logo

கவிச்சுடர் விருது


'நீர்க்குமிழ்களின்முகங்களில் நெக்குருகிப்போய்
என்முகத்தைதேடிப்பார்க்கிறேன் இப்போது
அதுஏற்கனவே ஒருநீர்க்குமிழியின் முகமாகியிருந்தது
உடையாதநீர்க்குமிழியின்முகமாய்.....'

 கவிஞர் தங்கேஸ்வரன் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு சின்னமனூரை சேர்ந்தவர். தற்போது தேனி மாவட்டம் ஹைவேவிஸ் அரசு மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிகிறார்.

அது மட்டுமில்லாமல் தமிழார்வம் அவரது சுவாசம் என்பதால் நிறைய கவிதைகளையும் எழுதிவருகிறார். கல்கி, கணையாழி, செம்மலர், வண்ணக்கதிர், தகவு மற்றும் கொலுசு போன்ற சிற்றிதழ்களிலும் அவரது கவிதைகள் தொடர்ந்து பிரசுரம் கண்டுள்ளன. 

இவரது முதல் கவிதை தொகுப்பான 'தங்கேஸ் கவிதைகள்' சென்ற ஆண்டு கவிஞர் பிறைசூடன் அவர்களால் வெளியிடப்பட்டது. தற்போது கலில் ஜிப்ரனின் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு ' முறிந்த சிறகுகள்' என்ற பெயரில் அவரால் தொகுக்கப்பட்டு விரைவில் வெளிவர தயாராகவும் இருக்கிறது. 

இவரது கவிதைகளின் மேன்மையைப் பாராட்டி நமது படைப்புக் குழுமம் ஜூலை  மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை தங்கேஸ்வரன் அவர்களுக்கு அளித்து கௌரவம் செய்கிறது...

இனி கவிஞரின் படைப்புகளைக் காண்போம்

பழைய நினைவுகளென்பது வாசம் நிறைந்ததாகவும் இருக்கும். சில நேரம் துர் நாற்றம் நிறைந்ததாகவும் இருக்கும். நல்ல நினைவுகளை எப்போதும் அசைபோட்டு ருசிக்கலாம்...அனால் கசப்பான நினைவுகள் அப்படி இல்லை என்பதை இந்தக் கவிதையின் ஒரு படிமக்கூறு மூலமாக அழகாக சித்தரிக்கிறார்...

துருவேறிய நினைவுகளை
விரல் பருமன் தூசி படிந்து கிடந்த
பழைய டிரங்குப்பெட்டிக்குள்
மூச்சு வாசனை ஏறிய
பழைய காகிதங்களைக் 
கண்டன சில 
சுண்டெலிகள் ஒரு நாள் இரவு
அவற்றில் உடல்சூட்டின் ருசியறிந்து
கடித்து தின்றன முழு இரவும்
செரிக்கவும் இயலாமல்
துப்பவும் இயலாமல்
துருவேறிய நினைவுகளை தின்று
மதிமயங்கி கிடங்கின்றன
யுகம் யுகம் கடந்த பின்பும்

***
 
கவிதையின் வடிவம்தான் என்ன?, கவிதை இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரையறை இருக்கிறதா? மரபு மட்டுமே கவிதையா?, நவீனம் பின் நவீனம் சண்டைகள் ஏன்? இத்தனைக்கும் ஏன் இத்தனை பிதற்றல்? வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யார்தான் தீர்மானிப்பது?

ஒரு கவிதை இவ்வளவு கடினமாக
இருக்க வேண்டுமா?
ஒரு கவிதை இவ்வளவு எளிமையாக
இருக்க வேண்டுமா?
எதுகை மோனை படிமம் குறியீடு
உருவம் உள்ளடக்கம் புதுமை கற்பனை
நவீனத்துவம் பின் நவீனத்துவம்
மற்றும்.... மற்றும்
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை
உதைத்து பீறிட்டது
நான் எப்படி இருக்க வேண்டுமென்று
யாரடா தீர்மானிப்பது?

***

படிமங்களுக்குள் நுழைந்து கொண்டு விளையாட காதலர்களுக்கு ஆசை.... அதுவும் எப்போதுமே காதலென்றால் பட்டாம் பூச்சிகள் பறந்து வந்துவிடும். 

அவன் துரத்த அவள் பட்டாம் பூச்சி
அவள் துரத்த அவன் பட்டாம் பூச்சி
மீள் உரு கொள்வதற்கும்
வெகுதொலைவுக்கு அப்பால்
துரத்தப்பட்ட பட்டாப்பூச்சிகள் குழம்பின
இனி யார் துரத்தினால்
யார் யாரின் பட்டாம் பூச்சி
யார் யாராய் ஆவதென்று!

***

வீடு என்பது அச்சமற்றதாக இருக்கவேண்டும். வீடு பெண்களின் இரசனைக்கான கைவினைகள். அதுவும் கிராமத்து வீடுகளென்றால் சொல்லவே வேண்டாம். பசுஞ்சாணம் மெழுகி.. பஞ்சாரத்துக் கோழிகள் நிறைந்து... அரிசிக்கழுவும் தண்ணீருக்காகவும் அருகில் நின்று தலையுரசும் ஆடுகள் வரை ஒரு சப்தம் நிறைந்த வெளியாக இருக்கும்.. அப்படி இருந்த வீட்டிலிருந்து நகரத்திற்கு வாழ்க்கைப்பட்டு போன பேத்தி கதவின் அழைப்பு மணி அடித்தாலே அச்சத்துடன் குவியத்தில் வந்திருப்பது யாரென்று அறிந்த பின்பே கதவைத் திறக்கிறாள்... 

 பசுஞ்சாணத்தில் மெழுகிவிடுவாள் தெரு வாசலை
பசலைக்கீரை நிறத்தில் கருக்கலிலேயே 
தொழுவத்தில் கட்டியிருக்கும் பசுங்கன்றும் 
வெள்ளாட்டுக்குட்டியும் சங்குப்பூனையும் 
சிம்மி நாய்க்குட்டியும்
நீச்சத்தண்ணீ கேட்டு 
பக்கத்து வீட்டு குட்டிக்காடுகளும் குருமான்களும்
சட்டமாக வீட்டுக்குள் நுழைந்து விடுவார்கள் 
சாணம் பதிந்த கால்களோடு
கழுத்தைக்கட்டிக்கொண்டும் 
முகத்தை உரசிக்கொண்டும்
முழங்காலைக்கட்டிக்கொண்டும் காச்சு மூச்சென்று 
கத்திக்கொண்டிருக்கும்
ஒவ்வொன்றும் காலையிலேயே....
தீம்பட்டி குழல் வைத்து அடுப்பூதிக்கொண்டிருப்பவள்
ஒவ்வொன்றொன்றுடனும் 
வழமை பேசிக் கொண்டிருப்பாள் சளைக்காமல்
ஒரு கரண்டியில் கொதிக்கும் கருவாட்டுச்சாறெடுத்து 
தாத்தாவின் உள்ளங்கையில் வைத்து 
உப்பு பார்க்க சொல்வாள் மறக்காமல்
சுயம் தொலைத்து நிற்க நேரமில்லாத 
இப்பெரு நகரத்தில் பிழைப்பிற்காக
பல்லடுக்குமாடிஒன்றின் ஒருதளத்தில் 
அடைந்து கிடக்கும் கிராமத்தானுக்கு

இப்போது எந்தஅழைப்பு மணி ஒலித்தாலும்
ஒற்றறியும் லென்ஸ் மூலம் 
வெளி முகம் பார்த்து கதவு திறக்கும் வரை
அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழும் 
பயத்தையும் தாண்டி
பார்வதி பாட்டியின் சிரித்த முகம் 
எட்டிப்பார்ப்பதை மட்டும்
ஏனோ தவிர்க்கவே முடியவேயில்லை  

***

உரையாடல்கள் நிகழ்த்தாமல் எதுவுமே இங்கு நிகழ்வதில்லை. உரையாடல்கள் சில நேரம் நீண்டுகொண்டே செல்லும்.. சில நேரம் சட்டென்று முடிந்துவிடும்.. இவை பரவாயில்லை . சில உரையாடல்கள் வாய்தா வைத்துவிட்டு நகரும்... அதன் முடிவறியாமல் நாம் குழம்பி நிற்போம்.. இங்கும் சில உரையாடல்கள்...

முடிவற்ற நீண்ட உரையாடல்களை 
வளர்த்துக்கொண்டிருந்தோம்
நாங்கள் இருவரும்
இறுதியில் நாளை தொடரலாம் என்று 
விடைபெற்றதுமழை

ஒரு வார்த்தை உரைக்காமல் முகத்தோடு 
முகம நோக்கி கிடந்தோம்
நாளை நோக்கலாம் 
என்று விடைபெற்றது நிலவு

வந்ததிலிருந்து வார்த்தைக்கு வார்த்தை
வாயாடிக்கொண்டிருந்தவளிடம்
சரி சரி சண்டை வேண்டாம்...
நாளை பேசித்தீர்த்துக்கொள்ளலாம் என்றேன்
எதுவாக இருந்தாலும்
இப்பொழுதே பேசி தீர்த்து விடுவோம் என்று
சட்டென்று மார்பில் சாய்ந்தாள்!

***

இயற்கை காட்சிகள் மனதிற்கு இதம் தரக்கூடியவை. வனத்திற்குள் செல்பவன் விலங்குகளாகவே வாழ்கிறான் என்பது ஒரு ஜப்பானிய பழமொழி... கவிஞரும் இயற்கையின் காட்சிகளில் நுழைந்து காணும்போது அதன் வடிவங்கள் மாறி அழகூட்டுகின்றன...

பட்டாம் பூச்சியின் சிறகென விரிந்திருக்கும்
யாழினி பாப்பாவின் விரல்களின் வழியாக
சொட்டுகிறது இன்றைய
அதிகாலை துளித்துளியாக

தற்போதே திறந்திருக்கும் செம்பருத்தி மொட்டின்
பச்சையத்திலிருந்து பிறந்திருக்கும்
என நம்பக்கூடும்
ஒரு விரலளவு தேன் சிட்டு

மாராப்பின்றி திறந்திருக்கும்
மஞ்சள் அரளிப்பூவின் மார்பில்
கொஞ்சம் தாய்ப்பால் அருந்திவிட்டு
இடமும் வலமுமாய்
இலைகளில் துடைத்துக்கொண்டிருக்கிறது
குட்டியே குட்டியான அலகை

பனி தெளித்த வாசல்களில் உதிர்ந்து கிடக்கும்
மஞ்சள் சிவப்பு மற்றும் வெள்ளை வார்த்தைகளோடு
கொஞ்சம் கட்டிப்புரண்டுவிட்டு
பக்கத்து தென்னைக்கு தாவும்
அணிலொன்று
தலைகீழாய் நின்று விச் விச் விச்
கத்தும்போது
துடிக்கும் குறியென ஆடி அதிரும்
அதன் வாலுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்
இணையின் இருப்பிடம்

இரவெல்லாம் பாதங்களை சுமந்து சுமந்து
இப்பொழுதுதான்
சற்று கண்ணயர்ந்திருக்கும்
இந்தத் தெருவை வன் புணர்ந்து எழுப்பிட மனமின்றி
மௌன வலம் வந்து என் வாசலில்
முடித்துக்கொள்கிறது
தன் திட்டமிடாப் பயணத்தை
இந்தக் கவிதை

***

ஆண்பாதி பெண்பாதியென வாழும் அர்த்த நாரீஸ்வர் நிலை காமத்தின் களவாடலில் நிகழ்கிறதை அழகாக விவரிக்கும் இந்தக் கவிதையில்தான் எத்தனை சுவை?

வலது மார்பில் இடது கன்னத்தை சாய்த்து
துயில் கொள்கிறாள்
ஒரு புன்முறுவல் தேங்கிய உதடுகளோடு

என் வலது கை அனிச்சையாய்
அவள் கழுத்தை மாலையிட்டுப் பிணைத்திருந்தது

நிழல் விழுந்தாலே சப்திக்கும்
அடர் மெளனம் கரைந்தோடுகிறது
இருளின் கருமையோடு
கால வெளிதனில்

விரல்களை விலக்கினாலும் சகியாத
துயரம் கொள்பவளாக துயிலாழ்ந்திருப்பவள்
சற்றைக்கெல்லாம் என்னை ஒரு கனவாக்கி
விழிகளுக்குள் இழுக்கிறாள்
தன் ஆகர்ஷனத்தின் வழியே

ஒரு வெண்புறா பக்கவாட்டில் சிறகு விரித்தது போல் என் மீது சரிந்திருக்கும்
இவளை வைத்த கண் விலக்காமல்
எத்தனை நேரம் பார்த்தேனோ

என் கர்வம் அழிந்து கொண்டிருக்கிறது
தடையின்றி
ஆண்டாண்டுகளாய் ஆண்டு வந்திருந்த

அத்துமீறும் ஆண் சாபம்
படுக்கையை சுற்றி உதிர்த்து கிடந்தது
சிறு சிறு இறகுகளாக
நான் அர்த்த நாரியாய் போக

மாதொரு பாகனாக இருப்பது எவ்வளவு மகத்தான அனுபவம்
இரண்டு இதயங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனவே
ஒரே மார்பில்

***
ஒரு கவிதைக்குள் நுழைந்து வெளிவருவதும் ஒரு போராட்டம்தான்.. ஆனால் அதற்குள் நுழையும் முன்பாகவே வியப்பாக நின்றால்  அந்தக் கவிதையும் விளங்காததுதான். இந்தக் கவிதையில் லூசிபர் லூசிபர் என்ற சொல்லாடலை தங்கேஸ் பயன் படுத்தியிருக்கிறார். யார் அந்த லூசிபர்... ஒரு பழைய ஏற்பாட்டின் மொழியாக்கம் லூசிபர் என்றால் சாத்தான் என்று வரையறுக்கிறது... லத்தீன் மொழியில் லூசிபர் என்றால் விடி வெள்ளியும் என்று பொருளுண்டு. இப்போது இந்த லூசிபரை பிடித்துக் கொண்டு இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்... கவிதையில் தெளிவு பிறக்கும்...

ஒரு பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து
உன் கிரகத்திற்கு வருகிறேன்
எனக்கென்று வீடு வாசல் எதுவுமில்லை
சுழலும் உன் பூமியின் அச்சில் ஒரு துகளைப் போல ஒட்டிக் கொள்கிறேன்
புள்ளியாகவே இருந்தாலும் இருத்தலின் மன உளைச்சல்
என்னை பேரண்டமாக வெடித்து சிதறிப் போகும் படி செய்கிறது
பெயரிடப்படாத பால் வீதி எங்கும்
இலக்கற்று அலைகிறேன் ஊழிக்காலம் முதல்
நான் நீ சாதி மாதம் தேசியம் மனிதம் என
சமன்பாடுகளை
எழுதி எழுதி தீர்த்த பின்பும் 
தொக்கி நிற்கும் ஒரு கேள்வி சுருக்கு கயிறு போல
ஆதாமாக இருந்தாலும் இந்த தூக்கு கயிறை முத்தமிடாமல் செத்திருக்க மாட்டான்
லூசிபர் லூசிபர்
கடவுள் தன் அம்சத்தில் மனிதனை படைத்தாலும்
அவன் மனதுக்குள் உன்னைத் தானே
சிறு மீன் குஞ்சென. நீந்த விட்டிருக்கிறான்..

***

கவிஞரின் மேலும் சில சிறப்பான கவிதைகள் :

கன்னக் கதுப்பில் வெடிக்கும்
வெட்க குமிழ்களில் 
உடைபடுகிறது அவன் மனது
சிறு சிறு புள்ளிகளாக தோன்றிய சலனங்கள்
ஒரு பேரலையாக எழுந்து வருகிறது
உன் கடலில்
படகு கிடைக்காத பரிசல்காரன்
மிக ஆழத்தில் மூழ்கி 
விரும்பிச் சாகிறான் உன் விழியோரம்
முடிக்காத வார்த்தைகளில் தெறித்த
பிறைநிலாக்களை பொறுக்கி 
தலையணையாக்கி
இரவெல்லாம் தொடர்கிறான்
விட்ட இடத்திலிருந்து
கரும் உரையாடல்களை
உதடு கடித்த நளினத்தின் ஒரத்தில்
ஊறித் திளைத்த ரசத்தை
ஒருவருக்கும் தெரியாமல்
நீவிப்பார்க்கிறான் 
இரகசியமாக நள்ளிரவில்
என் ஆன்மாவை திறந்த இரகசியச் சாவி
தொலைந்து விட்டதென்று
ஏ உலகமே நீ இருளாகவே 
இருந்து விட மாட்டாயா?
என் கண்ணில் வலம் வரும்
அடங்காத கனவுகள்
சுதந்திரமாகவாவது வலம் வரட்டும்
இதே வீதிகளில்

***
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் நாம் தற்கொலை செய்து கொண்டோம்
பிரிவாற்றாத நம் ஆன்மாக்கள் ஒரு தேக்கு மரத்திலையில் போய் ஒட்டிக் கொண்டு
படபடத்தன
தீராத வலிகளைச் சுமந்தலையும் வார்த்தைகள்
இந்த பிரபஞ்சம் முழுவதும் 
அவர்களை கண்டீர்களாவென்று
நம்மை தேடியலைகின்றன
அவயங்களின் கூட்டுத் தொகுப்பு தான்
இந்த உடல் என்னும் மனிதர்கள்
முகம் சுளித்தபடி கடந்து செல்கிறார்கள்
நாம் நடந்த வீதிகளை
மது நெடி கசியும் வார்த்தையோடு
வந்தவன் சொல்கிறான்
உன் அன்பை இந்த தெரு நாய்க்கு பிச்சையிடு
தின்கிறதா பார்ப்போம்
அரூபமாக அலையும் ஆத்மாக்கள்
கிசு கிசுக்கின்றன
மனிதனின் நிழலை மட்டும் பெயர்த்தெடுக்க முடிந்தால்
எவ்வளவு நல்லது
தனிமையின் துயரமே அவனை சாகடித்து விடும்
இன்னொன்று கதைத்தது
இந்த நூற்றாண்டு மனிதர்களை
தனிமை சாகடிப்பதில்லை
வெளவால்களைப் போல எச்சமிடும் அவைகளில் கூடு கட்டி பழகியிருக்கிறார்கள்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் மனப்பிறழ்வடையும் கடவுள்கள்
நேசிக்கும் இதயங்களை
யோசிக்காமல் கைவிட்டு விட்டு விடுகிறார்கள்

***

நிழல்கள்

மனிதர்கள் எல்லாம் உறங்கிய பிறகு
விழித்துப்பார்த்து கண்களை
உருட்டுகின்றன உறங்காத தெருக்கள்

மரித்ததாய் நாம் நினைத்திருந்த நினைவுகள்
பூப் போல உயிர்த்தெழுந்து நடைபயில்கின்றன
நடுநிசிக்கும் பின்பு
நாயின் கண்கள் அவைகளை அடையாளம் கண்டாலும்
அசட்டுக்குறைப்புகளுக்கெல்லாம் அஞ்சுவதில்லை அவைகள்

இருள் வடியும் சாலையும் சுற்றியலையும் சாபங்கள்
காலத்தின் முற்றிய வாசனைகளை தங்கள் மீது
கமழவிட்டபடி வீதியெங்கும் அலைகின்றன
இருள் நதிகளென

எத்தனை மூச்சுக்காற்றுக்கள் இங்கு முன்பு உலவினவோ
அதன் அத்தனை நிழல்களும் இன்னும்
உலவியவண்ணமே உள்ளன
மற்றும் நம் காலடிச்சுவடுகளில் முறிவதும்
அவைகளின் முதுகெலும்புகளோ என்னவோ 
யார் கண்டது?

இந்தக் கவிதையை நீ எழுதினாலும்
நான் எழுதினாலும்
எழுத வைத்த நிழல்களுக்கே சமர்பித்து விடு
என்று என் காதில் கிசு கிசுத்துவிட்டு
இருளில் இறங்கி மறைந்து போகிறது
இந்தக் கவிதைக்கான நிழல்

***

கன்னத்தில் பளாரென்று ஒரு அறை
கை வைத்து தடம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
வாய் மைதுனத்தைப் பற்றிய ஒரு கொச்சையான வசவு
தொண்டைக் குழிக்குள் கத்தியாய்இறங்குகிறது
எச்சிலூறி நிற்கும் ஒநாய்க்கு முன் குமட்டியபடி அவள் வாந்தி எடுக்க
ஆண்மை சுயமென்னும் கயமைத்தனம்
காட்டு யானை போல பிளிறுகிறது
பிறப்புறுப்புகளின் அடிப்படையில் பெண்களை வதைக்கும்
ஒரு கேடுகெட்ட சமூகத்தில்
ஆண்குறி திமிரின் உச்சமாக
எப்போதும்இறுமாப்பெய்திக் கொண்டிருக்கிறது

***


அழுது விடுவது என்று முடிவானவுடன்
இந்த கண்ணீரை உன்னையன்றி யாரிடம் சிந்துவேன்?
உன் அருகாமைக்கோ தொலைவிற்கோ
உன் கை என் மீது படரும் நினைவுக்கோ
அல்லது காரணமற்று அரும்பிய
முதல் துளி கண்ணீருக்கோ
அழுது விடுவது என்று முடிவானவுடன் . .

தூண்டிலில் அலகை தானே குத்திக் கொண்டு
இரத்தப் பிசுபிசுப்புடன் துடிக்கும் மீனுக்கு
தண்ணீரோ கரையோ
எல்லாம் ஒன்று தான்
துடித்து அடங்குவதற்கு
மற்றும் உன் நினைவுகளுக்கு புழுக்கள் ஆவதற்குத்தானே இதயத்தை வளர்ப்பது

***

என் இதயத்தின் சீரற்ற ஒசையை
பதிவு செய்யும் டப் லப் சப்தம்
உன் வருகையின் தாமதத்தில்
தொலைவில் வரும் வாகனத்தின் ஓசை
உன்னுடையதல்ல என்றாலும்
ஒரு முறை நிமிர்ந்து பார்ககாமல் ஆசுவாசம் கொள்ளாது மனது
பிடுங்கப்பட்ட நாற்றிலிருந்து வழியும்
மண் கலந்த நீரைப் போல வழிந்தோடும்
நினைவுகள் உன் வயல் தேடி
காணாத காற்றை கண்டவுடன்
கழுத்தை கட்டிக் கொண்டு கதறி அழும்
காட்டுக் கொடியின் ஜாதி நான் என்று
நீ அறிவாய் தானே ?

***
பட்டாம் பூச்சியாக படபடத்து உள்ளங்கையில் வந்து அமர்கிறது அது
மனது விடைபெறாமலே ஒரு காத தூரம் போய் விட்டது கழன்று 
நெகிழ்ச்சிக்கு ஒரு மழைத்துளி கூட தலை மீது விழவில்லை என்றாலும்
உச்சி முகர்ந்து ஆசீர்வதிக்கும்
ஒரே ஒரு செம்பருத்தி இலை போதும்
தரையில் இறக்கி விட மனதின்றி
உள்ளங்கையில் ஏந்தி நிற்கிறேன்
கோவில் தூணில் அசையாது நிற்கும் யாழியானேன் சற்று நேரத்தில்
சற்று நேரம் என்பதுயுகம் யுகங்களாகிறது
ஒரே ஒரு சருகுக்காக நின்று புறப்படும்
காலத்தைப் பார்க்கும் போது தான்
மிதக்கும் கடவுளிடம் கொஞ்சம் சிநேகம்
காட்டத் தோன்றுகிறது

***

காலுக்கு செருப்பற்றவர்கள் வெய்யிலோடு பூண்டிருப்பது வெறுக்கத்தக்க விரோதமல்ல
கொஞ்சம் கசப்பு கலந்த கட்டங் காப்பியின் துவர்ப்பு
ஒரு குடையின் கீழ் 
அறுந்த செருப்புகளை தைத்துக் கொண்டிருப்பவனுக்கு
ஒரு குடையின் கீழ் அரசாளும் கனவு
அவ்வப்போதுஇடைஞ்சல் தந்தாலும்
வாழ்க்கையோடு எந்தப் பிணக்குமில்லை
தெருமுக்கில் பெட்டிக்கடை வைத்திருக்கும் மணவாளனுக்கு
தினமும் பத்துப் பாடை பார்த்த பின்னும்
ஆழ்ந்ததூக்கத்தின் மீது அத்தனை விரக்தியுமில்லை
வார்த்தை கவசம் பூண்டு
சொற்போர் புரிந்து கொண்டிருக்கும்
ஒரு அலுவலக ஊழியனான எனக்கு
ஏனோ பார்ப்பவர் மீதெல்லாம்
இனம் புரியாத கோபம் 
 என் மகள் மீது கூட
ஒரு சின்னஞ் சிறிய சாக்லெட்டிற்கே
பெரும் அழுகையை நிறுத்தி அவள் சமாதானமாக விடும் போது கூட அல்ல
ஆனால் எதன் பொருட்டு அவள் அவ்வளவு சீக்கிரம்
சமாதானமானாள்
என்பதன் பொருட்டே

***

இந்த அற்புதமான அந்தி வானத்தை
தொலைக்காட்சிக்கு பலி கொடுத்தது
எத்தனை அபத்தம்?
ஓஷோவும் லாவோட்ஷும் நீந்திக் குளித்த இந்த மஞ்சள் நதியில் தானே
இந்த செம்பருத்தியும் 
ஈரம் படிந்ததலையுடன் குளித்து வந்திருக்கிறது
மனதை சுமந்தலையும் உனக்குத்தான்
ஒரு பில்லியன் டன் பாரம்
எனக்கு?
கடலை ஒரு மிடறில் உறிஞ்சிக் குடித்து விட நினைத்த 
 சித்தார்த்தன் தானே புத்தனான்
ஆனாலும் முதலில் மோட்சம் பெற்றது என்னவோ போதி மரம்தான்
சங்கரா சங்கரா சூத்திரர்கள் அவரின்
காலிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்றால்
உழைப்பின் சிறகுகளை மென்மையாக நீவி விடும்
இந்த இருள் காக்கை தரும் பேதமற்றநிழல் ஒன்றே போதும்
மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு 
விண்கலத்திற்கும் முன்பே
முதலில் உங்கள் சாதியை அனுப்பி விடாதீர்கள்

***

சாதி
இரட்டைக்குறிகள் முளைத்து விடுகின்றன
இடுப்பில் ஒன்றும் தலையில் ஒன்றுமாய் 
( சுட்டெலியின் விறைத்த காதளவு )
அந்தப் பெயரைக்கேட்ட புளகாங்கிதத்தில்
உள்ளே கொதிக்கும் இரத்தம் புகையாகி

அத்தனை துவாரங்களிலும் கசிகிறது
கருநீல நிறத்தில்

உடைவாளும் முறுக்கிய மீசையுமாய்
மூவேந்தர்களும் 
வலிமையான காட்டு விலங்கொன்றை
முன்விட்டு நடந்து வரும் தலைவர்களும்
முதன்மை திரை நட்சத்திரங்களும்
உடனடியாக வந்துவிடுகிறார்கள்
ஆண்ட பரம்பரையின் ஞாபகத்திற்கு என்றால்
நீ மட்டும் தப்புவதெப்படி ?

எண்ணிக்கையில் அதிகம்
வலிமையில் அதிகம்
அறிவில் அதிகம்
ஆற்றலில் அதிகம்
வாக்குகளில் அதிகம்
நீளும் பட்டியல் நீத்தார் பெருமையென

என்னையே கேள்

முகநூலில் ஜல்லிக்கட்டை ஆதரித்தவன்
காவிரி ஆணையம் வேண்டி குரல் கொடுத்தவன்
ஸ்டெர்லைட்டையும் நீட்டையும் இன்றும்
எதிர்ப்பவன்
(அனிதா நம் குடும்பத்தில் ஒரு பெண்தான் இன்றும் )
சமயங்களில் வண்ண வண்ண சட்டைகள் அணிந்து
கூட்டங்களுக்குப் போய் வந்தவன் தான்
ஆனாலும் சென்டை மேளத்திற்கும்
பாண்ட் வாத்தியத்திற்கும்
சிவகாசி பட்டாசுக்கும்
பலூன் போல் ஏன் உப்பிவிடுகிறது
அவயங்கள் ஒவ்வொன்றும் ?
என் நண்பனை கேட்டேன்
அவனுக்கும் இது போல் இது முளைத்திருக்க கூடும்
என்ற நம்பிக்கையில் தான்

சும்மாயிரு இது கடவுளின் தேசம்
கடவுளின் தேசத்தின் புளாங்கிதத்தின் உச்சத்தில்
இப்படி சமான்யர்களுக்கு முளைப்பது சகஜம் தான்
இல்லையென்றால் தான் ஆச்சர்யம்

உன் உடல் மீதும் ஆன்மாவின் மீதும்
முழுசுதந்திரமெடுத்து அது உரிமைகொள்ள
நீ ஆசிர்வதிக்கப்பட்டவன் போ என்றான்
அலட்டிக்கொள்ளாமல்

***

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.