logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

சா.கா.பாரதி ராஜா

சிறுகதை வரிசை எண் # 103


தெளிந்த வானம் வானம் விடியல் வெளிச்சத்துடன் இரவின் கருப்பையும் சேர்த்து கலந்து வைத்திருந்தது. காபியை தயாரிக்க ஆரம்பித்தாள் அவள். அவனுக்காக பில்டர் காபி குடிக்க பழகியவள், இப்போது அதன் தீவிர அபிமானியாக மாறிவிட்டாள். நீரை நன்றாக கொதிக்க வைத்து, சிக்கரி கலந்த காபித்தூளை, பில்டரில் இட்டு கொதிக்கும் பாலில் கலந்து, அதிகமாக சர்க்கரைப் போட்டு ருசிக்கும் அவனுக்காக,வேண்டா வெறுப்பாய் கொஞ்சம் சர்க்கரையும் போட்டு, ஆத்து ஆத்தும்போது, டம்ளரின்மேல் நுரை பொங்கி நிலாக்கள் உருவாகி உருவாகி உடையும். ஆத்தும் சூட்டின் ஒரு பகுதி அவளின் முகத்தில் படுகையில், முகத்தில் புன்னகை வெளிச்சத்தை தூண்டிவிடும். வழிய வழிய அவனுக்காக, வாங்கி வைத்திருந்த கைப்பிடி டம்ளரை வேறு யாருக்கும் அவள் கொடுத்ததுமில்லை. இனி கொடுக்கப் போவதுமில்லை. ’ஒரு காபியில் அப்படி என்ன இருக்கப் போகிறது?’ இப்படி நினைக்கும் மற்ற மனிதர்களைப் போலத்தான் அவனும் இருப்பான். நுரையில் உருவாகி உடையும் நிலாக்கள் போல, அவளது அன்பும், காதலும் ஆண்டாண்டுகளாக உடைந்து கொண்டுதானிருந்தது. இந்த டம்ளரில், தான் மட்டுந்தான் குடிக்கிறேன் என்ற நினைப்பும் அவனுக்கும் உண்டு. இருப்பினும் அவனில்லாத நேரங்களில், அவன் நினைவுகளில் உறவாடும் நேரங்களில், அவனுக்காக பழகிய பில்டர் காபியை அதே டம்ளரில் அவள் சுவைப்பதுமுண்டு. அதில் சுவைக்கும்போது, அமிர்தத்தை சுவைத்ததாக முகம் புன்னகைப் பூக்களை பூக்கவிடும். அவனுக்காக பார்த்து பார்த்து செய்யும் அவள், இவனே தனது உலகமென ஒரு பைத்தியக்காரியைப் போல இருக்கிறாள். ’பைத்தியமா?’ இதை அவளே கூட உணர்ந்து, பல நேரங்களில் உணர்ந்து அழுதிருக்கிறாள். கோபம் வந்தால் ‘போடி பைத்தியம்’ என்கிறார்கள். சொல்லட்டுமே! நயவஞ்சகி! நாசக்காரி! சூனியக்காரி! என்ற பெயரா வாங்கினேன். பைத்தியக்காரி என்று தானே சொல்கிறார்கள். சொல்லட்டும். மனிதர்கள் சுயநலக்காரர்கள். தனக்குத் தேவையானதை மட்டுமே யோசிக்கிறார்கள். தம்மீது அன்பை செலுத்துபவர்களைவிட, இந்த தருணத்தில் யாருடன் இருந்தால், நமக்குப் பலன் கிடைக்கும் என்றுதானே இருக்கிறார்கள். யாரை எப்படி கெடுப்பது என்று கூட யோசிக்கிறார்கள். சட்டையைக் கிழித்துக் கொண்டு உடலெல்லாம் புழுதியை சூடிக்கொண்ட இந்த பைத்தியங்களின் தலைமுடி பிய்ந்து இருக்கலாம். ஆனால், அவர்கள் யார் மீதும் பொறாமை கொள்வதில்லை. அவர்கள் கெட்டுப் போகட்டும் அழிந்து போகட்டும் என நினைப்பதில்லை. சுயநலமாக இருப்பதில்லை. அதிக அன்பு கொண்டவர்களின் அன்பை புரிந்து கொள்ளாத இந்த மனிதர்களிடமிருந்து வரும் வார்த்தை, ‘பைத்தியம்’ என்பது கூட, ஒரு வகையில் ஏமாற்றமாக இருந்தாலும், அதுவும் ஒரு பட்டம் தானே” என அவள் அவளுக்குள்ளேயெ நினைத்துக் கொல்வதுண்டு. ”ஏய்! புவனா! ரெண்டு பேரும் சேந்து ஒன்னா போங்கடி. வெளில அல்லாரும் பாப்பாங்கல. இல்லனா காது மூக்கு வாயி வெச்சிப் பேசுங்க. நீங்க சண்ட சச்சரவு யெதுவு இல்லன்னாலும், இதுக யெதுவாச்சும் கட்டி விட்டிடும். நீ போ அவரு கூட! நானு பின்னாடிய வரப் போற. யென் கோட யெதுக்கு நீ?” என அவளது அம்மா வார்த்தைகளால் சொன்னால் மட்டும் இவள் முன்னால் போக மாட்டாள் என, வலது உள்ளங்கையால் அவளது இடது தோளைத் தள்ளி, முன்னே போகச் சொன்னாள். புவனாவிற்கும் அவளது கணவன் குமாருடன் ஒன்றாக கையைப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் ஆசை. கல்யாணம் ஆகி ஐந்து ஆண்டுகளாகியும் இதுவரை இதுமாதிரி நடந்ததேயில்லை. “வா! போகலாம்” என்று சொல்லிவிட்டு, குமார் பாட்டுக்கும் முன்னாடி நடந்து செல்வதும், இவள் பின்னாடியே நடந்து வருவாள். பலதடவை அவளது கணவனோடு ஒன்றாக செல்ல முயன்றதுண்டு. இவள் இணையாக கிட்டே வருவது தெரிந்ததும், தனது நடையின் வேகத்தை அதிகப்படுத்தி விடுவான் குமார். சில நேரங்களில், ஐம்பது அடி தூரம் தாண்டி கூட சென்று, திரும்பி பார்ப்பான். “சரியான சோம்பேறியா இருப்பியா. வா! சீக்கிரம்” என கடிந்து கொள்வான். இன்னும் தன்னை இணையராக, மனைவியாக முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என அவள் அறிந்தும் அவனின் மீதான அவளது அன்பு, சிறிது கூட குறையவே இல்லை. நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் போனது. பெண் பார்த்த நாளில், முதன்முறையாக குமாரை நேரில் பார்த்த புவனா, நாணலைக் காட்டினாள். சிறு தயக்கத்தை பகிர்ந்தான் குமார். ”நான் ஒரு உண்மைய சொல்லிடனும்” தென்றல் தவழ்ந்த அந்த நாணலில், சிறிது கேள்விக்குறி எழ, ”நான் ஏற்கனவே ஒரு பொண்ண காதலிச்சன். பட். அது ஒர்க் அவுட் ஆகல. அவளுக்கு கல்யாணமாகிடுச்சி. உங்கிட்ட சொல்லனும்னு தோனிச்சி. சொல்லிட்டன். இப்ப எதுவும் காண்டாக்ட் லாம் கிடயாது. எதுவா இருந்தாலும் வெளிப்படையா இருக்கோனும்ல” என்றான் குமார். இப்போது அவனுக்குள் ஒரு கம்பீரம் தெரிந்தது. வெளிப்படையாக இருப்பது நல்லது தான். இதேபோல் அவள் சொல்லியிருந்தால், அதை அவன் மனமகிழ்வோடு ஏற்றுக் கொண்டிருப்பானா? அவன் யார்? என்ன என்று அவளை விசாரணை செய்து அணு அணுவாய் சித்ரவதை செய்திருப்பானா? சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும் சிலர், தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள நினைக்கிறார்களே தவிர, பெண்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என நினைப்பதில்லை. காலையில் மேகம் நகர்ந்து, வெய்யிலைப் கொட்டும் சூரியன் போல மாறியது அவளது முகம். 27 வயது முடிந்து 28 வது வயதைத் தொட்ட மனிதனிடம் காதல் தோன்றாமலா இருக்கும். எல்லோருக்கும் காதல் வந்திருக்கும். அதுபோல, இவருக்கும் வந்தது தப்பில்லை என மனதைத் தேற்றிக்கொண்ட அதே கனத்தில், ஒரு பெண்ணாக தனக்குத் துணையாக வாழ்வில் வருபவனுக்கு காதல் இருந்ததை ஏற்றுக் கொள்ளவும் மறுத்தது. இருப்பினும் அவள் அதைப் பற்றி கேட்டு அவனைத் துளைத்தெடுக்க விரும்பவில்லை. முதல் சந்திப்பிலேயே எதையும் மறைக்காமல் வெளிப்படையாக இருக்க வேண்டும் என நினைக்கும் அவனது மனது அவளுக்குப் பிடித்துப் போனது. காதல் ஏற்பட்டவன், நிச்சயமாக அன்பின் ஆழத்தை அறிந்தவனாகத்தான் இருப்பான். அவள் மகிழ்ச்சியாக வாழட்டும் என்று ஒதுங்கி இருப்பவன் பொறுமையுடன் இருப்பவனாகவும், வாழ்வின் அர்த்தத்தை புரிந்தவனாகவும், தன் மேல் குறையாத அன்பை வாழ்நாள் முழுவதும் செலுத்துபவனாகவும் நிச்சயம் விளங்குவான் என நினைத்து முடிவைச் சொன்னாள். ”முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும். பிடித்திருக்கிறது…” என்று சொல்லி நாணி வலது பக்கமாக முகத்தை திருப்புகின்றாள். அவனது புன்னகையை அவள் பார்வையில் பட்ட மலர்கள் பிரதிபலித்தன. திருமணமாகி ஆண்டுகள் உருண்டோடின. எப்போதும் எதையோ யோசித்துக் கொண்டிருப்பான். குடும்பத்தோடு மகிழ்வாய் செலவிடுவதை தவிர்த்து, தனிமையை அதிகம் விரும்ப ஆரம்பித்தான். அவளின் உணர்வுகளை அவனின் நிழல் கூட மதிக்கவில்லை. பழைய காதலிலிருந்து அவனால் முழுவதுமாக வெளிவர முடியவில்லை. இருப்பினும், மனைவியின் மீது தன்னை வலுக்கட்டாயப்படுத்திக் கொண்டு அன்பைக் காட்ட நினைத்தவனால், அதை தொடர முடியவில்லை. நாடகங்கள் கூட சில மணி நேரங்கள் தானே. அவள் அன்போடு நெருங்கும் போதெல்லாம் கொஞ்சம் விலகியே நின்றான் அவன். ”ஏய்! வேறு யாருடனோ அவருக்குத் தொடர்பு இருக்கும்டி. அதனாலதான், ஒங்கிட்ட ஒட்ட மாட்டாறாரு” எனும் அவளின் தோழியின் வார்த்தைகளைக் கூட உதாசீனப்படுத்தினாள். ”அப்படியெல்லாம் வாய்ப்பே கிடையாது. தன்மீது, முழுமையான அன்பை செலுத்தவில்லையே தவிர, வேறு யாரு மீதும் அவர் காதல் கொண்டிருக்கவில்லை. தொடர்பிலும் இல்லை. பழைய காதலின் பாதிப்பிலிருந்து தான் அவரால் இன்னும் மீளவில்லை. அதனால் தான் ஆரம்பத்திலிருந்து தன்மீது அன்பை செலுத்த அவரால் முடியவில்லை. நிச்சயம் ஒருநாள் தனது அன்பை புரிந்து கொண்டு, இவள் தான் தன் வாழ்வு என்று முழுமையான அன்பை செலுத்துவார். அதுவரை காத்திருப்பேன்” என தனது மனதுக்குள்ளேயே உரையாடினாள். நாட்கள் ஓடின. மகன், மகள், புத்தகங்கள், ஆசை ஆசையாய் வளர்க்கும் வகை வகையான செம்பருத்திச் செடிகள், அவை தினம் தினம் தரும் பூக்கள், நாய் என அனைத்தும் இருந்தும் அந்த இல்லத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான ஒரு பரஸ்பர அன்பு இல்லாமல் இருப்பது அவளுக்குள் ஒரு பெரும் குறையாகவே இருந்தது. அன்று ஒருநாள், அதிகாலையில் எப்போதும் போல் அவனுக்காக பில்டர் காபியைக் கொடுத்தவள், ஒரு கோரிக்கையை அவனிடம் வைத்தாள். ”இன்னிக்கு நாம ஒரு இடத்துக்குப் போகனும். போகலாமா?” காபியை சுவைத்தவன், உதட்டிலிருந்து கொஞ்சம் விலக்கி புருவத்தை ஒரு வில்லாய் உயர்த்தினான். டம்ளரை மேலும் கீழே இறக்கியவன், இதுவரை தன்னிடம் எதுவும் கேட்காதவள், இன்று ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று கேட்கிறாளே. அவள் விரும்பி எதைக் கேட்டாலும் வாங்கித் தர வேண்டும் என மனதுக்குள் நினைத்து, ”ம்” என்று சொன்னான். வானம் தெளிவாக விடிந்திருந்தது. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக உச்சியை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. சுடிதார் நிறைய இருந்தும், அவள் ஆசையாய் விரும்பும் புடவையில் ஒரு தேவதையைப் போல கிளம்பினாள். அவனும் ஜீன்ஸ் பேண்ட்,சர்ட் அணிந்து கொள்ள, வெளிர் மஞ்சள் காட்டன் சேலையிலிருக்கும் தனது மனைவியை அவன் இரசிக்காமலும் இல்லை. அவன் இரசிப்பதை புன்னகையின் மொழியில் புரிந்து கொண்ட அவள், வீட்டைப் பூட்டிக்கொண்டு அவனோடு காரில் புறப்பட்டாள். அவள் சொன்ன வழியில் கார் 50 மைல் தாண்டி பயணித்தது. ஒருவேளை, கோயிலுக்குச் செல்கிறாளோ? அவன் மனதுக்குள் ஓடிய அந்த கேள்விக்கு மறுப்பாக அவளது பேச்சு வந்தது. ”ஏங்க! பழங்கள், ஸ்வீட், காரம், மல்லிப்பூ வாங்கனும், வண்டிய நிறுத்துங்க” வண்டியை நிறுத்தினான். இதுவரை அவன் முன்னால் செல்ல, அவள் பின்னால் செல்வாள். இன்றோ, அவள் முன்னால் செல்ல, ஏதோ ஒரு வியப்புடன் அவன் பின்னாலேயே சென்றான். ”யாருக்காக இவ்வளவு ஆர்வமாக வாங்குகிறாள்? கேள்விகள் அவன் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தன. பூக்காரியிடம் நான்கு முழம் மல்லிகைப்பூ வேண்டும் என்றாள். அதை இரண்டாக வெட்டச் சொன்னாள். ஒரு பாதியை தனது கூந்தலில் வைத்தவள், மறுபாதியை இலையில் சுற்றச் சொல்லி கவரில் போட்டாள். ”ம்! போகலாம்ங்க” சிரித்துக் கொண்டே தலையை மேலும் கீழும் ஆட்டி, சரி என்று கிளம்பினான். கார் புறப்பட்டது. கொஞ்சம் தூரம் சென்றவுடன், காரை நிறுத்தச் சொன்னாள். “நாங்க இப்போ செல்லியம்மன் கோயில் கிட்ட வந்துட்டோம். இதுக்கப்புறம் எப்படி வர்றது?” அலைபேசியில் யாரிடமோ கேட்டாள். போனில் ஏதோ பதில் வந்தது. “ஆ! சரி சரி” என்றவள், ”இங்கேயே இருக்கச் சொல்லியிருக்காங்க. அவங்க வீட்லருந்து அனுப்புறாங்கலாம்” ”யாரு?” என அவனுக்கு மீண்டும் கேட்கத் தோன்றியது. இவளோடு படித்த தோழியாக இருப்பாள் என நினைத்த போது, ஒருவர் காரின் அருகில் வந்து, கதவைத் தட்டினார். “புவனா வா நீங்க?” ”ஆமாங்க” ”சரி. வாங்க பின்ன” என்று சொல்லியவர், குமாருக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு டூ வீலரை திருப்பினார். ஒரு வீட்டின் முன் நின்றது. முதலில் அந்த ஆள், “வாங்க! வாங்க!” என்று சொல்லி செல்ல, புவனா முழுமையான மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடும், ஒரு கேள்விக்குறியான முகத்தோடு குமாரும் உள்ளே சென்றனர். உள்ளேயிருந்த கிச்சனிலிருந்து ”வாங்க எப்படியிருக்கீங்க?” அழைத்தது ஒரு குரல். பழகிய பழைய அந்த குரல் குமாருக்குள் அதிர்ச்சியையும், ஆனந்தத்தையும் தர, சிலையாக நின்றான் குமார். ”என்ன. எல்லோரும் எப்படியிருக்கீங்க” தொடர்ந்தது குரல். பதிலே சொல்லாமல் சிலையாக நின்றான் குமார். ”நாங்க நல்லாத்தான் இருக்கோம் நீங்க எப்படி இருக்கீங்க?” பதிலளித்தாள் புவனா. ”எனக்கென்னங்க. சந்தோஷமா இருக்கேன். எனக்கு எதுவேணுமோ நான் கேட்காமலேயே செஞ்சிடராரு இவரு. என்ன எந்த கஷ்டமும் பட்ற விட்றதுல்ல. அம்மா, அப்பா போனதுக்கு அப்புறமும் நான் எந்த கஷ்டமும் பட்றக்கூடாதுன்னு இவரு என்ன பாத்துக்குறாரு” என்றவளின் முகத்தை துடைத்து விட்டார் அவளது கணவர் ரகு. அந்த பதில், முன்னாள் காதலியை நீண்ட நாள்களுக்குப் பிறகுப் பார்த்த குமாரின் அதிர்ச்சியை கொஞ்சம் குறைத்தது. இயல்பு நிலைக்குத் திரும்பினான் குமார். வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் பல பகுதிகளுக்கும் சுற்றுலா சென்ற படங்கள் வீட்டின் சுவர்கள் இடம்பிடித்திருந்தன. “அப்பப்போ இவரு எங்கேயாச்சும் கூட்டிட்டு போயிடுவாரு. எனக்கு என்ன பிடிக்கும்னு எந்த எந்த ஊரு பிடிக்கும்னு என்னையவிட, அவருக்கு நல்லாவே தெரியும்.” அந்த இல்லத்திலிருந்த மகிழ்ச்சி புவனாவிற்கும் பரவியது. சாப்பிட அனைவரையும் அழைத்துச் சென்றார் ரகு. அவரே பரிமாறுவதை குமாரும் பார்த்து ஆச்சர்யப்பட்டான். சாப்பிட்டு ஒரு மணி நேரம் தொடர்ந்தது அவர்களது பேச்சு. “பேரழகி நீங்க” என்றாள் புவனா. “இருக்கலாம். இவரு போல அன்பைக் காட்டும் கணவன் கிடைத்தால் எல்லோருமே பேரழகி தானே” என ரகுவின் தோளில் சாய்ந்தாள். ரகு விரல்களால் அவளது கூந்தலை நேர் செய்தார். ”சரி! உங்கள எல்லாரையும் பார்த்தது மகிழ்ச்சி. வர்றோம். நீங்களும் எங்க வீட்டுக்கு கண்டிப்பாக வரனும்” என்ற குமார் புவனாவின் விரல்களைப் பற்றி போகலாமா எனக் கேட்டு கிளம்பினான். புவனாவோடு இணையாக நடந்தான் குமார். வானம் தெளிவாகவே இருந்தது. சா.கா.பாரதி ராஜா, 38-3, கைலாசநாதர் கோயில் தெரு, பெரிய நத்தம், செங்கல்பட்டு. 603002. 9944315732

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.