logo

கவிச்சுடர் விருது


இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமம் வழங்கும் கவிச்சுடர் விருதினை கவிஞர் அன்றிலன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

காலம் கவிதைகளின் வெளியை பரத்துகிறது ; அதில் தனக்கென்று தனித்துவம் படைக்கும் கவிஞர்களில் ஒருவர் கவிஞர் அன்றிலன்.

கவிஞரின் இயற்பெயர் இரா.சிவக்குமார். கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி - ஆனைமலை அருகே உள்ள குப்பிச்சிபுதூர் என்ற கிராமத்தில் பிறந்தவர்.  இவர் "மருந்தாக்கவியல்" துறையில் முனைவர் பட்டம் பெற்று,. மருந்துக்கட்டுப்பாட்டுத் துறையில் அரசு அதிகாரியாகவும் பணிபுரிந்து வருகிறார்.

 

இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, இந்து குழுமம்-காமதேனு, இனிய உதயம், பேசும் புதிய சக்தி, புன்னகை, கொலுசு, வெட்சி, கனவு, கோடுகள், வாசகசாலை,  படைப்பு-கல்வெட்டு, படைப்பு - தகவு, தமிழ்நெஞ்சம், பொழில்வாய்ச்சி ஆகிய பல்வேறு இதழ்களிலும்  பிரசுரமாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டு நமது படைப்பு குழுமம் நடத்திய "கவிக்கோ" பிறந்தநாள் பரிசுப் போட்டியில் மூன்றாம் பரிசும், 2020 ஆம் ஆண்டு சிறப்புப் பரிசும் இவரது கவிதைகள் பெற்றுள்ளன.  மாதந்தோறும் படைப்பு குழுமம் தேர்வு செய்யும் சிறந்த கவிதைக்காக மாதந்திர பரிசும் பெற்றுள்ளார்.

 

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ள இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான "மாயநதியின் கால்தடம்" என்ற நூலுக்கு "திருப்பூர் இலக்கிய விருது" வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

 

இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்….

 

ஒரு தையல் காரரின்  வாழ்வியலை மிக நுண்மையாக உணர்த்தும் கவிதையிது. தையல் இயந்திரத்தின் மிதிப்பான் மேலும் கீழும் ஏறி இறங்கினால்தான் வாழ்க்கைச் சக்கரம் சுழலும் என்பது படிமம் உள்ளடக்கிய மொழியாடல்.  அவரது வாழ்வின் பள்ளம் மேடுகளையும் அவைதான் நிரப்புகின்றன. துணியின் மீது ஏறி  இறங்கும் ஊசிகளை கவனிப்பதும் ஒரு தியான நிலை என்பது சத்திய வார்த்தைதான்…  பண்டிகை நாளில் வந்த வேலையையும் விட முடியாமல், உடனே தைத்தும் கொடுக்க முடியாமல் அவர் திணறுகின்ற நேரத்திலும் அவரை ஆறுதல் படுத்துகிறது வண்ண பட்டன்களின் ஸ்மைலிகள்….

.

தையல்காரரின் கால்கள்

வாழ்வின் மேடுபள்ளங்களை

நிரப்பும் பாவனையில்

அழுத்துகின்றன காலச்சக்கரத்தை.

 

துணிகள்மீது

ஏறி இறங்கும் ஊசியின் வேகத்தோடு

ஒரு தியானத்திற்குள்

நிலைக்கின்ற கண்கள்.

 

பண்டிகைக்கு முந்தையநாள்

இரவுக்குள் முடிக்க

இடப்பட்ட கட்டளைகள் அனைத்தும்

காதுகளை நிரப்ப

சிக்கு விழுந்த நூலினைப்போல்  

நரம்புகள் இறுக்குகின்றன

 அவரது கழுத்தை.

 

தன் வருகைக்காகக்

காத்திருக்கும் மகனின் முகம்

வந்துபோகும் துக்கத்திற்கிடையே

ஆறுதலாய் அவர் காண்பது

மேசைமீது கிடக்கும்

வண்ண வண்ண பட்டன்கள்

அத்தனையிலும்

அப்பிள்ளையின் ஸ்மைலிகளை.!

 

யாருமற்ற சிலுவை.  

யாரும் கொண்டு வந்து வைக்காத  சிலுவையை அவரவர்களே இழைத்து அவரவர்களுக்காக அவரவர்களே வைத்துக் கொள்கிறார்கள்.  இது உண்மையும் கூடதான்.  இப்போதெல்லாம் இணைய வழி சூதாட்டம் என்ற ஒன்றுக்குள்; ஆசை காட்டிய மாய வழியில் நுழைந்து மரணத்தின் குகையை அடைகிறார்கள். இதனால் சிலுவை சுமக்கும் குடும்பங்களின் நிலைதான் என்ன? வலியுடன் கவிதை……

 

*யாருமற்ற சிலுவை*

 

காலம் ஒரு மந்திரக்காரன்.

அவன் கைகளில் இருக்கும்

சீட்டுக்கட்டு ராஜாக்களை

தேர்ந்தவொரு நடிகனின் குரலில்

எப்படி வேண்டுமானாலும் மாற்றுவான்.

 

ஒருமுறை

ஆசை தடவிய மந்திரக்கோலைச்

சுழற்றுகையில்

இணையவழி சூதாட்டத்தில்

இஸ்பேட் ராஜா அகப்பட்டுக்கொண்டான்.

 

யார் சாயலுமற்ற ஒரு பெரும் துயரம்

அடைமழையெனத்

தன் வாசல் வருவதை

ஆர்டின் ராணியோ

அறிந்திருக்கவில்லை.

 

கடன்சுமையில் முறிந்த அச்சை

சரிசெய்ய இயலாதவனாய்

குடும்பத் தேரை

வீதியில் நிறுத்திவிட்ட தலைவன்

தன்னை தீயிற்குத் தின்னக் கொடுத்தான்.

 

திசையற்ற ராணி

இளவரசியின் பசிக்கு

பானையைத் தேடுகையில்

கடன்சொற்களின் கூர்மையில்

உடைந்து நொறுங்கியது

அவளது மனம்போல் கஞ்சிப்பானையும்.

 

பசியின் சுழல் கடந்து

இன்னல் சுமந்து

இளவரசிக்குக் கீரிடம் சூட்டிப் பார்க்கக்

கனவோடு காத்துக் கிடக்கிறாள்

யாருமற்ற சிலுவையாய்

திக்கற்ற ஆர்டின் ராணி.

 

இஸ்பேட் ராஜாவைக்

கவிழ்த்துவிட்ட மனநிறைவில்

அந்தக் கிளாவர் மந்திரக்காரனோ

இன்னொரு டைமண்ட் ராஜாவை

இந்நேரம் தேடிக்கொண்டிருக்கலாம்.

 

கேள்விகள் இல்லையென்றால் பிரபஞ்சத்தின் ஓட்டம் நின்று விடும். ஒரு கேள்விக்கான பதில் அங்கேயே கிடைக்கலாம் . அல்லது தொலை காத தூரங்களில் கிடைக்கலாம்தேவை விடை. புத்தனின் கேள்விக்கு அவன் தேடிய பதில் பல கால அலைச்சலுக்கு பிறகுதான் கிடைக்கிறது. அவன் கேள்வி கேட்டு புறப்பட்டவுடன் யசோதரைக்கு ஏற்பட்ட கேள்விகள் பல ஆண்டுகளை கடத்திதான் கிடைத்ததுஇதுவும் கூட பதில் தேடும் ஒரு பயணியின் கவிதைதான்….

 

ஒரு கேள்வியோடு அது தேடும்

பதில் ஊருக்குப் பயணப்படுகிறேன்.

அப்பதில் ஊரின்

பாதை  அவ்வளவு எளிதாய்க் கிடைத்துவிடவில்லை.

எதிர்படும் யாவர் தரும்

வழிகளின் வரைபடத்திலும்

சமாதானம் அடையவில்லை.

அனுமானத்தோடு ஆறேழு

ஊர்களின் வழியே கடந்தாயிற்று.

பின்னொரு நாளில்

தான் தேடிய பதில்

ஊருக்கு வந்ததும்

புத்தனாகிப் புன்னகைக்கிறது

அக்கேள்வி.

மீண்டும் முளைக்கும்

சில கேள்விகள்

முகவரிகள் ஏதுமின்றி இன்னும்

பதில் ஊரைத்தேடிக் 

 கொண்டேயிருக்கின்றன

உங்களுள் உறைந்து கிடக்கும்

ஆயிரம் கேள்விகளைப் போல்.

இப்போது புத்தன் எங்கோ

புன்னகைக்கக் கூடும்.

 

ஒன்றையொன்று சார்ந்துதான் இந்த உலகம் இயங்குகிறது. நான் தனியன் என்பவன் கூட வெறுமையின் துணையுடன்தான் பயணம் செய்கிறான். இது வாழ்க்கையின் அங்கமான உறவுகளுடன் வாழ்வதன் பொருட்டு பயணம் செய்பவன் கவிதை. இந்த பயணத்தின் முடிவு என்பது எப்போதும் கிடையாது. தொடர் ஓட்டம் போல் ஒருவன் பயணத்தை முடிக்கும் போது மற்றவரிடம் பொறுப்பை சாற்றி விடுகிறான்இதுவும் ஒரு பயணியின் கவிதை…..

 

சுழலும் வாழ்வில்

சுருங்கிய இரைப்பையை

நிரப்பிடத் தூரதேசத்துப் பயணத்தில்

ஒரு ரயில் பெட்டிக்குள்

அடைபட்டுச்

சுழலாத மின்விசிறியை

வெறித்தபடி நிலைகுத்திப்

பார்க்கிறது கண்கள்.

 

சிறிய பொட்டலத்தில் நிரப்பியத்

தேயிலைத் துகள்கள்

பாலில் இறங்கித் தேநீராதல் போல்

பிரியங்களின் எதிர்பார்ப்புகள் தனிமையின் குழிகளை

நிரப்பிக் கொள்கிறது.

 

பசி வேளையில் உணவுப் பொட்டலத்தைச் சுற்றிய

 நூலின் சிக்குகளை அவிழ்கத் திணறுவது போல்

காலம் கட்டிய வறுமைச் சிக்குகளை

அவிழ்க முற்படுகிறது கைகள்.

 

இருந்தும் ஆதிப்புள்ளியின்

முடிச்சுக்களைப் பற்றிச் சொல்லாது

காலம் நகர்த்திக் கொண்டே இருக்கிறது வாழ்வென்னும் ரயிலை

பிழைப்பை நோக்கித்

"தடக் தடக்" என்னும்

சத்தத்தோடு.

 

 புதிதாக கட்டி குடியேறுகிற  வீட்டின் ஆரம்பமே குதுகலமாகத்தான் இருக்கும். அதே சமயம் கடனில் மூழ்கிய ஒருவரின் வீட்டை  வாங்கியவரின் குடியேறல் அவர்களைப் பொறுத்த வரை மகிழ்வாகவும் அவ்வீட்டை பொறுத்த வரை முன்பு இருந்தவர்களின்  துக்கம், இப்போது குடியேறுகிறவர்களின் மகிழ்வும் கலந்த இரட்டை நிலையிலும்   இருக்கும்  என்பதுதான்  இக் கவிதை

தவிர்க்க முடியாத ஒன்று…..

.

வனத்தைத் தவறவிட்டவொரு குட்டியானையாய்

தனித்து நிற்கிறது யாருமற்ற

கடனில் மூழ்கிய வீடு.

இன்னொரு கைக்கு  அது மாறுகையில்

புதிய வண்ணம் புதிய வடிவமெனப்

புத்துயிர் பெறுகிறது

கோயில் யானையாய்.

இப்போது வாங்கியவன்

பாகன் ஆகிறான்

முன்னங்காலை நீட்டிப்

பாகனை ஏற்றுவதுபோல்

முன்வாசலில்  யாவரையும் வரவேற்கிறது

புதுமனை புகுவிழாவன்று.

பாகனின் கட்டளைப்படி

முன்பிருந்தவன் கண்ணீர் சிந்திய அறையில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கற்றுக்கொள்கிறது.

அவர்களைப் படுக்கை அறையில்

உறங்கவைக்கப் பழக்கப்படுகிறது.

எப்போதாவது முன்பு வாழ்ந்தவன்

தன்னைக் கடந்துபோகையில்

வனத்தைத் தன் கண்ணில் வைத்த

யானைக்கன்றென அவ்வீடு பிளிறுவது

அவன் காதுகளில் கேட்காமல் இல்லை.

 

இனி கவிஞரின் இன்னம் சில கவிதைகள்:

 

நிலம் கொத்தும் பறவைகள்*

 

நிலம் கொத்தும் பறவையென

மண்ணைக் கிளறி  சேறு மிதித்துப்

பக்குவமாய் பானை செய்து விற்றும் பசியாற முடியா வாழ்க்கைக் கடனுக்குப் பண்ணையாரிடம் அடகுக்கு வந்தான் இடையனின் பாலகன் தோட்ட வேலை பார்க்க.

 

பசுக்கள் மேய்ச்சல் காணும் பொழுதில் கொய்யா மரக்கிளையின் உச்சியில் செவ்வெறும்புக் கூடு கலையாது பழம் பறித்து

கால்வயிறு பசியாறிக் கொண்டான்.

செம்புலம் நீர் பாய்ச்சிச் செழிக்கக் கண்டு வெட்சிப் பூச் சூடி உவகை கொண்டவன்போல்

அரளிப் பூப் பறித்து

ஆற்று நீரில் நீந்திக் கிடந்தான்.

 

பக்கத்துத் தோட்டம் பாய்ந்துபோன

ஆநிரைகளைக் கண்ட பண்ணையார்

இடுப்பில் கட்டியிருந்த பச்சை பெல்ட்டால் அவன் தோலில் இழுத்ததும்

வரிவரியாய் உடம்பில் பூத்திருந்தன அடிமைக் கோடுகள்.

வெடித்து அழுதது நிலம்

பாளம் பாளமாய்.

 

 இருகோட்டுப் பயணம்

 

ஒட்டகத்தைப் போல்

தண்ணீரை

நீண்ட தனது பெட்டிகளில்

நிரப்பிக் கொள்கிறது

நடைமேடையில்

அப்போது ஓடிவந்து நின்ற

 இரயிலொன்று.

தேநீர் விற்பவன் யன்னலின் கம்பியில்

 தனது கம்பியின்  கொக்கிவழியே

தேநீர் தூக்கைத் தொங்கவிடுகிறான்.

முந்தைய நிறுத்தத்தில்

ஏறிய சிறுவன் தனது

சட்டையைக் கொண்டு

கீழே கிடப்பவைகளைத் துடைத்துப்

 பெற்ற யாசகத்தையெண்ணியபடி

 ஐந்தாவது பெட்டியிலிருந்து

 இறங்குகிறான்.

பார்வையற்றவள்

சுசீலா பாடலிலிருந்து

லதா மங்கேஷ்கர் பாடலுக்கு

மாறுகிறாள்.

மகிழ்வோடு தன் ஊரை

இழுத்துவந்த இரயில்

விட்டுப் போகையில்

நினைவைக் கட்டி

ஊர்ந்து கொண்டிருக்கிறது

ஒவ்வொரு ஊர்களுக்குமிடையே.

 

 இரவுண்ணி

 

பகலெல்லாம்

பசித்திருந்த கனவு

இரவைத் தின்று பசியாற

என்னுள் நுழைகிறது.

விழி மூடிக்கிடப்பதை அறிந்து

உள்நுழையும் கனவைத்

தடுக்கையில் பாம்பு ஒன்றை

என் மீது வீசுகிறது.

அறிமுகம் இல்லா

வழிப்போக்கன் ஒருவனின்

வார்த்தையை உமிழ்கிறது.

மறவாமல் மலர்க்கொத்து

ஒன்றையும் பரிசளிக்கிறது.

அதன் நாளைய உணவிற்கு

உணர்வின் முடுச்சுக்களை

அவிழ்த்து விதைகளை வீசிக்கொண்டிருக்கிறது.

எத்தனித்து எழுகையில்

என் இரவைக் கொத்தி    

தின்ற கனவு சட்டென

உறங்கத் தொடங்குகிறது.

விடியல் புன்னகையோடு

என்முன்னே எதிர்படுகிறது

அன்றை தேடல்களைக்

கைககளில் ஏந்தியபடி.

 

 

எதிர் பாராத ஒரு நிகழ்வின்

கதவுகள் திறந்துகொள்ளும் வேளையில்

ஒரு அன்பின் கண்ணீரோ

காயமோ துரோகமோ

கண்முன் இருக்கலாம்

கண்ணாடிக் கோப்பைகளாய்.

பொறுமையின்றிக் கைதொடுகையில் தவறி விழுந்த கண்ணாடித் துண்டுகளின் கூர்

கையைக் கிழிக்கும்

கணங்களாய்

ரணமாகிறது மனது.

அத்துயரத்தைத்

துடைத்தெரியுமென நம்பிச்

சிந்தும் கண்ணீர்

இரவை நனைத்துக் கொண்டிருக்கிறது.

மகிழ்வோ துயரமோ

உள்ளக் குழிகள் நிரம்புகையில்

உனக்கான ஒருத் தனிப்பாடல் உன்னுள் முணுமுணுக்கிறது.

இவையெல்லாம்

ஏனென்று கேள்வி

எழுமுன்னேக்

காலம் நகர்த்திக் கொண்டே இருக்கிறது

ஒரு புள்ளியிலிருந்து

இன்னொரு புள்ளிக்கு

உன்னையும் என்னையும்.

 

குரல் விற்றுப் பிழைப்பவன்*

 

இசைக் கருவிகளைக் கொண்டு

 இசைக்கத் தொடங்குகிறான்.

தனக்குப் பிடித்த கதையொன்றை

பாடல் வழியே

கூறத் துவங்கியதும்

உயிரற்ற பொருட்களெல்லாம்

உயிர் பெற்று அவன் கூறும்

கதைக்கேற்ற பாத்திரங்களாய்

ஆடத் தொடங்கின.

கதையில் நுழைந்த அரசன்

வேண்டிய பொருட்களை

எல்லோருக்கும் தந்து

 அழியாத ராஜ்ஜியத்தைப் படைக்கிறான்.

எங்கோ திரண்ட மணற் குவியல்

 வல்லூறுவாய் அவன் அழகிய

 கண்களைப் கொத்தித் தின்ன வந்தது.

கண்களை விடுவதென்றால்

மக்களை பசிக்குக் கொடுக்க

 வேண்டுமென்றது அப்பறவை.

 மக்களின் வாழ்விற்காக

தன் கண்களை இழந்தான் அவ்வரசன்

 என்ற பாடலோடு அக்கதை முடிந்தது.

விரித்த துண்டில்

காசுகள் விழுந்தன

தன் வீட்டின் வயிற்றை நிரப்பப் போதவில்லையெனினும்

நாளை இன்னொரு

கதையொன்றுக்கு

அச்சாரமாய்.

 

 

கைகழுவிய காலம்*

 

நேற்றை கருப்புக்

கட்டையெனவும்

நாளையை வெள்ளைக்

கட்டையெனவும் செய்த

பியானோ ஒன்றில்

இன்றைக்கான பாடலொன்றை இசைக்கிறது பிரெளனியன் இயக்கத்தை உள்வாங்கிய காலம்.

எழும் இசைக்கு நடுவே

இசைக்குறிப்புக்களை விழுங்கிய

இன்றைய நாளை

பசி கொண்டு மொழிபெயர்க்கிறது.

உடலில் பூத்த உவர்ப்பின் சித்திரத்தில்

நேர்த்திக்கடனென வந்த

மண்குதிரையில் அய்யனாரென வேட்டையாடியாய்

நகர்ந்தோடியபடியிருக்கிறது நிலவொளியில்.

தனது தீரா பெரும் பசிக்கு

 பசியோடு எதிர்படும் தலைகளையே

கேள்விகொண்டு வீழ்த்திப்

 புசித்துவிட்டு,

நகரும் பேரொளி அண்ட நதியில்

கைகழுவிய காலத்தின்

மிச்ச மணித்துளிகள் கிளையொன்றில்

தொங்கியபடியிருக்கின்றன

விக்கிரமாதித்தனின் வேதாளமென

ஆயிரம் கேள்விகளோடு.

 

மாலை நேரத் துரித உணவு

சமைப்பவனோடு

அவன் வாணலியில்

வறுத்தெடுக்கும் சத்தத்தைக் கேட்டவாறு

பசித்திருக்கின்றன

நாற்காலிகள்.

 

அவன் கட்டளைக்கு

ஏற்றவாறு அதன்

கால்களை நகர்த்துதலே

அவற்றுக்கு இடப்பட்ட கட்டளை.

 

கட்டளை மீறியபொழுதுகளில்

நாற்காலிகளின்மீது விழும்

சில சொற்சித்திரங்களின்

ரத்தக்கசிவு.

 

அதன் பலம்

அறிந்தும் அமைதியாய்

தன்மீதே சுமர்த்தப்படுகிற

புகார்களுக்குப் பதில் ஏதும் சொல்வதில்லை.

 

சுமக்க மட்டுமே கற்றுத்தரப்பட்டுள்ள

இந்த நாற்காலிகள்

ஒருபோதும் தனக்கென

அமர்வது பற்றி யோசிப்பதில்லை.

 

 *நதியாகும் இந்நாள்*

 

நாட்கள் எப்போதும்

நமதானதாகவே

இருப்பதில்லை.

இந்த நாளை

நான் ஒரு நதியாக்குகிறேன்.

அதற்குள் கால்

நனைத்து

அதன் ஆதி விதையினை

இப் பூமியில்

விதைக்க

அடியாழம் வரை

செல்ல எண்ணுக்கிறேன்.

இந்நதியைக் கடப்போரெல்லாம்

கல் எறிந்த வட்டம் ஒன்றை

தருவிக்கிறார்கள்.

இடையே நதியை விட்டு

வெளியேற உத்தரவும்

வருகிறது.

இருந்தும் இந்நாள்

என்னும் நதி

வினாடிகளில்

பயணித்து நேற்றைய

கடலோடு கலக்கிறது.

இனி நாளைய

நாளை நான்

ஒரு மரமாக்க

உத்தேசித்துள்ளேன்

 

தேநீரகத்தில் குடித்தபின்

வைக்கப்பட்ட குவளைகளை

இடக்கைக்கு மாற்றிவிட்டு

வலக்கையால்

துடைக்கப்படுகிறது மேசை.

 

காலை முதல் இரவு வரை

இத்துடைத்தலின்

எண்ணிக்கையை அறிய

அக்கைகள் முற்படுவதில்லை.

 

தன்மீது விழும் பார்வைகளைத்

தவிர்த்துவிட்டு  

மெளனமாய் துடைக்கும்

அக்கைகளுக்கு ஏதோவொரு

ஒப்படைக்கப்பட்ட  சுமையோ

அல்லது எங்கோ கைவிடப்பட்ட

கதையோ இருக்கக்கூடும்.

 

எப்போதாவது மேசையைத்

துடைக்கையில் 

அக்கைகளும் ஏங்கியிருக்கலாம்

சுவையுள்ளவொரு

குவளையை ஏந்திப் பருக.

 

மணலில் வரிவரியாய்

வருத்தங்களை

விட்டுச் சென்றிருக்கிறது

வற்றிய பிறகு ஆறு.

 

                                           -அன்றிலன்,

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

யாழ்ராகவன்


0   396   0  
December 2022

ரா.ராஜசேகர்


0   1200   0  
May 2019

சோ. ஸ்ரீதரன்


0   939   0  
July 2021

கவின் முருகு


0   1237   0  
April 2019