தோற்றப் பிழை
நந்து சுந்து
“அவளைப் பாத்தேன்” என்றார் பாலசுந்தரம்.
“யாரை?” என்றார் சர்மா.
“மலர்விழி”
“ஓ..அடிக்கடி சொல்லுவியே. மங்களா டைப்பிங் ஸ்கூல். அந்த பொண்ணு தானே?”
“ஆமா”
இருவரும் நடைப் பயிற்சியில் இருந்தார்கள். காலை நேர மெல்லிய குளிரையும் மீறி முதுகுப் பக்கம் டீ ஷர்ட்டில் வியர்வைத் தீவுகள்.
“எங்கே பாத்தே?”
“என்னோட நர்ஸிங் ஹோம்ல”
மல்லிகார்ஜுனா டிபன் சென்டர் என்ற சிறிய கடைக்கு முன் நின்றார்கள். அது ஒரு சிறிய ஹோட்டல். இருபதடி அகலம் கூட இருக்காது. பெங்களூர் நகரில் பல தெருவோர ஹோட்டல்கள் அப்படித்தான்.
இரண்டு நிமிடத்தில் காபி வந்தது. கூர்க் காபியின் மணம் கிறங்க வைத்தது.
“கிட்டத்தட்ட நாப்பது வருஷம் கழிச்சு மலரைப் பாக்கறேன்”
“இன்னும் அவளை நீ ஞாபகம் வைச்சிருக்கியா?”
“சில முகங்களை மறக்க முடியாது. அதுவும் பால்ய பருவ முகங்கள் அப்படியே மனசுல பதிஞ்சிடும்” - சற்று நேரம் கண்களை மூடி பழைய நினைவுகளில் இருந்தார் பாலசுந்தரம்.
தெருவில் ஒரு பெண் பலமான குரலில் போனில் பேசிக் கொண்டு போனள். அதிகாலை அமைதியைக் கிழித்தது அது.
“மலர் இப்படி கத்தவே மாட்டா. எல்லாத்துலயுமே ஒரு மென்மை இருக்கும். கற்பூரவல்லி இலையைத் தொட்டிருக்கியா? மிருதுவா இருக்கும். மலர் அப்படிப்பட்டவ”
“திடீர்னு மலர்விழி இப்போ எதுக்காக வந்தா?”
“ஈவினிங் பார்க்குக்கு வா. சொல்றேன்”
பாலசுந்தரம் வீட்டுக்குப் போய் குளித்தார்.
அரை மணி நேரத்தில் அமெரிக்காவில் இருந்த மகளிடமிருந்து வீடியோ கால் வந்தது. பேரன் ஹக் செய்வது போல பாவனை காட்டினான். செயற்கைக் கோள் மூலமாக வந்த செயற்கை ஹக்.
சமையல்காரம்மா வந்தாள்.
“என்ன செய்யட்டும்?”
“மோர்க் குழம்பும் உருளை பொரியலும் செஞ்சுடுங்க. நைட்டுக்கு எதுவும் வேணாம். வெளில சாப்பிட்டுக்கறேன்”
மனைவி பவானி ஆறு வருடங்களுக்கு முன்பாக கண்ணை மூடிப் போனதிலிருந்து இதே சமையல்காரம்மா தான்.
மாலை ஆறு மணிக்கு செவன்த் மெயினில் இருந்த பூங்காவுக்குப் போனார்.
பத்து நிமிடத்தில் சர்மா வந்தார்.
“சொல்லு. நீ சின்ன வயசுல மலரை லவ் பண்ணியா?” என்று கேட்டார்.
“இல்லே. லவ் பண்ணியிருந்தா இந்த த்ரில் இருந்திருக்காது. லவ் பண்றதை விட பண்ணாம இருக்கறது சில சமயம் சுவாரசியமா இருக்கும்”
“அவ உன்னை லவ் பண்ணினாளா?”
“தெரியாது. ஆனா என்னை அவளுக்குப் பிடிச்சிருந்ததுன்னு தெரியும்”
பாலசுந்தரம் சொல்ல ஆரம்பித்தார்.
நாற்பது வருடங்களுக்கு முன்னால் அந்த ஊரில் இருந்தான் அவன். ஆரம்ப நிலையில் இருக்கும் முனிசிபாலிட்டி அது.
ஊருக்குள்ளே ஒரு பிரதான தெருவில் தான் இருந்தான் பாலசுந்தரம். பி.யூ.சி படித்துக் கொண்டிருந்தான்.
சிலோன் ரேடியோ பிடிக்கும். ஒரு முறை “ஓ..மாம்பழத்து வண்டு’ பாடலை விரும்பிக் கேட்டவர்கள் வரிசையில் அவன் பெயர் கூட வந்திருந்தது.
ஒரு நாள் மாலை நான்கு மணிக்கு வாசல் திண்ணயில் அமர்ந்து ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது தான் அவள் அவனைக் கடந்து தெருவில் போனாள்.
கையில் சுருட்டிய பேப்பர் இருந்தது. விருக் விருக்கென நடந்து போனாள்.
ஒரு மணி நேரம் கழித்து திரும்ப நடந்து வந்தாள். கையில் இப்போதும் சுருட்டிய பேப்பர்.
தெருவின் கடைக்கோடியில் ‘மங்களா டைப்ரைட்டிங் ஸ்கூல்’ என்று ஒன்று இருக்கிறது. உரிமையாளர் ரங்கநாதன் என்று துருப்பிடித்த போர்ட் ஒன்று சொல்லிக் கொண்டிருந்தது.
அங்கு தான் அவள் போகிறாள் என்று அனுமானித்தான்.
மறு நாள். மூன்றே முக்கால் மணிக்கெல்லாம் பாலசுந்தரம் திண்ணைக்கு வந்து விட்டான். சரியாக நான்கு மணிக்கு அவள் வந்து விட்டாள்.
இன்று இடது பக்கம் திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவனும் அவளைப் பார்த்தான். ஒரு கணம் பிரமித்துப் போனான். என்னவொரு கண்கள்!
யானைத் தந்தம் போன்ற நிறத்தில் முகம். அதில் கச்சிதமான வடிவில் கண்கள்.
ஐந்து மணிக்கு மறுபடியும் திரும்பி வந்தாள். வேண்டுமென்றே ரேடியோவின் சத்தத்தைக் கூட்டினான்.
அவன் ஏற்படுத்திய கவன ஈர்ப்பு அவள் முகத்தில் கோபத்தை உண்டாக்கவில்லை. அதுவே போதுமானதாக இருந்தது அவனுக்கு.
அடுத்த நாள் திண்ணைக்குப் போகும் முன் கண்ணாடி முன் நின்றான். தலையை வாரிக் கொண்டான்.
அவள் வருவது தூரத்திலிருந்தே தெரிந்தது. இரட்டை ஜடையை எடுத்து முன் பக்கமாக போட்டிருந்தாள். ஜடையை மடித்திருக்கவில்லை. ரயில் மிடில் பெர்த் சங்கிலி மாதிரி தொங்கிக் கொண்டிருந்தன.
அவனைக் கடக்கும் போது ஜடை நுனியை கைகளால் திருகிக் கொண்டே நடந்தாள். ஒரே ஒரு முறை திரும்பி அவனைப் பார்த்தாள்.
அடுத்தடுத்த நாட்களிலும் திரும்பிப் பார்த்தாள்.
ஐந்தாம் நாள். மாலை நான்கு மணிக்கு வாசலுக்கு வந்தான். அவளைக் காணோம். ஏமாற்றமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் நண்பன் பாஸ்கர் வந்தான்.
“இன்னைக்கு வைகுண்ட ஏகாதசி” என்றான் பாஸ்கர். ரங்கநாதன் டைப்பிங் ஸ்கூலுக்கு லீவு விட்டு விட்டார் என்று புரிந்தது.
பெருமாள் கோவிலுக்குப் போனார்கள். கூட்டமாக இருந்தது. அந்தப் பெண் எங்கேனும் இருக்கிறாளா எனத் தேடினான். தென்படவில்லை.
சக்கரத்தாழ்வர் சன்னதியருகே பிரகாரத்தில் அமர்ந்தார்கள்.
“டைப் ரைட்டிங் க்ளாஸ்ல யார் வேணும்னாலும் சேரலாமா? ரங்கநாதன் சேத்திப்பாரா?” என்றான் திடீரென பாலசுந்தரம்.
“காசு கொடுத்தா யார் வேணும்னாலும் சேரலாம். யாரை சேத்தப் போறே?”
“நான் தான்”
மூன்று நாட்கள் கழித்து டைப்ரைட்டிங் ஸ்கூல் ரங்கநாதன் முன்னால் நின்று கொண்டிருந்தான் பால சுந்தரம்.
“என்ன?”
“டைப் ரைட்டிங் க்ளாஸ் சேரனும்’
அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார் அவர்.
“நீ மாஜிஸ்ட்ரேட் மகாதேவன் பையன் இல்லையா?”
“ஆமா”
“உனக்கெதுக்கு டைப்பிங்?”
“ஒரு அறிவு விருத்திக்குத் தான்”
டைப்பிங் கற்றுக் கொண்டால் அறிவு எப்படி வளரும் என அவருக்குப் புரியவில்லை. இருந்தாலும் ஒரு கிராக்கியை விட அவர் தயாராக இல்லை. அதுவும் பணக்கார கிராக்கி.
“காத்தால பத்து மணிக்கு தினமும் வந்துடு”
“இல்லே சார். சாயங்காலம் நாலு மணி ஒதுக்கிக் கொடுத்தா பரவாயில்லே”
ரங்கநாதன் யோசித்தார். மாஜிஸ்ட்ரேட் பையன். மறுக்க முடியாது.
“சரி. நாலு மணி ஒதுக்கித் தர்ரேன். நாளைலேந்து வந்துடு”
“நாளைக்கா? இன்னைக்கே வந்துடறேனே”
“இன்னைக்கு கரிநாள். வேணாம்”
கரிநாள் மேல் கோபமாக வந்தது அவனுக்கு.
வெள்ளிக் கிழமை. பத்து நிமிடம் முன்பாகவே டைப்பிங் ஸ்கூலுக்குப் போய் விட்டான் பால சுந்தரம். உள்ளிருந்து டொக டொகவென டைப்ரைட்டர் பொத்தான்களின் சத்தம் வந்து கொண்டிருந்தது. நடு நடுவில் உருளையை தள்ளி விடும் சத்தம் வேறு.
உள்ளே போனான்.
“இந்த மெஷின்ல உக்காரு” என்றார் ரங்கநாதன்.
உட்கார்ந்தான். ரெமிங்க்டன் மெஷின் கருப்பு பூனைக் குட்டி மாதிரி அமர்ந்திருந்தது. பல இடங்களில் சாயம் உதிர்ந்து போயிருந்தது.
ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். திரும்பித் திரும்பி வாசலையே பார்த்தான்.
இதோ வந்து விட்டாள். நேராக அவனுடைய மெஷினுக்கு வந்தவள் அவன் அங்கே ஆக்கிரமித்திருந்ததைப் பார்த்ததும் குழம்பினாள். அங்கேயே நின்றாள்.
“மலர்விழி” என்று அழைக்கும் சத்தம் கேட்டது. அவள் திரும்பிப் பார்த்தாள். ரங்கநாதன் மாஸ்டர்.
“உன் மெஷின் அந்த பையனுக்கு கொடுத்திட்டேன்”
“ஏன்?” என்பது போல் பார்த்தாள்.
“மாஜிஸ்டிரேட் பையன். வேற டைம் இல்லேன்னு சொல்லிட்டான். நீ இனிமே காத்தால பத்து மணிக்கு வா”
அவனுக்கு திக்கென்றது. திட்டம் பாதை மாறிப் போகிறதே!
மலர்விழி பதில் ஏதும் பேசாமல் வெளியே போனாள். ரங்கநாதனை எதிர்த்து பேச முடியாது. எல்லோர் எதிரிலும் கத்துவார்.
வீட்டுக்குப் போனான். இரவு தூக்கம் வரவில்லை. மாஜிஸ்திரேட் பையன் என்ற அந்தஸ்த்தை வைத்து அவளை சாய்த்து விட்டதாக கோபமாய் இருப்பாளோ? மனசு என்னவோ செய்தது.
மறு நாள் காலை. பத்து மணிக்கு வாசலுக்கு வந்து நின்றான். மலர்விழி டைப்ரைட்டிங் ஸ்கூல் நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.
திரும்பி அவனைப் பார்த்தாள். பார்வையில் உஷ்ணம் தெரியவில்லை. வெயில் தான் அவள் முகத்தை வாட்டியிருந்தது.
நான்காம் நாள். அவன் மெஷினில் அமர்ந்தவுடன் இடது பக்கம் ஏதோ நிழலாடியது. திரும்பினான்.
மலர்விழி தான் மெஷினில் பேப்பரை சொருகிக் கொண்டிருந்தாள்.
வகுப்பு முடிந்து வெளியே வந்தான். பின்னாலேயே அவளும் வந்தாள்.
“மலர்..எப்படி மறுபடியும் இதே டைம்க்கு வந்தே?” என்றாள் அருகில் வந்து கொண்டிருந்த இன்னொரு பெயர் தெரியாத பெண்.
“சார் கிட்டே கெஞ்சிக் கூத்தாடி வாங்கிட்டேன். இந்த நேரம் தான் செளகரியம்”
‘செளகரியம்’ – இந்த வார்த்தையைக் கேட்டதும் அவனுக்கு ஜிவ்வென்றிருந்தது.
அதன் பிறகு தினமும் நேர்த்தியாக உடை உடுத்திக் கொண்டு வந்தான். குறிப்பாக அழகாக தலை வாரிக் கொண்டான்.
“எவ்வளவு நேரம்டா தலை வாருவே?” என்று அம்மா கூட கடிந்து கொள்வாள்.
இப்படியே நான்கு மாதங்கள். மலருடன் எதுவும் அவன் பேசவில்லை. ரங்கநாதன் எதிரே பேசி விடவும் முடியாது.
லோயர் பரிட்சையில் மலர் முதல் வகுப்பில் பாஸ் செய்து விட்டாள். அடுத்து ஹையருக்கும் படிக்க ஆரம்பித்தாள். அப்படியே ஷார்ட் ஹேண்டும் படிக்க ஆரம்பித்தாள்.
இப்போதெல்லாம் அவனால் அவள் கண்களை க்ளோஸ் அப்பில் பார்க்க முடிகிறது. இமைகளில் இருக்கும் நீளமான இரப்பைகள் கூடத் தெரிகின்றன.
ஹையர் பரிட்சைக்கு பணம் கட்டும் நேரம் வந்தது.
“மலர். நாளைக்குள்ள பணம் கட்டனும்” என்றார் மாஸ்டர்.
“ஒரு வாரம் டைம் கிடைக்காதா?” என்றாள் சோகமாக.
“இல்லே மலர். நாளைக்கு பணத்தோட வா”
அடுத்த நாள். மலர் தன் டேபிளில் வந்து அமர்ந்தவுடன் சத்தமில்லாமல் ஒரு கவரை அவள் டேபிளில் வைத்தான் அவன்.
“என்ன?’ என்பது போல் பார்த்தாள்.
“பிரிச்சுப் பாரு” என விரல்களால் சமிஞ்கை செய்தான்.
பிரித்தாள். உள்ளே பரிட்சைக்கு கட்டுவதற்கான பணம். கூடவே ஒரு கடிதம்.
‘இது ஒரு சின்ன உதவி தான். உன் கண் கலங்கக் கூடாது. அதுக்காகத் தான் இது. பின் குறிப்பு: உன் கண் ரொம்ப அழகா இருக்கு’
கண்களால் குளிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். உதடு பிரியாமல் ஒரு கோடு மாதிரி புன்னகைத்தாள்.
மறு நாள். வகுப்பு ஆரம்பிக்கும் முன் அவன் மெஷின் அருகே ஒரு பேப்பரை வைத்தாள் மலர்.
பிரித்துப் படித்தான்.
நன்றி தெரிவித்திருந்தாள். கீழே ஒரு வாக்கியம் எழுதி அதை அடிக் கோடிட்டிருந்தாள். அந்த வாக்கியம் தான் அவனை என்னவோ செய்தது. மிகவும் கர்வமாக உணர்ந்தான்.
ஹையர் பரிட்சை எழுதி விட்டாள் மலர். எதிர்பார்த்தது போலவே இதிலும் முதல் வகுப்பு.
மாஸ்டர் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார்.
“மலர் ஹையர் பாஸ் பண்ணிட்டா. நல்ல வேலை கிடைக்கனும். உங்க அப்பா கிட்டே சொல்லி கோர்ட்ல ஏதாவது வேலை போட்டுக் கொடுக்கச் சொல்லு”
“சார்”
“அப்பாவால முடியும். மாஜிஸ்டிரேட் நினைச்சா எதுவும் செய்ய முடியும். ஒரு அதிகாரம் இருக்கு இல்லே”
மறுக்க முடியவில்லை. அப்பாவிடம் சொன்னான்.
“பதினெட்டு வயசு ஆயிடுச்சா?” என்று மட்டும் தான் அப்பா கேட்டார். வேலை வாங்கிக் கொடுத்து விட்டார்.
பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி பாஸ் செய்து விட்டால் பணி நிரந்தரம் ஆகி விடும். மலர் செய்து விடுவாள்.
பி.யூ.சி முடித்ததும் மருத்துவக் கல்லூரியில் இடமும் கிடைத்து விட்டது அவனுக்கு.
எப்போதாவது மலரை கோவிலிலோ அல்லது கடைத் தெருவிலோ பார்ப்பான். சம்பாத்தியம் காரணமாக அவள் கன்னத்தில் கொஞ்சம் மினு மினுப்பு கூடியிருந்தது.
இப்போதெல்லாம் நேர்த்தியாக உடுத்துகிறாள். கண்களின் கவர்ச்சி இன்னும் கூடியிருந்தது.
அவளைக் காதலிக்கலாமா? முடியாது என்று அவனுக்குத் தெரியும். அவள் அவனை விட ஒரு வயது பெரியவள். அந்த சின்ன ஊரில் மாஜிஸ்டிரேட் பையன் அவ்வளவு சுலபமாக காதலித்து விடவும் முடியாது. சமூகம் பார்த்துக் கொண்டே இருக்கும். கேள்வி கேட்கும்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஹாஸ்டலுக்கு வந்து விட்டான். அடிக்கடி ஊருக்குப் போக முடியவில்லை.
நான்காம் வருட லீவில் போன போது தான் மலருக்கு கல்யாணம் ஆகி விட்டதாக அப்பா சொன்னார். கோர்ட்டுக்கு வரும் ஒரு பணக்கார வக்கீலுக்கு அவளைப் பிடித்துப் போக தன் மகனுக்கு கட்டி வைத்து விட்டார்.
பழைய கதை எல்லாவற்றையும் கூறி முடித்து விட்டு பார்க் பெஞ்சில் சாய்ந்து உட்கார்ந்தான் பாலசுந்தரம்.
“இப்போ திடீர்னு எப்படி மலர்விழியை சந்திச்சே?”
“என்னோட நர்ஸிங் ஹோமுக்கு வந்திருக்கா”
“எதுக்கு?”
“கண் ஆஸ்பத்திரிக்கு எதுக்கு வருவாங்க? சிகிச்சைக்குத் தான்”
“என்ன சொல்ல வர்ரே? மலருக்கு கண்ல ஏதாவது ப்ராப்ளமா?”
“ஆமா”
“மலர் உன்னைப் பாத்தாளா?”
“இல்லே. அவளால இப்போ பாக்க முடியாது. அவளுக்கு கண் பார்வைல பிரச்சினை. நரம்பு கோளாறு. ஆபரேஷன் செய்யனும்”
“ஓ...ஆபரேஷன் செஞ்சா பார்வை வந்துடுமா?”
“வந்துடும். சின்ன ப்ராப்ளம் தான். சரி செஞ்சிடலாம்” என்று ஒரு மெடிக்கல் பதத்தை பிரயோகித்தார்.
“நாளைக்கு திங்கட்கிழமை. காத்தால ஆபரேஷன். நான் தான் செய்யறேன்”
“மலரைப் பாத்ததுல சந்தோஷம் தானே?”
“சந்தோஷம் தான். ஆனா இந்த கோலத்துல பாத்தது வேதனையைக் கொடுக்குது. இன்னும் என் மனசுல மலர் விழியோட அழகான கண்கள் அப்படியே இருக்கு. பனித் துளி படிஞ்சிருக்கற சங்கு புஷ்பம் மாதிரி பளிச்சுன்னு இருக்கற கண்களை இப்போ பாக்க முடியல்லே. கண்கள் மூடியிருக்கு. உலர்ந்த பேரீச்சம் பழம் மாதிரி இருக்கு. மலரை இந்த கோலத்துல என்னால பாக்க முடியல்லே”
“நீ ஒரு கண் டாக்டர். இப்படிப் பேசக் கூடாது”
“நான் டாக்டராப் பேசல்லே. பாலசுந்தரமா பேசறேன். உனக்குத் தெரியுமா? பால்ய வயசுல ஒருத்தர் கூட பழகியிருந்தா இன்னும் அந்த பால்ய வயசு உருவம் தான் மனசுல பதிஞ்சிருக்கும். அந்த பழைய உருவத்தை நினைச்சுகிட்டிருக்கறப்ப அதுக்கு அப்படியே ஆபோஸிட்டா வேற உருவத்தைப் பார்த்தா அதிர்ச்சியைக் கொடுக்கும். மனசு வலிக்கும்”
“வாஸ்தவம் தான். நீ தான் ஆபரேஷன் செய்யப் போறேன்னு மலருக்குத் தெரியுமா?”
“டாக்டர் பேர் பாலசுந்தரம்னு தெரிஞ்சவுடனே விசாரிச்சிருக்கா. அது நான் தான்னு அவளுக்குத் தெரிஞ்சு போயிடுச்சு. ஆபரேஷன் முடிஞ்சு கட்டு அவுத்தவுடனே நான் டாக்டரைத் தான் முதல்ல பாக்கனும்னு சொல்லியிருக்காளாம்”
“ஓ...இன்டரஸ்டிங்” என்றார் சர்மா.
பாலசுந்தரம் பதில் பேசவில்லை.
மறு நாள். மாலை.
சர்மாவுக்குப் போன் செய்தார் பாலசுந்தரம்.
“மலருக்கு ஆபரேஷன் முடிஞ்சது. இந்த வாரத்துல கட்டு பிரிச்சுடுவாங்க”
“வெரி குட்”
“உனக்கு மாண்டியா பக்கத்துல ஒரு பண்ணை வீடு இருக்கு இல்லே. அங்கே போய் நாலு நாள் தங்கிட்டு வரலாம். காத்தால கார் எடுத்துகிட்டு வா”
“ஆஸ்பத்திரி இருக்கே”
“ஒரு ப்ரேக் எடுத்துக்கறேன்”
பண்ணை வீட்டில் ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக் கொண்டிருந்தார் பாலசுந்தரம்.
“நீ ஏன் ஆஸ்பத்திரியை விட்டு இங்கே ஓடி வந்தே?”
“மலர் என்னை பாத்துடக் கூடாதுன்னு தான்”
“அது தான் ஏன்?”
“நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். பால்ய பருவத்துல ஒருத்தரைப் பாத்தா அந்த உருவம் அப்படியே மனசுல பதிஞ்சிருக்கும்னு. அந்த உருவத்துக்கு மாறா நிஜ உருவத்தைப் பாக்கறப்ப மனசு வலிக்கும். இந்தா இதைப் பாரு”
தன் சட்டைப் பையில் கையை விட்டு நாலாக மடித்து வைத்திருந்த ஒரு பேப்பரை எடுத்தார்.
பழுப்பேறிப் போயிருந்தது அந்த காகிதம். மடித்த இடங்கள் நைந்து போயிருந்தன.
அதை சர்மாவிடம் நீட்டினார்.
“டைப் ரைட்டிங் ஹையர் பரிட்சை எழுத நான் அவளுக்கு பணம் கொடுத்து உதவினவுடனே மறுநாள் அவ என் டேபிள்ல வைச்ச கடிதம். என்ன எழுதியிருக்கான்னு படிச்சுப் பாரு”
படித்துப் பார்த்தார் சர்மா.
‘மிக்க நன்றி. வேலைக்குப் போனதும் திருப்பிக் கொடுத்திடறேன். பின் குறிப்பு: உன் ஹேர் ஸ்டைல் ரொம்ப அழகா இருக்கு’ என்ற வாசகம் எழுதி அடிக்கோடிட்டிருந்தது.
“அந்த வாசகத்தைப் படிச்சியா? அந்த அடிக்கோட்டைப் பாத்தியா? அப்போ என் ஹேர் ஸ்டைல் ஹிந்தி நடிகர் தேவ் ஆனந்த் மாதிரி இருக்கும். அந்த ஏரியாலவே என் ஹேர் ஸ்டைல் பிரசித்தம். இப்போ என்னைப் பாரு. என் தலையைப் பாரு. பின்னால எண்ணி இருபது முடி இருக்கு. முன்னால முழு வழுக்கை. மலர் எதிர்பார்க்கற பாலசுந்தரம் இது இல்லே. அவள் என்னை பாக்க வேணாம். இப்போ அவளைப் பாத்து நான் படற அவஸ்தையை அவளும் பட வேணாம். அவ மனசுல அந்த பழைய தேவ் ஆனந்தே இருக்கட்டும். அவ டிஸ்சார்ஜ் ஆகிப் போனவுடனே நான் ஆஸ்பத்திரிக்குப் போறேன்”
ஊஞ்சலிலிருந்து எழுந்தார் பாலசுந்தரம். ஊஞ்சல் இன்னும் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்