logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ROGEETHA J

சிறுகதை வரிசை எண் # 105


‌ தாய்மை குழந்தை பிறக்கும் தருணம், வாழ்வின் அத்தனை உணர்ச்சிகளும் ஒருசேர வெளிப்படும்.எங்கும் வளையல் ஓசை நிரம்ப , மிகுந்த ஆரவாரத்தோடு இனிதே முடிந்த விசேஷத்தில், உற்சாகம் ஒரு புறம் இருக்க,என் குழந்தையை விரைவில் ஏந்த மனம் துடித்தது.அப்போது பட்டென்று ஒருகணம் கண் முன் தோன்றிய என் தாய் என் சிந்தை போக்கினை மாற்றி அமைத்தார். எனவே கருவின் மீது கைகளை வைத்து நான் பேசத் தொடங்கினேன். தாய்மை , பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறைவன் கொடுத்த வரம்.அந்த வரத்தின் மகிமையை உணராதோர் எவரும் இலர்.சுக துக்கம் அடங்கிய இவ்வரத்தை ,என் தாய் சுவைக்க சவால்கள் பல கடக்க நேரிட்டது.தன் வாழ்வை கேள்விக்குறியாக்கி, என்னை உலகிற்கு அறிமுகப்படுத்திய அன்னையின் மனவலிகள் எனக்குள் அலைகளாக எழுகின்றன. அதை நீயும் நன்கு கேட்டுக்கொள். தன் குழந்தை தன் வயிற்றில் இருந்தும்; கையிலே ஏந்த துடிக்கும் தாயின் ஏக்கம் அளவற்றது.அப்படி ஏங்கி கற்பனையில் உறைந்த ஒரு இரவு வேளையில் திடீரென வலி. வீடெங்கும் பதட்டமும் பரபரப்பும். ஆசையும் தவிப்பும் அவசரமும் சேர்ந்த அந்த நொடிகளே, அவள் வாழ்வின் புதிய இலக்கியம்.கற்பனைகளுக்கு உருவம் சேர்க்கும் மகிழ்ச்சியில் மருத்துவமனை வாசலில் காத்திருந்தார்கள்.ஆனால் மருத்துவரின் நம்பிக்கையற்ற பதிலால் மனம் தளர்ந்து , இதயம் வெந்தனர். இந்நிகழ்வை கண்ட வானமும் மேகமுடைத்து ; இடி மின்னல் பிளக்க ; மழை பொழிவித்தது . இரவு 11 மணி அளவில் தொடங்கிய வலி 1 மணி அளவில் பயத்தோடும் சேர்ந்துவிட்டது. மனமுடைந்த தருணத்தில் இறைவனே மருத்துவர் வேடம் பூண்டார் போலும் , என நினைக்கும் படி ஒரு அசுவினிதேவர் அவள் உயிரின் பொறுப்பை ஒப்பந்தமாக கேட்டார். அவளின் அச்சத்தை நம்பிக்கை வீழ்த்தவே தாய்மையின் ஆழம் புலப்பட்டது . ஒவ்வொரு நொடியும் வாழ்வா!? சாவா!? என்ற போராட்டம். ஒரு வழியாக கொட்டி தீர்த்த வானம் அதிகாலை வேளையில் அமைதியானது . எங்கும் நிசப்தம் சூழ்ந்த நேரத்தில் நாற் திசையிலும் ஓங்கி ஒலித்தது ஒரு அழுகுரலே!! துயிலிழந்த கண்களில் கண்ணீர் பொங்க; கைகள் நடுங்க ; மகிழ்ச்சியில் அனைவரும் சிலுர்தனர். அந்த தாயின் தன்னலம் கருதா செயலினால் தான் , இன்று நான் உலகம் காண்கிறேன் விரைவில் உன்னையும் காண்பேன். இதுவே தாய்மை பற்றி என் தாய் எனக்களித்த கல்வி . அவ்வகையில் நான் உலகிற்கு அறிமுகமான அன்றே உணர்ந்திட்டேன் : பெண்மையின் தைரியமும் தாய்மையின் தன்னம்பிக்கையும் எச்சவாலையும் எதிர்க்க வல்லது என்று. நீ ஆணோ , பெண்ணா இவ்வுலகில் உன் முதல் பார்வை கூட பிழையற்றதாய் இருக்கட்டும் . உன் பார்வையும் எண்ணமும் உயர்ந்ததாகவே இருக்கட்டும்.என் அழகே உன் முன்னுரிமைகளே இவ்வுலகத்தின் அழகை தீர்மானிக்க வல்லது . என் பிறப்பினால் தாய்மை பற்றி அறிந்தேன் ; உன் பிறப்பினால் தான் , அதை நான் உணர்கிறேன். ஒரு தாயாக அல்ல , உன் தந்தையாக. உனை தோள் மீது ஏற்றி கதைகள் பல கூற நினைக்கும் உன் தந்தையின் முதல் கதை இதுவே!!

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.