logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

இரா. கோமதி, பொள்ளாச்சி

சிறுகதை வரிசை எண் # 108


         ஆதலால் காதல் செய்வீர்                 பட்டிக்காட்டிற்கும் பட்டணத்திற்கும் இடைப்பட்ட ஊர், சுற்றுச்சூழல் மிகுந்த ஊரிலே பிறரின் பேச்சுதனை செவிமடுத்து பல ஆலைகளும் கம்பெனிகளும் வந்து பட்டிக்காட்டை பட்டணமாய் மாற்ற முயற்சி செய்தது.                   இங்குள்ள மக்களும் நாகரீக வாழ்க்கையை எதிர்கொண்டு பாரம்பரிய பழக்கங்களை பழமை என குறை கூறியே நடைபோடத் தொடங்கினார்கள்.                   இருப்பினும் எந்த நாகரீகமும் தங்களுக்கு வேண்டாமென உள்ளதை உள்ளபடி வைத்து வாழ்வதே சொர்க்கம் எனக் கருதியே தன் இடந்தனை அதிக விலைக்குக் கம்பெனி கட்டக் கேட்டும் கொடுக்காது தானுன்டு தன் குடும்பமுண்டு என கட்டுக் கோப்பாக வாழ்ந்தது ஒரு குடும்பம்.                 அப்பா ரத்தினம் விவசாயி, அம்மா குடும்பத்தலைவி ரஞ்சிதா, ஒரே மகள் ராகவி கல்லூரியில் கல்வி கற்கும் செல்ல மகள்.                  இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படித்தான் வாழ வேண்டுமென்ற கோட்பாடுகளுடன் அம்மாவும் அப்பாவும் வாழ்ந்து ராகவியையும் மிக ஒழுக்கமாகவே வளர்த்து வந்தார்கள்.                 ஒரு ஞாயிறன்று மதிய வேளையில் "ரத்தினம் வெளியே போனவர் வேகமாக செருப்பை உதறி விட்டு காலைக் கழுவிவிட்டு வீட்டுக்குள் வந்தார்".                அம்மா "ரஞ்சிதமோ என்னங்க ஆச்சு ஏன் இப்படி வேகமா வர்றீங்க ஏன் முகத்தில் இப்படி எள்ளும் கொள்ளும் வெடிக்குது என்ன ஆச்சுங்க எதுவும் பிரச்சினையா" என்று அச்சத்துடனே வினவினாள்.               அதற்கு "அவரோ கொஞ்சநேரம் சும்மா இரு" என கோபமாய்க் கூற மகள் "ராகவியோ ஓடிச்சென்று தண்ணீர் ஒரு செம்பு மொண்டு வந்து இந்தாங்கப்பா இதை முதல்ல குடிங்க அப்புறம் எதுவானாலும் பேசுவோம்" எனக் கூறினாள்.                செல்ல மகளின் பேச்சைத் தட்டாது உடன் நீரை வாங்கி அருந்தி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தார்.                "அப்பா என்னப்பா ஆச்சு சொல்லுங்க என்று மகள் வாஞ்சையுடன் தடவ அது ஒன்னுமில்லை மா என்று முகம் திருப்பினார்", ராகவியோ பிடிவாதமாய் திரும்பத் திரும்பக் கேட்கவும் "மஞ்சு இறந்துட்டாமா" என்று விரக்தியுடனே கூறினார்.                ரஞ்சிதாவும் ராகவியும் கவலை படர்ந்த முகத்துடனே "என்ன ஆச்சு என்னன்னு சொல்லுங்க" என்று கோரசாகக் கேட்டு அவர் முகம் காண அவரே தொடர்ந்தார்.                 "மஞ்சு உன்னை விட இளையவள் தானே ராகவி என வினவ ஆமாம்பா என்னைவிட ஒரு வயது இளையவள்" என்னப்பா ஆச்சு எப்படி இறந்தா ரொம்ப கஷ்டமா இருக்கு பா என்ன ஆச்சுன்னு சொல்லுங்க என்று கவலையுடனே கேட்டாள்.                "ஏங்க என்ன நடந்ததுனு சொல்லுங்க மனசெல்லாம் ஒரே படபடப்பாகவும் பயமாகவும் இருக்கு நீங்க பீடிகை போடாம விசயத்துக்கு வாங்க என ரஞ்சிதா கூற" ரத்தினம் தொடர்ந்தார்.               "பக்கத்து ஊர் பையன் கூட சிநேகிதமாம் மா இப்போ அவன் வீட்டில் பார்த்த பொண்ணைக் கட்டிக்கிட்டானாம் அதற்கு இவ தற்கொலை பண்ணிக்கிட்டாளாமாம்மா" என்று ஒருவழியாகச் சொல்லி முடித்தார்.                ரஞ்சிதாவோ "அடப் பைத்தியகாரியே அதுக்குப் போய் எவளாச்சும் சாவாளா இவனை விட்டா வேற மாப்பிள்ளையே கிடைக்காத மாதிரி இல்லை பண்ணி‌ இருக்கா" என அங்கலாய்த்தார்.                ரத்தினமோ பேச்சிலே இடைமறித்து "அது மட்டுமில்ல ரஞ்சிதா அந்தப் பையன் கூட பேச்சளவில் மட்டும் சிநேகிதம் இல்லாம கடை, சினிமா, கோவில்னு போனதோட நிக்காம ஒரு குழந்தை வயித்துல உருவாகுற அளவுக்கு போயிட்டாங்க போல" என்று கோபத்துடனே கூறினார்.               "ராகவியோ என்னப்பா சொல்றீங்க நீங்க சொல்றதெல்லாம் உண்மையா? அதனால் தான் அவ கல்லூரிக்கும் வரலையா" என யோசனையாக கையைக் கன்னத்தில் வைத்தாள்.               ரஞ்சிதாவோ "இதென்னங்க இப்படி சொல்றீங்க இந்தப் பொண்ணுக்கு இவ்ளோ தைரியம் எங்கிருந்து தான் வருமோ தெரியலையே", பிள்ளையைப் பெத்தவங்களுக்கு பிள்ளை இல்லையே அதுவுமில்லாம இப்படி ஒரு கெட்ட பேரோட இன்னொரு உயிரையும் சேர்த்து அழிச்சுட்டுப் போயிட்டாளே என கவலையானார்.               ரத்தினமோ "என்ன மா பண்றது பெத்தவுங்க எல்லா நேரத்துலயும் உட்கார்ந்து பார்த்துக்கிட்டே இருக்க முடியுமா"? இவ்ளோ நாள் கல்லூரிக்கு மட்டுமே போயிட்டு குனிஞ்ச தலை நிமிராம இருந்த பொண்ணு இப்படிப் பண்ணுவான்னு தெரியுமா சொல்லு என்றார்.        ‌‌       கல்லூரிக்கு போக வர இருக்கையில் புதுசா கம்பெனி கட்டி இருக்காங்கல்ல அந்தக் கம்பெனிக்கு "சூப்பர்வைசரா சீனுனு ஒரு பையன் வந்தானாம்", கம்பெனி கட்டக் கொடுத்தது இவங்க இடமாச்சா மஞ்சு கல்யாணத்துக்காகத்தான் அந்த இடத்தையே அவங்க அப்பா வித்தாரு மா என்று துக்கம் தொண்டையை அடைக்க சிறிது தண்ணீர் குடித்தார்.              தண்ணீர் குடித்து ஆசுவாசப் படுத்திய பின் மீண்டும் தொடர்ந்தார். கம்பெனியும் வீடும் பக்கத்துல இருக்க "அவன் வேலைக்கு வரும் நேரமும் மஞ்சு கல்லூரிக்குப் போகும் நேரமும் ஒரே நேரமாய்ப் போக முதலில் பார்த்துக் கொண்டவர்கள் பின் பழக ஆரம்பித்து லீவ் போட்டு ஊரைச் சுற்றத்‌ தொடங்கி இருக்கிறார்கள்".                இந்த விசயம் மஞ்சு வீட்டுக்குத் தெரிந்து கண்டிக்கும் போது விசயம் கை மீறிப் போயிருந்தது மா, "அவன் பக்கத்தூரிலிருந்து வந்தவன் பிரச்சினை பெரிதாக வெளியூருக்கு ஓடி விட்டான், இந்த பிரச்சினையை முடித்து விடலாம் என்று எண்ணுவதற்குள் கர்ப்பமான செய்தி தெரிஞ்சிருக்கு என்ன பண்ண சொல்லு" என்று விரக்தியாய் கூறினார்.               ஐயோ "இதென்னங்க இப்படி ஆகிப் போச்சு என்று ரஞ்சிதா பதற" "ரத்தினமோ ஆசை வார்த்தை பேசி பிள்ளையைக் கொடுத்துட்டு அவன் போய் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டான் இந்தப் பிள்ளை இப்படி பண்ணிடுச்சு அவங்க குடும்பமே நிலை குலைந்து போனதுமா" என்றார் கண்ணீருடன்.             ரஞ்சிதாவோ  "பிள்ளைகள் இப்படிப் பண்ணினா பெத்தவுங்க என்ன பண்றது இனி அக்குடும்பத்துக்கு யார் இருக்கா ஒரே பிள்ளையையும் எமனுக்குக் கொடுத்துட்டு அநாதையாக நிக்கிறாங்களே பாவம்" என அங்கலாய்த்தார்.             உடனே "ராகவி இடை மறித்து அதென்னம்மா இப்படி சொல்லிட்டீங்க பிள்ளைகள் மட்டுமே தப்பு பண்றதில்லை எல்லோருமே இதற்கு காரணம் தான் மா என்றாள் வெடுக்கென்று", உடனே அம்மாவோ என்னமா இப்படி சொல்ற திடீர்னு நீயும் ஏதாவது இந்த மாதிரி பிரச்சினையில் மாட்டி இருக்கியா என்று படபடத்தார்.               அதற்கு ராகவியோ "ஐயோ அப்படி எல்லாம் ஒரு நாளும் இந்தமாதிரி பண்ணி நானும் பிரச்சினையில் மாட்டி உங்களையும் மாட்டி விட மாட்டேன் அம்மா பயந்துட்டீங்களா அம்மா" என்று வினவினாள்.                என் நெஞ்சில பால வார்த்த போ என்று செல்லம் கொஞ்சினார் அதற்கு ரத்தினமோ "நம்ம பொண்ணு நம்மளை மீறி எதுவும் செய்ய மாட்டா எனக்கும் தெரியும், என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்று கூறிவிட்டு, ராகவி நீ ஏதோ சொல்ல வந்தியே அதை சொல்லுடா" என்றார்.                ராகவியோ "அப்பா காதல் தான் எல்லாத்துக்கும் காரணமாப் போகுதுன்னு நீங்க சொல்றதை முழுமையாக ஏத்துக்க முடியலை என்னால" என்று அடுத்தடுத்து கூறத் தொடங்கினாள்.              எனக்குத் தெரிந்து "ஒரு சமூக ஆர்வலர் வந்து நிறைய விஷயங்கள் சொன்னாங்க அதை நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று கூற" அதைக் கேட்க  ஆயத்தமானார்கள் பெற்றோர்கள்.                ரத்தினமும் ரஞ்சிதாவும் ராகவியையே பார்க்க ராகவி "உண்மை தான் பா நாகரீக மோகத்தில சிக்கி பணம் பணம்னு ஆசைப்பட்டு மஞ்சுவோட அப்பா நிறையப் பணம் கிடைக்குதேனு அந்த இடத்தை வித்தார், ஆனா அந்த இடம் முப்போகமும் விளைச்சல் தந்த நிலமென்பதை மறந்துட்டார்".                கம்பெனி இங்க வந்தா "நிறைய பேர் வந்து போவாங்க நம்ம பொண்ணுக்குப் பாதுகாப்பு இருக்குமானும் யோசிக்கலை பணம் கண்ணை மறைச்சது. கல்லூரிக்குப் போயிட்டு வர்ற பொண்ணு சரியா போயிட்டு வீட்டுக்கு வர்றாளானு மஞ்சுவோட அம்மாவுக்கும் தெரியலை அவங்களும் வீட்டிலேயே இருக்குறவுங்க தான் ஆனா அவங்களும் சரியா கவனிக்கலை" என்றாள்.            அப்போ "பெத்தவங்க மேல்தான் எல்லாத் தப்பும்னு சொல்ல வரியா ராகவி என கோபமாகக் கேட்ட அப்பாவைக் கையமர்த்தி இருங்கப்பா நான் சொல்லிடறேன் அது சரியா தப்பானு கடைசியா சொல்லுங்க" என்றாள்.                பின் தொடர்ந்த ராகவி "மஞ்சுவோட அம்மாவும் அப்பாவும் அவளோட நல்லதுக்காக இவ்ளோ பண்ணி இருக்காங்க ஆனா காதலோடு இல்லைனு எனக்குத் தோணுது பா ஏன்னா அவங்களோட காதலான பரிசுத்தமான அன்பு வளையம் இவளைச் சுற்றி இருந்திருந்தால் எதுவாக இருந்தாலும் மஞ்சு அவங்ககிட்ட உடனே சொல்லி இருப்பா அதனால பெத்தவங்க தன் பிள்ளைகளைக் காதலிக்கனும்னு சொல்றேன்" என்னப்பா சரிதானே என்றாள்.                  ரத்தினமோ "சரி தான் மா ஆனா பிரியமா இருக்கிற வீட்டிலேயும் இப்படி நடக்குதே என்ன செய்ய என்று வினவ ராகவி தொடர்ந்தாள் அப்பா ஒரு பெண் பருவமடைந்த வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரை ஹார்மோன் என்னும் சுரப்பிகளின் மாற்றம் நடைபெறும், அப்போ யாராவது வந்து பேசினா பிடிக்கும் புதுசா ஈடுபாடு வரும், இந்த மாதிரி காதல் கத்தரிக்காய்களும் இந்த வயதில் தான் பா வரும்" என்றாள்.                   உடனே அம்மா இடைமறித்து "அப்போ பொண்ணுங்களை எப்படி வளர்க்கிறது கஷ்டம் தானே என்று கூற அப்படி இல்லை மா பெத்தவங்களும் சொல்லி வளர்க்கணும் பிள்ளைகளும் புரிஞ்சி நடக்கணும் அதுதான் முக்கியம்" என்றாள்.                  அம்மா "மஞ்சுவோ கொஞ்சம் முன்னெச்சரிக்கையாய் வீட்டு சூழ்நிலையையும் பெத்தவங்களையும் மனசில் வச்சு யோசிச்சிருந்தா இந்த மாதிரி பண்ணி இருக்க மாட்டா மா, பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்ததை காதலுக்கென்று தவறாக எண்ணினால் பிரச்சினை தான் மா.  சுதந்திரத்துடன் சிந்திக்கும் பக்குவமும் வளர்த்து படிப்பை முழு மூச்சாய்க் கொண்டிருந்தால் இப் பிரச்சினை வந்திருக்காதே அம்மா அதனால் பிள்ளைகளும் பெற்றோரைக் காதல் செய்து அவர்களின் அன்பைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்" என்று கூற வாயடைத்துப் போயினர் பெற்றவர்கள் இருவரும்.                  மஞ்சுவோ "காதல் வயப்பட்டிருப்பினும் நமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மதிக்கும் தமிழச்சியாயிற்றே, தன்னையே இழக்குமளவிற்கு காதல் கண்ணை மூடியிருப்பின் அது உண்மைக் காதலல்லவே, வெறும் இனக்கவர்ச்சியில் சிக்குண்டு காமத்தையே விரும்பியிருக்கிறார்களோ" என்ற ஐயமும் வருகிறதப்பா என்றாள்.              மஞ்சு உண்மைக் காதல் கொண்டிருந்தால் கரு உருவாகி இருக்காது, சீனு உண்மைக் காதல் கொண்டிருந்தால் மஞ்சு கர்ப்பம் தெரிந்தும் ஓடியிருக்க மாட்டான், ஆதலால் காதல் செய்வீர் அப்படீன்னு ஒரு படம் கூட இப்படி தான் பா போகும் என்றாள்.                ராகவி தொடர்ந்தாள், "இவற்றையெல்லாம் மீறி ஒரு பெண் காதல் வயப்பட்டால் அக்காதலை துச்சமாக எண்ணி அவளைத் தீண்டாமல் உண்மை அன்புடன் விரல் நுனி கூடப் படாது பெண்மைக்கு உரிய மரியாதை கொடுப்பவனே உயர்ந்த மனிதன் என்பதே நிதர்சனமான உண்மை அம்மா, தூய்மையான காதலுடையவன் தூய்மையான அன்புடையவன் உடல் சுகத்துக்கு ஆசைப் பட்டிருக்க மாட்டான்".              அதையும் மீறி "தவறு நேர்ந்திடினும் கடைசிவரை தனிலும் கண் கலங்காது காப்பவனே காதலனாகிய கணவனாகிறான் மா, அதை விடுத்து புரிதல் இன்றி காதலின்றி ஒருவன் ஓடுகிறானென்றால் இவன் எப்படி உண்மைக் காதலனாய் இருக்க முடியும்" சொல்லுங்க என்றாள்.             அதுவும் உண்மை தான் டா என்றனர் பெற்றோர்கள், மீண்டும் ராகவி தொடர்ந்தாள், "இது காதலர்களுக்கு மட்டுமன்றி திருமணம் ஆனவர்களுக்கும் பொருந்தும் எப்படி என்றால் திருமணம் முடிந்து இருவருக்கும் ஒத்து வரவில்லை என்று விவாகரத்து வாங்கி அவர்களுக்குப் பிறந்த குழந்தையை யாரேனும் பொறுப்பெடுத்து வளர்த்தால் நலமே அப்படி இல்லாது அவரவர் வழியில் அவரவர் விருப்பத்திற்கேற்ப செல்ல நிறைய மழலைச் செல்வங்களோ அனாதை இல்லத்திலும் காப்பகங்களிலும் வாழ வழி வகுக்கிறதே சமுதாயத்தில் அவர்கள் படும் துயரங்களைச் சொல்லி மாளாது" பா என்றாள்.                 அதனால் "பெற்றவர்கள் பிள்ளைகளிடமும், பிள்ளைகள் பெற்றவர்களிடமும், காதலன் காதலியிடமும், காதலி காதலனிடமும், கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் தூய்மைக் காதலான அன்பைக் கொண்டிருக்க வேண்டும்" என்றாள்.                  ஆதலால் தாங்கள் சொல்ல வருவது என்னவென்பதை நாங்கள் அறியலாமா என பெற்றவர்கள் கிண்டலடிக்க ராகவியோ "அனைவரும் இன்புற்றும் எப் பிரச்சினைகள் வராதும் வாழ்ந்திட ஆதலால் காதல் செய்வீர்" எனக் கூறினேன் பா என்று முடித்தாள்.              சரிமா "அம்மாவும் நானும் மஞ்சு வீட்டுக்குப் போயிட்டு வந்துர்றோம் நீ வீட்டுல பத்திரமா இருமா என்று கூற அப்பா நீங்க என்னைப் பற்றி கவலைப்படாமப் போயிட்டு வாங்க நான் பத்திரமா இருக்கேன்" என்று ராகவி கூற இப்போ தான் மா நிம்மதியா இருக்கு என்று பெற்றவர்கள் கூறினார்கள்.                  ராகவியோ  "அப்பா அம்மா எனக்கொரு ஆசை அதை நிறைவேற்ற நீங்கள் தான் உதவி பண்ணனும் என்றாள். ரத்தினமும் ரஞ்சிதாவும் குழப்பமாய் ராகவியைப் பார்க்க அவளோ பெண்கள் நலனுக்காகவும், விழிப்புணர்வுக்காகவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும் நானும் சமூக ஆர்வலராகப் பணியாற்றவே விரும்புகிறேன்" இதுவே நான் மஞ்சுவிற்கு செய்யும் இறுதி அஞ்சலியும் கடமையுமாகும்.              அதனால் "பெண்கள் முன்னேற்றத்திற்காக அமைப்பு ஒன்றை அமைத்து அனைத்துப் பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகத்தில் அவர்களும் நன்முறையில் வாழ நானும் ஒரு தூண்டுகோலாய் இருக்க ஆசைப்படுகிறேன் நீங்கள் அதற்கு உறுதுணையாக இருப்பீர்களா" என்று பெற்றவர்களைப் பார்த்துக் கேட்டாள்.                   அதற்கு அவர்களோ "ஒரு மஞ்சுவை இழந்து விட்டோம் இன்னும் பல பெண்களைக் காக்க வேண்டும் என்ற உன் நல்ல எண்ணம் எங்களையும் ஆச்சரியப்படவே வைக்கிறது, உனது தன்னம்பிக்கையும் விடா முயற்சியையும் என்றும் கைவிடாதிருடா" நாங்கள் என்றும் உனக்கு பக்கபலமாக இருப்போம் என்று கூறினார்கள். என் செல்ல அப்பா அம்மா என்று இருவருக்கும் முத்த மழை பொழிய அவர்களும் ராகவியை மகளாய்ப் பெற்றதில் பெருமை கொண்டு முத்த மழை பொழிந்தார்கள். தனது மகளைப் பற்றிய கவலை மறந்து துக்கத்தில் பங்குகொள்ள நிம்மதியாய் மஞ்சு வீடு நோக்கிப் பயணமானார்கள் ரத்தினமும் ரஞ்சிதாவும்.              காதல் புனிதமானது, இனக்கவர்ச்சியை காதலென எண்ணாமல் தூய அன்புதனை காதலாக்கி வாழ்வாங்கு வாழ்ந்திடுங்கள். பிரியமுடன் இரா. கோமதி பொள்ளாச்சி.                                                 

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.