கவிக்கடல் கவிதைக்கோமான்
சிறுகதை வரிசை எண்
# 81
அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதைப் போட்டி:
சிறுகதை:
மரகத வீணை
அரங்கத்தின் உள்ளே செல்வதற்கு முன்பு நுழைவாயிலில் நுழைவதற்கு முன்பாகத் தொடங்கி அரங்கத்தின் உள் நுழையும் இடத்தில் மட்டுமல்ல…. மேடையின் இரு முனையிலுங் கூட வாழை மரங்கள், மாவிலைத் தோரணங்கள் திருமண விழாவில் கட்டப்படுவது போலவும், திருவிழாக் காலங்களில் கோயில் வாயிலில் கட்டப்படுவது போலவும் இலக்கிய விழா அரங்கில் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்ததும்,
விழாவிற்கு வந்தவர்கள், “இதென்ன இலக்கிய விழாவா? இல்ல…. திருமண விழாவா? இல்ல…. கோயில் விழாவா?” என்று எல்லோருமே வியந்து பார்த்தனர்.
"வாழ்த்த வந்திருக்கும் கடவுள்களே! வணங்குகிறோம்; வரவேற்கிறோம்! வாருங்கள்! வாருங்கள்!”
என்ற வரவேற்பு அழைப்பிதழை விழாவிற்கு வரும் அனைவருக்கும் தனித்தனியாக வழங்கி வரவேற்றுக் கொண்டிருந்தனர் குமரனும் குமரனுடைய மனைவி வசந்தியும்.
“விழாவிற்கு வருபவர்களை எல்லாம் திருமணத்தில் வரவேற்பது போல வரவேற்கிறீங்களே நீங்க யாருங்க?”
என்று எல்லோரும் கேட்டதற்கு, நோபல் பரிசைப் பெற்ற பால பாரதியின் அப்பம்மா தான் நாங்க.” என்று அடக்கமாகக் கூறினர்.
இதைக் கேட்ட எல்லோருமே வியந்து அவர்களைப் பாராட்டி வாழ்த்தி விட்டு கேட்டனர்.
“ஆமாம் இலக்கிய அரங்கத்தையே கல்யாண மண்டபம், கோயில் மண்டபம் மாதிரி மாத்தி வாழை மரங்கள், மாவிலைத் தோரணங்கள், வேப்பிலைத் தோரணங்கள் அப்படின்னு அரங்கத்தையே பசுமையா மாத்திட்டீங்களே எதுக்கு?”
“எங்க மகனோட பாராட்டு விழாவுக்கு வந்து எங்க மகனைப் பாராட்டி வாழ்த்தி மகிழ்ச்சிய பரிமாறிக்க வந்திருக்கீங்க. உங்க எல்லாருடைய மூச்சுக் காத்தும் அசுத்தக் காத்தாகும்; அதைத் தூய சுத்தமான காத்தா மாத்தி நல்ல காத்தைக் கொடுக்கிற சக்தி இந்த வாழைமரம், மாவிலை, வேப்பிலைத் தோரணங்களுக்கு இருக்கு. நீங்க நல்ல காத்த சுவாசிக்கத்தான்.”
என்று சொன்னதைக் கேட்டு வியந்து பார்த்தனர். மனம் உருகிப்போயினர். ‘விழாவுக்கு வந்தவங்ளுக்கு நல்ல காத்து வேணும்; இந்த விழாவுக்கு வந்ததால மூச்சுத் திணறல் வந்து அவதிப்பட்டுடக் கூடாதுன்னு கவனமா இருக்காங்களே! என்னவொரு பரந்த மனசு?’ என்று எல்லோரும் நெஞ்சுக்குள் நினைத்தனர். மன நிறைவோடு, விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் அவரவர்கள் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் அரங்கத்தில் இருக்கையில் அமரலாயினர்.
நேரம் அதிகமாக அதிகமாக அரங்கம் நிரம்பி வழிந்தது. விழாவை ஏற்பாடு செய்த மாவட்டத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சிறப்புப் பேச்சாளர்களை அழைத்து அவரவர்களுக்கு ஒதுக்கப் பட்ட இருக்கையில் அமர வைத்தனர். தமிழ் இலக்கிய வளர்ச்சித் துறை அமைச்சர் வந்ததும் அவரை அழைத்து வந்து மேடையில் அமர வைத்தனர். விருது பெற்ற எழுத்தாளர் பால பாரதியையும் அழைத்து வந்து மேடையில் அமர வைத்தனர்.
தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஒவ்வொருவரையும் ஒலிப்பெருக்கியில் அழைக்க மற்ற பேச்சாளர்கள் ஒவ்வொருவராக மேடையில் சென்று அமர்ந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்தப் பாராட்டு விழா தொடங்கியது.
சிறுவர்களுக்கான சிறுவர் இலக்கியமாக நாவலை எழுதினார் பால பாரதி. இந்தப் புத்தகத்து இலக்கியத்திற்கான 2024 ஆம் வருசத்துக்கான நோபல் பரிசாக வழங்கப்பட்டது. இதற்காக எழுத்தாளருக்கு மாவட்டத் தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பாராட்டு விழா தான் இது.
நோபல் பரிசுப் பெற்றது பெரிய செய்தியல்ல. இந்த நோபல் பரிசைப் பெற்றவர் மாற்றுத்திறனாளி என்பதும், குறைந்த வயதுடைய இளைஞர் என்பதும் தான் இந்தப் பாராட்டுக்கான முகாந்திரம் ஆகும்.
அமைச்சர் உட்பட விழாவில் பேசிய பேச்சாளர்கள், எழுத்தாளர் பால பாரதியை, அவரின் முயற்சியை, அவரின் திறனை, இவரால் இவரின் பெற்றோர் பெற்ற பேரு, புகழைப் பற்றியெல்லாம் பேசினார்கள். பாராட்டி வாழ்த்தினார்கள். கடைசியாக எழுத்தாளர் பால பாரதி ஏற்புரை ஆற்றினார். அப்பொழுது அவருடைய பெற்றோர்களை மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்து வைத்து, அவர்களை நடுநாயகமாக மேடையில் அமர வைத்து, பெற்றோரின் காலைத் தொட்டு வணங்கி, தன்னுடைய ஏற்புரையை வழங்கினார். அப்பொழுது அவர் கூறிய செய்திகளைக் கேட்டு அரங்கமே அழுதது.
“இங்கே மேடையில பேசியவர்களெல்லாம் நான் எதுவோ பெரிசா சாதிச்சதாவும் சாதனைச் செஞ்சதாவும் என்னால என்னோட பெத்தவங்கக் கொடுத்து வெச்சவங்க என்றும், அப்படி இப்படின்னு ஏதோதோ பேசினாங்க. எனக்கு நோபல் பரிசு கிடைச்சதால இப்படிப் பேசினாங்க. ஆனா…. நான் யாரு? என்னோட நிலைம என்ன? கருணைக் கொலையிலிருந்து தப்பிச்சவன்னு எத்தனை பேருக்குத் தெரியும்?”
என்று எழுத்தாளர் பால பாரதி சொன்னதும் அரங்கமே அதிர்ச்சி அடைந்து வியப்புக்குள்ளானது. தன்னுடைய பிறப்பு முதலான அனைத்தையும் பால பாரதி கூறலானார்.
பால பாரதியின் பெற்றோரான குமரனும் வசந்தியும் எல்லோரும் போல திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழத் தொடங்கினர். ஒரு பத்து வருசம் குழந்தையே பிறக்காமல் துன்பப்பட்டு அழுதனர். இவர்கள் போகாத கோயில் இல்லை; வணங்காத தெய்வமில்லை. பார்க்காத வைத்தியமில்லை; பார்க்காத மருத்துவர்கள் இல்லை. சாப்பிடாத மருந்துமில்லை. கடைசியாக, ‘ குழந்தையே பிறக்காது; நாம கொடுத்து வைத்தது அவ்வளவு தான்’. என்று முடிவு செய்து கொண்டு, ‘உனக்கு நானும் எனக்கு நீயும் குழந்தை’ என்ற முடிவுக்கே வந்து விட்டனர்.
அப்பொழுது தான் கடைசியாக திருமணமாகி பதினோராம் வருசம் ஆன பிறகு வசந்தி கருவுற்று பத்தாம் மாதம் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனால், குழந்தை அழவுமில்லை; அசைவுமில்லை; கண்களையும் திறக்கவில்லை; குழந்தைக்கு வசந்தி பாலூட்டினால் குழந்தையோ பால் குடிப்பதுமில்லை; குழந்தை பால் குடிக்க முயற்சித்த போதெல்லாம் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தாய்ப் பாலைக் கறந்து வாயில் சொட்டுச் சொட்டாக இங்க் ஃபில்லர் மூலமாக ஊட்டினாள் வசந்தி.
‘பத்து வருசத்துக்கு மேல் குழந்தை இல்லாமல் தவமாய்த் தவம் கிடந்து பெற்ற மகனின் நிலை இப்படி ஆகிவிட்டதே!’
என்று அழுது புலம்பினாள். குமரனோ வேலைக்குச் சென்று வந்து மனைவி வசந்திக்குத் துணையாய் இருந்து ஆறுதல் கூறித் தேற்றினான். தானும் உள்ளுக்குள் மனம் நொந்தான். என்ன தான் ஆயிற்று குழந்தைக்கு? என்பதைத் தெரிந்து கொள்ள மருத்துவ மனையில் சிகிச்சைச் செய்து பார்த்தனர். டாக்டர், “குழந்தை….. “ டவுன் சிண்ட்ரோம்” என்ற நோயால் பாதித்துள்ளது; ஈரக்குலை கோளாறு, கண்ணில் குறைபாடு, நடக்க முடியாத சூழ்நிலை எல்லாம் ஏற்படும்; அது மட்டுமல்ல…. “பல்மனரி அய்பர் டென்சன்” என்ற குறைபாடு இருக்கிறதால ஆபரேஷன் கூட செய்ய முடியாது.” என்று சொன்னதைக் கேட்டு திகைத்துப்போய் செய்வது அறியாமல் அழுது புலம்பி நின்றனர்.
குமரனுக்கும் வசந்திக்கும் இந்தத் தரையே நழுவி தங்களை விட்டு ஓடுவதைப் போன்றும், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலவும் திண்டாடினர். இருந்தாலும் எப்படியாவது உயிரைக் கொடுத்தாவது தன் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர். அதனால், பூர்வீகத் சொத்தான ஐம்பது லட்சம் மதிப்புள்ள அரை கிரவுண்டு நிலத்தை வேறு வழியில்லாமல் அவசரமாக வெறும் ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்று மருத்துவ மனையில் செலவு செய்து மருத்துவம் பார்த்தனர்.
மருத்துவம் பார்த்த சீப் டாக்டர், “எதுக்கு வீணா பணத்தைச் செலவு செய்றீங்க? மிஞ்சி மிஞ்சிப் போனால் இந்தக் குழந்தை ஒரு அஞ்சாறு வருசம் தான் வாழும்; பேசாம சொந்த பந்தங்கள் கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வாங்க. கருணைக் கொலை செய்ய முயற்சி எடுங்க.”
என்று டாக்டர் சொன்னதும் வசந்தி பயந்து போய், குழந்தையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, “இவன் கடவுளா கொடுத்த வரம்; என் பிள்ளைய வளர்த்து ஆளாக்கி இந்த உலகத்துக்கே ஒரு சவாலா மாத்திக் காட்டுவேன். காப்பாத்த வேண்டிய நீங்களே கொலைகாரன் மாதிரி பேசுறீங்க? வாழறதுக்கு வழி கேட்டா சாகடிக்க வழிச் சொல்றீங்க? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லயா? கடவுளும் டாக்டரும் ஒன்னுன்னு சொல்லுவாங்க; இப்படி இன்னொரு முறை எங்கிட்ட பேசாதிங்க.” என்று வசந்தி சொன்னாள். சீப் டாக்டர் சொன்னது போலவே சொந்தக்காரர்களும் சொன்னார்கள். வசந்தியின் மனதை மடைமாற்ற நினைத்தார்கள்; அது முடியவில்லை.
வசந்தியோ பிடிவாதமாக ஒரு உயர் தர மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவம் பார்த்தாள். குழந்தையைப் பிசியோதெரபி கொடுத்தும், வீட்டின் மூலையில் மணலைக் கொட்டி நிற்க வைத்தும், ஆயில் மசாஜ் செய்தும், சிறுநீர், மலத்தை எடுத்து, வேளா வேளைக்கு உணவூட்டியும் வளர்த்தாள். எப்பொழுதும் வீட்டில் ஒரு மருந்து கடையே இருந்தது. ஒவ்வொரு மாத்திரை மருந்தின் மீது எதுக்காக, எந்தெந்த வேளைக்கு மருந்து, மாத்திரைகள், சிரப் கொடுக்க வேண்டும்? என்று எழுதி வைத்து மருந்துகளைக் கொடுத்து வந்தாள்.
குழந்தைக்காக நாளுக்கு நாள் வசந்தியின் கடுமையான உழைப்பானது பத்து பிறவியின் பாவத்தை ஒரே பிறவியில் அனுபவித்த நரக வேதனையை அனுபவித்தாள். இருந்தாலும் தன் மகன் மீது பாசம் குறையவில்லை; வெறுப்பு ஏற்படவில்லை. இது தான் தாயன்பு ஆகும். அதற்கேற்ப வசந்தியோ, நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் ஐந்தாறு வயதில் செத்துவிடும் என்று சொல்லப்பட்டக் குழந்தையை இருபத்தேழு வயது இளைஞனாக வளர்த்தெடுத்தாள். குழந்தையாக இருக்கும்போதே செத்துவிடும் என்று சாவுக்கு நாள் குறிக்கப் பட்டவன் வளர்ந்து எல்லா நோயிலிருந்தும் மீண்டு வந்து விட்டான். இளைஞனாய் வளர்ந்து விட்டான். படித்து எம்.ஏ. பட்டதாரியாகவும் ஆகிவிட்டான். இனி எமன் கூட நெருங்க முடியாது என்று மன நிம்மதி கொண்டிருந்தாள் வசந்தி.
இருபத்தேழு வயது வரையிலும் சராசரியாக மகிழ்ச்சியாக வாழ்ந்த இளைஞர் தான் இந்த பால பாரதி. சொந்தமாகத் தொழில் செய்து, நல்ல வருமானமும் ஈட்டிக் கொண்டிருந்தவர் ; கருணை மனம் கொண்டவராய், எல்லோருக்கும் உதவியவராய் இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் பால பாரதிக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று பெற்றோரான குமரனும் வசந்தியும் நினைத்தபோது மீண்டும் ஒரு விபரீதம் நடந்தது.
பால பாரதிக்குக் காலில் வலி வந்தது. சாதாரண வலி என்று மருத்துவம் செய்யாமல் அலட்சியம் செய்ததால் ஒரு நாள் நடக்கவே முடியாமல் சிரமப்பட்டார். வசந்தியும் குமரனும் பயந்து போய் டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். பல்வேறு பரிசோதனைகளைச் செய்து பார்த்ததில் பால பாரதிக்கு ‘மஸ்குலர் டிஸ்ட்ரபி’ என்ற ‘தசை சிதைவு நோய் ‘ என்று டாக்டர் கண்டறிந்தார். ‘பட்டக் காலிலே படும்; கெட்டக் குடியே கெடும்.’ என்ற பழமொழிக்கேற்ப பால பாரதியின் நிலையும், குமரன் வசந்தியின் நிலையும் ஆனது.
“தசை சிதைவு நோயால் கீழே விழ நேரிடும்; அப்படி விழுந்தால் தானாக எழுந்திருக்க முடியாது; படிகள் ஏறவோ, உட்காரவோ முடியாது; முயற்சி செய்து உட்கார்ந்தாலும் எழுந்திருக்க முடியாது; நடக்க முடியாது. வயது ஏற ஏற உடம்பு எடைக் கூடி தனக்கும், தன்னால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் துன்பத்தை உண்டாக்கும். ஒரு சந்தர்ப்பத்தில் படுத்த படுக்கையாகி, இதயத்தின் தசைகளைத் தாக்கி இறந்து போகவும் வழி வகுக்கும்.
இதனால், உடம்பின் செயற்பாட்டுக்குப் ‘பிசியோதெரபி’, விரல்கள் ஒன்றிணைந்து செயற்பட, ‘ஆக்கு ஃபேஷனல் தெரபி’, ஹைட்ரோ தெரபி, யோகா தெரபி, பிளே தெரபி என்று பல்வேறு தெரபிகள் கொடுத்து, தொடர்ந்து மருத்துவம் செய்ய வேண்டும், நோயாளிகளுக்கு ஊக்கம் தரும் வகையில் உளவியல் ரீதியாக மன தைரியம் கொடுக்க வேண்டும்; இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டு பிடிக்கப் படவில்லை. நோயாளியைப் பார்த்துக் கொள்ள நிறைய பொறுமையும் பண வசதியும் தேவை.
தினமும் பிசியோ தெரபிஸ்டை வைத்து பயிற்சி எடுக்க வேண்டும். இதற்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் செலவாகும்; உங்களால் முடியுமா? அப்படியே விட்டுடுங்க; உயிரோடு இருக்கும் வரை இருக்கட்டும்; பின்பு இறந்து போகட்டும்.”
இப்படி டாக்டர் சொல்லச் சொல்ல, பால பாரதியின் பெற்றோரான குமரனும் வசந்தாவும் பிரமைப் பிடித்தவர் போல் ஆயினர். தன்னுடைய வசதிக்குத் தன்னுடைய மகனை எப்படிக் காப்பாற்றுவது என்று புரியாமல் விழிப் பிதுங்கினர். ‘மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்.’ என்ற பழமொழிக்கேற்ப படைத்த கடவுள் காப்பாற்றுவார். என்ற நம்பிக்கையில், ‘என்ன நடந்தாலும் சரி பார்த்திடலாம்.’ என்ற முடிவுக்கு வந்தனர்.
இருந்தாலும் பால பாரதியின் பெற்றோர்களுக்கோ வயதாகி விட்டது. இதனால், தன் பெற்றோரையும் பார்த்துக் கொண்டே, கொஞ்சமும் மனம் தளராமல் நகர்ந்து நகர்ந்து எல்லா வேலைகளையும் செய்ய லானார். பெற்றோர்களோ பால பாரதிக்கு வேண்டியதைச் செய்யலாயினர்.
பால பாரதியின் உடல் பாதித்ததே தவிர இவரின் அறிவாற்றல் பாதிப்படையவில்லை. இந்த அறிவை வைத்து, தன்னுடைய முப்பத்தாறாவது வயதில் இந்தச் சமுதாயத்துக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். பால பாரதிக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதேபோல், குழந்தைகளுக்கான படைப்புகளைப் படைக்கவும் அதிகம் பிடிக்கும். உடல் சிரமப் பட்டாலும் கணிப்பொறி மூலமாக டைப் செய்து நாவல் , சிறுவர் சிறுகதைகள், சிறுவர் பாடல்கள் என்று நிறைய எழுதினார். ஒவ்வொரு நாவலுக்கும், ஒவ்வொரு கதைக்கும், ஒவ்வொரு பாடலுக்கும் இவரே பொருத்தமான படங்களை வரைந்தார்.
இவர் எழுதிய நாவல்களை, சிறுகதைகளைத் தனி புத்தகமாகவும், கவிதைகளைத் தனி புத்தகமாகவும் வெளியிட்டார். நாட்டிற்கும் வீட்டிற்கும் சுமையென இந்தச் சமுதாயம் ஒதுக்கப் பட்டு கருணைக் கொலை செய்ய துணிந்தவர்கள் மத்தியில் எல்லோருக்கும் படிப்பினைத் தரக்கூடிய புத்தகங்களை எழுதினார். அப்படி எழுதிய “மௌனம் பேசியதே “ என்ற நாவல் புத்தகத்திற்குத் தான் நோபல் பரிசு கிடைத்தது.
வாழ்க்கையில் சோதனை வரலாம்; ஆனால் சோதனையே வாழ்க்கையாக ஆனது குமரனுக்கும் வசந்திக்கும் மட்டுமல்ல…. பால பாரதிக்கும் கூட. இருந்தாலும் நம்பிக்கையும், முயற்சியும் இருந்தால் விதியையும் வெல்ல முடியும் என்பது இவர்களின் வாழ்க்கை எடுத்துக் காட்டாகும். இந்தச் சமுதாயமே விறகோடு விறகாக வீசப்பட வேண்டிய நரம்பறுந்த வீணையென எண்ணியோரின் எண்ணத்தைத் தரைமட்டமாக்கி, இசைக்கக் கூடிய மரகத வீணையாக தன் மகனை மாற்றிக் காட்டியவர்கள் பால பாரதியின் பெற்றோராவர். பால பாரதியும் தானொரு மீட்டக் கூடிய மரகத வீணையே தவிர தூக்கி வீசப்படக் கூடிய நரம்பறுந்த வீணையல்ல! தானொரு மரகத வீணை என்று நிருபித்து விட்டார்.
என்று எழுத்தாளர் பால பாரதி தன்னுடைய வாழ்க்கையைச் சொல்லி முடிக்கும் போது அரங்கமே அழுதுகொண்டே இருந்தது. பால பாரதியின் பெற்றோரைப் பார்த்து அரங்கமே எழுந்து நின்று கையெடுத்துக் கும்பிட்டன.
—------------------------------------------------------------
தொடர்புக்கு:
கவிக்கடல், கவிதைக்கோமான், கைபேசி: 7337868476. மின்னஞ்சல்: kavithaikkomaan1954@gmail.com
—------------------------------------------------------------
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்