இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை மலேசியாவை சேர்ந்த தமிழ் படைப்பாளி ம.கனகராஜன் அவர்கள் பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பு செய்கிறோம். நவீன கவிதைகளின் பால் நாட்டம் கொண்ட கவிஞர் வட மலேசியாவில் அமைந்துள்ள கடார மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படைப்பாளர் . ஆசிரியராகப் பயிற்சிப்பெற்று, பல தமிழ் தொடக்கப் பள்ளிகளிலும் பின் இடைநிலை பள்ளிகளிலும் ஆசிரியராக பணிபுரிந்து தற்பொழுது மலேசியக் கல்வி அமைச்சில் பள்ளி ஆய்நராக (school Inspector) பணிப்புரிகிறார்.
80 களின் இறுதியில் எழுத ஆரம்பித்த
இவர் இன்றுவரை விரும்பிப் படைப்பது புதுக்கவிதைகள்.
மலேசிய மழைச்சாரல் குழுமம் வெளியிட்ட
கவிதைதொகுப்புகளில் இவர் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு அஸ்ட்ரோ எனும் ஒளியொலி
நிறுவனம் நடத்திய கண்ணதாசன் கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர், தொடர்ந்து பல
இலக்கிய இயக்கங்கள் நடத்திய கவிதைப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். படைப்புக்
குழுமம் ஆண்டு தோறும் நடத்திவரும் கவிக்கே கவிதைப்போட்டியில் 2018 க்கான
போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று, தொடர்ந்து நடந்த ஆண்டு விழாவிலும் கலந்துகொண்டு
, படைப்புக்குழும உறவுகளோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
தன் இலக்கியப்பயணத்தில், குறிப்பாக
நவீனக்கவிதைகளுக்கான தன் பயணத்தில் ஒரு தெளிவான வழிகாட்டியாக தகவு இதழும்,
கல்வெட்டு மின்னிதழும் திகழ்வதாகக் கூறுகின்றார்.
இலக்கிய இதழ்களில், குறிப்பாக படைப்பு
மின்னிதழிலும், தென்றல் மற்றும் வானம்பாடி வார இதழ்களிலும் தொடர்ந்து கவிதைகளோடு
ஆய்வு கட்டுரைகளும் எழுதிவருகிறார். இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்:
உளவியலின் சுவாசம் வாழ்வியலின்
எச்சங்களாக படிகின்றன. போலியான வாழ்க்கை நிஜத்தை தின்றுவிட உறவுகளின் வார்த்தைகளும் ஒப்பனை பிம்பங்களாக
மாறிவிடுகின்றன.. யாரிடம் போய் பேசுவது
? இயற்கையின் மடியில் சாய்வதை தவிர… இதோ கவிதை….
என் முகத்தின் பாதியை
முகமூடி தின்றுவிட
ஊமையாய் தவிக்கிறது
சுவாசம்
அமிலம் ஊற்றி
அழிந்த வேர்களில்
இன்னும்
வந்ததைக் கேட்கவில்லை
சென்றதைச் சொல்லவில்லை
அதற்குள் இரவாகிவிட்டது
மண்ணிடம் பேரம்பேசி
வேர்களைக் கொண்டு வந்தேன்
வண்ணமற்ற கடல்
உள்ளே வராமல் வாசலில் நிற்கிறது
மேலும் நடக்காமல்
கரையில் சாய்ந்துவிடவா
ஒரு கோழையாய்
இருவேறு நிலைப்பாட்டில் வாழ்கிறான்
மனிதன். சுயத்துடன் பேசுவது குறைந்து விட்டது.
துயரங்களையும் மகிழ்ச்சியையும்
கண்கள் படிமமாக்கிக் கொள்கின்றன. நாவலின் இறுதிப் பகுதியில் ஒரு மிருகம் சிரிக்கிறது… இப்போதும் சுயத்துடன் பேசாவிட்டால்
எப்படி?... இதோ கவிதை ….
எங்களுக்கான
இடைவெளி குறுகிக்
கொண்டே வருகிறது
இடையே ஒரு விழி புன்னகைத்து
மறு விழி கலங்கும்
பூக்கள்
கவலையில்லாமல்
அந்த வெற்றிடங்களை
நிரப்பிக்கொண்டிருக்கின்றன
எனக்கு நிகர் அந்த மிருகத்தையும்
அதற்கு நிகர்
என்னையும்
மாறிமாறிப் பரிமாறுகிறது
இதயம்
எட்டியெட்டிப் பார்க்கும்
என் மாலை விழிக்குள்
காலையைப்பற்றிய ஏக்கம் இல்லாமலில்லை
என் நாவலின் இறுதிப்பகுதி முடிவதற்குள்
உதிர்ந்த விடியலை
மீட்டுணரும் இரகசியத்தைச்
சொல்லிச்செல்லென்றால்
சைகை மொழியில் சிரிக்கிறது அந்த ஓநாய்
எங்களுக்கான
இடைவெளி குறுகிக்
கொண்டே வருகிறது
மேலும்
ஒரு சிறப்பான கவிதைக்கு படிமங்கள் பால்குடம் எடுக்கும். இதுவும் ஒரு உளவியல் கவிதைதான்.
காலத்தின் வாலைப் பிடித்து ஓடும் ஒரு மனிதனின் கவிதை. கனவுகளால் நிரம்பிய வாழ்க்கையை
இறுதிச் சுற்றின் மண் குடத்தில் முடித்திருப்பது வியப்பு! பார்வைக்கு கவிதை…
*நேற்று*
வாலைப் பிடித்துவிட்டேன்
பின்னே ஓடும் காலத்திடம்
என் முகத்தை இழந்துவிட்டேன்
*இன்று*
கானகத்தின் பாடலை
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்
இலைகளில்
பனித்துளிகளால்
வசந்தத்தை
வரைகிறேன்
என் எண்ணிக்கைக்கு அடங்கச்சொல்லி
வானில் வானம்பாடிகளுக்குப்
பாடம் நடத்துகிறேன்
சஞ்சலத்தோடு
பூந்தோட்டத்தில்
தேன் தேடும் பூச்சிகளுக்கு
சம்பந்தமில்லா
வண்ணமூட்டுகிறேன்
குருவிகளின் சிறகுகளோடு
புல் நுனியின்
துளி நெல்லை
மெல்ல
பறிக்கிறேன்
வாடிய பூக்களிடையே நிறமற்ற
மீன்களாய் நீந்துகிறேன்
*நாளை*
காலையில் வெண்மேகங்கள்
கருக்கத்தொடங்கலாம்
பாலை மீண்டும் பன்னீரில் குளிக்கலாம்
என் வற்றிய குளங்கள்
கனவுகளால் நிறையலாம்
மறக்காமல்
மண்குடத்தோடு காத்திரு
நனைதல் என்பது எத்தனை விதமாகவும்
இருக்கலாம். அவசரத்தில்
அங்கே ஒதுங்குகிறோம் என்பது முட்கள் நிறைந்த பகுதி என்பது குறிப்பிட வேண்டிய இடம். உதிர்தலும்
துளிர்த்தலும் நிகழ்ந்த நிகழ்வில் முடியாத கவிதை…
முதலில் நான்தான் நனைகிறேன்
பின் என்னைச் சுற்றி
முட்செடிகளும் கொஞ்சம்
நனைய
அவசரத்தில் அங்கேதான்
ஒதுங்குகிறேன்
வருடிய முட்களின்
நுனிகளில்
குருதியாய் கரைகிறேன்
உன் புன்னகை மின்னலின்
விரல்பிடித்து எழுகிறேன்
இரவெல்லாம்
இதயம் நனைத்த
தூறல்களால் ஆடை நெய்து
உன் நினைவுகளைப் போர்த்திவிடுகிறேன்
என்னுரசல் பட்டவுடன்
தீ படர்ந்த கோளாய் மருவி
என்னைச் சுடுகிறாய்
கோடைகாலத்து
இரப்பர் இலைகளாய்
சிவந்து உதிர்கிறேன்
மெல்ல மறைகிறேன்
இறுதியில் இருவரும் நனைகிறோம்
இப்பிறவி
மழையில்
வாழ்க்கையின் படிம சிறகுகளை வலிய அசைக்காமல் தானாகவே அசைக்கிறது கவிஞரின் எண்ணற்ற வரிகள்.
ஆழ்ந்து வாசிக்கிறவன் இவரது கவிதைகளில்
தொலைந்து போவது நிச்சயம்.
கவிஞரின் மற்ற மற்றக் கவிதைகளையும்
படித்து
பாருங்கள் உணர்வீர்கள்…
வண்ணங்களால் நிறைந்த கடலைக் கனவென்று
ஏமாந்த
கடற்பறவை நான்
நீந்திமகிழும் மீன்களின்
தூதுவர்களாக அலைகள் மட்டும்
என் கால் தொட்டு
கதை சொல்கின்றன
ஒரு பாதி முகமூடிக்குள்
ஒளிந்துகொண்ட
என் மறுபாதி மனித முகத்தைக்கொண்டு
என்னை மனிதன் என்றே
அனுதானிக்கலாம்
அதிகாலையை மென்று
மாலையைச் சிறகாக்கி
இரவுக் கனாவில்
திணிக்கப்பட்ட விதைகளில்
பூக்கக் காத்திருக்கிறது
என் சிறகுகளின்
சரித்திரம்
வானத்தின் வரைபடத்தில்
என் பெயர் பறவையென்றே
இருக்கிறது
வா உதிரலாம்
உதிர்வதே இறை நிலை
மண்ணில் உதிர்ந்து
வேர்வழியே
கிளைக்கு மீண்டு
பூவாகக் காத்திருக்கிறேன் பார்
உனக்குப் பிடித்த வாசனையில்
உன் இதய வண்ண மல்லிகையாய்
கொஞ்சம் விழியொத்த செம்பருத்தியாய்
நீ
தள்ளி அமர்வதுபோல்
கொஞ்சம் முள்ளோடு ரோஜாவாய்
மீண்டும் உதிர்வது
சுகமானதுதான்
தாயைக் காக்க சேயும்
சேயைக்காக்க தாயும்
குடும்பம் காக்க தந்தையும்
நாட்டைக்காக்கும் வீரனைப்போல்
உதிர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்
நீயோ அல்லது நானோ உதிர்வதற்குத்
தயக்கமொன்றுமில்லை
தலைப்பிலா
தவத்தில் பூத்தவர்களாகவே
இருக்கிறார்கள்
தலைப்பிடப்பட்ட வரலாற்றில்
நம்மைப்போல்
உதிர்ந்தவர்கள்
கடற்கரையின்
கல்லிடுக்குகளில் எதையோ
தேடுகின்ற மாடப்புறாக்கள்
என்னைப்போலவே
கரையில் ஒதுங்கியிருக்கிறது
மோதிரம் இழந்த நீலச்சிமிழ்
கண்களுக்குப் படாமல்
கரைகளின் சாபமாய்
மூச்சுற்று விழும் வண்ண மீன் களைப்
பற்றி கவலையற்று விளையாடிக்கொண்டிருக்கின்றன அலைகள்
கதிர்கள்
என்னைச் சேராமல்
மறைக்கின்றன
அரச மரக்கிளைகள்
ஒரு துளி இதயத்தை
மென்றபடி
உன் விரல்களில்
அந்த மோதிரம்
வானவில்லால் தன்னை
அலங்கரித்துக் கொண்ட கிளிஞ்சல்களாய்
எப்போதாவது நிறங்காட்டும்
உதட்டோரத் தனிமைப் புன்னகை...
பல மொழிகளோடு
கரையைத் தழுவிச்செல்லும்
கடலலையைப் போன்றதுதான்
அப்பாவின் அந்த மௌனம்
இன்று
சித்தனாய் பித்தனாய்
முகங்காட்டும் பிம்பத்தில்
நானாகத்தெரிகின்ற அப்பாவின் முகத்தோடு
பேசுகிறேன்...
வேறு வழியின்றி
இன்றும்
எட்டியெட்டிப் பார்க்கிறேன்
மொழியிழந்த
இரவெல்லாம்
வறட்டிருமல் சத்தமின்றி
வறண்டு போயிருக்கிறது
அப்பாவின் அறைச்சுவர்
மழையின் துளியோடும்
மாலைக் காற்றோடும்
குறியீட்டு மொழியோடுதான்
பேசிக்கொண்டிருந்தார்
அப்பா
அந்த இறுதி நாளில்
இம்முறை,
தழும்புகள் நிறைந்த
அப்பாவின் கைப்பிடித்து
செம்மண்ணில் நடை பழக
சாலையைப் பார்த்தபடி
காத்திருக்கிறது
என்னோடு
தூசு படிந்த
அப்பாவின் மிதிவண்டி
வாசலில்
பாதி கடித்த அரத்திப்பழத்தோடு
காத்திருக்கிறாள் ஏவாள்
உள்ளே
செல்லமான அணைப்பும்
இறுதி முத்தங்களும்
வேர்விடத்தொடங்கியிருந்தன
பாசமாக வாலாட்டிச்
சுற்றிச் சுற்றி வந்தன
நேசம் நிறைந்த அவன்
சொற்கள்
விழிகளுக்கு பதில்
கடல் பூத்த முகத்தோடு
ஏறிட்டுப் பார்க்கிறாள்
குடில் முழுவதும்
வெவ்வேறு கோணத்தில் இருவரும்
நாட்டியமாடிக்கொண்டிருக்கின்றனர்
காட்டுப் பறவைகள்
அன்றைய பயணத்தை
கூட்டுச் சுவர்களில்
பதிந்துகொண்டிருக்க...
நதி வழியே வனத்திற்குள்
நுழைந்த ஆதாம்
இன்னும்
திரும்பவில்லை
பனியின் சாரல்
நனைந்த சுகத்தில் பாதச் சுவடுகள்
இடராமல் நடக்கின்ற என் விழிகளின்
ஓரத்தில் பட்டாம் பூச்சிகள்
வண்ணந்திருடிய கள்வனாய்
பூக்களிடையே ஓடி ஒளிகின்ற
வண்டுகளின் வேடத்தில் நான்
எப்போதும்போல்
தேவதையின் சாயலில் நீ
மகரந்த ஊர்வலத்தில்
பூக்களிடையே
ஆடிப்பாடி
உன்னைத் தொடரும்
அவசரத்தில்
சேர்த்து வைத்த தேன்
துளிகளாய் சிந்த
ஒவ்வொரு துளியிலும்
ஒவ்வொரு சொர்க்கமாய் பூக்கிறது
அதன் இரம்மிய போதையில்
தயங்கித் தயங்கி
1330 -வது குறளைக்
கனவின் காதருகில்
கிசுகிசுக்கிறேன்
உள்ளே கேட்கிறதா
உனக்கு
ஒரு சுடர் இளகி
பருந்தாய் மாறிய
திமிரில்
அங்குமிங்குமாய் காற்றைக் கீறி
விளையாடிக்கொண்டிருக்கிறது
மறு சுடர் இளகி
காக்கையாய் மருவி
கரையோர மரங்களில்
எச்சங்களால் ஓவியங்களை
வரைகின்றது
மீதச் சுடரெல்லாம்
தேன் சிட்டுகளாய்
பூக்களை சீண்டிக்கொண்டிருக்கின்றன
விளம்பர இடைவெளியாய்
கார்மேகங்களுக்குள்
மீந்த மின்னலை ஊற்றிவிட்டுப்போகின்றன
பூநாரைகள்
மற்ற பறவைகளுக்கு
சிறுவர்களின்
சிறைகள் திறக்கும் வரை
காத்திருக்கவும்
ஓருயிரிலிருந்து ஒவ்வோர் உயிராய்
விழுங்கத்தொடங்கி்ன ஆறறிவு நுண்கிருமிகள்
இருந்தும் அதன் (அ)சிங்கப்பசி
அடங்குவதாய் இல்லை
எல்லா கொலையையும் நியாயப்படுத்த
அருவுருவ
இறை சாசனம் எழுதிக்கொண்டன
அவை
இதுதான்...
இப்படித்தான் என்று ஒருபுறமும்....
எதுவும்
எப்படியும் என்று முகக்கவரியின்
மறுபுறமும்
முடிவற்ற
விவாதத்தைப் புன் சிரிப்போடு
வேடிக்கைப் பார்க்கின்றன
அவை
தலையும் வாலுமாய் துடிக்கத்தொடங்கிய
நம்பிக்கையில்
அமிலந்தெளித்து
விளையாடுகிறது காலம்
கொஞ்சந் துணிச்சலோடு
குழந்தைகளின் பாதங்கள்
வாசல்வரை வரும்போது மின்மினியாய்
சுவாசத்தைக் கிள்ளுவது
கோறனி நச்சிலின்
மனசாட்சியா அதன்
அடியாட்களா?
பெருந்தீயோடு பருந்தொன்று
பால்வீதிக் கிளையொன்றில் வந்தமர்ந்து.... குளிரத்தொடங்கிய பொழுதில் அதன் இரைப்பையின் விதைகளெல்லாம் கண்
விழித்துச் சோம்பல் முறித்தன...
இறை கொடுத்த முகமூடியணிந்து...
ஆளுக்கோர் உயிராய் தடம் பதிக்கத்தொடங்கிய அந்த வினாடியில்தான் 'நான்' எனும் வன்மம்
இதயத்துடிப்பில் கலந்திருக்கவேண்டும்;
மனிதமெனும் நுண்கிருமியால் அப்போதே பீடிக்கப்பட்டிருக்க வேண்டும்
இந்த பூ +
கோளம்.
ஆப்பிளைக் கடித்து
முதலில் நீ வெட்கப்படு
வெட்கத்தில் சிவந்த
காற்றில் நான் ஏக்கமாய்ப் படர்கிறேன்
படர்ந்த கன்னத்தின்
மாக்கோலத்துப் புள்ளிகள் போலவே
அண்டத்துள் கோள்களை வீசி
விளையாடும் சிறுவனாகி
மகிழ்கிறேன்
முன்னம்
நான் காயாய் தெரிந்த
பிம்பத்தில்
உன்
தனிமையை
சலவை செய்துகொள்கிறாய்... மீண்டும்
கனியாகிறாய்
கனியுண்டுக் களிக்கும்
அணில்களின் மென்மையான
உரோமங்களை வருடி
வண்ணமூட்டும் இளம்பச்சைத் தளிர்கள்
போலவே
மயக்கும் உன்
விழிகளின் ஓரத்தில்
ஊஞ்சலாடும் ஏக்கம்
எனது போலவே
உனதும்
தயங்காமல்
இதய வடிவில்
ஆப்பிளைக் கடித்து
இருவரும்
வெட்கப் படலாம்
என் கனவில் வந்து வந்து
போகும் என் கிராமம்
மாதிரியே
அவைக்கனவிலும் வந்திருக்கவேண்டும்
அடர்ந்த காடுகள்
தனிமையில் அழுகின்றன
கிளிகளும்
காட்டுப்
பூனைகளும் இன்னும் பலவும்
ஒரு மழலையின் கடிதத்தை
மௌனமாய் வாசிக்கத் தொடங்கியது
விதைக்குள் நுழைந்த
மழைத் துளி
ஒளியில் நனைந்துப் பின்
இருளுக்குள் நழுவிய
காகிதப் பெட்டி
நான்
அதே அவசரத்தில்
மெய்யைச் சுற்றிலும்
அமிலத்தை அருந்திய
போதையில்
தள்ளாடுகிறது
என்னுயிர்
அழாதே
கொஞ்சம் பொறு
அசுர வேகத்தில்
வீசும் புயலில்
என் சுவாசத்தை
செதுக்கிச் செல்கிறேன்
உன் சுவாசத்தின்
முகவரியாக
இறுதி ஒப்பாரியல்ல
இது
இன்னொரு பாவத்திற்கான
நாடோடிப் பயணமும்
அதற்கும் சற்று முன்
அந்திமத்தில்
அமர்ந்தபடி அழுவதும்
எனக்குச் சுகமே
இனி
வழியில் சந்திக்கப் போகின்ற
விழியிழந்த தேவதைகளிடம்
என்னைச் சொல்லாதே
குருதியில் நனைந்த
முட்களிலும்
என் மௌனத்தின் இரணத்திலும்
உன் பெயரும்
இருக்கிறது
மாய மானைத்
துரத்தும் சுவாசம்...
கடல் சேர்வதற்குள்
கலைந்துபோன
நதியாய்
இன்றும் நாளையும்
வளர்வதற்கும் வளப்பதற்கும்
துளிர்விட்ட
இமழலைகளை
கொல்லைபுறத்து
கொள்ளையனிடம்
விற்றுவிட்ட
மர்ம மிருகங்கள்
...நாம்
பூக்களால் மறைக்கப்பட்ட
ஆயுதக்கிடங்கு
நம் மனம்...
கடவுளுக்குத் தெரியப்போவதில்லை
பிறக்கும்போதே
விலங்கோடு பிறந்த
உயிர்களை
இன்றுவரை
காக்க முயன்று
காணாமற் போன
இதயம்...
உனக்குமெனக்கும்
புரிய வாய்ப்பில்லை...
இந்த நரகத்தைச்
சொல்வதற்கான
சொற்களோடு வரவில்லை...
நாம்...
இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின்
கவிச்சுடர் விருதினை தேனி மாவட்டம் கெ.கல்லுப்பட்டியை சேர்ந்த கவிஞர் மு.முபாரக் அவர்களுக்கு
வழங்குவதில் பெருமைப் படுகிறோம்..
முது நிலை தமிழ்+ கூட்டுறவு பட்டயப் படிப்பு படித்த கவிஞர் தற்போது கூட்டுறவு வங்கி செயலாளராக திருச்சி மாவட்டத்தில்
பணி புரிகிறார்.
இவரது கவிதைகள் படைப்பின் தகவு கல்வெட்டு இதழ்கள் உள்பட பல்வேறு இலக்கிய சிற்றிதழ்களிலும், ஜனரஞ்சக இதழ்களிலும் வெளி வந்துள்ளன.
2007 ஆம் ஆண்டு குங்குமம் இதழ் நடத்திய
போட்டியில் வெற்றிபெற்று கவிஞர் வைரமுத்துவிடம் அவர்களிடம் பரிசும், 2020 ஆம் ஆண்டு
படைப்பு குழுமம் நடத்திய கவிதைப் போட்டியில் கவிஞர் மு.மேத்தா
அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுடன் விருதும் பெற்றுள்ளார்.
நமது படைப்பு குழுமத்தின் மாதாந்திர படைப்பாளி விருது, 2022ஆம் ஆண்டு இயக்குனர் திரு லிங்குசாமி அவர்கள் நடத்திய
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ
போட்டியில் சிறப்பு பரிசு, 2016 ஆம் ஆண்டு திரு.அப்துல்
கலாம் நினைவு பரிசு என பல விருதுகளும் பெற்றுள்ளார்.
கவிஞரின் முதல் கவிதை நூலானா ஆ காட்டு நமது படைப்பு குழுமத்தின்
வெளியீடாக வெளிவந்து பலரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது…
இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்
:
...
அவசர அவசரமாய்
சிலுவை பற்றிய கவிதையொன்றை
கேட்கிறாய்,
கொஞ்ச நேரம் காத்திரு...
நேசித்தவர்களால்
என் கைகளில் அறையப்பட்ட
ஆணிகளை அகற்ற கொஞ்சம் தாமதமாகலாம்!
***
காசில்லாத போது கேட்கப்படுகிறது
கொடுத்த கடன்,
பசியில்லாத போது தரப்படுகிறது உணவு,
சோர்ந்து போன நேரங்களில்
திணிக்கப்படுகிறது,
கடினமான வேலை,
அவநம்பிக்கையில் வாழும்
போது நிகழ்கிறது துரோகம்,
நம்மை நமக்கே பிடிக்காத
போது
செலுத்தப்படுகிறது புது புது
குற்றம்,
கையில் குடையில்லாத போது
ஓயாமல் பெய்கிறது மழை,
ஆறுதல் தேடி அலைகின்ற போது,
அழுகின்றது பச்சிளம் குழந்தை,
கையிருப்பு குறைவாகயிருக்கும் போது
அதிகரித்திருக்கிறது விலைவாசி,
இன்றோ நாளையோயென உயிருக்கு
போராடிக்கொண்டிருக்கும் போது
நிகழ்கிறது...இயற்கைச் சிற்றம்,
எப்படி இக்கவிதையை முடிப்பதென
திணறிக்கொண்டிருக்கும் போது தொடர்கிறது ...
பேனாவின் மௌனம்!
***
நீண்டதூரம் நடக்கக்கூடாது
வெயிலில் அலையக்கூடாது
என்ற மருத்துவரின்
அறிவுரைகளை காற்றில்
பறக்கவிட்டு விட்டு
ஆட்டோக்காரன் கேட்ட தொகை
அதிகமென வெயிலில்
நடந்து வரும் அப்பாவின்
கைகளில்
பிள்ளைகளுக்கான தின்பண்டம்!
***
காலொடிந்த
பறவையொன்றை
வீட்டுக்கு அழைத்து வந்தேன்
அழகாகயில்லையென்கிறாள்
மனைவி,
அருவருப்பாயிருக்கிறதென்கிறான்
மூத்தமகன்,
ஓடி ஒளிந்து கொள்கிறான்
இளையமகன்
வாங்கிய இடத்திலே கொடுத்திடுங்களென்கிறாள்
மகள்,
சார் உங்களுக்கு இது எதுக்கும்
பயன்படாதென்கிறாள் வேலைக்காரி,
தேவையில்லாத வேலை உனக்கெதுக்கென்கிறார்
அப்பா,
அவசர அவசரமாய்
என் கையிலிருந்து வாங்கிக்கொண்டு
காயத்திற்கு மருந்தை
தேடிக்கொண்டிருக்கிறாள்...அம்மா!
***
இது தான்
நான் குடிப்பது கடைசி
என அப்பா சொன்ன
எண்ணிக்கை நூறை
தாண்டியிருந்தது...
மகனுக்கு பள்ளிக்கு கட்ட
வேண்டிய நூற்றி ஐம்பது
ருபாய் கட்டணத்தை
செலுத்துவதற்காக சொன்ன
தவணை நூற்றி ஐம்பதை
தாண்டியிருந்தது...
பெரியமனுஷி ஆகிவிட்ட
மகளுக்கு
தாவணி வாங்கி தருவதென்பது
கானலாகவே மாறியிருந்தது...
வயதான அம்மாவின்
மருத்துவ செலவு செய்ய
முடியாமல்
இன்னும் இருக்கும் ஆயுளை
முன் கூட்டியே குடித்திருந்தது...
வீட்டிற்கு சீதனமாய் வந்த
மனைவியின்
பொருட்கள் எல்லாம்
கடன் வாங்கியவர்களிடம்
அடைக்கலமாயிருந்தது...
அதிகமான போதையில்
நான்கு சக்கர வாகனத்தில்
மோதி கொண்டதில்
இரண்டாக
இருந்த கால்களின் எண்ணிக்கை
ஒன்றாகியிருந்தது....
பள்ளிகட்டணம் செலுத்த
முடியாததால் பள்ளிக்கு
முன்பு மிட்டாய் விற்றுக் கொண்டிருந்த
மகனும்,
துணிக்கடை ஒன்றில்
தாவணி விற்றுக் கொண்டிருக்கும் மகளும்
மதுக்கடையைக் கடக்கும் போது
செத்து செத்து பிழைக்கிறார்கள்...
அப்பாவைப் போலவே!
**
என் மீதான கோபத்தில்
கையில் கிடைத்த
பொருட்களை எல்லாம்
வீசிக்கொண்டிருக்கிறாய்...
வீசிய
பொருட்களையெல்லாம்,
உன் அருகிலேயே
மீண்டும் மீண்டும் எடுத்து
வைத்துக்கொண்டிருக்கிறது...
என் காதல்!
***
மழையில் நனைவது
பிடிக்கும்
வானவில்லை பிடிக்கும்
சுற்றி வரும்
வண்ணத்துப்பூச்சியை பிடிக்கும்,
அதிகாலையில் புல்லின் மீது
அமர்ந்திருக்கும்
பனித்துளியைப் பிடிக்குமென,
எழுதிய கவிதையை
கைப்பைக்குள் ஒளித்து
வைத்திருக்கிறாள்...
கணவனுக்கு பிடிக்காதென!
**
மரணத்தை விட
கொடுமையானது
வேறொன்றுமில்லையென்கிறாய்,
நேசிப்பவர்களின்
மௌனம் இருக்கிறதென்கிறேன்,
மௌனமாக
கடந்துபோகிறாய்!
**
அப்பாவின் அவசர வேலை
தடைபட்டிருந்தது,
அம்மாவின் வீட்டு வேலைகள்
தேடலாகியிருந்தது,
தாத்தாவின் கையிலிருந்த
நாளிதழ் நான்காகியிருந்தது,
பாட்டியின் பக்தி
திசைமாறிக்கொண்டிருந்தது,
யாராவது குழந்தையின்
தொலைந்து போன டெடிபியரை
கண்டுபிடித்து கொடுங்களேன்!
**
காணாமல் போன கடிகாரத்தை
தேடிக்கொண்டிருந்தேன்
கிடைத்ததும்,
காணாமல் போன நிமிடங்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்!
**
திரையில்
கொலைகளை சாதாரணமாய் செய்பவன்
ஒரு எறும்பை தெரியாமல்
மிதித்ததற்கு
வருந்திக்கொண்டிருக்கிறான்...
திரையில் மக்களுக்கு
கோடி கோடியாய்
அள்ளிக் கொடுத்தவன் பசிக்குதென
கையேந்திய சிறுமியை
கண்டும் காணாமல் கடக்கிறான்,
ஒவ்வொரு மேடைகளிலும்
கடவுளில்லையென பேசிக்கொண்டேயிருப்பவன்
தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத
நாளில் காக்கச் சொல்லி கடவுளிடம்,
மனமுருகி
பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறான்,
நேர்மை நேர்மையென பேசிக்கொண்டிருந்தவன்
இலஞ்சப் பணத்தை கையில் கொடுக்காமல்
கூகுள் பே' யில்
அனுப்பி வைக்குமாறு சைகை செய்கிறான்,
நிமிடத்திற்கு நிமிடம்
நிறமாற்றிக் கொள்ளும் உலகத்தில்
பல ஆண்டுகளாய்
யாரோ ஒருவருக்கு கொடுத்த
வாக்குறுதிக்காய் இன்னும்
ஒரு ரூபாய்க்கு
இட்லி விற்றுக்கொண்டிருக்கிறாள்
பாட்டியொருத்தி!
***
என்னைக் காயப்படுத்துவதற்கு
கல்லொன்றை
எடுத்திருந்தான் ஒருவன்,
கடுஞ்சொல்லொன்றை
எடுத்திருந்தான் ஒருவன்,
துரோகமொன்றை எடுத்திருந்தான்
ஒருவன்,
வஞ்சமொன்றை எடுத்திருந்தான்
இன்னொருவன்,
எல்லாவற்றிலும் தப்பித்த நான்,
பொய்யான அன்பொன்றில்
விழுந்து என்னை நானே
காயப்படுத்திக் கொண்டிருக்கிறேன்!
**
எதுவுமே
தெரியாமலிருந்த
என்னை
கவிஞனாக்கிவிட்டு,
எல்லாம் தெரிந்த நீ
கவிதையாகி விட்டாய்!
**
அப்பாவை
புதைத்துவிட்டு
வீட்டை நோக்கி பயணிக்கையில்
எதிரே வருகிறான்...
தன் தந்தையின்
தோளில்
அமர்ந்த படி,
என் வயதுடைய ஒருவன்!
**
சலசலத்து ஓடும் நதியில்
மௌனமாய்
நீர் அருந்திவிட்டு
கடந்து போக எத்தனிக்கும்
பறவைக்கான கவிதையொன்றில்
மீன்கள் வருகின்றன
உதிர்ந்த பூக்கள் வருகின்றன
வேண்டாமென தூக்கியெறிந்த உடைகள்
வருகின்றன...
இறுதியாய் வேடன் வரும் போது கவிதையை
தூக்கியெறிந்து விட்டேன்...நான்!
***
ஏதேதோ செய்கிறது...
மரம் வெட்டுபவனை
குயில்பாட்டு!
***
இன்றே வாழ்வின்
இறுதி நாளென அறிந்தால்
கோவிலுக்கு செல்கிறார்கள்,
பிடித்த மழையில் நனைகிறார்கள்,
திரைப்படத்திற்கு செல்கிறார்கள்,
பூங்காக்களுக்கு
செல்கிறார்கள்,
தான தர்மங்கள் செய்கிறார்கள்,
விலகியிருப்பவர்களிடம்
நட்பாய்
சேர்ந்து நடக்கிறார்கள்,
அக்கம் பக்கத்தினரிடம்
அன்பை பொழிகிறார்கள்,
பிடித்த
பயணம் செய்கிறார்கள்,
நேசித்தவர்களை பார்க்கச்செல்கிறார்கள்,
தாம் செய்த தவறுகளுக்காய்
வருந்துகிறார்கள்,
இறுதி நாளென்பது ஆரம்பித்து
வைக்கிறது..வாழ்வை!
***
என் மீது
கோபமாகயிருக்கும்
போதெல்லாம்
ஒரு அச்சமுமில்லை...
அன்போடு இருக்கிறாய்
ஆயிரம் ஆயிரம் அச்சங்கள்!
**
அவசர அவசரமாய்
மேய்ந்து கொண்டிருக்கிறது ...
மரணத்தை,
சற்று நேரத்தில்
பலி கொடுக்கப்படவிருக்கும் ஆடு!
**
சிறு எறும்பின் மீது கூட
அன்பு காட்ட வேண்டுமென்ற
காட்சியை படமாக்குவதற்குள்
பல எறும்புகளை கொன்றிருந்தார்...
புத்தன் வேடமிட்ட நடிகர்!
**
உன் கவிதையில் வந்த
தேவதையும்
என் கதையில் வந்த தேவதையும்
ஒரு நாள்
சந்தித்துக்கொண்டார்கள்...
என்ன பேசிக்கொண்டார்களென அறிய
ஒரு கவிதையோ கதையோ
இப்போது
எழுத வேண்டியதாகயிருக்கிறது!
**
என்னிடம்
காகிதமில்லாத போது
பெரும் மழை!
**
இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின்
கவிச்சுடர் விருதினை கவிஞர் வணவை தூரிகா அவர்களுக்கு
வழங்குவதில் பெருமையடைகிறோம். .
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை சார்ந்த கவிஞரின் இயற்பெயர் மா.பெருமாள்
.
பள்ளிப் பருவத்தில் ஓவியம் வரைவது கவிஞருக்கு
மிகவும் பிடித்திருந்ததால் பெரிய ஓவியராகும் கனவு
இருந்தது, பள்ளி இறுதி வகுப்பில் முதல் மாணவனாக
தேர்வாகியிருந்தாலும் அவரது தந்தையார் இறந்து விட்டதால் கல்வியை தொடர முடியாத சூழலால் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு
போக வேண்டிய சூழல் வந்து விட்டது,தொடர முடியாத
கல்விக்கு மாற்றாக புத்தக வாசிப்பை தனது நேசிப்பாக தேர்ந்தெடுததுக் கொண்ட கவிஞர் நிறைவேறாத தனது ஓவியராகும் கனவுக்கும் தூரிகா என்ற பெயரை வைத்து ஆறுதல்படுத்திக் கொண்டார் . பின் நாளில் அதையே தனது
ஊர் பெயரின் சுருக்கமான வணவையுடன் இணைத்து வணைவை தூரிகா என்றும் தனதுப் பெயரை புனைப் பெயராக சூட்டிக் கொண்டார்.
முதல் கவிதை, விகடன் பவழ விழா
போட்டியில் எழுத்தாளர் சுஜாதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முத்திரை கவிதையாக
பிரசுரமானது என்பது குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து தினமணி,கணையாழி காலச்சுவடு
போன்ற பத்திரிகைகளிலும் வெவ்வேறு பல சிறு பத்திரிகைகளிலும் பிரசுரமாகி கவிஞரை அடையாளம் காட்டின….
“சந்தன நகர் கவிஞர் மன்றம்,குடில் இலக்கிய வட்டம் போன்ற வேறு பல
உள்ளூர் அமைப்புகள் நடத்திய
கவியரங்கங்களும் எழுதும் தூண்டுதலை தனக்குப் பின் நாட்களில் உருவாக்கித்
தந்ததாகவும், முகநூலுக்கு வந்தப்பின்தான் எழுத்தார்வம் இன்னும் அதிகமானதாகவும் , குறிப்பாக
எழுதும் தூண்டுதலுக்கு படைப்பு குழுமம் போன்ற முக நூல் குழுக்களின்
செயல்பாடுகளும் அவை தூண்டி விட்ட ஆர்வமும் குறிப்பிடத்தக்கது” என்றும் கவிஞர் குறிப்பிடுகிறார்.
ஒரு கன்னமும் மறு கன்னமும், கறி கடைக்காரனின் சைவ மெனு கார்டு என்ற இரண்டு கவிதை தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன.
இனி கவிஞரின் சில கவிதைகளை காண்போம்:
பட்டாம் பூச்சிகள் மென்மையான சிற்றினம்.
அதன் சிறகுகளும்
அதன் உடலை சுமக்கும் அளவிற்கே மிகவும் மென்மையானது. அதன் முதுகில் சுமைகளையேற்றி… விடாது பறக்க சொன்னால் அதன் நிலை என்னவாகும்? சிறகுகள் தானாக உதிர்ந்து விடும்.
..நம் குழந்தைகளின் பள்ளி வாழ்க்கையும்
அப்படியான ஒன்றாக மாறிவிட்டதென்று வேதனையுடன் வடிக்கும் கவிதை காலப் பதிவு..
.
மதிப்பெண் பொருட்டு.
ஆளுக்கு கொஞ்சமென
பிய்த்துக் கொன்ட பின்...
சிறகுகள் தொலைந்து
பறத்தல் மறந்த பட்டாம்பூச்சிகள்
வண்ண சீருடையணிந்து
பள்ளி வாகனத்தில் பறக்கின்றன...
அம்மண
புழுக்களாய் மாறி...!
💐
மிகவும் அற்புதமான கவிதை. குழந்தைகள் கனவில் சிரித்து விளையாடி, பின்னர் உதடு பிதுக்கி தேம்பியழும் காட்சிகளை நாம் கண்டிருப்போம். அந்த கனவினுள் நுழையும் கவிஞர், அக் குழந்தைகள் கடவுளுடன் விளையாடுவதாக வர்ணிப்பில் இலயித்த கவிஞர் அதே சமயங்களில் அக்குழந்தைகளில் சிலர் வண்புணர்வுக்கு ஆளாவதையும் வேதனையுடன் பகிர்கிறார்.
கைகளையும் கால்களையும்
அடிக்கடி
ஒழுங்கற்று
மாற்றி மாற்றி '
வைத்துக்கொண்டு உறங்கும் குழந்தைகள்
கனவில்
ஒழுங்கற்ற கிறுக்கல்களை
மாற்றி மாற்றி
அழித்தழித்து
ஓவியமாக வரைந்து
விளையாடிக் கொண்டிருந்தனர்...
இருட்டு மர நிழலில்
நின்று ரசித்த
சாதியறியா கடவுள்
ஆர்வம் கூடி
பொறுமையிழந்து
கைகுலுக்கி தானும்
விளையாட்டில்
கலந்து கொள்கிறார் ...
ஒவியங்கள்
அலுத்த பின்
கிச்சு கிச்சு விளையாட்டு
தொடங்குகிறது
சிரிப்பும் சந்தோசமும்
மெல்ல மெல்ல கூடி
அளவை கடக்கும் தருணத்தில்...
தூக்கம் சிதறிய குழந்தை
சிணுங்க தொடங்க...
அசதியில் ஆழ் உறக்க
அம்மாவை
உலுக்கி விட்டு
திரும்பி படுக்கிறார் அப்பா..
பதறிய அம்மா
குழந்தையை
இழுத்தணைத்து
தட்டியபடியே
உறக்கம் தொடர ...
ஒளிந்து கொன்ட
கடவுள்
விட்ட இடத்திலிருந்து
மறுபடியும்
விளையாட்டை தொடரும்
மனநிலையை
இடம் மாற்றி
இடம்பெயர்கிறார்
அடுத்த
குழந்தையை தேடி ...
இரவின்
இன்னொரு திசையில்
அதே கனவில்
மனித முகமூடி கிழித்தெறிந்த
சீழ் உமிழும் மிருகங்கள்
வேட்டையாடிக் கொன்டிருந்தன
வன்புணர் வெறியில்
கடவுள்களை...!
💐
என்னதான் சண்டைகளும் சலசலப்புகள் இருந்தாலும்… கடல் கடந்த வேலை நிமித்தமாகவோ, அல்லது நாள் கடக்கும் பயணப் பிரிவின் நிமித்தமாகவோ கையசைத்து விடை பெறும் போது காதலர்களிடம் ஊடல்கள் மறைந்து நேசம் பூப்பதை அழகாக விவரிக்கிறார் கவிஞர்…
உருண்டோட
தவித்து நிற்கும்
கண்ணீரிலிருந்து தொடங்குகின்றாய்
உன் கையசைப்பை
"போய் வா "என்ற படி
அனிச்சையாய்
கையசைக்கிறேன் நானும்
கண்ணீரை அடக்குவதில்
கவனம் செலுத்தியபடி.. |
இனிதே
முடிவுக்கு வந்து விட்டன
முந்தைய
சண்டைகளும்
ஊடல்களும்...!
💐
மேலும் கவிஞரின் சில கவிதைகள்:
மாபெரும்
முழு இரவை
விழுங்கியது...
மிகச்சிறிய
முழு நிலவு ...!
💐
ஓடும் ரெயிலின்
ஆளில்லா பகுதிகளில்
பயணம் செய்வோர்
தயவு செய்து
விழித்திருக்கவும்...
விற்பனை
பொருட்களுடன் வந்து
வாங்கும் படி
கெஞ்சி நிற்கும்
பார்வையிழந்த வியாபாரிகளிடம்
"ஆளில்லை "என்றேனும்
சொல்லியனுப்ப...!!
💐
மூத்திர நெடி
மூக்கை துளைத்தாலும்
போர்வையை எளிதில்
புறந்தள்ள முடியாது...
மலம்
ஜலம்
அருகிலிருந்தாலும்
உண்பதில் முகச்சுழிப்பு
இருக்கவே இருக்காது...
ஆயுதம் காட்டி
அடக்க முயலும் போதும்...
அழுது அகிம்சையில்
ஜெயித்து விட்டால்
ரசித்தே ஆக வேண்டும்
இயல்பு மாறி
வில்லனாகும் தருணங்களில்
விளையாட்டு காட்டி தான்
மறுபடியும்
கதாநாயகனாக மாற்ற
வேண்டி வரும்
சுத்தமாக புரியாது
உளறலாகக் தான்
இருக்கும்
இருந்தும்
செம்மொழிக்கும் மேலான
அந்தஸ்து கொடுத்தாக
வேண்டி வரும்
சுகமன்றி எதுவும்
சுமையல்ல நண்பர்களே-
ஆனால்
கொடுஞ்சிறை என
தெரிந்தும்
பணம் கொடுத்து
சீருடை விலங்கணிவித்து
கதற கதற
பள்ளியில் தள்ளி
தாய் மொழியை
மறக்கடித்த
அந்த
பைத்தியகாரதனத்தை தவிர...!
💐
பெற்றாகிவிட்டது
கொல்ல மனமில்லை
ஊனக் கவிதைகள்...!
💐
மெளன விசும்பல்களால்
நிரம்பி வழிகிறது
மயானம்...!
💐
ஆட்டு இரத்தம்
விழுந்து துடித்தது
ஈ....!
💐
ஆச்சரியமாய் இருந்தது
எப்போது இவர்
இங்கு வந்தார் என
கசாப்பு கடையில்
தொங்க விட்டிருந்தார்கள்
பக்கத்து மேசையில்
ஒரு இதயம் மூளை
இரண்டு கிட்னி
குடத்தில் கொஞ்சம் ரத்தம்
அசைந்தார்
உயிர் இருந்தது
இன்னும்
எவ்வளவு பாக்கியிருக்கு...
என பேசவும் செய்தார்
இன்னும் ஆறு கிட்னி
மூனு இதயம் மூளை எல்லாம் வரனும்
ரத்தம் அளவு பாக்கனும்
அப்ப தான் வட்டியே
எவ்வளவு கழிஞ்சிருக்கன்னு
சொல்ல முடியும் என்றான்
மேசையருகில் இருந்தவன்
பக்கத்து அறையிலிருந்து
அத்தனையும் கொன்டு வந்து
பரப்பினான் வேலையாள்
எட்டிப் பார்த்தேன்
அவருடைய மனைவியும்
குழந்தைகளும்
தொங்கிக் கொண்டிருந்தனர்
பரிசோதித்தான்...
எல்லாம் நிறைய
அடி வாங்கி ரிப்பேராகி கெடக்கு
மதிப்பு கம்மி தான்
கால்வாசி வட்டிக்கு கூட தேறாது
என்ன செய்யலாம் என
அதிகார தோரனையோடு கேட்டான்
தொங்கிக்கொன்டிருந்தவரும்
அவர் குடும்பமும்
நீண்ண்ண்ட...நேரம்
கெஞ்சி வாய்தா கேட்டனர்
மறுப்பதாய் மறுத்து
பின்
இரக்கம் காட்டுவதாய் நடித்து
ஒரு வழியாய்
வெற்று தாளில்
கையெழுத்து வாங்கினான்
எல்லோரிடமும்
இன்னையிலேர்ந்து
இந்த இதயம் மூளை ரத்தமெல்லாம் என்னோடது
நான் உங்களுக்கு வாடகைக்கு
தந்திருக்கேன்
ஒழுங்கு மரியாதையா
உழைச்சி சம்பாதிச்சி
என் கடனை தீர்க்கும்
வழிய பாருங்க என கூறி
அனைத்தையும் எடுத்து
முகத்தில் எறிந்தான்...
மகிழ்வுடன் பொறுக்கியெடுத்து
அவரவருடையதை
பொருத்திக்கொன்டு
நீங்க நல்லாருக்கனும் சாமி
என வாழ்த்தி
வெளியேறினர்
ஊதுவத்தி மணம் கமழ
பூமாலைக்கு நடுவே
ஆசீர்வதித்து கொன்டிருந்தனர்
எல்லா சாமிகளும்...!
💐
சிரித்துக்கொன்டே அழுகிறாள்
மாற்றுத்திறன் மழலையிடம்
விளையாடும் தாய்.
💐
கால் சதத்தை கடந்தும்
எண்ணித்தீராத
எண்ணிக்கையில் நிறைந்த
காணாமல் போன
விவசாய கிணறுகளின் நீரோடு தான்
எங்களின் பால்ய குதூகலங்களும் நிரம்பியிருந்தன
ராசமூட்டு கிணறு
சோடாகாரன் கிணறு
குள்ள கிணறு...என
ஒவ்வொரு கிணறுக்கும்
வெவ்வேறு பெயர்களே
விலாசங்கள்
தாயின் கருவறைக்கு பின்
கிணற்றின் கருவறைகள் தான் எங்களின்
அம்மணத்தை ஆராதித்து
இதய துடிப்பை மேம்படுத்தி
ஆரோக்யத்தை அப்டேட் செய்திருந்தது
ஒவ்வொரு நாள்
வெவ்வேறு கிணறு என
எங்களின் விருப்பத்திற்கேற்ற
கருவறைகளில் இடம் மாறி மாறி
குதித்து வளர்ந்த காலமது
விடுமுறையில்
கிணறுகளில் வகுப்பறைகள்
இடம் பெயர்ந்திருக்கும்
பள்ளிக்கூட மணியோசையோ
அப்பாவின் புளியஞ்சிமிறோ
கிணற்றுகாரரின் அதட்டலோ
நினைவிற்கு வராத வரை
பசியெடுத்து
உடல் வெளுத்து
கண்கள் சிவந்தாலும்
கிணறு எங்களுக்கு சலிக்காது
கிணறுக்கும் எங்களை சலிக்காது
கிராமம் நகரமானபோது...
வணிக வளாகத்தின்
கழிவு நீர் தொட்டியாக...
சினிமா தியேட்டரே
ஒரு
கிணற்றின் கல்லறையாக
ஊற்றுறங்காத இடங்கள்
மூத்திர சந்துகளாக...
இப்படி...
இது தவிர
வடிந்தறியாத ஒரு கிணறை
உடைந்த குட்டிச்சுவரையும்
குப்பைகளையும் கொட்டி
உயிரோடு கதற கதற
புதைத்தழித்த
கண்ணீர் கதை தனி...!
கடந்த காலத்தின் எச்சமாய்
சுடுகாட்டு ஓரம் ஒதுங்கியிருந்ததால்
உயிர் பிழைத்திருக்கிறது
இவ்வொரு கிணறு
எவ்வளவு தான் அடித்தாலும்
உதைத்தாலும் ஆரத்தழுவும் தன்
நீர்க்கரங்களோடு பழங்கதை பேசியபடி
கிணறும் நானும்
என் மகளுக்கு
நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்தோம்
இறுதியாக
பரஸ்பரம் இருவரும்
விடை பெற்று வீடு திரும்பிய போது...
பிரிய மனமின்றி
உலரா ஈரத்தோடு
உடன்
வந்து விட்டிருந்தது கிணறும்...!!
💐
தமிழில் பேசியதற்காக
வகுப்பறையில்
ஐந்து ரூபாய்
அபராதம் கேட்டதாக
பயந்து தயங்கி
கேட்டாள் மகள்
பத்து ரூபாய் கொடுத்தேன்
தப்பில்லாம பேசனும்
என வாழ்த்தி...!
💐
நிலைக்கண்ணாடியின்
பூ மீது
தலை சாய்த்து
அழகு பார்க்கிறாள்
விதவை...!
💐
விளையாடிய அசதி
சவப்பெட்டிக்குள் உறங்குகிறது
தச்சனின் குழந்தை
.
Showing 301 - 320 of 849 ( for page 16 )