logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 101 - 120 of 727

Year
Award
   

கவிச்சுடர் விருது

  • கருவை ந.ஸ்டாலின்

0   700   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • கலைச்செல்வி

2   499   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • ராஜா அபி

0   405   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • கோவை புதியவன்

0   382   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • இனியவன் காளிதாஸ்

0   435   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • தமிழ்ச்செல்வன்

0   342   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • லோக சுந்தரம்

0   323   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • த. ரவீந்திரன்

0   367   0  
  • March 2023

மாதாந்திர பரிசு

  • வம்சி ராஜன்

0   379   0  
  • March 2023

கவிச்சுடர் விருது

  • செ.வீரமணி

1   666   2  
  • February 2023

மாதாந்திர பரிசு

  • பாண்டிச்செல்வி விஸ்வநாதன்

0   356   0  
  • February 2023

மாதாந்திர பரிசு

  • கோலப்பன் கணேசன்

0   287   0  
  • February 2023

மாதாந்திர பரிசு

  • அய்யாவு பிரமநாதன்

0   309   0  
  • February 2023

மாதாந்திர பரிசு

  • ஸுமைஹா

0   436   0  
  • February 2023

மாதாந்திர பரிசு

  • குளோரி சக்தி

0   339   0  
  • February 2023

மாதாந்திர பரிசு

  • ஸ்ரீ வி முத்துவேல்

0   398   1  
  • February 2023

மாதாந்திர பரிசு

  • திப்பு ரஹீம்

0   400   0  
  • February 2023

கவிச்சுடர் விருது

  • அன்றிலன்

0   1057   0  
  • January 2023

மாதாந்திர பரிசு

  • சித்ரா புபேஷ் குப்தா

0   451   0  
  • January 2023

மாதாந்திர பரிசு

  • ப்ரியா வெங்கடேசன்

0   364   0  
  • January 2023

கவிச்சுடர் விருது

கருவை ந.ஸ்டாலின்

ந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை கவிஞர்  கருவை ந.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

 

கரூர் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர்   கல்விப்புலம் சார்ந்து தமிழ்மீதான தன் ஆர்வத்தைச் செறிவு படுத்திக் கொள்வதற்காக, இளங்கலைத் தமிழ் இலக்கியம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை கரூர் அரசு கலைக்கல்லூரியிலும், முதுநிலைத் தமிழ் இலக்கியத்தை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்.

 

கவிதைப் புலத்தில் நவீனக் கவிதைகளின்மீது கொண்ட ஆர்வத்தினால் தற்போது கரூர் அரசு கலைக்கல்லூரியில் ‘நவீனக் கவிதை இலக்கியத்தில் வாழ்வியல் கூறுகள்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வையும்  மேற்கொண்டு வருகிறார்

 

நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில் அளவிலான கவிதைப்போட்டிகளில் பங்கேற்று மாவட்ட, மாநில அளவில் பல பரிசுகளைப் பெற்றுள்ள கவிஞர் தொடர்ச்சியாக, பல்வேறு கவியரங்குகளில் பாடி பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தனிநபர் சொற்பொழிவு, பட்டிமன்றப் பேச்சு, கவியரங்க நடுவர் பொறுப்பு, அகில இந்திய வானொலி நிலையத்தில் கவிதை குறித்த உரையாடல்கள் எனப் பல்வேறு களங்களிலும்  தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது கவிஞரின் சிறப்பு.

 

தனது கவிதைக் கருத்தியலின் முதல் முயற்சியாக ‘பெருந்துணைத் தேறல்’ என்ற பெயரில் நவீனக் கவிதை நூல் ஒன்றை தான் செயல்படுத்திவரும் ஆதன் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் நக்கீரன் இதழ் தேசிய அளவில் நடத்திய மாணவக் கவிஞர் போட்டியில் தலைசிறந்த முதன்மைப் பத்து நபர்களில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு நட்சத்திரக் கவிஞர் என்ற விருதையும் அவரது கரங்களால் பெற்றுள்ளார்.

 

நச்செள்ளை தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதன் மையப் பொறுப்பாளராக இருந்து கொண்டு  அதன் வழியாக இதுவரை யாரும் முன்னெடுக்காத எந்நாளும் இன்றியமையாத பல தமிழ்ச் செயல்பாடுகளைக் களப்பணியாக ஆற்றி வரும் கவிஞர் பல விருதுகளையும் பெற்றவர் என்பது தமிழுக்கு மரியாதை.

 

கவிஞர் கருவை .ஸ்டாலின் அவர்களுக்கு இவ்விருது மேலும் பல சிறப்புகளையும் உயர்வுகளையும் அவரிடம் கொண்டு சேர்க்கும் என்பது உறுதி.

 

இனி கவிஞரின் சில கவிதைகளைக் காண்போம்.

 

 

நால்வழி சாலையின் தோற்றம் ஒரு சிலுவையின் குறியீடு என்பதில் தொடங்கும் இக் கவிதை அதற்குள் அபகரிக்கப் பட்ட நிலங்களின் கதறலும், வெட்டப்பட்ட மரங்களின் உதிரமும் சொல்லாமல் சொல்லப்படும் பொருளின்  நுட்பத்தை தாங்கிக் கொள்கிறது..  விழுந்து கிடப்பது  மரம் என்றாலும் அடர் கிளைகளுடன் பறவைகளின் இசையைக் கேட்டு அது வளர்ந்திருக்கும்.  அம் மரம் ஊர்வன, சார்வனவுடனும்  விளையாடி மகிழ்ந்திருக்கும்…  அதனால்தான் அது விழுந்து கிடக்கும் அக்காட்சியை கரம் விரித்த சடலத்தின் நிலை என்கிறார் கவிஞர்

 

 

குறியீடல்ல சிலுவைகள்*

 

இந்தத் தெருவின் சாலை

வடிவமும்

ஒத்துப்போகும்,

 

உருவாவதற்கு முன்பு

குறுக்கும் நெடுக்குமாக

பின்னிப் பிணைந்திருந்தது

அம்மரத்தின் கிளைகள்,

 

இடது பக்கமாக குருதி

ஒழுகவொழுகக் கிடக்கும்

சடலத்தின்

கரம் விரிந்த நிலை,

 

நேர்கோட்டில் தவழும்

நதிகளின் இடையில்

கல்லெறியும்

சிறுவனின் வீச்சு,

 

எல்லா நிலைகளிலும்

வாங்கிய பாவங்களை

ஏற்கனவே

சுமந்து கொண்டு இருக்கும்

சிலுவைக்கு

எதற்கு இன்னொரு சுமை,

 

இறக்கி வையுங்கள்

அவரை,

கொஞ்சம் சிலுவையின்

பாவத்தையும்

சேர்த்தே மன்னித்து...

 

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது விவாத பொருளாகவே இருந்து விட்டு போகட்டும். ஒருவேளை கடவுள் என்பவர்  இருந்தால் அவர் மன நிலை இப்போது எப்படி இருக்கும்என்பதுதான் இக்கவிதையின் மாயத் தோற்றம்.

 

 

தியானத்தில் அமர்ந்தேன்

தலையை வெட்டி

இடம் மாறச் செய்து

விகார விந்தையாக்கினீர்

 

கிறக்கத்தில் கிடந்தேன்

பாம்பை தலையில் சுற்றிவிட்டு

பாற்கடலில் புதைத்துவிட்டீர்

 

யாரோ

செய்த லீலைகளுக்கெல்லாம்

செயப்படு பொருளாக்கினீர்

 

சமாதியில் பூத்த எருக்களைக்கு

ஞானப்பூவென்று

பெயர் சூட்டினீர்

 

இப்போதாவது....?

இல்லை

எப்போதும் இல்லை

 

என்னால் வாழும் உங்களை

எப்படி வெறுக்க முடியும்

உங்களால் மடிந்த

என்னால்...

 

 

காதலின் பிரிவை முகாரி, அம்சவர்த்தினி இராகங்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறது கவிதைஒரு சொல் உடைத்திருக்கலாம் இதயத்தைபெரும் மழை என்பது துயரத்தின் குறியீடாகிறது. கடல் என்பது மனம். இன்று அது பொங்கியெழலாம்நாளை தூவானம் தூறி சில்லிட்டுக் காதலை ஆனந்த பைரவியால் அலையாட்டலாம்

 

நீயும் நானும்

பிரிந்த தக்க தருணத்தில்

சொல்லிக்கொள்ளாமல் வந்த பெருமழையொன்று

கடற்கரையில்

எழுதிவைத்த பெயர்களை

தின்றதோ விழுங்கியதோ

சாட்சியங்களை

சரித்துவிட்டதாய் பரிகசித்த வான்

அழுகிறதா நகைக்கிறதா

என்பதறியாமல்

முகாரியையும் அமிர்தவர்சினியையும்

உளரும் கடலலை

வானுக்கும் மண்ணுக்கும்

இடையில் தான்

நிற்கிறது

காதல்.

 

உனக்கும் எனக்கும் என்பது இக்கவிதையின் பொருள்பாட்டில் எனக்கும் எனக்கும் என்பதேயாம். குழம்புவது மனம்குழப்புவது செயல்மௌனத்தின் உரையாடல் இங்கு அவசியமாகிறது. தெளிதல் பிறக்கும் வரை தேவை பெருங்கதையாடலின்  த்யான உச்சம்தெளிதல் யாரும் நினைப்பது போல் அத்துணை எளிதல்ல….

 

உனக்கும்

எனக்குமிடையே

என்ன இருக்கிறது

 

இப்படி கதைக்கிறோம்

இப்படி பிதற்றுகிறோம்

இப்படி உளறுகிறோம்

 

சிரிப்பதை குறைத்து - கொஞ்சம் மௌனித்து

இரு

 

இங்குதான்

தொடங்கப்பட்டது

உனக்கும்

எனக்குமான மெல்லுரையாடல்

 

ஆத்மாவின் 

பரிசுத்தமான வேலையென்பது

 

பேரன்பித்துத் திரிவது

பேசச் செய்வது

புட்டியொன்றினை

கையில் கொடுத்து

குமட்ட குமட்ட உள்ளிறங்க வைப்பது

 

தெளிதல்

யாவர்க்கும்

எளியதொன்றில்லை

 

தெளிந்து தெளிந்து

குழப்பும்

இவ்வீணையின் நரம்பிழையில்

ஒன்றினை

பலவந்தமாய் பிடுங்கி

சொருகிக்கொள்

உனது

செவியில்...!

 

இன்னுமிருக்கிறது

ஏதோ மிச்சம்,

 

வா !

பெருங்கதையாடுவோம்...

 

தெளிதல்

யாவர்க்கும்

எளியதொன்றில்லை...!

 

சுத்தமானவர்கள் கல்லெறியுங்கள் என்பது போல்தான் இக் கவிதை. புனித நூலொன்றைப்  புரட்டிப் பார்ப்பது அழுக்குக் கரங்கள் என்பதோடு நிறுத்திக் கொள்ளும் கவிதைபார்க்கும் விழிகள் பரவசம் வாங்கி அகவழுக்கைக் கழுவிக் கொண்டால் புனித நூல் அன்றுதான்  புனிதம் ஆகலாம்  என்பதையும் மறை பொருளாக கோடு போட்டு காட்டுகிறது.

 

 

புனித நூலென

நீங்கள் மதிக்கும்

ஒவ்வொரு பக்கத்தையும்

புரட்டிப்பார்க்கிறது

அழுக்குப்படிந்த கரங்கள்...!

 

கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:

 

 

பிரேத மனிதனிடம்

கொஞ்சம்

கதைக்கலாம் என்று இருக்கிறேன்

 

கைகால்கள் சுருக்கப்பட்டு

குருதியுறைந்து

வெள்ளுடை தரித்தவனிடம்

சொல்வதை கேட்கும்

திறனிருக்குமா ?

 

கேட்டுவிட்டு

பதிலுரைப்பானா ?

 

தெரியாது

தெரியவே தெரியாது

 

கையில் அவனுக்கு பிடித்த

தேநீர் இருக்கிறது

குடித்துமுடிப்பதற்குள்

கடந்துவிடவேண்டும்

இவ்வறையை விட்டு.....!

 

********                     

 

ஓய்வெடுத்துக்கொள்கிறது

இப்பிரபஞ்சம்

கொடுப்பதிலும் பெறுவதிலும்

நிறைத்துக்கொள்ளும் பேரன்பில்

சிற்சில வலிகளையும்

பரந்துபட்ட மனங்களில்

பாவப்பட்ட சுவடுகளையும்

வித்தியாசமான நேரங்களின்

விசித்திரமான நாட்களிலும் 

இவளிருக்கிறாள்

என்கிற ஒற்றைப்புரிதலோடு...!

 

*********         

 

பொய்க்கால் ஆட்டம்

உண்மையாகவே ஆடுகிறது

பசி.

 

 

*******

 

தொடுதிரைக்குப்  பின்னிருந்து

காலாட்சேபம் செய்யும்

நகலெடுத்துவைத்த

கோப்புகள்

எப்படியும் எப்படியாகவும் அழவைத்துவிடுகிறது

குளோனிங் முறையில் தரம்பிரிக்கப்பட்ட

போதனைக்கட்டிகளை

உண்ணும் பட்சிகளே

அசலையும் கொஞ்சம் இரட்சியும்.....!

 

 **********                            

 

தின்று ஏப்பமிட்டு

தூக்கியெறியப்பட்ட

விதையின் நிழலில்

சிறிது ஓய்வெடுக்கவும் நேரிடலாம்

எந்நாளிலோ ஒருகணம்...!

 

*********   

 

*குப்பனின் குடல்...*

 

தெருக்களில் உள்ள

அந்த நூறு வீட்டின் கழிவுகளும்

இங்கேதான் குடியிருக்கின்றன

சாஷ்டாங்கமாக மஞ்சத்தில்

படுத்துறங்கிக்கொண்டிருக்கும் கழிவுகளோடு

அவ்வப்போது புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்துகொண்டேயிருக்கிறது

தனக்கே உரித்தான நாற்றத்தை

அள்ளிவீசி

டெங்குவையும் மலேரியாவையும் சிவப்புக்கம்பளமிட்டு வரவேற்கத் தயாராயிருந்தது

பரந்துபட்ட குப்பைகள்

பட்டவனுக்கு படையல்

போட்ட எச்சில் இலையை மோப்பமிட்டமடி திரியும் பெட்டை நாயும் அதன் பெருந்துணையும்,

நெகிழியின் ஊர்த்துவதாண்டவத்தை ஒரு இடுக்கியின் மூலம் மூட்டை கட்டுகிறான் துப்புரவு தொழிலாளன்.

இப்படியாக

குன்றென நிமிர்ந்து நிற்கும்

குப்பைகளை களையெடுத்துக்கொண்டிருக்கிறான்

குப்பன்

தனக்கான ஒரு கவளம் எங்கேனும் தட்டுப்படுமா என்று...!

 

*********

  

இப்பேற்பட்ட

இந்தவகையான 

இனிப்பை

இப்படித்தான் சுவைக்கவேண்டும்

உயர்தர பேக்கரிக்குள்

உருண்டுகொண்டிருந்தது

பண்டங்கள்

இது கடிக்க இது நக்கிட

இது மென்றிட

பட்டியல் நீண்டுகொண்டிருந்த கொள்கலனில்

மிச்சத்தை கையிலெடுத்த

கரமொன்று

தட்டுக்கும் வாயுக்குமான குறுவெளியில்

இது பசிக்கு புசிக்க

தடாலென உமிழ்நீருக்குள்

மூழ்கி

இன்னுயிர் நீத்தது

அடுத்த மரணத்திற்கு

நேரம் குறித்துக்கொண்டிருந்தான்  கடைவாயிலில்

பசியோடு ஒருவன்...!

 

**********

 

எதிர்வரும் காலம் கணித்து

ஒவ்வொரு முறையும்

நல்லதொரு

பக்கங்களை

கிழித்தெறிகிறீர்கள்

பிறகு

ஒவ்வொரு கிழிந்த தாளையும்

சிற்சில பிசின் சேர்த்து

ஒட்டவைக்க முயல்கிறீர்கள்

எத்தனை வண்ணங்கள்

எத்தனை சத்தங்கள்

கிழிந்து கலந்திருக்கக்கூடும்

அக்கணம்

இறந்தவை

அப்படியே சென்று தொலையட்டும்

கையில் மீண்டுமொரு

புத்தகம் இருக்கிறது

படிப்பதிலும் கிழிப்பதிலும்

 இருக்கிறது

உங்களின் சுயவிசாரணை.

 

*********                     

 

பக்குவமாய் பதப்படுத்தப்பட்ட

சடலங்களை

ருசிபார்த்துக்கொண்டிருக்கிறேன் 

பொரித்தெடுக்கப்பட்ட வானலியில்

ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கும்

துணுக்குகளில்

பொறாமை சற்று தூக்கலாகவும்,

அரைவேக்காட்டில்

ஆணவம் கொஞ்சம் காரசாரத்துடன் மிஞ்சியேயிருக்கின்றன

உதிரியுதிரியாயிருக்கும் அப்பண்டங்களில்

உப்புசப்பற்றுக்கிடக்கும் ஆசைகள்

கொதிக்கும் சினக்குளத்தில் மூழ்கி

எழுகின்றன,

தீர்க்கப்படாத தருக்கத்தில்

தீக்குளிக்கப்பட்ட வல்லமை

தீயாத வண்ணம்

விரிக்கப்பட்ட வாழ்க்கையிலையில்

அடுக்கிவைக்கப்பட்ட யாவையுமே

ருசிபார்த்துக்கொண்டிருக்கிறேன்

கௌரவத்தினால் வெட்டுண்ட மென்நாவினால்...

 

*********

 

அங்கே கேட்பது

மியாவ் மியாவ் சத்தம் தானே

உங்களுக்கு அது நாயின் குரைத்தலாகவும்

மரண விளிம்பிலுள்ள ஆட்டின்

மேவாகவும் கூட இருக்கலாம்

 

எனக்கு அது

என்னைத் தொலைத்துவிட்டு போன

பூனைக்குட்டியின் மியாவ் மியாவ் சத்தம் தான்

 

கொஞ்சம் பொறுமையாக இருங்கள்

தொலைந்து போன நினைவுகளின் சத்தமாக

என் மனதில் வருடியது போக  என்னமோ தெரியவில்லை இப்போது காதிலும் வருடத் தொடங்கியிருக்கிறது

அந்த மியாவ் மியாவ் சத்தம்

 

என்னை களவாண்டு சென்றவரை நான் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்

 

என்னை சந்திக்க வரும் யாரேனும்

வரும் வழியில் கண்டுபிடித்தால் சொல்லுங்கள்

 

பார்ப்பதற்கு பூனை போல் இருக்கும் பூனை தான் அது

 

நான்கு கால்களும்

ஒரு மூக்கில் இரு துவாரமும்

கொஞ்சம் தடித்த வாலும்

தொலைத்து விட்டுப் போன காதல் குழைக்கப்பட்ட கண்களும் தான் அது தனித்த அடையாளம்

 

மீண்டும் நீள்மௌனம்

 

மெல்லியதாக கேட்கிறது

அதே மியாவ் மியாவ் சத்தம்...

 

*********

 

குளித்து முடித்து

தலை துவட்டுகையில்

நித்தியமாய் ஒட்டிக் கொண்டிருந்தது

அம்மாவின் கைமணம்.

 

 

******

 

 

கூற்றுவனின் பாசக்கயிறு

சுழன்றபடியே சுற்றும் பிரபஞ்சம்

சந்துபொந்துகளோ

சாக்கடை எச்சங்களோ

மிச்சங்களை கழுவியூத்தவும் ஏதுமில்லை.

கஞ்சிப்பொங்கிடாத இவ்வீட்டில்,

இருந்து கரைந்ததும்

கொடுத்தது தொலைந்ததும் சொற்பநாளிலே !

சொச்சத்தில் மீண்டது ஏதோ சொச்சம்

மாற்றுமுறை மய்யம் கொண்டதில்

வரவாய் சில காய்ந்த கோதுமைவுடல்கள்,

கணக்கதிகாரம் வகுத்த சூந்திரம் பங்கிடாய் விழுந்தது

உடல்சூம்பிக்கிடக்கும் தெருநாய்களுக்கும்

சில ரொட்டிகள்.

 

********

 

தொடர்ச்சியாக

அடுக்கப்பட்ட நிலைப்பாடுகள்

பலவும்

தொடர்புடையவனிடம்

போகிற போக்கிலாவது

சென்றெட்டுமா எனும்

கவலையில்லை

மனதோடு சிலாகித்திடும் இவர்களுக்கு....

 

********

 

மிருதிகளை அப்படியே

நகலெடுக்கத் தெரிந்த தேகியே யாக்கையின்

எந்திரக்கோளாறின் கக்குதலில்

மவுனம்

சில நேரம் சில பொழுது வெள்ளையையும் கருப்புகளையும் உமிழ்ந்துவிடுகிறது துடைத்தெறியப்பட்ட துகில்

ஓட்டியிருந்த கரி

அப்படியெனில்

தேகி!

நான் என் முகம்

கதம்பம்..

 

********

 

இவ்வளவு இறுக்கமாக

பிடித்துக்கொள்ள வேண்டிய

எந்தக் கட்டாயமுமில்லை

விட்டெறியுங்கள்

அல்லது விட்டொழியுங்கள்

அது உங்களுக்கு பாரமாகவுமிருக்கலாம்

கூடவே

எனக்கு அது தேவையாகவும்.

 

*கருவை ந.ஸ்டாலின்*

View

மாதாந்திர பரிசு

கலைச்செல்வி

View

மாதாந்திர பரிசு

கோவை புதியவன்

View

மாதாந்திர பரிசு

இனியவன் காளிதாஸ்

View

மாதாந்திர பரிசு

தமிழ்ச்செல்வன்

View

மாதாந்திர பரிசு

லோக சுந்தரம்

View

மாதாந்திர பரிசு

த. ரவீந்திரன்

View

மாதாந்திர பரிசு

வம்சி ராஜன்

View

கவிச்சுடர் விருது

செ.வீரமணி

 

இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை  கவிஞர் செ.வீரமணி அவர்களுக்கு அளிப்பதில் பெருமைக் கொள்கிறோம்.  சென்னையில் வசிக்கும் கவிஞர்,.  அடையாறு அரசு நெசவுத்தொழில் நுட்பக்கல்லூரியில் பயின்றவர் . ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்துகொண்டிருக்கிறார். இவருடைய கவிதைகள் குமுதம் தீராநதி ,  இனிய உதயம் , படைப்பு கல்வெட்டு , தகவு மற்றும் கதிர்'ஸ் கவிமாடம் போன்ற பல இதழ்களில் வெளி வந்திருக்கின்றன. நமது . படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளராகவும் இரு முறை தேர்வு செய்யப்பட்டவர் 

 

இவருடைய முதல் கவிதை தொகுப்பு " துளி அன்பு சிறு நேசம் கொஞ்சம் காதல் " கடந்த ஆண்டு எழிலினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது . பரவலாக வாசிக்கப்பட்டு நல்ல வரவேற்பைப்பெற்ற இந்த தொகுப்பு 'தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை' யின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதும் பெற்றிருக்கிறது .

 

இனி கவிஞரின் சில கவிதைகளைக் காண்போம்:

 

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்து உற்சவம் எடுத்து கொண்டாடும் அழகை மிகச் சிறப்பாக எடுத்து வைக்கும் கவிஞர், இவ்வளவு செய்தும் இந்த மக்கள் காட்டும் விசுவாசம் கொஞ்சம் கூட இந்த கடவுள்களுக்கு இல்லையே என்ற  பொருமல் பகுத்தறிவுச் சிந்தையுடன் இந்தக் கவிதையை மேலும்  அழகு செய்கிறது….

 

அரச மரம்

குளத்தங்கரைனு

அம்போனு

கெடந்தவருக்கு

கோயில கட்டி

பெத்த புள்ளையாட்டம் பார்த்துகிட்டோம்

 

கோச்சுகிட்டு போய்

கோவணத்தோட

நின்ன தம்பிக்கும்

ஆறுபடைவீடு கட்டி

அழகு பார்த்தோம்

 

காட்லயும் மேட்லயும்

கஷ்டப்பட்ட

இன்னொரு

அய்யனுக்கும்

கிரானைட்ல

கோயில் கட்டி

ஏசி கூட போட்டு

வச்சோம்

 

மண்டை ஓடு

மயானம்னு

சுத்திகிட்டு திரிஞ்ச

அப்பனுக்கு

பெரிய பெரிய

கோயில கட்டி

குடிவச்சோம்

 

பாம்பு படுக்கைனு

சமனில்லாம

ஆடிக்கிட்டு கிடந்த

மாமனுக்கு 

ஊஞ்சல் சேவை

உற்சவம்னு

நிறைய

பண்ணியிருக்கோம்

 

தங்க கிரீடம் 

வைர மூக்குத்தி

பச்சை பட்டு

பவள மாலைன்னு

ஆத்தாளுக்கு

பண்ணதெல்லாம்

சொல்லி மாளாது

 

வேளாவேளைக்கு

ஆகாரம்

அழகழகா அலங்காரம்

வருசம் ரெண்டு திருவிழா

காவலுக்கு

காம்பவுண்டு

சுத்தி நாலு கேமரானு

எவ்வளவோ

செஞ்சோம்

 

எங்கப்பே போனீங்க

எல்லாரும்

 

நன்றியெல்லாம்

மனுசங்களுக்கு

மட்டுந்தானா

 

படிமங்களும், உத்திகளும், குறியீடுகளும் அறிந்திடாமல் இருந்த அந்த நாளில் தன்னிடம் ஒரு கவிதை இருந்ததாக தொடங்கும் கவிஞர்,  எவையெல்லாம் மகிழ்விற்கென்று மாற்றத் தொடங்கினோமோ அன்றே ஒவ்வொன்றாக நம்மை விட்டு அவைக்  கழன்று கொண்டதாக பெரும் உண்மையை வெளிச்சம் போட்டுக்  காட்டுகிறார். கவிஞரின் சொல்லாட்சியில் சொல்ல வேண்டும் என்றால் , இப்போது படிமம் இருக்கிறது, உத்தி இருக்கிறது, குறியீடு இருக்கிறது ஆனால்; கவிதை மட்டும் கிடைக்கவில்லை.

 

படிமங்களும்

குறியீடுகளும்

உத்திகளும் 

அறிந்திராத

நாட்களில்

என்னிடம்

ஒரு கவிதை இருந்தது

 

நிலவும்

நட்சத்திரங்களும்

வானமும்

வசப்படுவதற்கு முன்

குளிர்ந்த இரவும்

சில கனவுகளும்

இருந்தன

 

ஓயாமல் சுழல்கிற

சக்கரங்கள்

வாய்க்கப்பெறுவதற்கு முன்

பாதங்களால்

உரையாடிக்கொண்டு

பயணித்த

அழகிய பாதைகள்

இருந்தன

 

வீடென ஒன்றை

மதிலெழுப்பி 

சிறை வைத்துக்

கொள்வதற்கு முன்

உதைத்து விளையாட

ஒரு பூமிப்பந்திருந்தது

 

அமரவும்

உண்ணவும்

உறங்கவும்

கொல்லப்பட்ட மரங்கள்

வந்து சேர்வதற்கு முன்

சிறு தோட்டமும்

நிறைய பறவைகளும்

அவற்றின்

பாடல்களும் இருந்தன

 

ஏதுமற்ற உச்சிக்கே

ஏங்கித்தவிக்கிறது

மீச்சிறு இதயம்

 

இட்டு நிரப்ப

தேவையெல்லாம்

இலவசமாய் கிடைக்கிற

துளி அன்பும்

சிறு நேசமும்

கொஞ்சம் காதலும்

 

காதலின் நிலைகளை கவிதைகளின் தன்மைகளாக மாற்றியெழுதுகிறார் கவிஞர்எவ்வளவு இடர்களை எழுதும் கவிஞன் என்றாலும், அவனுக்குள் பூக்கும் அந்தக்  காதல் அத்துணை அழகானது.  மரபுக் காதலுக்கு சீர் அடி, தளை எதுவும் இல்லையென்பதே கவிதையின் பெரும் அழகு

 

உன் முந்தானையின்

கொடியில் 

பூக்கிறது

என் கவிதை

தலைப்பு

 

உன் காதணிகளின்

கொஞ்சலில் பிறக்கின்றன

உவமை அணியும்

உருவக அணியும்

 

அன்பில் தொடங்கி

அன்பில் முடிந்து

அன்பில் தொடர்கிறது

நம் அந்தாதிகள்

 

புதுக்கவிதையாய்

புலரும் பொழுதுகளை

கசல் கவிதைகளாய்

முடித்துவைக்கிறது

உன் காதல்

 

குறுங்கவிதையைப்போல் எட்டிப்பார்க்கும் என்

கோபங்களை

ஆற்றுப்படுத்துகிறது

நெடுங்கவிதைகளான

உன் நேசங்கள்

 

கன்னத்தில்

பதிக்கும்

ஹைக்கூ கவிதைகளில்

நிரம்பி வழிகிறது

உன் அன்பு

 

எதுகை மோனை

சீர் தளை அடி என

ஏதுமில்லாதது

நம் மரபுக்காதல்

 

வல்லினத்தை

இடையினத்தால்

வீழ்த்தும் மெல்லினத்தின்

பிரியங்களால்

நிரப்பப்பட்டிருக்கின்றன

நம் கவிதை

தொகுப்புகள்

 

சம்பிரதாயங்களின்  இலட்சணங்களோடு  தெயவதங்களுக்காக  இயற்றப்பட்ட ஸ்லோகங்கள், பாடல்களோடு அறுசுவைப் பதார்த்தங்கள் சமைக்கப் பட்டாலும்,  தன் கரகரக் குரலில் சுதிலயம் இல்லாமல் கூப்பிடும் கா…கா…காஎன்ற  பாட்டுக்குதான் காக்கை  வடிவில் கடவுள் வருவதாக  சொல்லும் இந்த கவிதை எளிமையான சொல்லாடலில்  பகுத்தறிவு பகல்.

 

சுப்ரபாதத்தோடு

காய்ச்சப்படுகிறது

பால்

 

ஆதித்ய ஹ்ருதயத்தோடு

தயாராகிறது சாதம்

 

சௌந்தர்ய லஹரியில்

நறுக்கப்படுகிறது

காய்கறிகள் 

 

அபிராமி அந்தாதியில்

செய்து முடிக்கப்படுகிறது

பச்சடியும் பாயசமும்

 

சியாமளா தண்டகத்தில்

சுட்டெடுக்கப்படுகிறது

மெது வடை

 

லலிதா ஸஹஸ்ரநாமத்தில்

பொறித்தெடுக்கப்படுகிறது

அப்பளமும் அதிரசமும்

 

காயத்ரி மந்திரத்தோடு

படைக்கப்படுகிறது

நைவேத்யம்

 

எதையும் அறிந்திராத

என் கரகர

கா...கா..கா..கா...

குரலுக்கு மட்டுமே

கடவுள் வருகிறார்

இன்றைய வாழ்க்கையின் அவலம் அரசியல் சூழ்ச்சிகளால் நிரம்பியது.  தாங்கும் சக்தி குறையும் போது மன உறுதியும் குலைந்து விடுகிறது. எரியும் நிழலுக்குள் நின்று எப்படிக் குளிர் காய்வது? கவிஞரின் மேம்பட்ட கோபமாக இந்த வரிகளை முன்னெடுக்கலாம். “ மழிப்பதற்குக் காசில்லாமல்தான் மண்டிக்கிடக்கிறது குறியீடுகள் ஏதுமறியாத எங்கள் மயிர்

 

 

கொதிக்கிற

சோற்றுப்பானையின்

நெஞ்சில்

நெருப்பு வைக்கிறது

விலையேறி

கனக்கிற

எரிவாயு உருளை

 

வழக்கம்போல்

பிரசங்கம் மட்டுமே

செய்து கொண்டிருக்கிறது

வலியேதுமறியாமல்

ஃபிரிட்ஜில்

வாழ்கிற ஆப்பிள்

 

எரிபொருள் தீர்ந்துபோன வாகனங்களை

டோல் கேட்டில்

கூடுதல் பணம் கட்டி

தள்ளிக்கொண்டு

போகிறோம்

ஏளனமாய் சிரிக்கின்றன

தேசிய நெடுஞ்சாலையின்

மைல் கற்கள்

 

டிஜிடலில்

ஒளிர்கிறது

அன்னை தேசம்

நாங்கள்

அழுகிற பிள்ளைக்கு

பால் வாங்க முடியாமல்

ஜி பே வில்

கடன் வாங்கி கழிக்கிறோம்

 

கொடிமரங்களின்

நிழலில் வளரமுடியாமல்

போன்சாய் மரங்களைப்போல் சூம்பிக்கிடக்கிறது

வாழ்க்கை

 

மழிப்பதற்கு

காசில்லாமல்தான்

மண்டிக்கிடக்கிறது

குறியீடுகள்

ஏதுமறியாத

எங்கள் மயிர்

 

பட்டினியைத்தவிர

அத்தனைக்கும்

போடப்படுகிறது வரி

 

இறகுகளை கொய்து

சிறகுகளால்

கட்டித்தரப்படுகிறது

எங்களுக்கான

வண்ணக்கூடுகள்

 

ஒரு கன்னத்து

அறையிலேயே

உணர்விழந்த பின்னும்

மறு கன்னத்திலும்

அறைந்து

சிலுவையிலும்

அறைந்து விட்டுப்போகிறது அச்சேதி

குறுங்கவிதைகளிலும்  கவிஞரின் சொல்லடர்த்தி சிறப்பாகவே இருக்கின்றன. கவிஞரின் இன்னம் சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு…..

 

 விரும்பி அமர்கிற

பறவைக்கு

கிளையின் முட்கள்

பொருட்டில்லை

 

தாங்கிப்பிடிக்கிற

சிறு கிளைக்கு

பறவையின் எடை

ஒரு பாரமில்லை

 

நீ பறவை

நான் கிளை

 

பிறந்த ஊரிலிருந்து

மண்ணெடுத்து

தொட்டிச்செடி வளர்த்தேன்

மலர்ந்த பூக்களில்

எல்லாம்

தாய்ப்பாலின் வாசம்

 

உன்னைப்போல்

ஒரு நதியும்

என்னைப்போல்

ஒரு கடலும்

நம்மைப்போல்

ஒரு அலையாகி

புரள்கிறது

 

உன்னைப்போல்

ஒரு நிலவும்

என்னைப்போல்

ஒரு இரவும்

நம்மைப்போல்

ஒரு வானாகி

விரிகிறது

 

உன்னைப்போல்

ஒரு இசையும்

என்னைப்போல்

ஒரு மொழியும்

நம்மைப்போல்

ஒரு பாடலாகி

ஒலிக்கிறது

 

உன்னைப்போல்

ஒரு பூவும்

என்னைப்போல்

ஒரு காற்றும்

நம்மைப்போல்

ஒரு சித்திரம்

வரைகிறது

 

உன்னைப்போல்

ஒரு உயிரும்

என்னைப்போல்

ஒரு உறவும்

நம்மைப்போல்

ஒரு காதலாகி

கனிகிறது

 

உன்னைப்போல்

ஒரு அழகும்

என்னைப்போல்

ஒரு தமிழும்

நம்மைப்போல்

ஒரு கவிதையாக

மலர்கிறது

 

பசித்திருந்தபோது

பாட்டி சுட்ட அப்பம்

 

விழித்திருந்தபோது

களிறொன்றின்

ஒளிரும் விழி

 

தனித்திருந்தபோது

காதலியின்

அழகிய முகம்

 

இயல்பில் இல்லாத

கவிதை கண்களுக்கு

எப்போதும் வாய்ப்பதில்லை

அழகிய நிலவு

 

வாழ்ந்தாலும்

தேய்ந்தாலும்

உச்சியிலேயே

நிற்கிறது

வெள்ளி நிலா !

 

நிலவு முத்தமிட்டும்

இயல்பில்

மாறவில்லை

தாழக்கிடக்கிற

உப்புக்கடல்

 

மதுரையை

எழுதத்தொடங்கினால்

தமிழை

எழுதச்சொல்லி

அடம்

பிடிக்கிறது கவிதை

 

நானில்லாத

கவிதையா என

வடம் பிடிக்கிறது

சித்திரைத்தேர்

 

இரண்டையும்

எழுதவிடாமல்

தானே

மதுரையென

குறுக்கே

பாய்கிறது வைகை

 

கள்ளழகர்

தன்னைத்தான்

எழுதவேண்டுமென

ஆற்றில் இறங்காமல்

அடம்பிடிக்கிறார்

 

மீனாட்சியும்

சுந்தரரும்

சித்திரை தேரில்

வலம் வருவதைவிடவும்

கவிதைத்தேரில்

உலா வரவே

விருப்பமென்கிறார்கள்

 

பொற்றாமரைக்கு

தண்ணீரில்

மிதப்பதைவிடவும்

தமிழில் மிதப்பதே

அலாதி பிரியமாம்

 

பண்டைய தீரமும்

பாண்டியர் வீரமும்

எங்களுக்கும்

இடம் ஒதுக்கென

மீன் கொடி பிடித்து

போராடுகிறார்கள்

 

சிலம்போங்கிய

கரங்களுடன்

என்னை

எழுதாவிட்டால்

எரித்துவிடுவேன்

என

எச்சரிக்கிறாள்

கண்ணகி

 

மக்கள் பிரதிநிதிகள்

நாங்களே என

மார்தட்டுகிறார்கள்

மல்லி மொட்டும்

ஜல்லிக்கட்டும்

 

அழகர் மலையும்

பழமுதிர்ச்சோலையும்

நாங்களும்

மதுரைதான் என

மனு கொடுக்கிறார்கள்

 

எதையும் எழுதாத

என் கவிதையின்

நினைவுகளில்

நிறைந்திருப்பது

பிட்டுக்கு சுமந்த

மண்ணில் பிறந்து

தரணியெல்லாம்

விளைந்திருக்கும்

தமிழ்தான்

 

காத்து இரட்சிப்பதாக

நம்பப்படுகிற

கருவறை சாமிகளுக்கே

வாய்க்கிறது

பட்டுத்துகிலும்

பாலும் தேனும்

 

கால்கடுக்க

காவலுக்கு நிற்கிற

வாயில் சிலைகளுக்கு

அருளப்படுவதேயில்லை

ஒட்டுத்துணியும்

ஒரு வாய் அன்னமும்

 

 ஊர் என்பது

அம்மாவின்

பாதம்பதிந்த மண்

உறவென்பது

அவளின் கையளவு இதயம்

 

அம்மா இருந்தவரை

ஊருக்கு வந்து போவது

ஒரு உற்சவம்போல் நடந்தேறும்

 

இன்று

கூடு திரும்பாத

தாய்ப்பறவைக்கு

ஏங்கித்தவிக்கும்

குஞ்சுக்குருவியைப்போல் துவண்டிருக்கிறேன்

அவள் இல்லாமல்

அடுத்தவர் வீடாகிப்போன

என் கூட்டுக்குள்

 

இந்த கூட்டுக்குள்தான்

என் சிறகுகள்

முளைத்தது

 

இந்த புழக்கடை

மாமரம்தான்

என் போதி மரம்

 

இந்த கிணறுதான்

என் ஜீவநதிகளின் ஊற்றுக்கண்

 

சாணத்தில் மூடி கூரையில் வீசிய பாற்பற்களும்

பால்யமும்

இந்த மண்ணில்தான்

புதைந்து கிடக்கிறது

 

முதல் காதலும்

முதல் கவிதையும்

இந்த காற்றில்தான்

கலந்திருக்கிறது

 

பொன்னியின் செல்வனோடும்

யவன ராணிகளோடும்

கதைகள் பேசி

களித்திருந்த கிணற்றடி

இன்று ஈரமில்லாமல்

வறண்டு கிடக்கிறது

 

துளசியும் செம்பருத்தியும்

சிரித்திருந்த முற்றம்

வெறுமையில் வாடிக்கிடக்கிறது

 

வாசலில் நிற்கின்ற

பூவரசின் நிழல்

குளுமையைத்தொலைத்து

படர்ந்திருக்கிறது

 

அம்மா இருந்தவரை

நலங்கு வைத்து

அலங்கரித்த

பெண்ணைப்போல் இருந்த வாசல்

இன்று அறுவடை முடிந்த வயலைப்போல்

வெறுமையாய்க்கிடக்கிறது

 

அம்மா

கூட்டிப்பெருக்கி

வாசல் தெளித்து

சாணம் மெழுகி

கோலமிடுவது

ஒரு ஜலதரங்க கச்சேரியும்

ஓரங்க நாடகமுமாய் அரங்கேறும்

 

ஒற்றை பார்வையாளனாய்

அருகிருந்து

ரசித்துக்கொண்டிருக்கும் என் கன்னத்தை வருடி எனக்கொரு

காகத்தை வரைந்து

அதன் வாயில்

வடையை சுழித்துவிட்டுப்போவாள் 

 

நான் காகத்தோடு

வானத்தில் எம்பிப்பறப்பேன்

 

கோலம் காகம்

வானம் வடையோடு

அம்மாவையும்

தின்று செரித்த

காலத்திற்கு

தாயுமில்லை ...!

தந்தையுமில்லை.

 

நித்யஸ்ரீ்யும்

அஃப்ரினும்

கரோலினும்

என்னுடைய மகள்கள்

 

சீதாராமனும்

முகம்மது ரஃபீக்கும்

ஜேம்சும்

எனது நண்பர்கள்

 

ராமரும்

ஜீசசும்

அல்லாவும்

என் கடவுள்கள்

 

காவியும்

வெண்மையும்

பச்சையும்

என் அன்பின்

வண்ணங்கள்

 

ஜெய் ஸ்ரீராம்

அல்லேலுயா

அல்லாஹு அக்பர்

 

 நேற்று

வாரித் தூற்றிவிட்டுப்போன

அதே காற்றுதான்

இன்று

என் தோட்டத்திற்கு

மழையை

அழைத்து

வந்திருக்கிறது

 

ட்எங்கப்பனுக்கு

கவிதை எழுத

தெரியாது

காதலிக்கத் தெரியாது

 

ஆனால்

எங்கம்மாக்கு

வேர்த்து வடிஞ்சா

வேட்டிய உருவி

குடுத்துட்டு

கோவணத்தோட

துண்டை தேடி

ஓடுவாரு

 

பாசம் வைக்கவும்

அன்பு காட்டவும்

எங்கப்பன் தான்

குரு எனக்கு

 

செத்துப்போன

ஆத்தாவைப் பத்தி

ஒரு கவிதை எழுதி

படிச்சு காட்டுனப்போ

மட்டும்

நாந்தான்

சாமி அவருக்கு

 

அழகாக இருந்தது

அக்காக்கள்

இருந்த தெரு

 

கூட்டிப்பெருக்கி

வாசல் தெளித்து

குலுங்குகிற 

வளைகரங்களில்

தெருக்களின்

துயில் கலையும்

 

நிலவொளியில்

பாய் விரித்து

அக்காக்கள் சொல்கிற

கதைகளை கேட்டுவிட்டே

ஒவ்வொரு இரவும்

உறங்கப்போகும்

 

தெரு முனை

கோவில் திறந்தே கிடக்கும்

அம்மைகள்

பக்கத்துவீட்டு திண்ணைகளில்

புளியங்கொட்டைகள் மினுங்க

பல்லாங்குழி 

ஆடிக்களித்திருப்பர்

 

கனகாம்பரம்

தொடுத்துக்கொண்டு

மர்ஃபி ரேடியோக்களில்

ஒலிச்சித்திரம் கேட்ட

அக்காக்கள்

ஒளிச்சித்திரங்கள்

 

ஒயிலாக அமர்ந்து

நீள் சதுர ஆடிகளில்

வட்ட நிலவை

அலங்கரித்து

கார்குழலில்

மலர்ச்சூடி

வெளிச்சங்களை

வரைவார்கள்

 

தோழிகளோடு

சில்வர் குடங்களில்

நீர்கொண்டு போவது

தேர் நடந்து போவதைப்போல்

தினசரி திருவிழா

 

குடங்கள்

பேசிக்களிக்கும் கதைகளால்  நிரம்பித்தளும்பும்

 

குளக்கரை படிகள்

அக்காக்களின்

கொலுசொலி கேட்க

இடம்பெயராமல் காத்துக்கிடக்கும்

 

குளத்தில் மிதக்கும்

தாமரை மொட்டுகள்

மையிட்ட விழிகளை

கண்டு மலரும்

 

குளம்

மருதாணியிட்ட

கைகளை தீண்டி

வட்டவட்டமாய்

சிலிர்க்கும் 

 

குடங்களில் அள்ளி எடுக்கும்

தாமரைக்குளம்

ஒரு குழந்தையைப்போல் 

இடுப்பில் ஏறி

அமர்ந்துகொள்ளும்

 

பந்தலிட்டு வாழைகட்டி

நல்வரவு சொல்லும்

குண்டு வண்ண

சீரியல் பல்புகளோடு

அக்காக்களின்

அழகும் ஒளிரும்

 

அழகின் நறுமணம்

திருமண வீதியெங்கும் கமழும்

 

தெருவின் அழகையெல்லாம்

கூரை புடவையின்

முந்தானையில்  கட்டிக்கொண்டு

காணாமல் போன அக்காக்கள்

 

தாவணி அணிந்த

தேவதைகளாகவே

வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

நினைவுகள் திரும்பிப்பார்க்கிற

பால்யத்தின் தெருக்களில்

 

அம்மா

 

என்னை சுமந்தவள்

நான் ஏடுகளை

சுமக்க தினம்

மண்ணை சுமந்தவள்

 

கூட்டியும்

பெருக்கியும்

கொண்டுவந்த

கூலிக்காசில்

என்னை

கூட்டலும்

பெருக்கலும்

படிக்க வைத்தவள்

 

காதணிகளையெல்லாம்

விற்றுவிட்டு

எனக்கு

உவமை அணியும்

உருவக அணியும்

வாங்கித் தந்தவள்

 

தான்

நடப்பதற்குக்கூட

செருப்புகளை

வாங்காமல்

நான்

பறப்பதற்கு

சிறகுகளை

சேமித்துக் கொடுத்தவள்

 

கடிதம்கூட

எழுதத்தெரியாத

இவள்தான்

என்னை

கவிதை

எழுத வைத்தவள்

 

என்னை சுமந்தவள்

நான் ஏடுகளை சுமக்க

தினம்

மண்ணை சுமந்தவள்

 

இன்று....

தன்னையே

சுமக்க முடியாமல்

தள்ளாடி....!

தள்ளாடி....!

 

பூக்காமல் போனாலும்

நீர் வார்ப்பேன் என்பதை

எப்படிச் சொல்வது

 

கேட்காத போதும்

பூக்களைத்தருகிற

இந்த செடியிடம்

 

 படிக்கிற பிள்ளைகளும்

வாசிக்கிற மனைவியும்

எழுதுகிற நானும்

தனித்தனி

அறைகளில்

மௌனத்தில் கிடக்கிறோம்

 

எழுதப்படிக்கத் தெரியாத

மியாவ் மட்டுமே

எல்லோருடனும்

கொஞ்சிப்

பேசிக்கொண்டிருக்கிறது

 

துயரங்களை

இறக்கிவைக்க

இன்னொரு தோளின்றி

சதா உம்மென்று

ஒற்றையாய்

தொங்கிக்கொண்டிருந்த

ஒரேகடவுள்

இறங்கிவந்து

சிரித்து விளையாடுகிறார்

தத்தெடுத்த

நாய்க் குட்டியுடன்

 

கைபேசிகளால்

களவாடப்பட்ட

குழந்தைகளின் மகிழ்ச்சியை

சிறுகச் சிறுக

மீட்டுத்தருகிறது

தொட்டியில் துள்ளியாடும்

வண்ண மீன்கள்

 

மறந்துவிட்ட

கிளிப் பேச்சை

உறங்கிக்கிடந்த

குயில் பாட்டை

சிறகசைத்து

துளிர்க்கச்செய்கிறது

சின்னஞ்சிறு

அலகுகளால்

காலத்தை முத்தமிட்டு

பின்னகர்த்தும்

காதல் பறவைகள்

 

தீராத இறுக்கங்களில்

கட்டுண்டு

கிடக்கிறது ஆறறிவு

 

இயல்பில் நின்று

அன்பால் வருடி

அழுத்தங்களையும்

கவலைகளையும்

கட்டுடைக்கிறது ஐந்தறிவு

 

 

View

மாதாந்திர பரிசு

பாண்டிச்செல்வி விஸ்வநாதன்

View

மாதாந்திர பரிசு

கோலப்பன் கணேசன்

View

மாதாந்திர பரிசு

அய்யாவு பிரமநாதன்

View

மாதாந்திர பரிசு

குளோரி சக்தி

View

மாதாந்திர பரிசு

ஸ்ரீ வி முத்துவேல்

View

மாதாந்திர பரிசு

திப்பு ரஹீம்

View

கவிச்சுடர் விருது

அன்றிலன்

இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமம் வழங்கும் கவிச்சுடர் விருதினை கவிஞர் அன்றிலன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

காலம் கவிதைகளின் வெளியை பரத்துகிறது ; அதில் தனக்கென்று தனித்துவம் படைக்கும் கவிஞர்களில் ஒருவர் கவிஞர் அன்றிலன்.

கவிஞரின் இயற்பெயர் இரா.சிவக்குமார். கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி - ஆனைமலை அருகே உள்ள குப்பிச்சிபுதூர் என்ற கிராமத்தில் பிறந்தவர்.  இவர் "மருந்தாக்கவியல்" துறையில் முனைவர் பட்டம் பெற்று,. மருந்துக்கட்டுப்பாட்டுத் துறையில் அரசு அதிகாரியாகவும் பணிபுரிந்து வருகிறார்.

 

இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, இந்து குழுமம்-காமதேனு, இனிய உதயம், பேசும் புதிய சக்தி, புன்னகை, கொலுசு, வெட்சி, கனவு, கோடுகள், வாசகசாலை,  படைப்பு-கல்வெட்டு, படைப்பு - தகவு, தமிழ்நெஞ்சம், பொழில்வாய்ச்சி ஆகிய பல்வேறு இதழ்களிலும்  பிரசுரமாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டு நமது படைப்பு குழுமம் நடத்திய "கவிக்கோ" பிறந்தநாள் பரிசுப் போட்டியில் மூன்றாம் பரிசும், 2020 ஆம் ஆண்டு சிறப்புப் பரிசும் இவரது கவிதைகள் பெற்றுள்ளன.  மாதந்தோறும் படைப்பு குழுமம் தேர்வு செய்யும் சிறந்த கவிதைக்காக மாதந்திர பரிசும் பெற்றுள்ளார்.

 

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ள இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான "மாயநதியின் கால்தடம்" என்ற நூலுக்கு "திருப்பூர் இலக்கிய விருது" வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

 

இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்….

 

ஒரு தையல் காரரின்  வாழ்வியலை மிக நுண்மையாக உணர்த்தும் கவிதையிது. தையல் இயந்திரத்தின் மிதிப்பான் மேலும் கீழும் ஏறி இறங்கினால்தான் வாழ்க்கைச் சக்கரம் சுழலும் என்பது படிமம் உள்ளடக்கிய மொழியாடல்.  அவரது வாழ்வின் பள்ளம் மேடுகளையும் அவைதான் நிரப்புகின்றன. துணியின் மீது ஏறி  இறங்கும் ஊசிகளை கவனிப்பதும் ஒரு தியான நிலை என்பது சத்திய வார்த்தைதான்…  பண்டிகை நாளில் வந்த வேலையையும் விட முடியாமல், உடனே தைத்தும் கொடுக்க முடியாமல் அவர் திணறுகின்ற நேரத்திலும் அவரை ஆறுதல் படுத்துகிறது வண்ண பட்டன்களின் ஸ்மைலிகள்….

.

தையல்காரரின் கால்கள்

வாழ்வின் மேடுபள்ளங்களை

நிரப்பும் பாவனையில்

அழுத்துகின்றன காலச்சக்கரத்தை.

 

துணிகள்மீது

ஏறி இறங்கும் ஊசியின் வேகத்தோடு

ஒரு தியானத்திற்குள்

நிலைக்கின்ற கண்கள்.

 

பண்டிகைக்கு முந்தையநாள்

இரவுக்குள் முடிக்க

இடப்பட்ட கட்டளைகள் அனைத்தும்

காதுகளை நிரப்ப

சிக்கு விழுந்த நூலினைப்போல்  

நரம்புகள் இறுக்குகின்றன

 அவரது கழுத்தை.

 

தன் வருகைக்காகக்

காத்திருக்கும் மகனின் முகம்

வந்துபோகும் துக்கத்திற்கிடையே

ஆறுதலாய் அவர் காண்பது

மேசைமீது கிடக்கும்

வண்ண வண்ண பட்டன்கள்

அத்தனையிலும்

அப்பிள்ளையின் ஸ்மைலிகளை.!

 

யாருமற்ற சிலுவை.  

யாரும் கொண்டு வந்து வைக்காத  சிலுவையை அவரவர்களே இழைத்து அவரவர்களுக்காக அவரவர்களே வைத்துக் கொள்கிறார்கள்.  இது உண்மையும் கூடதான்.  இப்போதெல்லாம் இணைய வழி சூதாட்டம் என்ற ஒன்றுக்குள்; ஆசை காட்டிய மாய வழியில் நுழைந்து மரணத்தின் குகையை அடைகிறார்கள். இதனால் சிலுவை சுமக்கும் குடும்பங்களின் நிலைதான் என்ன? வலியுடன் கவிதை……

 

*யாருமற்ற சிலுவை*

 

காலம் ஒரு மந்திரக்காரன்.

அவன் கைகளில் இருக்கும்

சீட்டுக்கட்டு ராஜாக்களை

தேர்ந்தவொரு நடிகனின் குரலில்

எப்படி வேண்டுமானாலும் மாற்றுவான்.

 

ஒருமுறை

ஆசை தடவிய மந்திரக்கோலைச்

சுழற்றுகையில்

இணையவழி சூதாட்டத்தில்

இஸ்பேட் ராஜா அகப்பட்டுக்கொண்டான்.

 

யார் சாயலுமற்ற ஒரு பெரும் துயரம்

அடைமழையெனத்

தன் வாசல் வருவதை

ஆர்டின் ராணியோ

அறிந்திருக்கவில்லை.

 

கடன்சுமையில் முறிந்த அச்சை

சரிசெய்ய இயலாதவனாய்

குடும்பத் தேரை

வீதியில் நிறுத்திவிட்ட தலைவன்

தன்னை தீயிற்குத் தின்னக் கொடுத்தான்.

 

திசையற்ற ராணி

இளவரசியின் பசிக்கு

பானையைத் தேடுகையில்

கடன்சொற்களின் கூர்மையில்

உடைந்து நொறுங்கியது

அவளது மனம்போல் கஞ்சிப்பானையும்.

 

பசியின் சுழல் கடந்து

இன்னல் சுமந்து

இளவரசிக்குக் கீரிடம் சூட்டிப் பார்க்கக்

கனவோடு காத்துக் கிடக்கிறாள்

யாருமற்ற சிலுவையாய்

திக்கற்ற ஆர்டின் ராணி.

 

இஸ்பேட் ராஜாவைக்

கவிழ்த்துவிட்ட மனநிறைவில்

அந்தக் கிளாவர் மந்திரக்காரனோ

இன்னொரு டைமண்ட் ராஜாவை

இந்நேரம் தேடிக்கொண்டிருக்கலாம்.

 

கேள்விகள் இல்லையென்றால் பிரபஞ்சத்தின் ஓட்டம் நின்று விடும். ஒரு கேள்விக்கான பதில் அங்கேயே கிடைக்கலாம் . அல்லது தொலை காத தூரங்களில் கிடைக்கலாம்தேவை விடை. புத்தனின் கேள்விக்கு அவன் தேடிய பதில் பல கால அலைச்சலுக்கு பிறகுதான் கிடைக்கிறது. அவன் கேள்வி கேட்டு புறப்பட்டவுடன் யசோதரைக்கு ஏற்பட்ட கேள்விகள் பல ஆண்டுகளை கடத்திதான் கிடைத்ததுஇதுவும் கூட பதில் தேடும் ஒரு பயணியின் கவிதைதான்….

 

ஒரு கேள்வியோடு அது தேடும்

பதில் ஊருக்குப் பயணப்படுகிறேன்.

அப்பதில் ஊரின்

பாதை  அவ்வளவு எளிதாய்க் கிடைத்துவிடவில்லை.

எதிர்படும் யாவர் தரும்

வழிகளின் வரைபடத்திலும்

சமாதானம் அடையவில்லை.

அனுமானத்தோடு ஆறேழு

ஊர்களின் வழியே கடந்தாயிற்று.

பின்னொரு நாளில்

தான் தேடிய பதில்

ஊருக்கு வந்ததும்

புத்தனாகிப் புன்னகைக்கிறது

அக்கேள்வி.

மீண்டும் முளைக்கும்

சில கேள்விகள்

முகவரிகள் ஏதுமின்றி இன்னும்

பதில் ஊரைத்தேடிக் 

 கொண்டேயிருக்கின்றன

உங்களுள் உறைந்து கிடக்கும்

ஆயிரம் கேள்விகளைப் போல்.

இப்போது புத்தன் எங்கோ

புன்னகைக்கக் கூடும்.

 

ஒன்றையொன்று சார்ந்துதான் இந்த உலகம் இயங்குகிறது. நான் தனியன் என்பவன் கூட வெறுமையின் துணையுடன்தான் பயணம் செய்கிறான். இது வாழ்க்கையின் அங்கமான உறவுகளுடன் வாழ்வதன் பொருட்டு பயணம் செய்பவன் கவிதை. இந்த பயணத்தின் முடிவு என்பது எப்போதும் கிடையாது. தொடர் ஓட்டம் போல் ஒருவன் பயணத்தை முடிக்கும் போது மற்றவரிடம் பொறுப்பை சாற்றி விடுகிறான்இதுவும் ஒரு பயணியின் கவிதை…..

 

சுழலும் வாழ்வில்

சுருங்கிய இரைப்பையை

நிரப்பிடத் தூரதேசத்துப் பயணத்தில்

ஒரு ரயில் பெட்டிக்குள்

அடைபட்டுச்

சுழலாத மின்விசிறியை

வெறித்தபடி நிலைகுத்திப்

பார்க்கிறது கண்கள்.

 

சிறிய பொட்டலத்தில் நிரப்பியத்

தேயிலைத் துகள்கள்

பாலில் இறங்கித் தேநீராதல் போல்

பிரியங்களின் எதிர்பார்ப்புகள் தனிமையின் குழிகளை

நிரப்பிக் கொள்கிறது.

 

பசி வேளையில் உணவுப் பொட்டலத்தைச் சுற்றிய

 நூலின் சிக்குகளை அவிழ்கத் திணறுவது போல்

காலம் கட்டிய வறுமைச் சிக்குகளை

அவிழ்க முற்படுகிறது கைகள்.

 

இருந்தும் ஆதிப்புள்ளியின்

முடிச்சுக்களைப் பற்றிச் சொல்லாது

காலம் நகர்த்திக் கொண்டே இருக்கிறது வாழ்வென்னும் ரயிலை

பிழைப்பை நோக்கித்

"தடக் தடக்" என்னும்

சத்தத்தோடு.

 

 புதிதாக கட்டி குடியேறுகிற  வீட்டின் ஆரம்பமே குதுகலமாகத்தான் இருக்கும். அதே சமயம் கடனில் மூழ்கிய ஒருவரின் வீட்டை  வாங்கியவரின் குடியேறல் அவர்களைப் பொறுத்த வரை மகிழ்வாகவும் அவ்வீட்டை பொறுத்த வரை முன்பு இருந்தவர்களின்  துக்கம், இப்போது குடியேறுகிறவர்களின் மகிழ்வும் கலந்த இரட்டை நிலையிலும்   இருக்கும்  என்பதுதான்  இக் கவிதை

தவிர்க்க முடியாத ஒன்று…..

.

வனத்தைத் தவறவிட்டவொரு குட்டியானையாய்

தனித்து நிற்கிறது யாருமற்ற

கடனில் மூழ்கிய வீடு.

இன்னொரு கைக்கு  அது மாறுகையில்

புதிய வண்ணம் புதிய வடிவமெனப்

புத்துயிர் பெறுகிறது

கோயில் யானையாய்.

இப்போது வாங்கியவன்

பாகன் ஆகிறான்

முன்னங்காலை நீட்டிப்

பாகனை ஏற்றுவதுபோல்

முன்வாசலில்  யாவரையும் வரவேற்கிறது

புதுமனை புகுவிழாவன்று.

பாகனின் கட்டளைப்படி

முன்பிருந்தவன் கண்ணீர் சிந்திய அறையில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கற்றுக்கொள்கிறது.

அவர்களைப் படுக்கை அறையில்

உறங்கவைக்கப் பழக்கப்படுகிறது.

எப்போதாவது முன்பு வாழ்ந்தவன்

தன்னைக் கடந்துபோகையில்

வனத்தைத் தன் கண்ணில் வைத்த

யானைக்கன்றென அவ்வீடு பிளிறுவது

அவன் காதுகளில் கேட்காமல் இல்லை.

 

இனி கவிஞரின் இன்னம் சில கவிதைகள்:

 

நிலம் கொத்தும் பறவைகள்*

 

நிலம் கொத்தும் பறவையென

மண்ணைக் கிளறி  சேறு மிதித்துப்

பக்குவமாய் பானை செய்து விற்றும் பசியாற முடியா வாழ்க்கைக் கடனுக்குப் பண்ணையாரிடம் அடகுக்கு வந்தான் இடையனின் பாலகன் தோட்ட வேலை பார்க்க.

 

பசுக்கள் மேய்ச்சல் காணும் பொழுதில் கொய்யா மரக்கிளையின் உச்சியில் செவ்வெறும்புக் கூடு கலையாது பழம் பறித்து

கால்வயிறு பசியாறிக் கொண்டான்.

செம்புலம் நீர் பாய்ச்சிச் செழிக்கக் கண்டு வெட்சிப் பூச் சூடி உவகை கொண்டவன்போல்

அரளிப் பூப் பறித்து

ஆற்று நீரில் நீந்திக் கிடந்தான்.

 

பக்கத்துத் தோட்டம் பாய்ந்துபோன

ஆநிரைகளைக் கண்ட பண்ணையார்

இடுப்பில் கட்டியிருந்த பச்சை பெல்ட்டால் அவன் தோலில் இழுத்ததும்

வரிவரியாய் உடம்பில் பூத்திருந்தன அடிமைக் கோடுகள்.

வெடித்து அழுதது நிலம்

பாளம் பாளமாய்.

 

 இருகோட்டுப் பயணம்

 

ஒட்டகத்தைப் போல்

தண்ணீரை

நீண்ட தனது பெட்டிகளில்

நிரப்பிக் கொள்கிறது

நடைமேடையில்

அப்போது ஓடிவந்து நின்ற

 இரயிலொன்று.

தேநீர் விற்பவன் யன்னலின் கம்பியில்

 தனது கம்பியின்  கொக்கிவழியே

தேநீர் தூக்கைத் தொங்கவிடுகிறான்.

முந்தைய நிறுத்தத்தில்

ஏறிய சிறுவன் தனது

சட்டையைக் கொண்டு

கீழே கிடப்பவைகளைத் துடைத்துப்

 பெற்ற யாசகத்தையெண்ணியபடி

 ஐந்தாவது பெட்டியிலிருந்து

 இறங்குகிறான்.

பார்வையற்றவள்

சுசீலா பாடலிலிருந்து

லதா மங்கேஷ்கர் பாடலுக்கு

மாறுகிறாள்.

மகிழ்வோடு தன் ஊரை

இழுத்துவந்த இரயில்

விட்டுப் போகையில்

நினைவைக் கட்டி

ஊர்ந்து கொண்டிருக்கிறது

ஒவ்வொரு ஊர்களுக்குமிடையே.

 

 இரவுண்ணி

 

பகலெல்லாம்

பசித்திருந்த கனவு

இரவைத் தின்று பசியாற

என்னுள் நுழைகிறது.

விழி மூடிக்கிடப்பதை அறிந்து

உள்நுழையும் கனவைத்

தடுக்கையில் பாம்பு ஒன்றை

என் மீது வீசுகிறது.

அறிமுகம் இல்லா

வழிப்போக்கன் ஒருவனின்

வார்த்தையை உமிழ்கிறது.

மறவாமல் மலர்க்கொத்து

ஒன்றையும் பரிசளிக்கிறது.

அதன் நாளைய உணவிற்கு

உணர்வின் முடுச்சுக்களை

அவிழ்த்து விதைகளை வீசிக்கொண்டிருக்கிறது.

எத்தனித்து எழுகையில்

என் இரவைக் கொத்தி    

தின்ற கனவு சட்டென

உறங்கத் தொடங்குகிறது.

விடியல் புன்னகையோடு

என்முன்னே எதிர்படுகிறது

அன்றை தேடல்களைக்

கைககளில் ஏந்தியபடி.

 

 

எதிர் பாராத ஒரு நிகழ்வின்

கதவுகள் திறந்துகொள்ளும் வேளையில்

ஒரு அன்பின் கண்ணீரோ

காயமோ துரோகமோ

கண்முன் இருக்கலாம்

கண்ணாடிக் கோப்பைகளாய்.

பொறுமையின்றிக் கைதொடுகையில் தவறி விழுந்த கண்ணாடித் துண்டுகளின் கூர்

கையைக் கிழிக்கும்

கணங்களாய்

ரணமாகிறது மனது.

அத்துயரத்தைத்

துடைத்தெரியுமென நம்பிச்

சிந்தும் கண்ணீர்

இரவை நனைத்துக் கொண்டிருக்கிறது.

மகிழ்வோ துயரமோ

உள்ளக் குழிகள் நிரம்புகையில்

உனக்கான ஒருத் தனிப்பாடல் உன்னுள் முணுமுணுக்கிறது.

இவையெல்லாம்

ஏனென்று கேள்வி

எழுமுன்னேக்

காலம் நகர்த்திக் கொண்டே இருக்கிறது

ஒரு புள்ளியிலிருந்து

இன்னொரு புள்ளிக்கு

உன்னையும் என்னையும்.

 

குரல் விற்றுப் பிழைப்பவன்*

 

இசைக் கருவிகளைக் கொண்டு

 இசைக்கத் தொடங்குகிறான்.

தனக்குப் பிடித்த கதையொன்றை

பாடல் வழியே

கூறத் துவங்கியதும்

உயிரற்ற பொருட்களெல்லாம்

உயிர் பெற்று அவன் கூறும்

கதைக்கேற்ற பாத்திரங்களாய்

ஆடத் தொடங்கின.

கதையில் நுழைந்த அரசன்

வேண்டிய பொருட்களை

எல்லோருக்கும் தந்து

 அழியாத ராஜ்ஜியத்தைப் படைக்கிறான்.

எங்கோ திரண்ட மணற் குவியல்

 வல்லூறுவாய் அவன் அழகிய

 கண்களைப் கொத்தித் தின்ன வந்தது.

கண்களை விடுவதென்றால்

மக்களை பசிக்குக் கொடுக்க

 வேண்டுமென்றது அப்பறவை.

 மக்களின் வாழ்விற்காக

தன் கண்களை இழந்தான் அவ்வரசன்

 என்ற பாடலோடு அக்கதை முடிந்தது.

விரித்த துண்டில்

காசுகள் விழுந்தன

தன் வீட்டின் வயிற்றை நிரப்பப் போதவில்லையெனினும்

நாளை இன்னொரு

கதையொன்றுக்கு

அச்சாரமாய்.

 

 

கைகழுவிய காலம்*

 

நேற்றை கருப்புக்

கட்டையெனவும்

நாளையை வெள்ளைக்

கட்டையெனவும் செய்த

பியானோ ஒன்றில்

இன்றைக்கான பாடலொன்றை இசைக்கிறது பிரெளனியன் இயக்கத்தை உள்வாங்கிய காலம்.

எழும் இசைக்கு நடுவே

இசைக்குறிப்புக்களை விழுங்கிய

இன்றைய நாளை

பசி கொண்டு மொழிபெயர்க்கிறது.

உடலில் பூத்த உவர்ப்பின் சித்திரத்தில்

நேர்த்திக்கடனென வந்த

மண்குதிரையில் அய்யனாரென வேட்டையாடியாய்

நகர்ந்தோடியபடியிருக்கிறது நிலவொளியில்.

தனது தீரா பெரும் பசிக்கு

 பசியோடு எதிர்படும் தலைகளையே

கேள்விகொண்டு வீழ்த்திப்

 புசித்துவிட்டு,

நகரும் பேரொளி அண்ட நதியில்

கைகழுவிய காலத்தின்

மிச்ச மணித்துளிகள் கிளையொன்றில்

தொங்கியபடியிருக்கின்றன

விக்கிரமாதித்தனின் வேதாளமென

ஆயிரம் கேள்விகளோடு.

 

மாலை நேரத் துரித உணவு

சமைப்பவனோடு

அவன் வாணலியில்

வறுத்தெடுக்கும் சத்தத்தைக் கேட்டவாறு

பசித்திருக்கின்றன

நாற்காலிகள்.

 

அவன் கட்டளைக்கு

ஏற்றவாறு அதன்

கால்களை நகர்த்துதலே

அவற்றுக்கு இடப்பட்ட கட்டளை.

 

கட்டளை மீறியபொழுதுகளில்

நாற்காலிகளின்மீது விழும்

சில சொற்சித்திரங்களின்

ரத்தக்கசிவு.

 

அதன் பலம்

அறிந்தும் அமைதியாய்

தன்மீதே சுமர்த்தப்படுகிற

புகார்களுக்குப் பதில் ஏதும் சொல்வதில்லை.

 

சுமக்க மட்டுமே கற்றுத்தரப்பட்டுள்ள

இந்த நாற்காலிகள்

ஒருபோதும் தனக்கென

அமர்வது பற்றி யோசிப்பதில்லை.

 

 *நதியாகும் இந்நாள்*

 

நாட்கள் எப்போதும்

நமதானதாகவே

இருப்பதில்லை.

இந்த நாளை

நான் ஒரு நதியாக்குகிறேன்.

அதற்குள் கால்

நனைத்து

அதன் ஆதி விதையினை

இப் பூமியில்

விதைக்க

அடியாழம் வரை

செல்ல எண்ணுக்கிறேன்.

இந்நதியைக் கடப்போரெல்லாம்

கல் எறிந்த வட்டம் ஒன்றை

தருவிக்கிறார்கள்.

இடையே நதியை விட்டு

வெளியேற உத்தரவும்

வருகிறது.

இருந்தும் இந்நாள்

என்னும் நதி

வினாடிகளில்

பயணித்து நேற்றைய

கடலோடு கலக்கிறது.

இனி நாளைய

நாளை நான்

ஒரு மரமாக்க

உத்தேசித்துள்ளேன்

 

தேநீரகத்தில் குடித்தபின்

வைக்கப்பட்ட குவளைகளை

இடக்கைக்கு மாற்றிவிட்டு

வலக்கையால்

துடைக்கப்படுகிறது மேசை.

 

காலை முதல் இரவு வரை

இத்துடைத்தலின்

எண்ணிக்கையை அறிய

அக்கைகள் முற்படுவதில்லை.

 

தன்மீது விழும் பார்வைகளைத்

தவிர்த்துவிட்டு  

மெளனமாய் துடைக்கும்

அக்கைகளுக்கு ஏதோவொரு

ஒப்படைக்கப்பட்ட  சுமையோ

அல்லது எங்கோ கைவிடப்பட்ட

கதையோ இருக்கக்கூடும்.

 

எப்போதாவது மேசையைத்

துடைக்கையில் 

அக்கைகளும் ஏங்கியிருக்கலாம்

சுவையுள்ளவொரு

குவளையை ஏந்திப் பருக.

 

மணலில் வரிவரியாய்

வருத்தங்களை

விட்டுச் சென்றிருக்கிறது

வற்றிய பிறகு ஆறு.

 

                                           -அன்றிலன்,

View

மாதாந்திர பரிசு

சித்ரா புபேஷ் குப்தா

View

மாதாந்திர பரிசு

ப்ரியா வெங்கடேசன்

View

Showing 101 - 120 of 727 ( for page 6 )