்தலையோடு கையில் சொம்பு நீரோடு உள்ளே நுழைவார்கள். கல்யாணம் முடிந்து "விநாயகர் கோவிலுக்குப் போகும் போது கூப்பிடு மச்சான் நானும் வர்றேன்" என்று முன்பே மாப்பிள்ளையிடம் சொல்லியிருந்தேன், அவனும் மற்றொரு நண்பன் சிவாவிடம் சொல்லியனுப்பியிருந்தான். அப்போது தான் நான் பந்தியிலிருந்து சாப்பிட்டு முடித்து வெளியே வந்தேன். நானும் சிவாவும் பொண்ணு மாப்பிள்ளை அணிவகுப்பில் ஐக்கியமானோம். விநாயகர் கோவிலுக்குச் செல்ல மண்டபத்தை விட்டு வெளியே வந்து வலப்பக்கம் திரும்ப வேண்டும் ஆனால் கூட்டம் இடப்பக்கம் திரும்பியது. "என்ன சிவா, விநாயகர் கோயில் ரைட்ல தான இருக்கு, இவுங்க ஏன் லெப்ட்ல போறாங்க" "ரைட்லயா, ஓ... நீ அதச் சொல்றியா, அது இப்போ விநாயகர் கோவில் இல்லடா, சிவன் கோவில்" "என்னது, சிவன் கோயிலா" அதெப்படி விநாயகர் சிவனாகினார். நானடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை. "ஆமா, மாப்ள. அதுமட்டுமில்லாம, இப்பெல்லாம் எல்லோராலும் கோவிலுக்குள்ள போயிர முடியாதுடா" என்றான். எனக்கு தூக்கிவாரிப் போட்டது, செல்வராஜ் கல்யாண மாப்பிள்ளை. அவனும் நானும் எத்தனை முறை அந்த விநாயகர் சிலையை தொட்டு அபிஷேகம் செய்திருப்போம். இன்று அவன் அந்த கோயிலுக்குள் செல்லவே முடியாதாம், கூடாதாம். லைப்ரரி வாளாகத்திற்குள் யானை முகத்தோடும், தொப்பை வயித்தோடும் ஒரு விநாகயர் இருந்தார் அதை வணங்கிவிட்டு பெண்ணும் மாப்பிள்ளையும் மண்டபத்திற்கு திரும்பினார்கள். எனக்கு மனதுக்குள் அழுத்தமாக இருந்ததால் மீண்டும் ஊரைச்சுற்றக் கிம்பிவிட்டேன். சூட்டிங் பார்க்க ஆசையாக இருந்தது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.