logo

கவிச்சுடர் விருது


 

இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை  கவிஞர் செ.வீரமணி அவர்களுக்கு அளிப்பதில் பெருமைக் கொள்கிறோம்.  சென்னையில் வசிக்கும் கவிஞர்,.  அடையாறு அரசு நெசவுத்தொழில் நுட்பக்கல்லூரியில் பயின்றவர் . ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்துகொண்டிருக்கிறார். இவருடைய கவிதைகள் குமுதம் தீராநதி ,  இனிய உதயம் , படைப்பு கல்வெட்டு , தகவு மற்றும் கதிர்'ஸ் கவிமாடம் போன்ற பல இதழ்களில் வெளி வந்திருக்கின்றன. நமது . படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளராகவும் இரு முறை தேர்வு செய்யப்பட்டவர் 

 

இவருடைய முதல் கவிதை தொகுப்பு " துளி அன்பு சிறு நேசம் கொஞ்சம் காதல் " கடந்த ஆண்டு எழிலினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது . பரவலாக வாசிக்கப்பட்டு நல்ல வரவேற்பைப்பெற்ற இந்த தொகுப்பு 'தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை' யின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதும் பெற்றிருக்கிறது .

 

இனி கவிஞரின் சில கவிதைகளைக் காண்போம்:

 

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்து உற்சவம் எடுத்து கொண்டாடும் அழகை மிகச் சிறப்பாக எடுத்து வைக்கும் கவிஞர், இவ்வளவு செய்தும் இந்த மக்கள் காட்டும் விசுவாசம் கொஞ்சம் கூட இந்த கடவுள்களுக்கு இல்லையே என்ற  பொருமல் பகுத்தறிவுச் சிந்தையுடன் இந்தக் கவிதையை மேலும்  அழகு செய்கிறது….

 

அரச மரம்

குளத்தங்கரைனு

அம்போனு

கெடந்தவருக்கு

கோயில கட்டி

பெத்த புள்ளையாட்டம் பார்த்துகிட்டோம்

 

கோச்சுகிட்டு போய்

கோவணத்தோட

நின்ன தம்பிக்கும்

ஆறுபடைவீடு கட்டி

அழகு பார்த்தோம்

 

காட்லயும் மேட்லயும்

கஷ்டப்பட்ட

இன்னொரு

அய்யனுக்கும்

கிரானைட்ல

கோயில் கட்டி

ஏசி கூட போட்டு

வச்சோம்

 

மண்டை ஓடு

மயானம்னு

சுத்திகிட்டு திரிஞ்ச

அப்பனுக்கு

பெரிய பெரிய

கோயில கட்டி

குடிவச்சோம்

 

பாம்பு படுக்கைனு

சமனில்லாம

ஆடிக்கிட்டு கிடந்த

மாமனுக்கு 

ஊஞ்சல் சேவை

உற்சவம்னு

நிறைய

பண்ணியிருக்கோம்

 

தங்க கிரீடம் 

வைர மூக்குத்தி

பச்சை பட்டு

பவள மாலைன்னு

ஆத்தாளுக்கு

பண்ணதெல்லாம்

சொல்லி மாளாது

 

வேளாவேளைக்கு

ஆகாரம்

அழகழகா அலங்காரம்

வருசம் ரெண்டு திருவிழா

காவலுக்கு

காம்பவுண்டு

சுத்தி நாலு கேமரானு

எவ்வளவோ

செஞ்சோம்

 

எங்கப்பே போனீங்க

எல்லாரும்

 

நன்றியெல்லாம்

மனுசங்களுக்கு

மட்டுந்தானா

 

படிமங்களும், உத்திகளும், குறியீடுகளும் அறிந்திடாமல் இருந்த அந்த நாளில் தன்னிடம் ஒரு கவிதை இருந்ததாக தொடங்கும் கவிஞர்,  எவையெல்லாம் மகிழ்விற்கென்று மாற்றத் தொடங்கினோமோ அன்றே ஒவ்வொன்றாக நம்மை விட்டு அவைக்  கழன்று கொண்டதாக பெரும் உண்மையை வெளிச்சம் போட்டுக்  காட்டுகிறார். கவிஞரின் சொல்லாட்சியில் சொல்ல வேண்டும் என்றால் , இப்போது படிமம் இருக்கிறது, உத்தி இருக்கிறது, குறியீடு இருக்கிறது ஆனால்; கவிதை மட்டும் கிடைக்கவில்லை.

 

படிமங்களும்

குறியீடுகளும்

உத்திகளும் 

அறிந்திராத

நாட்களில்

என்னிடம்

ஒரு கவிதை இருந்தது

 

நிலவும்

நட்சத்திரங்களும்

வானமும்

வசப்படுவதற்கு முன்

குளிர்ந்த இரவும்

சில கனவுகளும்

இருந்தன

 

ஓயாமல் சுழல்கிற

சக்கரங்கள்

வாய்க்கப்பெறுவதற்கு முன்

பாதங்களால்

உரையாடிக்கொண்டு

பயணித்த

அழகிய பாதைகள்

இருந்தன

 

வீடென ஒன்றை

மதிலெழுப்பி 

சிறை வைத்துக்

கொள்வதற்கு முன்

உதைத்து விளையாட

ஒரு பூமிப்பந்திருந்தது

 

அமரவும்

உண்ணவும்

உறங்கவும்

கொல்லப்பட்ட மரங்கள்

வந்து சேர்வதற்கு முன்

சிறு தோட்டமும்

நிறைய பறவைகளும்

அவற்றின்

பாடல்களும் இருந்தன

 

ஏதுமற்ற உச்சிக்கே

ஏங்கித்தவிக்கிறது

மீச்சிறு இதயம்

 

இட்டு நிரப்ப

தேவையெல்லாம்

இலவசமாய் கிடைக்கிற

துளி அன்பும்

சிறு நேசமும்

கொஞ்சம் காதலும்

 

காதலின் நிலைகளை கவிதைகளின் தன்மைகளாக மாற்றியெழுதுகிறார் கவிஞர்எவ்வளவு இடர்களை எழுதும் கவிஞன் என்றாலும், அவனுக்குள் பூக்கும் அந்தக்  காதல் அத்துணை அழகானது.  மரபுக் காதலுக்கு சீர் அடி, தளை எதுவும் இல்லையென்பதே கவிதையின் பெரும் அழகு

 

உன் முந்தானையின்

கொடியில் 

பூக்கிறது

என் கவிதை

தலைப்பு

 

உன் காதணிகளின்

கொஞ்சலில் பிறக்கின்றன

உவமை அணியும்

உருவக அணியும்

 

அன்பில் தொடங்கி

அன்பில் முடிந்து

அன்பில் தொடர்கிறது

நம் அந்தாதிகள்

 

புதுக்கவிதையாய்

புலரும் பொழுதுகளை

கசல் கவிதைகளாய்

முடித்துவைக்கிறது

உன் காதல்

 

குறுங்கவிதையைப்போல் எட்டிப்பார்க்கும் என்

கோபங்களை

ஆற்றுப்படுத்துகிறது

நெடுங்கவிதைகளான

உன் நேசங்கள்

 

கன்னத்தில்

பதிக்கும்

ஹைக்கூ கவிதைகளில்

நிரம்பி வழிகிறது

உன் அன்பு

 

எதுகை மோனை

சீர் தளை அடி என

ஏதுமில்லாதது

நம் மரபுக்காதல்

 

வல்லினத்தை

இடையினத்தால்

வீழ்த்தும் மெல்லினத்தின்

பிரியங்களால்

நிரப்பப்பட்டிருக்கின்றன

நம் கவிதை

தொகுப்புகள்

 

சம்பிரதாயங்களின்  இலட்சணங்களோடு  தெயவதங்களுக்காக  இயற்றப்பட்ட ஸ்லோகங்கள், பாடல்களோடு அறுசுவைப் பதார்த்தங்கள் சமைக்கப் பட்டாலும்,  தன் கரகரக் குரலில் சுதிலயம் இல்லாமல் கூப்பிடும் கா…கா…காஎன்ற  பாட்டுக்குதான் காக்கை  வடிவில் கடவுள் வருவதாக  சொல்லும் இந்த கவிதை எளிமையான சொல்லாடலில்  பகுத்தறிவு பகல்.

 

சுப்ரபாதத்தோடு

காய்ச்சப்படுகிறது

பால்

 

ஆதித்ய ஹ்ருதயத்தோடு

தயாராகிறது சாதம்

 

சௌந்தர்ய லஹரியில்

நறுக்கப்படுகிறது

காய்கறிகள் 

 

அபிராமி அந்தாதியில்

செய்து முடிக்கப்படுகிறது

பச்சடியும் பாயசமும்

 

சியாமளா தண்டகத்தில்

சுட்டெடுக்கப்படுகிறது

மெது வடை

 

லலிதா ஸஹஸ்ரநாமத்தில்

பொறித்தெடுக்கப்படுகிறது

அப்பளமும் அதிரசமும்

 

காயத்ரி மந்திரத்தோடு

படைக்கப்படுகிறது

நைவேத்யம்

 

எதையும் அறிந்திராத

என் கரகர

கா...கா..கா..கா...

குரலுக்கு மட்டுமே

கடவுள் வருகிறார்

இன்றைய வாழ்க்கையின் அவலம் அரசியல் சூழ்ச்சிகளால் நிரம்பியது.  தாங்கும் சக்தி குறையும் போது மன உறுதியும் குலைந்து விடுகிறது. எரியும் நிழலுக்குள் நின்று எப்படிக் குளிர் காய்வது? கவிஞரின் மேம்பட்ட கோபமாக இந்த வரிகளை முன்னெடுக்கலாம். “ மழிப்பதற்குக் காசில்லாமல்தான் மண்டிக்கிடக்கிறது குறியீடுகள் ஏதுமறியாத எங்கள் மயிர்

 

 

கொதிக்கிற

சோற்றுப்பானையின்

நெஞ்சில்

நெருப்பு வைக்கிறது

விலையேறி

கனக்கிற

எரிவாயு உருளை

 

வழக்கம்போல்

பிரசங்கம் மட்டுமே

செய்து கொண்டிருக்கிறது

வலியேதுமறியாமல்

ஃபிரிட்ஜில்

வாழ்கிற ஆப்பிள்

 

எரிபொருள் தீர்ந்துபோன வாகனங்களை

டோல் கேட்டில்

கூடுதல் பணம் கட்டி

தள்ளிக்கொண்டு

போகிறோம்

ஏளனமாய் சிரிக்கின்றன

தேசிய நெடுஞ்சாலையின்

மைல் கற்கள்

 

டிஜிடலில்

ஒளிர்கிறது

அன்னை தேசம்

நாங்கள்

அழுகிற பிள்ளைக்கு

பால் வாங்க முடியாமல்

ஜி பே வில்

கடன் வாங்கி கழிக்கிறோம்

 

கொடிமரங்களின்

நிழலில் வளரமுடியாமல்

போன்சாய் மரங்களைப்போல் சூம்பிக்கிடக்கிறது

வாழ்க்கை

 

மழிப்பதற்கு

காசில்லாமல்தான்

மண்டிக்கிடக்கிறது

குறியீடுகள்

ஏதுமறியாத

எங்கள் மயிர்

 

பட்டினியைத்தவிர

அத்தனைக்கும்

போடப்படுகிறது வரி

 

இறகுகளை கொய்து

சிறகுகளால்

கட்டித்தரப்படுகிறது

எங்களுக்கான

வண்ணக்கூடுகள்

 

ஒரு கன்னத்து

அறையிலேயே

உணர்விழந்த பின்னும்

மறு கன்னத்திலும்

அறைந்து

சிலுவையிலும்

அறைந்து விட்டுப்போகிறது அச்சேதி

குறுங்கவிதைகளிலும்  கவிஞரின் சொல்லடர்த்தி சிறப்பாகவே இருக்கின்றன. கவிஞரின் இன்னம் சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு…..

 

 விரும்பி அமர்கிற

பறவைக்கு

கிளையின் முட்கள்

பொருட்டில்லை

 

தாங்கிப்பிடிக்கிற

சிறு கிளைக்கு

பறவையின் எடை

ஒரு பாரமில்லை

 

நீ பறவை

நான் கிளை

 

பிறந்த ஊரிலிருந்து

மண்ணெடுத்து

தொட்டிச்செடி வளர்த்தேன்

மலர்ந்த பூக்களில்

எல்லாம்

தாய்ப்பாலின் வாசம்

 

உன்னைப்போல்

ஒரு நதியும்

என்னைப்போல்

ஒரு கடலும்

நம்மைப்போல்

ஒரு அலையாகி

புரள்கிறது

 

உன்னைப்போல்

ஒரு நிலவும்

என்னைப்போல்

ஒரு இரவும்

நம்மைப்போல்

ஒரு வானாகி

விரிகிறது

 

உன்னைப்போல்

ஒரு இசையும்

என்னைப்போல்

ஒரு மொழியும்

நம்மைப்போல்

ஒரு பாடலாகி

ஒலிக்கிறது

 

உன்னைப்போல்

ஒரு பூவும்

என்னைப்போல்

ஒரு காற்றும்

நம்மைப்போல்

ஒரு சித்திரம்

வரைகிறது

 

உன்னைப்போல்

ஒரு உயிரும்

என்னைப்போல்

ஒரு உறவும்

நம்மைப்போல்

ஒரு காதலாகி

கனிகிறது

 

உன்னைப்போல்

ஒரு அழகும்

என்னைப்போல்

ஒரு தமிழும்

நம்மைப்போல்

ஒரு கவிதையாக

மலர்கிறது

 

பசித்திருந்தபோது

பாட்டி சுட்ட அப்பம்

 

விழித்திருந்தபோது

களிறொன்றின்

ஒளிரும் விழி

 

தனித்திருந்தபோது

காதலியின்

அழகிய முகம்

 

இயல்பில் இல்லாத

கவிதை கண்களுக்கு

எப்போதும் வாய்ப்பதில்லை

அழகிய நிலவு

 

வாழ்ந்தாலும்

தேய்ந்தாலும்

உச்சியிலேயே

நிற்கிறது

வெள்ளி நிலா !

 

நிலவு முத்தமிட்டும்

இயல்பில்

மாறவில்லை

தாழக்கிடக்கிற

உப்புக்கடல்

 

மதுரையை

எழுதத்தொடங்கினால்

தமிழை

எழுதச்சொல்லி

அடம்

பிடிக்கிறது கவிதை

 

நானில்லாத

கவிதையா என

வடம் பிடிக்கிறது

சித்திரைத்தேர்

 

இரண்டையும்

எழுதவிடாமல்

தானே

மதுரையென

குறுக்கே

பாய்கிறது வைகை

 

கள்ளழகர்

தன்னைத்தான்

எழுதவேண்டுமென

ஆற்றில் இறங்காமல்

அடம்பிடிக்கிறார்

 

மீனாட்சியும்

சுந்தரரும்

சித்திரை தேரில்

வலம் வருவதைவிடவும்

கவிதைத்தேரில்

உலா வரவே

விருப்பமென்கிறார்கள்

 

பொற்றாமரைக்கு

தண்ணீரில்

மிதப்பதைவிடவும்

தமிழில் மிதப்பதே

அலாதி பிரியமாம்

 

பண்டைய தீரமும்

பாண்டியர் வீரமும்

எங்களுக்கும்

இடம் ஒதுக்கென

மீன் கொடி பிடித்து

போராடுகிறார்கள்

 

சிலம்போங்கிய

கரங்களுடன்

என்னை

எழுதாவிட்டால்

எரித்துவிடுவேன்

என

எச்சரிக்கிறாள்

கண்ணகி

 

மக்கள் பிரதிநிதிகள்

நாங்களே என

மார்தட்டுகிறார்கள்

மல்லி மொட்டும்

ஜல்லிக்கட்டும்

 

அழகர் மலையும்

பழமுதிர்ச்சோலையும்

நாங்களும்

மதுரைதான் என

மனு கொடுக்கிறார்கள்

 

எதையும் எழுதாத

என் கவிதையின்

நினைவுகளில்

நிறைந்திருப்பது

பிட்டுக்கு சுமந்த

மண்ணில் பிறந்து

தரணியெல்லாம்

விளைந்திருக்கும்

தமிழ்தான்

 

காத்து இரட்சிப்பதாக

நம்பப்படுகிற

கருவறை சாமிகளுக்கே

வாய்க்கிறது

பட்டுத்துகிலும்

பாலும் தேனும்

 

கால்கடுக்க

காவலுக்கு நிற்கிற

வாயில் சிலைகளுக்கு

அருளப்படுவதேயில்லை

ஒட்டுத்துணியும்

ஒரு வாய் அன்னமும்

 

 ஊர் என்பது

அம்மாவின்

பாதம்பதிந்த மண்

உறவென்பது

அவளின் கையளவு இதயம்

 

அம்மா இருந்தவரை

ஊருக்கு வந்து போவது

ஒரு உற்சவம்போல் நடந்தேறும்

 

இன்று

கூடு திரும்பாத

தாய்ப்பறவைக்கு

ஏங்கித்தவிக்கும்

குஞ்சுக்குருவியைப்போல் துவண்டிருக்கிறேன்

அவள் இல்லாமல்

அடுத்தவர் வீடாகிப்போன

என் கூட்டுக்குள்

 

இந்த கூட்டுக்குள்தான்

என் சிறகுகள்

முளைத்தது

 

இந்த புழக்கடை

மாமரம்தான்

என் போதி மரம்

 

இந்த கிணறுதான்

என் ஜீவநதிகளின் ஊற்றுக்கண்

 

சாணத்தில் மூடி கூரையில் வீசிய பாற்பற்களும்

பால்யமும்

இந்த மண்ணில்தான்

புதைந்து கிடக்கிறது

 

முதல் காதலும்

முதல் கவிதையும்

இந்த காற்றில்தான்

கலந்திருக்கிறது

 

பொன்னியின் செல்வனோடும்

யவன ராணிகளோடும்

கதைகள் பேசி

களித்திருந்த கிணற்றடி

இன்று ஈரமில்லாமல்

வறண்டு கிடக்கிறது

 

துளசியும் செம்பருத்தியும்

சிரித்திருந்த முற்றம்

வெறுமையில் வாடிக்கிடக்கிறது

 

வாசலில் நிற்கின்ற

பூவரசின் நிழல்

குளுமையைத்தொலைத்து

படர்ந்திருக்கிறது

 

அம்மா இருந்தவரை

நலங்கு வைத்து

அலங்கரித்த

பெண்ணைப்போல் இருந்த வாசல்

இன்று அறுவடை முடிந்த வயலைப்போல்

வெறுமையாய்க்கிடக்கிறது

 

அம்மா

கூட்டிப்பெருக்கி

வாசல் தெளித்து

சாணம் மெழுகி

கோலமிடுவது

ஒரு ஜலதரங்க கச்சேரியும்

ஓரங்க நாடகமுமாய் அரங்கேறும்

 

ஒற்றை பார்வையாளனாய்

அருகிருந்து

ரசித்துக்கொண்டிருக்கும் என் கன்னத்தை வருடி எனக்கொரு

காகத்தை வரைந்து

அதன் வாயில்

வடையை சுழித்துவிட்டுப்போவாள் 

 

நான் காகத்தோடு

வானத்தில் எம்பிப்பறப்பேன்

 

கோலம் காகம்

வானம் வடையோடு

அம்மாவையும்

தின்று செரித்த

காலத்திற்கு

தாயுமில்லை ...!

தந்தையுமில்லை.

 

நித்யஸ்ரீ்யும்

அஃப்ரினும்

கரோலினும்

என்னுடைய மகள்கள்

 

சீதாராமனும்

முகம்மது ரஃபீக்கும்

ஜேம்சும்

எனது நண்பர்கள்

 

ராமரும்

ஜீசசும்

அல்லாவும்

என் கடவுள்கள்

 

காவியும்

வெண்மையும்

பச்சையும்

என் அன்பின்

வண்ணங்கள்

 

ஜெய் ஸ்ரீராம்

அல்லேலுயா

அல்லாஹு அக்பர்

 

 நேற்று

வாரித் தூற்றிவிட்டுப்போன

அதே காற்றுதான்

இன்று

என் தோட்டத்திற்கு

மழையை

அழைத்து

வந்திருக்கிறது

 

ட்எங்கப்பனுக்கு

கவிதை எழுத

தெரியாது

காதலிக்கத் தெரியாது

 

ஆனால்

எங்கம்மாக்கு

வேர்த்து வடிஞ்சா

வேட்டிய உருவி

குடுத்துட்டு

கோவணத்தோட

துண்டை தேடி

ஓடுவாரு

 

பாசம் வைக்கவும்

அன்பு காட்டவும்

எங்கப்பன் தான்

குரு எனக்கு

 

செத்துப்போன

ஆத்தாவைப் பத்தி

ஒரு கவிதை எழுதி

படிச்சு காட்டுனப்போ

மட்டும்

நாந்தான்

சாமி அவருக்கு

 

அழகாக இருந்தது

அக்காக்கள்

இருந்த தெரு

 

கூட்டிப்பெருக்கி

வாசல் தெளித்து

குலுங்குகிற 

வளைகரங்களில்

தெருக்களின்

துயில் கலையும்

 

நிலவொளியில்

பாய் விரித்து

அக்காக்கள் சொல்கிற

கதைகளை கேட்டுவிட்டே

ஒவ்வொரு இரவும்

உறங்கப்போகும்

 

தெரு முனை

கோவில் திறந்தே கிடக்கும்

அம்மைகள்

பக்கத்துவீட்டு திண்ணைகளில்

புளியங்கொட்டைகள் மினுங்க

பல்லாங்குழி 

ஆடிக்களித்திருப்பர்

 

கனகாம்பரம்

தொடுத்துக்கொண்டு

மர்ஃபி ரேடியோக்களில்

ஒலிச்சித்திரம் கேட்ட

அக்காக்கள்

ஒளிச்சித்திரங்கள்

 

ஒயிலாக அமர்ந்து

நீள் சதுர ஆடிகளில்

வட்ட நிலவை

அலங்கரித்து

கார்குழலில்

மலர்ச்சூடி

வெளிச்சங்களை

வரைவார்கள்

 

தோழிகளோடு

சில்வர் குடங்களில்

நீர்கொண்டு போவது

தேர் நடந்து போவதைப்போல்

தினசரி திருவிழா

 

குடங்கள்

பேசிக்களிக்கும் கதைகளால்  நிரம்பித்தளும்பும்

 

குளக்கரை படிகள்

அக்காக்களின்

கொலுசொலி கேட்க

இடம்பெயராமல் காத்துக்கிடக்கும்

 

குளத்தில் மிதக்கும்

தாமரை மொட்டுகள்

மையிட்ட விழிகளை

கண்டு மலரும்

 

குளம்

மருதாணியிட்ட

கைகளை தீண்டி

வட்டவட்டமாய்

சிலிர்க்கும் 

 

குடங்களில் அள்ளி எடுக்கும்

தாமரைக்குளம்

ஒரு குழந்தையைப்போல் 

இடுப்பில் ஏறி

அமர்ந்துகொள்ளும்

 

பந்தலிட்டு வாழைகட்டி

நல்வரவு சொல்லும்

குண்டு வண்ண

சீரியல் பல்புகளோடு

அக்காக்களின்

அழகும் ஒளிரும்

 

அழகின் நறுமணம்

திருமண வீதியெங்கும் கமழும்

 

தெருவின் அழகையெல்லாம்

கூரை புடவையின்

முந்தானையில்  கட்டிக்கொண்டு

காணாமல் போன அக்காக்கள்

 

தாவணி அணிந்த

தேவதைகளாகவே

வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

நினைவுகள் திரும்பிப்பார்க்கிற

பால்யத்தின் தெருக்களில்

 

அம்மா

 

என்னை சுமந்தவள்

நான் ஏடுகளை

சுமக்க தினம்

மண்ணை சுமந்தவள்

 

கூட்டியும்

பெருக்கியும்

கொண்டுவந்த

கூலிக்காசில்

என்னை

கூட்டலும்

பெருக்கலும்

படிக்க வைத்தவள்

 

காதணிகளையெல்லாம்

விற்றுவிட்டு

எனக்கு

உவமை அணியும்

உருவக அணியும்

வாங்கித் தந்தவள்

 

தான்

நடப்பதற்குக்கூட

செருப்புகளை

வாங்காமல்

நான்

பறப்பதற்கு

சிறகுகளை

சேமித்துக் கொடுத்தவள்

 

கடிதம்கூட

எழுதத்தெரியாத

இவள்தான்

என்னை

கவிதை

எழுத வைத்தவள்

 

என்னை சுமந்தவள்

நான் ஏடுகளை சுமக்க

தினம்

மண்ணை சுமந்தவள்

 

இன்று....

தன்னையே

சுமக்க முடியாமல்

தள்ளாடி....!

தள்ளாடி....!

 

பூக்காமல் போனாலும்

நீர் வார்ப்பேன் என்பதை

எப்படிச் சொல்வது

 

கேட்காத போதும்

பூக்களைத்தருகிற

இந்த செடியிடம்

 

 படிக்கிற பிள்ளைகளும்

வாசிக்கிற மனைவியும்

எழுதுகிற நானும்

தனித்தனி

அறைகளில்

மௌனத்தில் கிடக்கிறோம்

 

எழுதப்படிக்கத் தெரியாத

மியாவ் மட்டுமே

எல்லோருடனும்

கொஞ்சிப்

பேசிக்கொண்டிருக்கிறது

 

துயரங்களை

இறக்கிவைக்க

இன்னொரு தோளின்றி

சதா உம்மென்று

ஒற்றையாய்

தொங்கிக்கொண்டிருந்த

ஒரேகடவுள்

இறங்கிவந்து

சிரித்து விளையாடுகிறார்

தத்தெடுத்த

நாய்க் குட்டியுடன்

 

கைபேசிகளால்

களவாடப்பட்ட

குழந்தைகளின் மகிழ்ச்சியை

சிறுகச் சிறுக

மீட்டுத்தருகிறது

தொட்டியில் துள்ளியாடும்

வண்ண மீன்கள்

 

மறந்துவிட்ட

கிளிப் பேச்சை

உறங்கிக்கிடந்த

குயில் பாட்டை

சிறகசைத்து

துளிர்க்கச்செய்கிறது

சின்னஞ்சிறு

அலகுகளால்

காலத்தை முத்தமிட்டு

பின்னகர்த்தும்

காதல் பறவைகள்

 

தீராத இறுக்கங்களில்

கட்டுண்டு

கிடக்கிறது ஆறறிவு

 

இயல்பில் நின்று

அன்பால் வருடி

அழுத்தங்களையும்

கவலைகளையும்

கட்டுடைக்கிறது ஐந்தறிவு

 

 

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

பவானி ரெகு


0   431   0  
October 2022

செ. தமிழ்ராஜ்


0   511   0  
January 2023

படைப்பாளி கவிஜி


1   1722   3  
March 2020

ஜெனனி. மோ


1   130   0  
January 2024