இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின்
கவிச்சுடர் விருதினை கவிஞர் செ.வீரமணி அவர்களுக்கு அளிப்பதில்
பெருமைக் கொள்கிறோம். சென்னையில் வசிக்கும் கவிஞர்,. அடையாறு அரசு
நெசவுத்தொழில் நுட்பக்கல்லூரியில் பயின்றவர் . ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில்
மேலாளராக பணிபுரிந்துகொண்டிருக்கிறார். இவருடைய கவிதைகள் குமுதம் தீராநதி , இனிய உதயம் , படைப்பு கல்வெட்டு , தகவு மற்றும்
கதிர்'ஸ் கவிமாடம் போன்ற பல இதழ்களில் வெளி வந்திருக்கின்றன. நமது . படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளராகவும் இரு
முறை தேர்வு செய்யப்பட்டவர்
இவருடைய முதல் கவிதை தொகுப்பு "
துளி அன்பு சிறு நேசம் கொஞ்சம் காதல் " கடந்த ஆண்டு எழிலினி பதிப்பகத்தால்
வெளியிடப்பட்டது . பரவலாக வாசிக்கப்பட்டு நல்ல வரவேற்பைப்பெற்ற இந்த தொகுப்பு
'தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை' யின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க
விருதும் பெற்றிருக்கிறது .
இனி கவிஞரின் சில கவிதைகளைக்
காண்போம்:
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்து உற்சவம் எடுத்து கொண்டாடும் அழகை மிகச் சிறப்பாக எடுத்து வைக்கும் கவிஞர், இவ்வளவு செய்தும் இந்த மக்கள் காட்டும் விசுவாசம் கொஞ்சம் கூட இந்த கடவுள்களுக்கு இல்லையே என்ற பொருமல் பகுத்தறிவுச் சிந்தையுடன் இந்தக் கவிதையை மேலும் அழகு செய்கிறது….
அரச மரம்
குளத்தங்கரைனு
அம்போனு
கெடந்தவருக்கு
கோயில கட்டி
பெத்த புள்ளையாட்டம் பார்த்துகிட்டோம்
கோச்சுகிட்டு போய்
கோவணத்தோட
நின்ன தம்பிக்கும்
ஆறுபடைவீடு கட்டி
அழகு பார்த்தோம்
காட்லயும் மேட்லயும்
கஷ்டப்பட்ட
இன்னொரு
அய்யனுக்கும்
கிரானைட்ல
கோயில் கட்டி
ஏசி கூட போட்டு
வச்சோம்
மண்டை ஓடு
மயானம்னு
சுத்திகிட்டு திரிஞ்ச
அப்பனுக்கு
பெரிய பெரிய
கோயில கட்டி
குடிவச்சோம்
பாம்பு படுக்கைனு
சமனில்லாம
ஆடிக்கிட்டு கிடந்த
மாமனுக்கு
ஊஞ்சல் சேவை
உற்சவம்னு
நிறைய
பண்ணியிருக்கோம்
தங்க கிரீடம்
வைர மூக்குத்தி
பச்சை பட்டு
பவள மாலைன்னு
ஆத்தாளுக்கு
பண்ணதெல்லாம்
சொல்லி மாளாது
வேளாவேளைக்கு
ஆகாரம்
அழகழகா அலங்காரம்
வருசம் ரெண்டு திருவிழா
காவலுக்கு
காம்பவுண்டு
சுத்தி நாலு கேமரானு
எவ்வளவோ
செஞ்சோம்
எங்கப்பே போனீங்க
எல்லாரும்
நன்றியெல்லாம்
மனுசங்களுக்கு
மட்டுந்தானா
படிமங்களும், உத்திகளும், குறியீடுகளும் அறிந்திடாமல் இருந்த அந்த நாளில் தன்னிடம் ஒரு கவிதை இருந்ததாக தொடங்கும் கவிஞர்,
எவையெல்லாம் மகிழ்விற்கென்று மாற்றத் தொடங்கினோமோ அன்றே ஒவ்வொன்றாக
நம்மை விட்டு அவைக் கழன்று கொண்டதாக பெரும் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். கவிஞரின் சொல்லாட்சியில் சொல்ல வேண்டும் என்றால்
, இப்போது படிமம் இருக்கிறது, உத்தி இருக்கிறது, குறியீடு இருக்கிறது ஆனால்; கவிதை மட்டும் கிடைக்கவில்லை.
படிமங்களும்
குறியீடுகளும்
உத்திகளும்
அறிந்திராத
நாட்களில்
என்னிடம்
ஒரு கவிதை இருந்தது
நிலவும்
நட்சத்திரங்களும்
வானமும்
வசப்படுவதற்கு முன்
குளிர்ந்த இரவும்
சில கனவுகளும்
இருந்தன
ஓயாமல் சுழல்கிற
சக்கரங்கள்
வாய்க்கப்பெறுவதற்கு முன்
பாதங்களால்
உரையாடிக்கொண்டு
பயணித்த
அழகிய பாதைகள்
இருந்தன
வீடென ஒன்றை
மதிலெழுப்பி
சிறை வைத்துக்
கொள்வதற்கு முன்
உதைத்து விளையாட
ஒரு பூமிப்பந்திருந்தது
அமரவும்
உண்ணவும்
உறங்கவும்
கொல்லப்பட்ட மரங்கள்
வந்து சேர்வதற்கு முன்
சிறு தோட்டமும்
நிறைய பறவைகளும்
அவற்றின்
பாடல்களும் இருந்தன
ஏதுமற்ற உச்சிக்கே
ஏங்கித்தவிக்கிறது
மீச்சிறு இதயம்
இட்டு நிரப்ப
தேவையெல்லாம்
இலவசமாய் கிடைக்கிற
துளி அன்பும்
சிறு நேசமும்
கொஞ்சம் காதலும்
காதலின் நிலைகளை கவிதைகளின்
தன்மைகளாக மாற்றியெழுதுகிறார் கவிஞர். எவ்வளவு இடர்களை எழுதும் கவிஞன் என்றாலும்,
அவனுக்குள் பூக்கும் அந்தக் காதல் அத்துணை அழகானது.
மரபுக் காதலுக்கு சீர் அடி, தளை எதுவும் இல்லையென்பதே
கவிதையின் பெரும் அழகு
உன் முந்தானையின்
கொடியில்
பூக்கிறது
என் கவிதை
தலைப்பு
உன் காதணிகளின்
கொஞ்சலில் பிறக்கின்றன
உவமை அணியும்
உருவக அணியும்
அன்பில் தொடங்கி
அன்பில் முடிந்து
அன்பில் தொடர்கிறது
நம் அந்தாதிகள்
புதுக்கவிதையாய்
புலரும் பொழுதுகளை
கசல் கவிதைகளாய்
முடித்துவைக்கிறது
உன் காதல்
குறுங்கவிதையைப்போல் எட்டிப்பார்க்கும்
என்
கோபங்களை
ஆற்றுப்படுத்துகிறது
நெடுங்கவிதைகளான
உன் நேசங்கள்
கன்னத்தில்
பதிக்கும்
ஹைக்கூ கவிதைகளில்
நிரம்பி வழிகிறது
உன் அன்பு
எதுகை மோனை
சீர் தளை அடி என
ஏதுமில்லாதது
நம் மரபுக்காதல்
வல்லினத்தை
இடையினத்தால்
வீழ்த்தும் மெல்லினத்தின்
பிரியங்களால்
நிரப்பப்பட்டிருக்கின்றன
நம் கவிதை
தொகுப்புகள்
சம்பிரதாயங்களின் இலட்சணங்களோடு தெயவதங்களுக்காக இயற்றப்பட்ட
ஸ்லோகங்கள், பாடல்களோடு அறுசுவைப் பதார்த்தங்கள் சமைக்கப் பட்டாலும், தன் கரகரக் குரலில் சுதிலயம் இல்லாமல் கூப்பிடும்
கா…கா…கா… என்ற பாட்டுக்குதான் காக்கை வடிவில் கடவுள் வருவதாக சொல்லும் இந்த கவிதை எளிமையான சொல்லாடலில்
பகுத்தறிவு பகல்.
சுப்ரபாதத்தோடு
காய்ச்சப்படுகிறது
பால்
ஆதித்ய ஹ்ருதயத்தோடு
தயாராகிறது சாதம்
சௌந்தர்ய லஹரியில்
நறுக்கப்படுகிறது
காய்கறிகள்
அபிராமி அந்தாதியில்
செய்து முடிக்கப்படுகிறது
பச்சடியும் பாயசமும்
சியாமளா தண்டகத்தில்
சுட்டெடுக்கப்படுகிறது
மெது வடை
லலிதா ஸஹஸ்ரநாமத்தில்
பொறித்தெடுக்கப்படுகிறது
அப்பளமும் அதிரசமும்
காயத்ரி மந்திரத்தோடு
படைக்கப்படுகிறது
நைவேத்யம்
எதையும் அறிந்திராத
என் கரகர
கா...கா..கா..கா...
குரலுக்கு மட்டுமே
கடவுள்
வருகிறார்
இன்றைய வாழ்க்கையின் அவலம் அரசியல் சூழ்ச்சிகளால் நிரம்பியது. தாங்கும் சக்தி குறையும் போது மன உறுதியும் குலைந்து விடுகிறது.
எரியும் நிழலுக்குள் நின்று எப்படிக் குளிர் காய்வது?
கவிஞரின் மேம்பட்ட கோபமாக இந்த வரிகளை முன்னெடுக்கலாம். “ மழிப்பதற்குக் காசில்லாமல்தான் மண்டிக்கிடக்கிறது குறியீடுகள் ஏதுமறியாத
எங்கள் மயிர்”
கொதிக்கிற
சோற்றுப்பானையின்
நெஞ்சில்
நெருப்பு வைக்கிறது
விலையேறி
கனக்கிற
எரிவாயு உருளை
வழக்கம்போல்
பிரசங்கம் மட்டுமே
செய்து கொண்டிருக்கிறது
வலியேதுமறியாமல்
ஃபிரிட்ஜில்
வாழ்கிற ஆப்பிள்
எரிபொருள் தீர்ந்துபோன வாகனங்களை
டோல் கேட்டில்
கூடுதல் பணம் கட்டி
தள்ளிக்கொண்டு
போகிறோம்
ஏளனமாய் சிரிக்கின்றன
தேசிய நெடுஞ்சாலையின்
மைல் கற்கள்
டிஜிடலில்
ஒளிர்கிறது
அன்னை தேசம்
நாங்கள்
அழுகிற பிள்ளைக்கு
பால் வாங்க முடியாமல்
ஜி பே வில்
கடன் வாங்கி கழிக்கிறோம்
கொடிமரங்களின்
நிழலில் வளரமுடியாமல்
போன்சாய் மரங்களைப்போல்
சூம்பிக்கிடக்கிறது
வாழ்க்கை
மழிப்பதற்கு
காசில்லாமல்தான்
மண்டிக்கிடக்கிறது
குறியீடுகள்
ஏதுமறியாத
எங்கள் மயிர்
பட்டினியைத்தவிர
அத்தனைக்கும்
போடப்படுகிறது வரி
இறகுகளை கொய்து
சிறகுகளால்
கட்டித்தரப்படுகிறது
எங்களுக்கான
வண்ணக்கூடுகள்
ஒரு கன்னத்து
அறையிலேயே
உணர்விழந்த பின்னும்
மறு கன்னத்திலும்
அறைந்து
சிலுவையிலும்
அறைந்து
விட்டுப்போகிறது அச்சேதி
குறுங்கவிதைகளிலும் கவிஞரின் சொல்லடர்த்தி சிறப்பாகவே
இருக்கின்றன. கவிஞரின் இன்னம் சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு…..
விரும்பி அமர்கிற
பறவைக்கு
கிளையின் முட்கள்
பொருட்டில்லை
தாங்கிப்பிடிக்கிற
சிறு கிளைக்கு
பறவையின் எடை
ஒரு பாரமில்லை
நீ பறவை
நான் கிளை
பிறந்த ஊரிலிருந்து
மண்ணெடுத்து
தொட்டிச்செடி வளர்த்தேன்
மலர்ந்த பூக்களில்
எல்லாம்
தாய்ப்பாலின்
வாசம்
உன்னைப்போல்
ஒரு நதியும்
என்னைப்போல்
ஒரு கடலும்
நம்மைப்போல்
ஒரு அலையாகி
புரள்கிறது
உன்னைப்போல்
ஒரு நிலவும்
என்னைப்போல்
ஒரு இரவும்
நம்மைப்போல்
ஒரு வானாகி
விரிகிறது
உன்னைப்போல்
ஒரு இசையும்
என்னைப்போல்
ஒரு மொழியும்
நம்மைப்போல்
ஒரு பாடலாகி
ஒலிக்கிறது
உன்னைப்போல்
ஒரு பூவும்
என்னைப்போல்
ஒரு காற்றும்
நம்மைப்போல்
ஒரு சித்திரம்
வரைகிறது
உன்னைப்போல்
ஒரு உயிரும்
என்னைப்போல்
ஒரு உறவும்
நம்மைப்போல்
ஒரு காதலாகி
கனிகிறது
உன்னைப்போல்
ஒரு அழகும்
என்னைப்போல்
ஒரு தமிழும்
நம்மைப்போல்
ஒரு கவிதையாக
மலர்கிறது
பசித்திருந்தபோது
பாட்டி சுட்ட அப்பம்
விழித்திருந்தபோது
களிறொன்றின்
ஒளிரும் விழி
தனித்திருந்தபோது
காதலியின்
அழகிய முகம்
இயல்பில் இல்லாத
கவிதை கண்களுக்கு
எப்போதும் வாய்ப்பதில்லை
அழகிய நிலவு
வாழ்ந்தாலும்
தேய்ந்தாலும்
உச்சியிலேயே
நிற்கிறது
வெள்ளி நிலா !
நிலவு முத்தமிட்டும்
இயல்பில்
மாறவில்லை
தாழக்கிடக்கிற
உப்புக்கடல்
மதுரையை
எழுதத்தொடங்கினால்
தமிழை
எழுதச்சொல்லி
அடம்
பிடிக்கிறது கவிதை
நானில்லாத
கவிதையா என
வடம் பிடிக்கிறது
சித்திரைத்தேர்
இரண்டையும்
எழுதவிடாமல்
தானே
மதுரையென
குறுக்கே
பாய்கிறது வைகை
கள்ளழகர்
தன்னைத்தான்
எழுதவேண்டுமென
ஆற்றில் இறங்காமல்
அடம்பிடிக்கிறார்
மீனாட்சியும்
சுந்தரரும்
சித்திரை தேரில்
வலம் வருவதைவிடவும்
கவிதைத்தேரில்
உலா வரவே
விருப்பமென்கிறார்கள்
பொற்றாமரைக்கு
தண்ணீரில்
மிதப்பதைவிடவும்
தமிழில் மிதப்பதே
அலாதி பிரியமாம்
பண்டைய தீரமும்
பாண்டியர் வீரமும்
எங்களுக்கும்
இடம் ஒதுக்கென
மீன் கொடி பிடித்து
போராடுகிறார்கள்
சிலம்போங்கிய
கரங்களுடன்
என்னை
எழுதாவிட்டால்
எரித்துவிடுவேன்
என
எச்சரிக்கிறாள்
கண்ணகி
மக்கள் பிரதிநிதிகள்
நாங்களே என
மார்தட்டுகிறார்கள்
மல்லி மொட்டும்
ஜல்லிக்கட்டும்
அழகர் மலையும்
பழமுதிர்ச்சோலையும்
நாங்களும்
மதுரைதான் என
மனு கொடுக்கிறார்கள்
எதையும் எழுதாத
என் கவிதையின்
நினைவுகளில்
நிறைந்திருப்பது
பிட்டுக்கு சுமந்த
மண்ணில் பிறந்து
தரணியெல்லாம்
விளைந்திருக்கும்
தமிழ்தான் ❤
காத்து இரட்சிப்பதாக
நம்பப்படுகிற
கருவறை சாமிகளுக்கே
வாய்க்கிறது
பட்டுத்துகிலும்
பாலும் தேனும்
கால்கடுக்க
காவலுக்கு நிற்கிற
வாயில் சிலைகளுக்கு
அருளப்படுவதேயில்லை
ஒட்டுத்துணியும்
ஒரு வாய்
அன்னமும்
ஊர் என்பது
அம்மாவின்
பாதம்பதிந்த மண்
உறவென்பது
அவளின் கையளவு இதயம்
அம்மா இருந்தவரை
ஊருக்கு வந்து போவது
ஒரு உற்சவம்போல் நடந்தேறும்
இன்று
கூடு திரும்பாத
தாய்ப்பறவைக்கு
ஏங்கித்தவிக்கும்
குஞ்சுக்குருவியைப்போல்
துவண்டிருக்கிறேன்
அவள் இல்லாமல்
அடுத்தவர் வீடாகிப்போன
என் கூட்டுக்குள்
இந்த கூட்டுக்குள்தான்
என் சிறகுகள்
முளைத்தது
இந்த புழக்கடை
மாமரம்தான்
என் போதி மரம்
இந்த கிணறுதான்
என் ஜீவநதிகளின் ஊற்றுக்கண்
சாணத்தில் மூடி கூரையில் வீசிய
பாற்பற்களும்
பால்யமும்
இந்த மண்ணில்தான்
புதைந்து கிடக்கிறது
முதல் காதலும்
முதல் கவிதையும்
இந்த காற்றில்தான்
கலந்திருக்கிறது
பொன்னியின் செல்வனோடும்
யவன ராணிகளோடும்
கதைகள் பேசி
களித்திருந்த கிணற்றடி
இன்று ஈரமில்லாமல்
வறண்டு கிடக்கிறது
துளசியும் செம்பருத்தியும்
சிரித்திருந்த முற்றம்
வெறுமையில் வாடிக்கிடக்கிறது
வாசலில் நிற்கின்ற
பூவரசின் நிழல்
குளுமையைத்தொலைத்து
படர்ந்திருக்கிறது
அம்மா இருந்தவரை
நலங்கு வைத்து
அலங்கரித்த
பெண்ணைப்போல் இருந்த வாசல்
இன்று அறுவடை முடிந்த வயலைப்போல்
வெறுமையாய்க்கிடக்கிறது
அம்மா
கூட்டிப்பெருக்கி
வாசல் தெளித்து
சாணம் மெழுகி
கோலமிடுவது
ஒரு ஜலதரங்க கச்சேரியும்
ஓரங்க நாடகமுமாய் அரங்கேறும்
ஒற்றை பார்வையாளனாய்
அருகிருந்து
ரசித்துக்கொண்டிருக்கும் என் கன்னத்தை
வருடி எனக்கொரு
காகத்தை வரைந்து
அதன் வாயில்
வடையை சுழித்துவிட்டுப்போவாள்
நான் காகத்தோடு
வானத்தில் எம்பிப்பறப்பேன்
கோலம் காகம்
வானம் வடையோடு
அம்மாவையும்
தின்று செரித்த
காலத்திற்கு
தாயுமில்லை ...!
தந்தையுமில்லை.
நித்யஸ்ரீ்யும்
அஃப்ரினும்
கரோலினும்
என்னுடைய மகள்கள்
சீதாராமனும்
முகம்மது ரஃபீக்கும்
ஜேம்சும்
எனது நண்பர்கள்
ராமரும்
ஜீசசும்
அல்லாவும்
என் கடவுள்கள்
காவியும்
வெண்மையும்
பச்சையும்
என் அன்பின்
வண்ணங்கள்
ஜெய் ஸ்ரீராம்
அல்லேலுயா
அல்லாஹு அக்பர்
நேற்று
வாரித் தூற்றிவிட்டுப்போன
அதே காற்றுதான்
இன்று
என் தோட்டத்திற்கு
மழையை
அழைத்து
வந்திருக்கிறது
ட்எங்கப்பனுக்கு
கவிதை எழுத
தெரியாது
காதலிக்கத் தெரியாது
ஆனால்
எங்கம்மாக்கு
வேர்த்து வடிஞ்சா
வேட்டிய உருவி
குடுத்துட்டு
கோவணத்தோட
துண்டை தேடி
ஓடுவாரு
பாசம் வைக்கவும்
அன்பு காட்டவும்
எங்கப்பன் தான்
குரு எனக்கு
செத்துப்போன
ஆத்தாவைப் பத்தி
ஒரு கவிதை எழுதி
படிச்சு காட்டுனப்போ
மட்டும்
நாந்தான்
சாமி அவருக்கு
அழகாக இருந்தது
அக்காக்கள்
இருந்த தெரு
கூட்டிப்பெருக்கி
வாசல் தெளித்து
குலுங்குகிற
வளைகரங்களில்
தெருக்களின்
துயில் கலையும்
நிலவொளியில்
பாய் விரித்து
அக்காக்கள் சொல்கிற
கதைகளை கேட்டுவிட்டே
ஒவ்வொரு இரவும்
உறங்கப்போகும்
தெரு முனை
கோவில் திறந்தே கிடக்கும்
அம்மைகள்
பக்கத்துவீட்டு திண்ணைகளில்
புளியங்கொட்டைகள் மினுங்க
பல்லாங்குழி
ஆடிக்களித்திருப்பர்
கனகாம்பரம்
தொடுத்துக்கொண்டு
மர்ஃபி ரேடியோக்களில்
ஒலிச்சித்திரம் கேட்ட
அக்காக்கள்
ஒளிச்சித்திரங்கள்
ஒயிலாக அமர்ந்து
நீள் சதுர ஆடிகளில்
வட்ட நிலவை
அலங்கரித்து
கார்குழலில்
மலர்ச்சூடி
வெளிச்சங்களை
வரைவார்கள்
தோழிகளோடு
சில்வர் குடங்களில்
நீர்கொண்டு போவது
தேர் நடந்து போவதைப்போல்
தினசரி திருவிழா
குடங்கள்
பேசிக்களிக்கும் கதைகளால் நிரம்பித்தளும்பும்
குளக்கரை படிகள்
அக்காக்களின்
கொலுசொலி கேட்க
இடம்பெயராமல் காத்துக்கிடக்கும்
குளத்தில் மிதக்கும்
தாமரை மொட்டுகள்
மையிட்ட விழிகளை
கண்டு மலரும்
குளம்
மருதாணியிட்ட
கைகளை தீண்டி
வட்டவட்டமாய்
சிலிர்க்கும்
குடங்களில் அள்ளி எடுக்கும்
தாமரைக்குளம்
ஒரு குழந்தையைப்போல்
இடுப்பில் ஏறி
அமர்ந்துகொள்ளும்
பந்தலிட்டு வாழைகட்டி
நல்வரவு சொல்லும்
குண்டு வண்ண
சீரியல் பல்புகளோடு
அக்காக்களின்
அழகும் ஒளிரும்
அழகின் நறுமணம்
திருமண வீதியெங்கும் கமழும்
தெருவின் அழகையெல்லாம்
கூரை புடவையின்
முந்தானையில் கட்டிக்கொண்டு
காணாமல் போன அக்காக்கள்
தாவணி அணிந்த
தேவதைகளாகவே
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
நினைவுகள் திரும்பிப்பார்க்கிற
பால்யத்தின்
தெருக்களில்
அம்மா
என்னை சுமந்தவள்
நான் ஏடுகளை
சுமக்க தினம்
மண்ணை சுமந்தவள்
கூட்டியும்
பெருக்கியும்
கொண்டுவந்த
கூலிக்காசில்
என்னை
கூட்டலும்
பெருக்கலும்
படிக்க வைத்தவள்
காதணிகளையெல்லாம்
விற்றுவிட்டு
எனக்கு
உவமை அணியும்
உருவக அணியும்
வாங்கித் தந்தவள்
தான்
நடப்பதற்குக்கூட
செருப்புகளை
வாங்காமல்
நான்
பறப்பதற்கு
சிறகுகளை
சேமித்துக் கொடுத்தவள்
கடிதம்கூட
எழுதத்தெரியாத
இவள்தான்
என்னை
கவிதை
எழுத வைத்தவள்
என்னை சுமந்தவள்
நான் ஏடுகளை சுமக்க
தினம்
மண்ணை சுமந்தவள்
இன்று....
தன்னையே
சுமக்க முடியாமல்
தள்ளாடி....!
தள்ளாடி....!
பூக்காமல் போனாலும்
நீர் வார்ப்பேன் என்பதை
எப்படிச் சொல்வது
கேட்காத போதும்
பூக்களைத்தருகிற
இந்த செடியிடம்
படிக்கிற பிள்ளைகளும்
வாசிக்கிற மனைவியும்
எழுதுகிற நானும்
தனித்தனி
அறைகளில்
மௌனத்தில் கிடக்கிறோம்
எழுதப்படிக்கத் தெரியாத
மியாவ் மட்டுமே
எல்லோருடனும்
கொஞ்சிப்
பேசிக்கொண்டிருக்கிறது
துயரங்களை
இறக்கிவைக்க
இன்னொரு தோளின்றி
சதா உம்மென்று
ஒற்றையாய்
தொங்கிக்கொண்டிருந்த
ஒரேகடவுள்
இறங்கிவந்து
சிரித்து விளையாடுகிறார்
தத்தெடுத்த
நாய்க் குட்டியுடன்
கைபேசிகளால்
களவாடப்பட்ட
குழந்தைகளின் மகிழ்ச்சியை
சிறுகச் சிறுக
மீட்டுத்தருகிறது
தொட்டியில் துள்ளியாடும்
வண்ண மீன்கள்
மறந்துவிட்ட
கிளிப் பேச்சை
உறங்கிக்கிடந்த
குயில் பாட்டை
சிறகசைத்து
துளிர்க்கச்செய்கிறது
சின்னஞ்சிறு
அலகுகளால்
காலத்தை முத்தமிட்டு
பின்னகர்த்தும்
காதல் பறவைகள்
தீராத இறுக்கங்களில்
கட்டுண்டு
கிடக்கிறது ஆறறிவு
இயல்பில் நின்று
அன்பால் வருடி
அழுத்தங்களையும்
கவலைகளையும்
கட்டுடைக்கிறது
ஐந்தறிவு
இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமம் வழங்கும் கவிச்சுடர் விருதினை கவிஞர் அன்றிலன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
காலம் கவிதைகளின் வெளியை பரத்துகிறது ; அதில் தனக்கென்று தனித்துவம் படைக்கும் கவிஞர்களில் ஒருவர் கவிஞர் அன்றிலன்.
கவிஞரின் இயற்பெயர் இரா.சிவக்குமார். கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி -
ஆனைமலை அருகே உள்ள குப்பிச்சிபுதூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் "மருந்தாக்கவியல்" துறையில்
முனைவர் பட்டம் பெற்று,. மருந்துக்கட்டுப்பாட்டுத் துறையில் அரசு அதிகாரியாகவும்
பணிபுரிந்து வருகிறார்.
இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி,
இந்து குழுமம்-காமதேனு, இனிய உதயம், பேசும் புதிய சக்தி, புன்னகை, கொலுசு, வெட்சி,
கனவு, கோடுகள், வாசகசாலை,
படைப்பு-கல்வெட்டு, படைப்பு - தகவு, தமிழ்நெஞ்சம், பொழில்வாய்ச்சி ஆகிய பல்வேறு இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டு நமது படைப்பு குழுமம் நடத்திய
"கவிக்கோ" பிறந்தநாள் பரிசுப் போட்டியில் மூன்றாம் பரிசும், 2020 ஆம்
ஆண்டு சிறப்புப் பரிசும் இவரது கவிதைகள் பெற்றுள்ளன. மாதந்தோறும் படைப்பு குழுமம் தேர்வு செய்யும்
சிறந்த கவிதைக்காக மாதந்திர பரிசும் பெற்றுள்ளார்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
வெளியிட்டுள்ள இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான "மாயநதியின் கால்தடம்" என்ற நூலுக்கு "திருப்பூர் இலக்கிய
விருது" வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்….
ஒரு தையல் காரரின் வாழ்வியலை மிக நுண்மையாக உணர்த்தும் கவிதையிது. தையல் இயந்திரத்தின் மிதிப்பான் மேலும் கீழும் ஏறி இறங்கினால்தான் வாழ்க்கைச் சக்கரம் சுழலும் என்பது படிமம் உள்ளடக்கிய மொழியாடல். அவரது வாழ்வின் பள்ளம் மேடுகளையும் அவைதான் நிரப்புகின்றன. துணியின் மீது ஏறி இறங்கும் ஊசிகளை கவனிப்பதும் ஒரு தியான நிலை என்பது சத்திய வார்த்தைதான்… பண்டிகை நாளில் வந்த வேலையையும் விட முடியாமல், உடனே தைத்தும் கொடுக்க முடியாமல் அவர் திணறுகின்ற நேரத்திலும் அவரை ஆறுதல் படுத்துகிறது வண்ண பட்டன்களின் ஸ்மைலிகள்….
.
தையல்காரரின் கால்கள்
வாழ்வின் மேடுபள்ளங்களை
நிரப்பும் பாவனையில்
அழுத்துகின்றன காலச்சக்கரத்தை.
துணிகள்மீது
ஏறி இறங்கும் ஊசியின் வேகத்தோடு
ஒரு தியானத்திற்குள்
நிலைக்கின்ற கண்கள்.
பண்டிகைக்கு முந்தையநாள்
இரவுக்குள் முடிக்க
இடப்பட்ட கட்டளைகள் அனைத்தும்
காதுகளை நிரப்ப
சிக்கு விழுந்த நூலினைப்போல்
நரம்புகள் இறுக்குகின்றன
அவரது கழுத்தை.
தன் வருகைக்காகக்
காத்திருக்கும் மகனின் முகம்
வந்துபோகும் துக்கத்திற்கிடையே
ஆறுதலாய் அவர் காண்பது
மேசைமீது கிடக்கும்
வண்ண வண்ண பட்டன்கள்
அத்தனையிலும்
அப்பிள்ளையின்
ஸ்மைலிகளை.!
யாருமற்ற சிலுவை.
யாரும் கொண்டு வந்து வைக்காத சிலுவையை அவரவர்களே இழைத்து அவரவர்களுக்காக அவரவர்களே வைத்துக் கொள்கிறார்கள். இது உண்மையும் கூடதான். இப்போதெல்லாம் இணைய வழி சூதாட்டம் என்ற ஒன்றுக்குள்; ஆசை காட்டிய மாய வழியில் நுழைந்து மரணத்தின் குகையை அடைகிறார்கள். இதனால் சிலுவை சுமக்கும் குடும்பங்களின் நிலைதான் என்ன? வலியுடன் கவிதை……
*யாருமற்ற சிலுவை*
காலம் ஒரு மந்திரக்காரன்.
அவன் கைகளில் இருக்கும்
சீட்டுக்கட்டு ராஜாக்களை
தேர்ந்தவொரு நடிகனின் குரலில்
எப்படி வேண்டுமானாலும் மாற்றுவான்.
ஒருமுறை
ஆசை தடவிய மந்திரக்கோலைச்
சுழற்றுகையில்
இணையவழி சூதாட்டத்தில்
இஸ்பேட் ராஜா அகப்பட்டுக்கொண்டான்.
யார் சாயலுமற்ற ஒரு பெரும் துயரம்
அடைமழையெனத்
தன் வாசல் வருவதை
ஆர்டின் ராணியோ
அறிந்திருக்கவில்லை.
கடன்சுமையில் முறிந்த அச்சை
சரிசெய்ய இயலாதவனாய்
குடும்பத் தேரை
வீதியில் நிறுத்திவிட்ட தலைவன்
தன்னை தீயிற்குத் தின்னக் கொடுத்தான்.
திசையற்ற ராணி
இளவரசியின் பசிக்கு
பானையைத் தேடுகையில்
கடன்சொற்களின் கூர்மையில்
உடைந்து நொறுங்கியது
அவளது மனம்போல் கஞ்சிப்பானையும்.
பசியின் சுழல் கடந்து
இன்னல் சுமந்து
இளவரசிக்குக் கீரிடம் சூட்டிப்
பார்க்கக்
கனவோடு காத்துக் கிடக்கிறாள்
யாருமற்ற சிலுவையாய்
திக்கற்ற ஆர்டின் ராணி.
இஸ்பேட் ராஜாவைக்
கவிழ்த்துவிட்ட மனநிறைவில்
அந்தக் கிளாவர் மந்திரக்காரனோ
இன்னொரு டைமண்ட் ராஜாவை
இந்நேரம்
தேடிக்கொண்டிருக்கலாம்.
கேள்விகள் இல்லையென்றால் பிரபஞ்சத்தின் ஓட்டம் நின்று விடும். ஒரு கேள்விக்கான பதில் அங்கேயே கிடைக்கலாம் . அல்லது தொலை காத தூரங்களில் கிடைக்கலாம்… தேவை விடை. புத்தனின் கேள்விக்கு அவன் தேடிய பதில் பல கால அலைச்சலுக்கு பிறகுதான் கிடைக்கிறது. அவன் கேள்வி கேட்டு புறப்பட்டவுடன் யசோதரைக்கு ஏற்பட்ட கேள்விகள் பல ஆண்டுகளை கடத்திதான் கிடைத்தது… இதுவும் கூட பதில் தேடும் ஒரு பயணியின் கவிதைதான்….
ஒரு கேள்வியோடு அது தேடும்
பதில் ஊருக்குப் பயணப்படுகிறேன்.
அப்பதில் ஊரின்
பாதை
அவ்வளவு எளிதாய்க் கிடைத்துவிடவில்லை.
எதிர்படும் யாவர் தரும்
வழிகளின் வரைபடத்திலும்
சமாதானம் அடையவில்லை.
அனுமானத்தோடு ஆறேழு
ஊர்களின் வழியே கடந்தாயிற்று.
பின்னொரு நாளில்
தான் தேடிய பதில்
ஊருக்கு வந்ததும்
புத்தனாகிப் புன்னகைக்கிறது
அக்கேள்வி.
மீண்டும் முளைக்கும்
சில கேள்விகள்
முகவரிகள் ஏதுமின்றி இன்னும்
பதில் ஊரைத்தேடிக்
கொண்டேயிருக்கின்றன
உங்களுள் உறைந்து கிடக்கும்
ஆயிரம் கேள்விகளைப் போல்.
இப்போது புத்தன் எங்கோ
புன்னகைக்கக்
கூடும்.
ஒன்றையொன்று சார்ந்துதான் இந்த உலகம் இயங்குகிறது. நான் தனியன் என்பவன் கூட வெறுமையின் துணையுடன்தான் பயணம் செய்கிறான். இது வாழ்க்கையின் அங்கமான உறவுகளுடன் வாழ்வதன் பொருட்டு பயணம் செய்பவன் கவிதை. இந்த பயணத்தின் முடிவு என்பது எப்போதும் கிடையாது. தொடர் ஓட்டம் போல் ஒருவன் பயணத்தை முடிக்கும் போது மற்றவரிடம் பொறுப்பை சாற்றி விடுகிறான்… இதுவும் ஒரு பயணியின் கவிதை…..
சுழலும் வாழ்வில்
சுருங்கிய இரைப்பையை
நிரப்பிடத் தூரதேசத்துப் பயணத்தில்
ஒரு ரயில் பெட்டிக்குள்
அடைபட்டுச்
சுழலாத மின்விசிறியை
வெறித்தபடி நிலைகுத்திப்
பார்க்கிறது கண்கள்.
சிறிய பொட்டலத்தில் நிரப்பியத்
தேயிலைத் துகள்கள்
பாலில் இறங்கித் தேநீராதல் போல்
பிரியங்களின் எதிர்பார்ப்புகள் தனிமையின்
குழிகளை
நிரப்பிக் கொள்கிறது.
பசி வேளையில் உணவுப் பொட்டலத்தைச்
சுற்றிய
நூலின் சிக்குகளை அவிழ்கத் திணறுவது போல்
காலம் கட்டிய வறுமைச் சிக்குகளை
அவிழ்க முற்படுகிறது கைகள்.
இருந்தும் ஆதிப்புள்ளியின்
முடிச்சுக்களைப் பற்றிச் சொல்லாது
காலம் நகர்த்திக் கொண்டே இருக்கிறது
வாழ்வென்னும் ரயிலை
பிழைப்பை நோக்கித்
"தடக் தடக்" என்னும்
சத்தத்தோடு.
புதிதாக கட்டி குடியேறுகிற வீட்டின் ஆரம்பமே குதுகலமாகத்தான் இருக்கும். அதே சமயம் கடனில் மூழ்கிய ஒருவரின் வீட்டை வாங்கியவரின் குடியேறல் அவர்களைப் பொறுத்த வரை மகிழ்வாகவும் அவ்வீட்டை பொறுத்த வரை முன்பு இருந்தவர்களின் துக்கம், இப்போது குடியேறுகிறவர்களின் மகிழ்வும் கலந்த இரட்டை நிலையிலும் இருக்கும் என்பதுதான் இக் கவிதை
தவிர்க்க முடியாத ஒன்று…..
.
வனத்தைத் தவறவிட்டவொரு குட்டியானையாய்
தனித்து நிற்கிறது யாருமற்ற
கடனில் மூழ்கிய வீடு.
இன்னொரு கைக்கு அது மாறுகையில்
புதிய வண்ணம் புதிய வடிவமெனப்
புத்துயிர் பெறுகிறது
கோயில் யானையாய்.
இப்போது வாங்கியவன்
பாகன் ஆகிறான்
முன்னங்காலை நீட்டிப்
பாகனை ஏற்றுவதுபோல்
முன்வாசலில் யாவரையும் வரவேற்கிறது
புதுமனை புகுவிழாவன்று.
பாகனின் கட்டளைப்படி
முன்பிருந்தவன் கண்ணீர் சிந்திய
அறையில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கற்றுக்கொள்கிறது.
அவர்களைப் படுக்கை அறையில்
உறங்கவைக்கப் பழக்கப்படுகிறது.
எப்போதாவது முன்பு வாழ்ந்தவன்
தன்னைக் கடந்துபோகையில்
வனத்தைத் தன் கண்ணில் வைத்த
யானைக்கன்றென அவ்வீடு பிளிறுவது
அவன் காதுகளில்
கேட்காமல் இல்லை.
இனி கவிஞரின் இன்னம் சில கவிதைகள்:
நிலம் கொத்தும் பறவைகள்*
நிலம் கொத்தும் பறவையென
மண்ணைக் கிளறி சேறு மிதித்துப்
பக்குவமாய் பானை செய்து விற்றும்
பசியாற முடியா வாழ்க்கைக் கடனுக்குப் பண்ணையாரிடம் அடகுக்கு வந்தான் இடையனின்
பாலகன் தோட்ட வேலை பார்க்க.
பசுக்கள் மேய்ச்சல் காணும் பொழுதில்
கொய்யா மரக்கிளையின் உச்சியில் செவ்வெறும்புக் கூடு கலையாது பழம் பறித்து
கால்வயிறு பசியாறிக் கொண்டான்.
செம்புலம் நீர் பாய்ச்சிச் செழிக்கக்
கண்டு வெட்சிப் பூச் சூடி உவகை கொண்டவன்போல்
அரளிப் பூப் பறித்து
ஆற்று நீரில் நீந்திக் கிடந்தான்.
பக்கத்துத் தோட்டம் பாய்ந்துபோன
ஆநிரைகளைக் கண்ட பண்ணையார்
இடுப்பில் கட்டியிருந்த பச்சை
பெல்ட்டால் அவன் தோலில் இழுத்ததும்
வரிவரியாய் உடம்பில் பூத்திருந்தன
அடிமைக் கோடுகள்.
வெடித்து அழுதது நிலம்
பாளம் பாளமாய்.
இருகோட்டுப் பயணம்
ஒட்டகத்தைப் போல்
தண்ணீரை
நீண்ட தனது பெட்டிகளில்
நிரப்பிக் கொள்கிறது
நடைமேடையில்
அப்போது ஓடிவந்து நின்ற
இரயிலொன்று.
தேநீர் விற்பவன் யன்னலின் கம்பியில்
தனது கம்பியின்
கொக்கிவழியே
தேநீர் தூக்கைத் தொங்கவிடுகிறான்.
முந்தைய நிறுத்தத்தில்
ஏறிய சிறுவன் தனது
சட்டையைக் கொண்டு
கீழே கிடப்பவைகளைத் துடைத்துப்
பெற்ற யாசகத்தையெண்ணியபடி
ஐந்தாவது பெட்டியிலிருந்து
இறங்குகிறான்.
பார்வையற்றவள்
சுசீலா பாடலிலிருந்து
லதா மங்கேஷ்கர் பாடலுக்கு
மாறுகிறாள்.
மகிழ்வோடு தன் ஊரை
இழுத்துவந்த இரயில்
விட்டுப் போகையில்
நினைவைக் கட்டி
ஊர்ந்து கொண்டிருக்கிறது
ஒவ்வொரு
ஊர்களுக்குமிடையே.
இரவுண்ணி
பகலெல்லாம்
பசித்திருந்த கனவு
இரவைத் தின்று பசியாற
என்னுள் நுழைகிறது.
விழி மூடிக்கிடப்பதை அறிந்து
உள்நுழையும் கனவைத்
தடுக்கையில் பாம்பு ஒன்றை
என் மீது வீசுகிறது.
அறிமுகம் இல்லா
வழிப்போக்கன் ஒருவனின்
வார்த்தையை உமிழ்கிறது.
மறவாமல் மலர்க்கொத்து
ஒன்றையும் பரிசளிக்கிறது.
அதன் நாளைய உணவிற்கு
உணர்வின் முடுச்சுக்களை
அவிழ்த்து விதைகளை வீசிக்கொண்டிருக்கிறது.
எத்தனித்து எழுகையில்
என் இரவைக் கொத்தி
தின்ற கனவு சட்டென
உறங்கத் தொடங்குகிறது.
விடியல் புன்னகையோடு
என்முன்னே எதிர்படுகிறது
அன்றை தேடல்களைக்
கைககளில் ஏந்தியபடி.
எதிர் பாராத ஒரு நிகழ்வின்
கதவுகள் திறந்துகொள்ளும் வேளையில்
ஒரு அன்பின் கண்ணீரோ
காயமோ துரோகமோ
கண்முன் இருக்கலாம்
கண்ணாடிக் கோப்பைகளாய்.
பொறுமையின்றிக் கைதொடுகையில் தவறி
விழுந்த கண்ணாடித் துண்டுகளின் கூர்
கையைக் கிழிக்கும்
கணங்களாய்
ரணமாகிறது மனது.
அத்துயரத்தைத்
துடைத்தெரியுமென நம்பிச்
சிந்தும் கண்ணீர்
இரவை நனைத்துக் கொண்டிருக்கிறது.
மகிழ்வோ துயரமோ
உள்ளக் குழிகள் நிரம்புகையில்
உனக்கான ஒருத் தனிப்பாடல் உன்னுள்
முணுமுணுக்கிறது.
இவையெல்லாம்
ஏனென்று கேள்வி
எழுமுன்னேக்
காலம் நகர்த்திக் கொண்டே இருக்கிறது
ஒரு புள்ளியிலிருந்து
இன்னொரு புள்ளிக்கு
உன்னையும்
என்னையும்.
குரல் விற்றுப் பிழைப்பவன்*
இசைக் கருவிகளைக் கொண்டு
இசைக்கத் தொடங்குகிறான்.
தனக்குப் பிடித்த கதையொன்றை
பாடல் வழியே
கூறத் துவங்கியதும்
உயிரற்ற பொருட்களெல்லாம்
உயிர் பெற்று அவன் கூறும்
கதைக்கேற்ற பாத்திரங்களாய்
ஆடத் தொடங்கின.
கதையில் நுழைந்த அரசன்
வேண்டிய பொருட்களை
எல்லோருக்கும் தந்து
அழியாத ராஜ்ஜியத்தைப் படைக்கிறான்.
எங்கோ திரண்ட மணற் குவியல்
வல்லூறுவாய் அவன் அழகிய
கண்களைப் கொத்தித் தின்ன வந்தது.
கண்களை விடுவதென்றால்
மக்களை பசிக்குக் கொடுக்க
வேண்டுமென்றது அப்பறவை.
மக்களின் வாழ்விற்காக
தன் கண்களை இழந்தான் அவ்வரசன்
என்ற பாடலோடு அக்கதை முடிந்தது.
விரித்த துண்டில்
காசுகள் விழுந்தன
தன் வீட்டின் வயிற்றை நிரப்பப்
போதவில்லையெனினும்
நாளை இன்னொரு
கதையொன்றுக்கு
அச்சாரமாய்.
கைகழுவிய காலம்*
நேற்றை கருப்புக்
கட்டையெனவும்
நாளையை வெள்ளைக்
கட்டையெனவும் செய்த
பியானோ ஒன்றில்
இன்றைக்கான பாடலொன்றை இசைக்கிறது
பிரெளனியன் இயக்கத்தை உள்வாங்கிய காலம்.
எழும் இசைக்கு நடுவே
இசைக்குறிப்புக்களை விழுங்கிய
இன்றைய நாளை
பசி கொண்டு மொழிபெயர்க்கிறது.
உடலில் பூத்த உவர்ப்பின் சித்திரத்தில்
நேர்த்திக்கடனென வந்த
மண்குதிரையில் அய்யனாரென
வேட்டையாடியாய்
நகர்ந்தோடியபடியிருக்கிறது
நிலவொளியில்.
தனது தீரா பெரும் பசிக்கு
பசியோடு எதிர்படும் தலைகளையே
கேள்விகொண்டு வீழ்த்திப்
புசித்துவிட்டு,
நகரும் பேரொளி அண்ட நதியில்
கைகழுவிய காலத்தின்
மிச்ச மணித்துளிகள் கிளையொன்றில்
தொங்கியபடியிருக்கின்றன
விக்கிரமாதித்தனின் வேதாளமென
ஆயிரம்
கேள்விகளோடு.
மாலை நேரத் துரித உணவு
சமைப்பவனோடு
அவன் வாணலியில்
வறுத்தெடுக்கும் சத்தத்தைக் கேட்டவாறு
பசித்திருக்கின்றன
நாற்காலிகள்.
அவன் கட்டளைக்கு
ஏற்றவாறு அதன்
கால்களை நகர்த்துதலே
அவற்றுக்கு இடப்பட்ட கட்டளை.
கட்டளை மீறியபொழுதுகளில்
நாற்காலிகளின்மீது விழும்
சில சொற்சித்திரங்களின்
ரத்தக்கசிவு.
அதன் பலம்
அறிந்தும் அமைதியாய்
தன்மீதே சுமர்த்தப்படுகிற
புகார்களுக்குப் பதில் ஏதும்
சொல்வதில்லை.
சுமக்க மட்டுமே கற்றுத்தரப்பட்டுள்ள
இந்த நாற்காலிகள்
ஒருபோதும் தனக்கென
அமர்வது பற்றி
யோசிப்பதில்லை.
*நதியாகும் இந்நாள்*
நாட்கள் எப்போதும்
நமதானதாகவே
இருப்பதில்லை.
இந்த நாளை
நான் ஒரு நதியாக்குகிறேன்.
அதற்குள் கால்
நனைத்து
அதன் ஆதி விதையினை
இப் பூமியில்
விதைக்க
அடியாழம் வரை
செல்ல எண்ணுக்கிறேன்.
இந்நதியைக் கடப்போரெல்லாம்
கல் எறிந்த வட்டம் ஒன்றை
தருவிக்கிறார்கள்.
இடையே நதியை விட்டு
வெளியேற உத்தரவும்
வருகிறது.
இருந்தும் இந்நாள்
என்னும் நதி
வினாடிகளில்
பயணித்து நேற்றைய
கடலோடு கலக்கிறது.
இனி நாளைய
நாளை நான்
ஒரு மரமாக்க
உத்தேசித்துள்ளேன்
தேநீரகத்தில் குடித்தபின்
வைக்கப்பட்ட குவளைகளை
இடக்கைக்கு மாற்றிவிட்டு
வலக்கையால்
துடைக்கப்படுகிறது மேசை.
காலை முதல் இரவு வரை
இத்துடைத்தலின்
எண்ணிக்கையை அறிய
அக்கைகள் முற்படுவதில்லை.
தன்மீது விழும் பார்வைகளைத்
தவிர்த்துவிட்டு
மெளனமாய் துடைக்கும்
அக்கைகளுக்கு ஏதோவொரு
ஒப்படைக்கப்பட்ட சுமையோ
அல்லது எங்கோ கைவிடப்பட்ட
கதையோ இருக்கக்கூடும்.
எப்போதாவது மேசையைத்
துடைக்கையில்
அக்கைகளும் ஏங்கியிருக்கலாம்
சுவையுள்ளவொரு
குவளையை ஏந்திப்
பருக.
மணலில் வரிவரியாய்
வருத்தங்களை
விட்டுச் சென்றிருக்கிறது
வற்றிய பிறகு
ஆறு.
-அன்றிலன்,
இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின்
கவிச்சுடர் விருதினை கவிஞர் கனகா பாலன் அவர்களுக்கு
வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
தென்காசி மாவட்டம் வெள்ளாகுளத்தை பிறப்பிடமாக
கொண்ட கவிஞர் அவர்கள் இஞ்சினியரிங் பட்டய படிப்புடன், ஆசிரியர் பட்டய படிப்பும் முடித்தவர். தற்போது தன் குடும்பத்தாருடன் சென்னையில்
வசித்து வருகிறார்.
2017 லிருந்து தொடங்கிய கவிஞரின் எழுத்துப்
பயணம். இப்போது சிறுகதைகள்
ஊடாகவும் தொடர்கிறது. ஆனந்த விகடன், தினமலர், கணையாழி, கல்கி
,தினமணி, இனிய உதயம்,காமதேனு,ராணி இன்னும் பல பிரபல வார மாத இதழ்களிலும் பல இணையதள இதழ்களிலும்
இவரது கவிதைகள்
மற்றும் சிறுகதைகள் வெளியாகி உள்ளன.
இதன் தொடர்ச்சியாக
அகயாழின் குரல்,
என் கனா யாழ் நீ, உன் கிளையில் என் கூடு என்ற மூன்று கவிதை நூல்களும்,
பாறை குளத்து மீன்கள் என்ற சிறுகதை தொகுப்பொன்றும் வெளியாகியுள்ளன.
பல கவியரங்க மேடைகளிலும் கவிதைகளை அரங்கேற்றி பல பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ள கவிஞரின் சில கவிதைகளை கவனிப்போம்.
அம்மாவின் அன்பு என்பது எப்போதுமே விசேடமானது. அம்மாவை பாடாத கவிஞர்கள் என்று யாரும் இருக்க முடியாது.
ஒவ்வொருவர் பார்வையிலும்
அவள் தனித்து விளங்குகிறவள் . கவிஞரும் கூட அம்மாவின் தகுதியை பெற்றவர் என்றாலும் அவரின் பார்வையில், ஒவ்வொரு அம்மாவுக்கும் கூட ஓர் அம்மா தேவைப்படுகிறது என்பதே நுட்பமான பார்வைதான்.
1.
**அம்மா**
நிலாவைக் காட்டி
நாயைத் தடவிக் கொடுத்து
மீசைமாமாவை பூச்சாண்டியாக்கி
உணவூட்டும் அம்மாவின் பசி
அரைகுறையாகத்தான் அடங்குகிறது
அழும் குழந்தையால்
படுக்கை ஈரத்தின்
நனையா இடைவெளிகளைத்
தேடித் தேடி
மழலையை நகர்த்தி போட்டவள்
மறந்தேதான் போகிறாள்
இரவு தூங்கவேண்டுமென்பதை
தப்புக்குத் தண்டனைதரும்
அப்பாவிடமிருந்து
தப்பித்துக் கொள்ள ஏதுவாய்
தாராளமாக இடங்கொடுக்கும்
வியர்வை மணந்த
அம்மாவின் முந்தானையில்
ப்ரியத்தின் ரேகைகள்
தோளணைத்துத் தோழியாக
தலைகோதி முத்தமிட
வேண்டலாகத்தான் இருக்கிறது
அம்மாவின் அருகாமை
நானொரு அம்மாவாகியுங்கூட...
அம்மாவின் அன்பை போல்தான் அத்தைகளின்
அன்பும். அம்மாவிடம்
காட்டாத நெருக்கத்தை கூட அத்தைகளின்
முந்தானை இடம் பிடித்துக்
கொள்ளும். உரிமையுடன்
எதுவும் பேசும் தகுதியை அவர்களின் அன்பு எளிதாக வழங்கி விடுகிறது. வீட்டில் நுழைந்த அண்ணன் மகள் வீடெங்கிலும்
வியாபித்து கிடக்கிறாள் என்ற கவிஞரின் வரிகள் பாசத்தின் வாய்ப்பாடு.
2.
**அன்பின் விடுமுறை**
என்
அனுமதி கேட்பதில்லை
எப்போதும் அவள்
விரும்பி உள்நுழைந்து
வியாபித்துக் கிடப்பாள்
வீடெங்கிலும் விசாலமாய்
சேலைக் கொசுவத்திலும்
லீலைகள் காண்பிப்பாள்
வேலைப் பொழுதினில்
வந்தென்னைக் கொஞ்சிச் செல்வாள்
தோழர் தோழிகளோடு
தொய்வின்றி அவள்
பொழுதுகள் இருக்க
வேளா வேளைக்கு
திண்பண்டம் மட்டும்
என் பங்காக இருக்கும்
சண்டை சச்சரவுக்கெல்லாம்
நாட்டாமை நான்தான்
எதிர்பக்கத் தீர்ப்பாயின்
எரிந்து விழுவதும் என்மேல்தான்...
முறைத்துக் கொள்ளும்
அவள் பார்வைக்கங்கே
முத்தமொன்றை கப்பங்கட்டி
இழுத்தணைத்து
இறுக்கிக் கொள்ளுதல்
பிரியமெனக்கு
உணர்வொழுகும் கண்ணீரோடு
விடைபெறுகையில் சொல்கிறாள்
"விடுமுறை நாளென்பது
அன்புக்கு இல்லைதானே அத்தே? "
நகரத்து இல்லத்தரசிகளின் தனிமையை ஒரு கதை போல் சொல்கிறது கவிஞரின் கவிதை. அவசர ஓட்டங்களில்
உறவுகளின் பிணைப்பை சிதைத்து விடுகிறது நாகரீக வாழ்க்கை.
இதனை அனுபவிப்பவர்கள் மட்டுமே உணரக்கூடிய
ஓர் உளவியல் பிரச்சனையாகும். இந்த இல்லத்தரசியின் மனவோட்டத்தையும் வாசித்துப் பாருங்கள்….
நீங்களும் உங்கள் அடுத்த வீட்டு அழைப்பு மணியை நிச்சயமாக அழுத்துவீர்கள்….
3.
**அழைப்பு மணி**
விளையாட்டுக்கேனும்
அடித்துவிட்டுச் செல்லுங்களேன்
யாரேனும் அந்த அழைப்பு மணியை
எத்தனை நேரம்தான்
துணிகளோடும் தூண்களோடும்
உரையாடிக் கொண்டிருப்பது
தோட்டப் பூச்செடி
சிரித்த வண்ணமே
இருக்கிறதே தவிர
எதிர்த்து ஒரு வார்த்தையையும்
எனக்கு அனுப்புவதேயில்லை
எப்போதுமே
அந்தப் பூனைக்குட்டிக்கு
எப்போதும் சுயநலம்தான்
கொஞ்சச் சொல்லி
மடியில் படுத்துக் கொள்ளும்
தேடச் சொல்லி
சேலையில் ஒளிந்து கொள்ளும்
வேகப் பட்டுவாடாவில்
நொடித் தரிசனமாகும்
தபால்காரரின் உரத்த குரலும்
பால்காரரின் பழகிய முகமும்
நாளுக்கொரு தரம் மட்டுமே
நகரத்தில் தனிமையை
நாமாக ஏற்றுக்கொள்வது
நரகத்தின் சாயலை
நம்மீது திணிப்பதாகுமோ
அக்கம் பக்கத்து வீடெல்லாம்
அடைத்தபடியே இருக்க
தேவைப்படலாம் இந்த வாசகம்
ஒருவருக்கொருவர்
ஒத்தாசையாக இருக்கட்டும்
பேசத் தெரிந்த மனிதர்கள் சூழ்
வாழ்வென்று மனம் நம்பட்டும்
விளையாட்டுக்கேனும்
அடித்துவிட்டுச் செல்லுங்களேன்
யாரேனும் அந்த அழைப்பு மணியை.
முதுமை என்பது காலம் நகர்த்திய கணக்கு.
அஃது ஒன்றும் வியாதியில்லை. எதற்காக அவர்களை இவர்கள் ஒதுக்குகிறார்கள்? உண்மையில் அவர்கள் இந்த உலகத்தால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். அவர்களுடைய
அன்பை பெறுவதே பெரும் நன்மையல்லவா! அவர்களுக்கு
கொடுக்க உங்களிடம் ஒன்றும் இல்லாமல் கூட போகலாம்… ஆனாலும் நேசப் பார்வையும், புன்னகையும் கொடுக்க என்ன பஞ்சம்?
இதையும் வாசியுங்கள்….
4.
**முதுமையின் பரிசு**
பக்தி ததும்பிய அம்முகத்தில்
கொஞ்சம் அச்சமும் இருந்தது
வயோதிகத்தின் தாக்கமென
புரிந்து கொண்ட எனக்கு
வழி சொல்லத் தெரியவில்லை
வாஞ்சையாய் வீசிய பார்வையில் சிறிது
பெற்றிருக்கலாம் ஆறுதல்
ஊன்றிய கைப்பிடியை
தூக்கிப் பிடித்து வழங்கிய
ஆசிர்வாதத்தின் பாக்கியசாலி நான்
கடந்து செல்கையில்
உள்ளங்கையில்
ஒத்தியெடுத்து
அனுப்பி வைத்த முகம்
எடுத்துச் சென்றது
பாசத்தின் வாசனையை
கரையக் கரைய
சேகரித்த நொடிகளை
நெஞ்சுக்குழியில் பத்திரமாக்கினேன்
அன்பு நாணயமாய்
இருக்கட்டும் அப்படியே
வேண்டுமென கேட்கவரும்
வேறொரு முதியவளுக்கும்
பகிர்ந்தளிக்க
உத்தேசமெனக்கு.
பூங்காவிற்கு செல்வதென்பதே ஒரு மன மகிழ்விற்குதான். அங்குள்ள காற்று, இயற்கை சூழல், முகமறியா மனிதர்கள் என்று நம்மை பரவசப்படுத்தும் உணர்வுகள் கவிதையானால் எப்படியிருக்கும்! கவிஞருக்கு அங்குள்ள சூழல்கள் ஒவ்வொன்றுமே
கவிதையாகி இருக்கிறது. சிறுவன் தின்று வீசிய கோப்பையில்
கொன்றை மலர் உட்கார்ந்திருக்கும்
அழகை சிலாகிக்கிறார். கல் மேசையில் விட்டு சென்ற யாரோ ஒருவருடைய கர்ச்சிப் அவர் வாசனையுடம்
இருக்கிறதாம்! ரசனையின் அழகில் கவிதை…
5.
பூங்கா புகார்கள்
வேர்க்கடலைக்கும் சுண்டலுக்கும்
காசுயில்லை கையில்
விற்க வருபவனிடம்
பேச்சுக் கொடுத்தால்
மூக்கு முட்ட நிறைந்து போகும் வாசனை
நேர்க்குத்து மின்சாரக் கம்பத்தில்
காகங்கள் இரண்டு
காதலித்துக் கொண்டிருக்கின்றன
பகுமானமாய் ஊட்டிவிட்டும்
சிறுவன் தின்று வீசிய
ஐஸ்கிரீம் கோப்பைக்குள்
கொன்றை மலரொன்று
குத்த வைத்திருக்கிறது
மறதியில் விட்டுச்சென்ற
யாரோ ஒருவருடைய
வாசனையோடு
கைக்குட்டை ஒன்று கல்மேசையில்
அடர் புற்களை
உருவமாற்று செய்கின்றான்
வீச்சுக்கத்தி கொண்டு
யானை ஒட்டகம்
மயிலென்றாகிறது அது
பனித்துளிக் கிரீடம்
நாளையில்லையென்ற
வருத்தத்தில்
நுனிகள் சிதறிக் கதறுகின்றன
மண்மீது...
ஒழுங்கு சரியில்லை
காரணத்திற்காக
உடனுக்குடன் வெட்டப்படுவதில்லை
எந்தவொரு மனிதனின்
தலையையும்
அடிதடியாகப் பொழிந்த மழை
அவசரமாக விரட்டிவிட்டது
பூங்காவிலிருந்து.
மேலும் கவிஞரின் சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு…
6.
மூக்குப்பொடி பெரியம்மா
மூக்குப் பொடியும்
முன்னெத்துன பல்லும்தான்
அடையாளம்
தெக்கு வீட்டு
பெரியம்மாவுக்கு
உள்ளூரு விசயம்
ஒன்னுவிடாம சேர்த்துவச்சி
ஒலுங்கு கடி பொறுக்க
ஒரலு மேல குத்தவச்சி
கூடக் கொறைய திருச்சினாச்சும்
பொரணி பேசுவா
அத்தை ,சித்தி, பாட்டிககூட..
சுப்பம்மாக்க ஓட்டுவீட்டை
கார வீடாக்க
செங்கலு ஒருபக்கம்
மண்ணு மறுபக்கம்னு
மலை போல குமிஞ்சி கெடக்கும்
தெருக்கரண்டு இல்லாத
நாளு
பொடிசுக கூட்டத்துக்கு
பொலபொலனு அவுத்துவிடுவா
ராசாக் கதைகளை
ஒத்தையடிப்பாதை வழி
ஒரு கூட்டம்
அவ பின்னாடி போக
பக்கத்து ஊரு கொட்டகையில
ஒத்தப் படம் பாக்கியில்லாம
பார்த்து ரசிப்பா
மறுநாளு முழுக்க
வரிவரியாச் சொல்லுவா மத்தவக கிட்ட
துஷ்டி வீடு
தூங்காம இருக்கனும்னா
கடுங்காப்பி கூட வேணாம்
கதை சொல்ல அவ இருக்கையில
கல்யாண வீட்டு
காய் நறுக்கும் கூட்டத்தில
பலகைபோட்டு
சிரிக்க சிரிக்கப் பேசுவா
பலபேறப் பத்தி
பெரியய்யா போயி
பத்து வருஷமாச்சி
பெரியம்மாவுக்கு பேச்சு வந்தும்தான்.
**
7.
**பாறை முட்டைகள்**
யுகங்கள் எடுத்து
உருண்டோடி வந்திருந்த
கூழாங்கற்களின் தடத்தில்
இருக்கலாம்
எத்தனையோ காடுகளும்
மலைகளும்
பூமி பூஜையில்
விழுந்து வணங்குகையில்
முழங்காலில் வளவளத்து
கூசச் செய்கிறது மனதை
அஸ்திவாரத் தோண்டலில்
கிளர்ந்தெழும்
பாறை முட்டைகளின் கருவிலிருந்த
எண்ணற்ற மணல்கள்
பிறப்பெடுக்க
வாய்ப்பில்லை இனி
ஊரின் பெயரை
ஆறு' என முடித்து
நிற்க வைத்துவிட்டோம்
எங்கள் இல்லங்களை.
**
8.
**வன்மக் கிறுக்கல்கள்**
விளம்பரப் படுத்தியிருக்கிறான்
பெண்ணின் பெயரோடு
கைபேசி எண்ணினையும்
கழிவு இறக்க வந்தவனின்
கழிவிரக்கமற்றச் செயலுக்கு
காறித் துப்பியும்
வெகுண்டெழும் கோபம்
ஆற்றாமையின் ரணம்
சுவற்றுக் கிறுக்கலாய்
வரைந்திருந்த படத்தில்
வரம்புகள் தாண்டிய
சபலக் கூறுகளின்
எச்ச புத்தி.
ஓங்கிச் சாத்திய
கழிவறைக் கதவின்
கைப்பிடிக் கம்பியில்
பிசுபிசுத்துக் கிடக்கிறது
குரூரக்காரனின் ரேகைகள்
அவசரமென்று
தத்தளிக்கும் மகளை
அடுத்தடுத்தப் பெட்டியாக
சோதித்து இழுத்தலைகிறாள்
அம்மா
சுகமென்று அனுபவிக்கும்
ரயில் பயணத்தின்
சன்னலோர இருக்கை
புழுங்குகிறது எனக்கு.
9.
**ஐந்தாம் வகுப்பு கற்பகம்**
வெயில் காய்ந்துகிடக்கும்
குடிதண்ணீர்க் குழாய்முன் வரிசையாகக்
காத்திருக்கின்றன
வெற்றுக் குடங்கள்
பச்சைக்குப் பின் சிகப்பு
சிறியதற்குப் பின் பெரியது
உங்களுக்குப் பின் நானென முன்
நிற்பவளிடம்
ஒப்புவித்தவளுக்கு
கசந்துகிடக்கிறது காத்திருப்பு..
பத்தடி தூரத்தில்
பச்சை எலுமிச்சை மரத்தின்
புளிப்பு நிழலை
தலையில் பூசி
பேச்சுத் துணைக்கு ஆள்தேடுகிறது
தனித்திருக்கும் குத்துக்கல்
கூடிக் களித்திருக்கும்
தேன்குழல் பூவின்
இனிப்பெல்லாம் உறிஞ்சியவள்
பார்வையோடு விட்டுவிடுகிறாள்
பறக்கும் தட்டான்களை
வரிசை நெருங்கியதாக
யாரோ குரல்கொடுக்க
பாஸா?
பெயிலா? வுக்கு
பதில் தெரியாமலே
பாதியில் விட்டுவந்தாள்
எருக்கம் பூவை
ஐந்தாம் வகுப்பு கற்பகம்.
10.
**நகல்**
அவர்கள் வாடகைக்கு
எடுக்கப்பட்டிருந்த
வாசல் வரவேற்பாளர்கள்
உணர்வற்ற புன்னகையை
நேர்த்தியாக உதிர்க்கத் தெரிந்த
உயிருள்ள சிலைகள்
ஒட்டவேயில்லை மனதில்
முலாம் பூசிய முகத்தில்
ஒளித்து வைத்த
கவலை ரேகைகளை
கண்டுபிடித்தல் சாத்தியமற்றது
ஒப்புக்குத் தெளித்தப்
பன்னீர்த் துளிகளில்
கடைமைக்காக இருந்தது
மணந்த வாசம்
வெள்ளித் தட்டில்
குங்குமமும் சந்தனமும்
தொட்டுக் கொள்ளக்
கூறிய மொழியில் செயற்கையின் கூடு
மொய்யெழுதி
திரும்பி வருகையில்
நின்று களைத்து
நீட்டினர் தாம்பூலத்தை
பதிலுக்கு நன்றியுரைத்து
கேள்வி தொடுத்தேன்
சாப்ட்டீர்களா?
11.
*அதிரசனை*
பூக்கள் தோறும்
முத்தமிட்டுச் செல்கிறது
பட்டாம்பூச்சி
மெல்லிய
சிறகசைப்புக்கு
தாளம் கொள்கிறது காற்று
கால்களில் ஓட்டிய
மகரந்தங்களில்
பிறிதொரு நாளின்
பழுத்த கனி
விழியின் திறப்பில்
மையத்துக் குவியலாய்
அதிரசனையின்
ஆச்சரியச் சுனை
12.
*பசி ஊற்று*
முவ்வேளைக்கு ஒருவேளையேனும்
சாந்தப்படுத்த
முழுநாளையும் காவுவாங்கி
முழுமை கொள்ளாது தவிக்கிறது
அவளின் நாட்கள்
நேற்றிரவு மீந்த ரொட்டித்துண்டுகளை
வீதியெறியும் வியாபாரிக்கு
அப்புறப்படுத்துதல் ஒன்றேயன்றி
அக்கறையில்லை கையேந்துபவளின் உணவுத்
தேவை
வானக்கூரையின் கீழ்
வெளிறிய விழிகளை
மூடுதலின்றி வேடிக்கை காட்டி
உயிர் கவ்விக் கழிகிறது
அகோரப் பசியிரவு
ஏந்திய கைகளை கீழிறக்குதலின்றி தொடரும்
அவளின் நீள் பயணத்தில்
மார்புத் தொட்டிலுக்குள்
கங்காருக் குட்டியாய் மகன்
அடங்குதலில்லா அந்த ஊற்றுக்கு
அடுத்தடுத்துத் தேவையாகிறது
செரித்துக்கொள்ளச் சிற்றுணவு
விடியலின் கணக்குக்கு விடையாகச்
சூரியஒளியை மட்டும் சொன்னால் எப்படி?
13.
*செம்பழுப்புப் பறவை*
உதிர்ந்த ஒற்றைச்சிறகை
அடையாளமாக்கி
கடந்து போகையில்
தேடியிருக்கக்கூடும்
பெயர் எதுவும் பெற்றிராத
அச்செம்பழுப்பு பறவையோ
தெரிந்த பெயர்களை
உச்சரிக்கும் மொழி அறியாது
கொழுத்தக் கிளைக்கம்பு நுனியிலமர்ந்து
எங்கோ குளித்துவந்ததின்
ஈரத்துவட்டலை
சிலிர்ப்பு முத்துகளாய்
சிதறவிட்டு மயிர்கூச்செறியும்
அந்தப் பறவை
அந்த மரம்
இந்த ரசனை
எதுவுமில்லை இப்போது
புதியவரவு வீடொன்றிற்கென
வேரோடு பிடுங்கிய மரத்தை
சவமாகச் சுமந்து நகரும்
ராட்ஷச வாகனத்தை
எப்படி ரட்சிக்க முடியும்?
14.
*உள்ளங்கைத் தீர்த்தம்*
மழை வந்து
அழைக்கும் போதெல்லாம்
ரசிக்கப் போய்விடுகிறது
மனம்
சன்னல் கம்பிகளில்
கைகளைப் பிடிக்கச் சொல்லி
இலைப் புனலில்
வழிந்தொழுகும்
தீர்த்த நீர்த்துளிகளை
உள்ளங்கை வாங்கி
உறிஞ்சிக் கொள்கிறது
அவ்வப்போது வாய்
உள்ளத்துப் பூரிப்பு
குதூகலித்துக் கிடக்க
கோயில் கருவறை தரிசனம்
வாசலின் முன்னே
பரிபூரணமாய்
14.
*சுயநலச் சுரப்பி*
வளர்த்தும் சிதைத்தும்
ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்களோடு
பின்னிப் பிணைந்து
சமாதானமாய் இசைவுதரும்
ஆதியிருப்பின் அமைதி ஒப்படைப்பில்
உள்வருந்தும் விசும்பலின் தூவலை
எவரும் கண்டுகொள்வதில்லை
சுயநலச் சுரப்பிகளை
சுமந்து திரியும்
அழுக்குடையவனின்
கைப்பிடி இதயத்தில்
மலைக்கோட்டையளவு மாசு
விரட்டி விரட்டி
நசுக்கத் துணிபவனின்
நாவெல்லாம்
நஞ்சுக்குப் போதை
15
**குற்றச்சாட்டுக் கூர்**
நிச்சயமாக தெரிந்திருக்கவில்லை
ஏதோவொரு சந்திப்பில்
துளியோண்டு நலம் விசாரிப்பு
உயிரொட்டிப் பிணையுமளவிற்கு
வீரியத்தை சுமந்திருக்கும்
அந்த வார்த்தையின் பலத்தை
மனதார அறிந்திருப்பதில்லை
தொட்டுத் தொட்டு
வெடிக்க வைக்கும்
சொடக்குத் தக்காளியின்
அத்தனை ருசியையும்
தொடர்ந்து வந்த உரையாடல்
சுமந்து கொண்டிருப்பதை
செல்லக் கோபத்தின்
சின்னப் பிரிவொன்று
வாள்குத்தி உணர்த்திப் போகும்
ஊடலின் ஆழம்
உள்ளத்தைக் கீறிவிடும்போதுதான்
வலிகொள்ளாமல் வந்துவிழுகிறது
குற்றச்சாட்டெனும் கூர்
16.
**பூவுக்கு வேலி**
சருகுகளைக்
கூட்டிப் பெருக்கி
அடியொட்டி ஒதுக்கி
நிமிரும் போதெல்லாம்
முன்நின்று கொண்டிருக்கும்
மரத்திற்கான ஆறுதல்
நிச்சயமாக இல்லை
துளிர்த்த இலைகளை
பத்திரமாக பிடித்து வைத்த
கருங்கிளையின் பதைபதைப்பை
வீசிக்கொண்டிருக்கும்
காற்று சொல்ல
கலவரமாகும் அந்நேரத்து மௌனம்
நீர்தெளித்து
கோலமிடுகையில்
மையப்புள்ளியில்
வந்தமர்ந்த மஞ்சள் பூவுக்கு
கம்பிக் கோடுகளில்
வேலி பின்னிக்கொண்டிருக்கின்றன
மாவு உதிர்க்கும் விரல்கள்
17.
*நினைவு விரல்கள்*
நரம்புகளை நெம்பி மீட்டிய ஒலிகள்
அழைத்துச் செல்லும் பாதையில்
நினைவு விரல்களை
பத்திரமாகப் பிடித்து
பறந்து போகிறது
தொடராது போனாலும்
வற்புறுத்தலின்றி
வாகாகச் செல்லும்
வழியதை தெரிந்தேதான்
தெளிவாக நகருகிறது
எங்கோ சென்று
எதிலெதிலோ பிணைந்து
எதுவுமேறியாதது போல
ஒட்டிக்கொள்ளும் அது
கொஞ்சம் அப்படி இப்படித்தான்
18.
பொறுப்புள்ள குடிமகன்*
கால்கடுக்க நின்றிருந்தவன்
இடக்கையை குடைக் கம்பிக்கும்
வலக்கையைப் பணம் திணிக்கும்
துவாரப் பொந்திற்கும்
லாவகமாய் ஒப்படைத்து
வெட்கங்கெட்டு அளவு சொல்கின்றான்
பின்னின்று நெருக்குபவனின்
பொறாமையை அள்ளியபடி
கண்ணாடிப் போத்தல்களை
காதலியைப் போலவே
கழுத்துச்சுற்றி அணைத்து
அலுங்காமல் குலுங்காமல்
வெளிவருபவனின் பார்வையில்
மமதையின் மிதப்பு
நாவொழுகும் எச்சிலை
நைத்து விழுங்கி
ஆசைப் பேயாய்
நடந்து போகிறவனின்
வீட்டுச் சமையலறை
பூனை படுத்துறங்கும்
கூடம் இப்போது
பட்டை ஊறுகாய்க்கு
இத்துப்போன பித்தளைவாளி
அடமானம் ஆகிறது
காராச்சேவுக்கும் பத்தும்தான் அது
அச்சமும் பசியும்
அப்பிக் கொண்டு
அங்கொரு மூலையில்
அவனிரு மகனும்
நிறைமாத மனைவியும்
பெருந்தாக வறுமையை
சொல்லற்று மறைத்தபடி
ஊரடங்கில்
உலையேற்ற வழியின்றித்
தவித்தாலும்
போதையேற்றத் தவறவில்லை
பொறுப்புள்ள அக்'குடி'மகன்
19.
*எச்சரிக்கைக் கோடுகள்*
சிறகுகளில்
கிழிக்கப்பட்டிருக்கிறது
எச்சரிக்கைக் கோடுகள்
எங்கும் நிரவிய
அக்காற்று கூட
சலித்துத்தான்
மூச்சாகிறது
மன மத்தியிலிருக்கும்
அச்சரேகைகளின்
அகோர வளர்ச்சியை
எத்தனை ஒடித்தாலும்
துளிர்க்கத் தவறவில்லையது
உள்ளடங்கிக் கிடத்தலின்
உரையாடலற்ற தனிமையில்
ஊமையாய் குவிகின்றன சொற்கள்
கவிதையாய் கொஞ்சம் சேர்த்ததுபோக
கலையாகவும் மிச்சமிருக்கிறது
சிலபலச் சொற்கள் என்னோடு
உங்கள் சிறகுகளிலும்
கிழிக்கப்பட்டிருக்கிறதோ
எச்சரிக்கைக் கோடுகள்
20.
அப்பொழுதுதான் பெய்த பெருமழையில்
தன்னைக் கழுவிக்கொண்ட
அந்தப் பாறையின்
இடைவெடிப்பு வழியாக
எட்டிப் பார்க்கும் செடியின்
இலைகளையும் மீறி
பூத்துக் கொண்டிருந்தது
நம்பிக்கை
21.
இலைகளற்ற கிளையில்
தொங்கிக் கொண்டிருக்கும் மழைத்துளி
தழைத்தலுக்கான தலைகீழ் தவம்
22.
அளந்தெடுத்து
ஊற்றப்பட்ட
மூச்சுச் சுவாசத்தில்
பிறப்பெடுக்கும்
ராகவொலிகளின் தாய்
அந்தப் புல்லாங்குழலென்றே
இருக்கட்டுமே...!
23.
பாழடைந்த வீட்டின்
ஒன்றும் பாதியுமான எண்களோடு
ஊசலாடிக் கொண்டிருக்கும்
ஒடிசல் கதவில்
ஒட்டியிருக்கும் கைரேகை
கூட்டுக் குடும்பத்தின்
உறவுக் கணக்கு சொல்கிறது.
24.
பெரும் மௌனத்தில்
ஊறிக் கிடக்கும் வார்த்தைகளில் ஒன்றை
கவன இடுக்கியால்
நுனி பிடித்து
யாரிடமேனும் தந்துவிடக்
காத்திருக்கையில்
காற்றுக்குப் பறந்துகொண்டிருக்கும்
காகிதம்
கவிதை வளர்த்துக் கொள்கிறது...!
24.
தவம்போல் தனிமை
நிறைக்கிறேன்
உடலுருவம் தவிர்த்து
என்னைத் தேட
எதுவுமே மிச்சப்படவில்லை
எனக்கே எனக்கான கவிதை
எழுதக் கிடைத்த காகிதத்தில்
யாரோதான் நிரம்பியிருக்கிறார்கள்
இத்தனை நாளும்.
25.
ஈரச் செம்மண்ணில்
ஊறும்
வெல்வெட் பூச்சியின்
முதுகு தொட்டு
உன் உள்ளங்கைத் தீண்டலை
மீள் கொணர்கிறேன்
உயர வளர்ந்த
கிளைகளிலிருந்து
தொங்கும் விழுதுகளின்
கூரிய கண் பார்வை
வேர்களை நோக்கி மட்டுமே
நவம்பர் மழைக்கு
ததும்பும் குளத்தில்
உச்சந் தலையைத்
தொலைத்து
மூச்சுத் திணறும்
வேலி மரத்தின் முட்கள் கீறி
நீருக்கு வலிக்கிறதோ என்னவோ?
நீ
தொட்டுரசி நிற்கவேண்டுமென்பதை
தொட்டது யாவுமே
கிளர்த்திவிடுகிறது
புரிகிறதா உனக்கது..?
26.
கையிலிருந்த
சமோசாவின்
எஞ்சியிருக்கும்
எண்ணெயினை
ஒத்தி யெடுத்த
காகிதத்தில்
அச்சடிக்கப்பட்டிருந்தது
தெரிந்த கவிஞரின்
புகழ்மிக்க வரிகள்
கசக்கி சுருட்டி
இருக்கையின் அடியில்
உருட்டி விட்டவர்
கடைசி வரை தெரிந்திருக்கவில்லை
அந்தக் கவிதையின் வாசனையை
சிறிது நேரத்தில்
மொய்த்த எறும்புகள்
கூடிக் கூடிப் பேசுவது
என்னவாக இருக்கும்
**
27.
பேசிக்கொண்டிருந்த
அனைவரையும் ஒதுக்கி
பேசப் போனோம் இருவரும்
ஒரேயளவாக
எட்டெடுத்து வைக்க
கவனம் முழுவதையும்
பாதங்களுக்குப் பாய்ச்சினாய் ரகசியமாக
அவ்வப்போது
தொட்டுரசி நகர்ந்து கொள்ளும்
அவரவர் சுண்டுவிரல்களில்
பிடித்த நடுக்கம்
காற்றின் குறும்பில்
கலந்து கொண்ட
நம் வாசனைகளை
நுகரத் தவறவில்லை
நீயுங்கூட.
எதிரெதிராக ஊடுறுவிய
விழிகள்
நிலைமைக்குத் திரும்ப
இன்னுங் கொஞ்சம் நேரமாகலாம்.
உள்திருப்பிய மொழிகளோடு
அதிசயமாய்
ஆயிரம் பேசிவிட்டோம்
திரும்பலாம் வா..!
28.
யாரோயிருவர்
அடிதடியில்
புரளுகின்றனர்
கிழிகிறது சட்டை
காது நுழையக் கூசும் வார்த்தைகளைப்
பெருஞ்சத்ததில்
ஏலம் போடுகிறான்
நாசுக்கை நசுக்கியவன்
தயாராக இரு!
சீக்கிரம் வந்துவிடுவேனென்று
முத்த சத்தியமிட்டு
பணிக்குக் கிளம்பியவன்
எதிர்
வாகனம் மோதி
சக்கரத்திற்கு அடியில்
போதையிலொருவன்
சாக்கடையில் உருளுகிறான்
மறைப்பதை விட்டுவிட்டு
அங்கிருந்த மரத்தின்வோரம்
சுருண்டுகிடக்கறதவன் ஆடைகள்
மாராப்புத் தொட்டிலுக்குள்
மலங்க மலங்க
விழித்துக் கொண்டிருக்கும்
மழலை
யாசித்தலின் சூட்சுமம்
கற்றுக் கொண்டிருக்கிறது
தன் அம்மாவிடமிருந்து
அண்ணே!
அரைக் கிலோ தக்காளி
கால் கிலோ கத்தரிக்காய்
வெங்காயம் ஒன்னு
எவ்வளவு ஆச்சு?
நானும் அங்கு .
29.
கவனக் குறைபாட்டில்
சட்டைப்பையிலிருந்த சாவியைத்
தவறவிட்டவன்
பரிதவித்துத் தேடுவதைப் போலத்தான்
ஆத்திரத்தில் உதிர்த்த ஒற்றைச்
சொல்லுக்கு
கோபித்துப் பிரிந்த
அன்பிற்காக ஏங்கிக் கிடப்பது.
30.
இந்த இரவு
தூக்கத்தைப் பிடுங்கிக் கொண்டது
நானதன் மீது
துயரத்தைப் பூசி
குழப்பிவிடுவதாகச்
சடைத்துக் கொள்கிறது
மின்விளக்கு அணைக்கப்பட்டு
இருள் தங்குவதற்கு
அனுமதித்திருந்த அறையில்
எனது ஐம்புலன்களையும்
ஒளித்துச்
சிந்தனைகளுக்குச்
சிக்கெடுத்தேன் சிறுநேரம்
பின்னர்
திரைச்சீலையற்ற
என் கண்ணாடிச் சன்னல்களில்
மோதி நகரும்
வாகன ஒளிகளை எண்ணியபடி
விளையாடத் தொடங்கினேன்
முழுதாகத் தலை திருக்க மறந்த
நீர்க்குழாய்ச் சொட்டுகளின் பக்கம்
கவனம் திரும்பியது
இசையென்று நம்பியேக்
கலந்துவிட்டேன் அதனோடு
இரவுப் பூச்சிகளுக்குத்தான்
எத்தனை இனிமையான குரல்
நானதன் பின்னோடு
பனைவண்டி ஓட்டுபவளாகத் தொடர்கிறேன்.
மயில் பாதத்து வடிவ
நொச்சி இலை தாங்கிய
கிளையொட்டி வளர்ந்திருக்கும்
குண்டுமல்லி பூத்திருக்கிறது போல
நாசி நுழைந்த மணத்தோடு
ஆழ்ந்துவிட்டேன் அப்படியே
யாரோ
உற்றுப் பார்க்கிறார்கள்
அட!
இன்றுமொரு
பகல் தருவதற்கு
வந்துவிட்டான் சூரியன்
இனி
வழக்கத்திற்குச் சுழலவேண்டும்
பம்பரம் போல.
அன்புடனும் நன்றியுடனும்
Showing 241 - 260 of 859 ( for page 13 )