ச. மங்கையர்க்கரசி
கவிதை வரிசை எண்
# 294
பெண் பெருந்தெய்வம்
தெய்வ வடிவளித்துத் தேரிலேற்றிச்
சிறப்புச் செய்வதாய்
சிந்தனையில் பதியவைத்து செப்புச்சிலையென்றும்
சின்ன இடையென்றும் அன்ன நடையென்றும்
வார்த்தைகளில் வண்ணம் கூட்டி எண்ணங்களில் பின்னேற்றி
சின்ன புத்தியால் பெண் எனும் பெருநெருப்பை
சொற்போர்வையிட்டு அதன் ஒளி வெம்மை வெளிப்படா
கண்களறியா கல்வேலியால் கடினப் பட்ட மனங்களால்
கைப்படுத்தி காலங்கள் கடத்தப்படினும்
பெருங் குவியல் உணர்வுகள் குன்றென விழுமிய
விம்மும் இதயமும் ஈர நெஞ்சமும் பனியென
திண்மையும் குளுமையுமாய்
கரைதலும் கடினப் படுதலுமான
ஒரு மொத்தக் கலவையாய்
காதலும் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் புள்ளினமாய் பறந்து படும் விடுதலையுணர்வும் புன்னகைக்கும் விழிகளும்
இரக்க மென்மையேறிய இனிய இதழ்களும்
வலியேற்றம் கொண்ட திண்ணிய எண்ணங்களும்
ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தப் பெருங் கூட்டாய்
சீற்றமும் ஏற்றமுமான
உயரிய உன்னதம் உள்ளொளி யாய் ஒளிர்ந்துக் கிளர்ந்தெழுந்து
ஆர்ப்பரித்து அடங்கும் ஆழத்தைக்
கைக்கொண்டாய்!
சிறகுகளைச் சிதைக்கும் சிறுமதியாளர் சிங்காரவார்த்தைப்
பிரவாகத்தில் மூழ்கிச் சிக்கித் திணறாமல்
சீறி எழும்பிப் பிரளயமாய் பேரூழிக் காற்றாய்
விண்ணுக்கும் மண்ணுக்குமாய் ஓங்கி வளர்ந்து
ஒளிப்பிழம்பாய் பரிமாணம் கொள்வீர் எம்
பைந்தமிழ் பெண்டிரே!
…...ச. மங்கையர்க்கரசி
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்