logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் வீ கதிரவன் – ஒரு அறிமுகம்
*************************************************** 
கவிதையென்பது இயற்கையாகப் பெய்யும் மழையை போன்றது. கனவுகள் + கற்பனைகள் இருந்தாலும் யதார்த்த வெளியில்தான் அவை அதிகம் சுற்றிச் சுழன்று வருகின்றன. காணும் காட்சிகளில் அவை மகிழ்ந்து போகிறது அல்லது நெகிழ்ந்து போகிறது. அப்படிப்பட்ட யதார்த்த வரிகளின் சொந்தக்காரர்தான் படைப்பாளி வீ.கதிரவன். அவரது படைப்புகளை உன்னிப்பாக கவனித்துவரும் நமது படைப்பு குழுமம்  2019-மார்ச் மாதத்திற்கான கவிச்சுடர் விருதினையளித்து கௌரவம் செய்கிறது.

கவிஞரின் பள்ளிப் படிப்பு 8ம் வகுப்போடு  நின்றுவிட்டதென்றாலும், அவர் நேசிக்கும் கவிதைகள் அவரை உயர் படிப்பின் தரத்திற்கு உயர்த்தி பிடிக்கின்றன.

பிறந்தது காரைக்கால் மாவட்டம் விழிதியூர் கிராமம் என்றாலும் அவரது வாழ்க்கைப் பயணம் புதுச்சேரியில் 48 ஆண்டுகளாக தொடர்கிறது. தந்தையார் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் அம்மா ஓய்வு பெற்ற அரசு ஊழியர். குடும்ப சூழலின் காரணமாக பெயிண்டராகவும் பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் கிடங்கி நிர்வாகியாகவும் பணியாற்றியவர்.

அவரது கவிதைகள் சராசரி மனிதர்களின் உலகத்தை உற்று கவனிக்கிறது. 

எளிமையான சொல்லடல்களின் மூலமாக, வரிகளின் ஆழத்தை வாசிப்பவர்களின் உள்ளத்திற்கு எளிதில் கடத்திவிடுகிறார். 

கவிச்சுடர் வீ கதிரவன் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************
ஒரு சிறுகதையையே கவிதையாக வடித்து தந்திருக்கிறார் கவிஞர். அதுவும் அந்த கிராமத்திற்கே உரிய மொழி நடையுடன்... 

மூத்தாள் பிள்ளைப்பேறு இல்லாதவளென்று அந்த வீட்டிற்கு இரண்டாவதாக வந்த சின்னவள் பெற்றக் குழந்தையை தன் குழந்தையாகவே வளர்க்கிறாள் மூத்தாள். 

ஒரு தாயாக எல்லாவுமாக இருக்கும் மூத்தாள் , நீச்சலடிக்க போன மகன் தண்ணீரில் மூழ்குவதை கவனித்துப் பதறிக் காப்பாற்றியவள் அவனை பாசத்தின் மிகுதியால் நாலடி அடித்துவிடுகிறாள்... 

அதற்கு வீட்டிலுள்ளவர்கள் பிள்ளை பெத்திருந்தாதானே அருமைத் தெரியும் என்று திட்டிவிட மனமொடிந்து போகும் மூத்தாள், தூக்கிட்டு தொங்குவதற்காக செல்கிறாள்... கவிஞர் இந்தக் கவிதையை அங்கேயே நிறுத்தாமல் யாராவது அவளைக் காப்பாற்றுங்கள் என்று பதறுகிறார்... அவள் வயிற்றிலும் ஒரு பால் சிசு கருவாகியிருப்பது அவளுக்கே தெரியாதாம்... படியுங்கள் உருக்கமான இந்தக் கவிதையை..

எத்தன சுளுவா சொல்லிப்புட்டா
சின்னவ பெத்ததாச்சேன்னு
பீத்துணி அலசி குளுப்பாட்டி
சோறூட்டி தாலாட்டி
வளத்தவ நானு
நடவு நட்ட காசுல
துணியெடுத்து அழகுபாத்து
சுத்திபோட்டது யாரு
ஒடம்புக்கு முடியலன்னு
ஒத்த மூக்குத்திய அடகு வச்சி
மருந்து மாத்ர வாங்குனது
யாரு
ரெண்டாம்பு பெயிலுன்னு
மூங்கி குச்சியால 
அந்த சாத்து சாத்துனானே
அவுங்கப்பன்
குறுக்க பூந்து அடிய வாங்கி
வெம்புற புள்ளைய மாரோட
அணைச்சுகிட்ட
எனக்கா தெரியாது
பயலுவோட சேந்து
நீச்ச தெரியாம
மூழ்க கெடந்தவன
சுள்ளி பொறுக்க போன நா
எத்தேச்சயா பாத்து
காப்பாத்தி
மனசு கேக்காம பயலுவலோட
சேருவியான்னு ரெண்டு
அடி கொடுத்தது தப்புதேன்
அதுக்குன்னு புள்ளன்னு
பெத்திருந்தா அரும புரியும்னு
பொசுக்குன்னு நெஞ்சு கூட்ட
அத்துபுட்டாளேன்னு
மனசொடுஞ்சி
அந்த புளிய மரத்துல
சுறுக்கு கவுத்த மாட்டுறா
அவ
யாருவது வந்து
காப்பாத்துங்களேன்னு
மூனு நாளா உருவாகியிருக்க
அவ வவுத்துல இருக்க
பிஞ்சு கதறுவது
யார் காதிலையும் ஏன்
அவ காதுலயும் கேக்க வழியில்லதான்......

@@@

இரயில் பயணிகளுடன் பயணிக்கிறது அவரது மற்றுமொரு கவிதை. பச்சை கொடி காட்டியதில் தொடங்கும் கவிதை பரபரப்புடன் நகர்கிறது... ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனைகளுடன் பயணம் செய்கிறார்கள்.. இவை அனைத்தையும் காட்சியாக்கும் கவிஞர்..

எல்லோரையும்
இழுத்துப்போகும்
இரயிலில் எரியும்
நிலக்கரி என்பதும்
ஓர் காலத்தில் வாழ்ந்து கெட்ட
மரங்கள்தான்......
என்று கவிதையை முடிக்கும் விதமே மிக சிறப்பு... இதோ அந்தக்கவிதை....

பச்சை கொடி அசைத்து
கிளம்பச்சொல்லும்
அதிகாரி

பெருமூச்சோடு
கிளம்ப எத்தனிக்கும்
இரயில்

கொடுத்த
தேநீருக்கு காசு 
தராதவனிடம் காசு கேட்டு
நச்சரிக்கும் அவன்

வாங்கிய
தண்ணீர் போத்திலுக்கு
கொடுத்த
மிச்ச காசினை
வாங்காமல்
ஓடத்துவங்கும் அவன்

அடுத்த
இருபத்து நான்கு
மணிநேரமும் கைதியை
பத்திரமாய் நீதிமன்றத்தில்
சேர்க்க வேண்டிய
பயத்தோடந்த புது காவலன்

கோவிச்சு
சண்டயிட்டு சும்மான்னா
என் வீட்டுக்கு
கெளம்பிடுவேன்னு
வீராப்பா அமர்ந்து
கடைசி நேரத்துல
அழச்சி போவான் கணவன்னு
நகரும் வண்டிய பயத்தோட
பாக்கும் மனைவி

தன் ஆதர்ச நாயகன
பட்டணம் போய்
பாத்துடலாம்னு வீட்டுக்கு
சொல்லாம
திருட்டு பயணம் செய்யும்
ஏழாம் வகுப்பு மாணவன்

எப்படியும்
தனக்கென 
காத்திருப்பான் காதலன்னு
வீட்டுல திருடுன
நகையோட கிளம்பும்
காதலி

கடைசி காலத்துல
தன் மனைவி அஸ்திய
மடியில வச்சி
கவலையோட கடக்கும்
அவருன்னு

எல்லோரையும்
இழுத்துப்போகும்
இரயிலில் எரியும்
நிலக்கரி என்பதும்
ஓர் காலத்தில் வாழ்ந்து கெட்ட
மரங்கள்தான்......

@@@

காலதூரத்தின் இடைவெளியில் கை மாறும் பொருட்களை கொண்ட இந்தக் கவிதை சிறியதென்றாலும்... ஞாலத்தின் பெரிது...

தொட்டு தொட்டு
மகிழ்ந்து சிரிக்கும்
பேரனின் கைகளில்
கைபேசி

தொடமுடியாத அருகின்
மூலையில் அமர்ந்திருக்கும்
தாத்தனின் கைகளில்
மரப்பாச்சி பொம்மை....

@@@

கால வோட்டம் கடந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை.. நண்பனின் நினைவுகளை சேமித்து வைத்திருக்கும் இந்தக் கவிதை முடிக்கும் போதும் நலமா நீ எங்கிருக்க? என்று கேட்டுவைத்து  நெகிழ்கிறது.

கம்மாகுளியல்
கால் சேற்றின்
கிண்டல்

மாங்கா
எச்சில் கடியில்
புளிப்பின் மிச்சம்

களிமண்
பொம்மை செய்ய
நமக்கு மட்டுமே
தெரியும் உருவம்

வய
நெல் உருவி
ஐஸ் தின்ன
தித்திப்பு

பள்ளி சோற்றை
ஒரு தட்டில் தின்றே
யார் கழுவ போட்டி

கிழிந்த
டவுசருக்கு
பட்ட பெயர் வச்சி
வெட்கம் மறைக்கும்
கண்ணீர்

திருவிழா
கூட்டத்தில்
கண்டெடுத்த
ஐந்து பைசா

அதில் வாங்கிய
குச்சி ரொட்டி
பொற வரிக்கி

பொங்க
நாளுக்கு காசு கேட்டு
அழுது வாங்கி
பஞ்சு மிட்டாய்
பங்கு போட்டு

அச்சு வெல்லம்
கடி கடிக்க
கடவாயில் ஒழுகி நிக்க

புறங்கை
தொடச்சி 
கால்சட்டை மிச்சம் 
வைக்க

தூக்க நடுவில்
எறும்பு
கடிச்சி வைக்க
வீங்கிய அந்த இடம்
உன்னிடம்
காட்டி நிக்க

நீ
சிரிச்ச
அந்த சிரப்பு
இன்னும் மின்னும்
கண்ணுக்குள்ள

பனங்கா
வண்டி செஞ்சி
டுர்ர்ருனு
பந்தயம் வச்சி

கிட்டி புள்ளு
விளையாட
பான ஒன்னு
ஒடஞ்சி போக
தொடப்ப அடி வாங்கினது

படிப்பாகி
நீ பட்டணம் போக
படிக்காம
நா வயல் பாக்க

செமிக்கா
ஞாபகத்த
சேத்திருக்கேன்
என் நண்பா...

நலமா நீ
எங்கிருக்க..?

@@@

பழைய இரும்பு வாங்கும் கிழவனின் நேசம் அவன்  குடும்பத்தையும் நினைக்க வைக்கிறது...

பழய பாத்திரத்துக்கு
பேரீட்ச பழேய்ய்ய்
பழய இரும்புக்கு
பேரீட்ச பழேய்ய்ய்
பழய பேப்பருக்கு
பேரீட்ச பழேய்ய்ய்னு
தெரு முக்க கத்தி ஏதும்
கெடைக்காம
அழும் தெரு பிள்ளைக்கு
ஒரு பேரீட்சைய கையில கொடுத்து
கன்னம் தட்டி 
சிரிக்கவைத்துப்போகும்
அந்த கிழவன் வீட்டிலும் இருக்கலாம்
பசியோடு
பேரப்பிள்ளைகள்........

@@@

ஆற்றோரம் தவழ்ந்த காதலை அழகாக சொல்லிவரும் கவிஞர் மண் கடத்தலில் தன் காதலையும் கடத்துவது ஒரு வித்தியாசமான பார்வை...

நினைவிருக்கிறதா...?
ஆற்றுப்படுகையில் முன்னே
நீ நடக்க
உன் கால்தடம் ஒற்றி
என் கால்தடம் பதிய பின்
வருவேன் நான்
வளைந்து வளைந்து செல்வாய்
நான் தவிப்பேன்
கிண்டலாய் சிரிப்பாய்
ஒரு கிளிஞ்சல் குத்தியதற்கு
ஆற்றையே சபித்தாயே
துளி உதிரத்திற்கு பதறி
கண்ணீர் உகுத்தாயே
நான் கூட விளையாட்டாய்
சொன்னேன்
ஆறு நிரம்பிவிடப்போகிறதென்று
மண்ணள்ளி கடத்துவதாய்
நினைத்து
காதல் கால்தடங்களை
சுமந்து போகிறது
மண் லாரி
இதோ ஒற்றை கால்தடத்தை
பதியவைக்க முயல்கிறேன்
பதிய மறுக்கிறது
உன் சாபம் பலித்ததபோல
உன்னை போல இறந்துபோயிருந்தது
ஆறு......

@@@

சமையலிலும் சாதூர்யமாக அரசியல் பேசும் கவிதை

வெங்காயம் தக்காளி
பச்சமிளகாய் இஞ்சி பூண்டு
சீரகம் கடுகு உளுத்தம்பருப்பு
கூடவே கத்திரிக்காயென
கூட்டணி வைத்துக்கொண்டது
சமையலறையில் உணவுக்கென
பரிமாறலுக்கான பின்பு
ஒதுக்கப்பட்டு குப்பையில்
சேர்ந்தன சனநாயகமெனும்
கருவேப்பிலைகள்.......

@@@

ஒரு ஏழைவீட்டின் மழை நாள் சில துயரங்களையும் சில மகிழ்ச்சிகளையும் கொண்டு நகர்வதை கவிதையாக படித்துவிடுவது சிறப்பு....

கஞ்சி மட்டுந்தான் காச்சிருக்கேன்
தொட்டுக்க ஏதாவது வாங்கிவரப்படாதாவென
கவலயோட கேக்கும் மனைவி

இன்னைக்கும் கஞ்சிதான
அலுக்கும் பெரியவள்

யப்பேய் பிஸ்கோத்து என கேட்டு
வெறுங்கை கண்டு முகம்
சுறுங்கும் சின்னவன்

இன்னைய தண்டல எப்படி
கட்டுவதென குழப்பத்தில்
நான்

சட சடவென பெய்தமழையில்
ஒழுகும் கூரைக்கு
கஞ்சியை மூடுகிறாள் மனைவி

ஒழுகா இடம் தேடி பதுங்கும்
பெரியவள்

ஐ மழையென குதித்து
கும்மாளமிடும் சின்னவன்

அப்பாடா இன்னைக்கு
தண்டல்காரன் வரமாட்டான்
பெரு மூச்சுடன் நான்

எது எப்படியோ
அந்த நேரத்திற்கான கவலைகளை
கழுவிவிட்டிருந்தது மழை.........

@@@

தூர் வாரும் கிணற்றில் ஒரு கிராமத்து கதையே உட்கார்ந்திருக்கிறது... என்னவொரு நயம்!

காத்து கருப்பு
அடிச்சதுன்னு ராமாயிக்கு
தைய்காவுல 
ஓதி வாங்கி
கழுத்துல கட்டுன
தாயத்து
பழனிக்கு போயி
ஆசையா யாருக்கும்
தெரியாம காதலிக்கு
தொரப்பாண்டி
வாங்கி தந்த
முருகன் டாலர் வச்ச
அலுமினிய சங்கிலி
தொலைஞ்ச
சொம்புக்கு ஐயனாகிட்ட
முட்டை வைப்பேன்னு
மண் தூவுன
ராமாயியோட
நசுங்குன
பித்தள சொம்பு
நாலு ஒடைஞ்ச
மண்சட்டி
துருப்பிடிச்ச
துரும்பு வாளி
கிழிஞ்சி நாரான
எட்டு மொழ சேல
தெக்கால
திருடுபோச்சுன்னு
குறியாடி சொன்ன
இத்தனூன்டு
செம்பு செல
கட்டி கட்டியா
கப்பிக்கல்லு இன்னும்
என்னென்னவோ
வந்து விழுந்தது
நூறடி
தோண்டியபின்பும்
வத்திய கெணத்துல
தண்ணியத்தவிர......

@@@

கவிஞரின் கவிதைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு கதையை நம் முன் பேசிவிடுகிறது...  இதோ மேலும் சில அற்புதமான கவிதைகள்....

கால் கடுக்க
மூனு மைலு நடந்து
பாடம் படிக்க போனவதான்
செறுப்பு தைக்கும் அப்பனின்
வேர்வை அறிஞ்சவதான்
பூ கட்டும் ஆத்தாளின்
கை வலிக்கு இராவுல
களிம்ப தேச்சுவிட்டு
அழுதவதான்
எத பாத்து  மயங்கினாளோ
இராவோட இராவ மேஞ்சாதிக்காரனோடு
ஓடிப்போனா
தெரு ரெண்டுபட்டு
ஊரே பத்தியெறிஞ்சி
ஒரு வழியா முடிஞ்சது
அப்பனாத்தா தூக்குல தொங்குனதாவும்
அவ மூளியா நின்னதாவும்
காலம் கடந்து போக
அவ புள்ள மூனாப்பு படிக்கிறான்
இதோ சத்தமா....
சாதிகள் இல்லையடி பாப்பான்னு
அவளும் ரசிச்சிகிட்டு கட்டுறா
வவுத்து பொழப்புக்கான
#சாதிப்பூவ.....

@@@

தொண
மாட்ட காணாம
கத்துது செவல மாடு

ஓரமா கெடக்கு
எரிச்ச 
தாம்பு கவுறு சாம்பலா

மூலையா
மொடங்கி கெடக்கா
வள்ளி
கயித்து கவுறு அந்து

எத்தன
சொல்லியும் நிக்காத
கண்ணீர
எப்படி நிப்பாட்ட
பொலம்புறா மாமியா

முடியா காலத்தே
நானிருக்க
முன்னமே போனியே
ராசான்னு அவளும்
தம்புள்ளைய
எண்ணி அழ

வெதைக்க வாங்குன
கடனைடைக்க
வட்டி கட்டி மாளாம
மனமொடிஞ்சி
தொங்குன கவுறு
மாட்டோடது
அந்த தாலி
இவளோடது

கண்ணீர சுண்டி விட்டு
முந்தி உதறி சொறுகி
மாமியாவ
தொணைக்கழச்சி
மாட்டுல
ஒன்னா மாறி உழுவுறா
ஒழவ

மனசு கணக்க
அறுவட முடிஞ்சி
கடனடைச்சி
கடவுளுக்கும்
படைய வச்சி

இப்ப திருப்பித்தா
எம்புருசன் உயிரன்னு
கேக்குற உறுதியோட
முன்னங்கால
எடுத்து வைக்குறா
இன்னும் அழுத்தமா.....

@@@

அந்த கண்ணாடி
அழுக்காய் இருந்தாலும்
எப்போதும் எங்கள்
முகத்தினை அழகாகவே
காட்டும்

சிரிக்கும்பொழுது சிரிக்கும்
அழும்பொழுது அழுது
தவிக்கும்
ஆறுதல் படுத்தும்

எங்கள் ஆடைகளை
வெளுப்பாய் காட்டுவதில்
அதற்கு அத்தனை ப்ரியம்

தன் ரசம்போன
பக்கங்களை ஒரு போதும்
எங்களுக்கு காட்டுவதில்லை

இரவில் உறங்குமா
என்ற சந்தேகம்
எங்களுக்கு
நாங்கள் மட்டுமே உலகென
வாழ்கிறது அது

உடைந்த கண்ணாடியென
சிலர் வீதியில்
வீசியிருந்தனர் அதனை

சமயங்களில் அது
தனக்கு தெரிந்தவரென
மின்னி மறையும்
சிறு மின்னல் புன்னகையென

இனியேனும்
வீதியில் வீசாதீர்கள் பாவம்
அப்பாவெனும்
கண்ணாடிகளை......

@@@

முதன் முதலில்
பாடத்தில் பூஜ்ஜியம்
பெற்றதில் அழுதேன்

எனது பூஜ்ஜிய வரைவும்
தொடக்க புள்ளியில்
சேரும் பொழுது
ஒரு வாயினை போலவே
முடிந்திருந்தது

முடிவாய் உடைத்த
என் கொள்ளிப்பானையும்
ஒரு பூஜ்ஜியத்தை சுமந்து
வாய் பிளந்திருந்தது

பிறந்த பனிக்குடத்தை போலவே.......

@@@

எல்லை சாமிகள் காக்குமென
கொல்லையில் பிடித்துவைத்த
மண்சாமிகளும் மங்களமெனத்தான் இருந்தன
எங்கள் பெண்டிரை போலவே

குளத்துக்கு குளிக்கப்போய்
ஈர துணியோடு வருபவளுக்கு
தலை குனிந்து வழிவிடும்
ஆண் மனிதம்

கள் கடைகள் கூட
ஊருக்கு மறைவாய்தான்
குடித்து வருபவன் முகத்தினை
முக்காடு சூடியிருக்கும்

வேலி தாண்டியதில்லை
எந்த காளி மனங்களும்
தழைய தழையத்தான்
தழைத்துக்கிடந்தன பயிர்களும்
வாழ்க்கையும்

விவித பாரதியும் வர்த்தக
ஒலி பறப்புமென ரேடியோ பெட்டியில்
லயித்துக்கிடந்தது
கோவண சனம்

சாயந்திரம் கேட்கும்
டென்ட் கொட்டகையின்
ஒலி இசைக்கு
வரப்பு வழியே குறுக்கால
ஓடின வெள்ளி திரைகாண

ஆடி அசைந்து வந்து நின்ன
பேருந்தில் தொலையத்துவங்கின
கிராமத்து மொட்டுகள்

விஞ்ஞானம் மெய்ஞானம்
திண்றதில்
கரைந்து போகின இளகிய
மனங்கள்

படுக்கையறை காட்சிகள்
முற்றம் வரைவந்ததில்
முறை தவறிப்போகின
உறவுகளின் உன்னதம்

கருக்கலைப்புக்கு தப்பிய
பெண் சிசுக்கள் இன்னும்
பிறக்கின்றன
காக்க ஓர் அண்ணண் 
இருப்பானென.........

@@@

அழுக்கு பைக்குள்
கை விட்டு
எதையோ எடுத்து
வீசுவதுபோல்
பாசாங்கு செய்கிறான்
அவன்
குரைத்தபடி பின்னோடி
பின் முன்னேறியபடி
அந்த ஐந்தறிவு

கண்டு கடந்து
திரும்ப கடக்கையில்
அழுக்குப்பையில்
தலை வைத்து ஐந்தறிவும்
வெறுந்தரையில்
அழுக்கான அவனும்
சமயத்தில் புரிவதில்லை
இவர்களுக்கான மொழி..

@@@

இந்த அற்புதமான கவிஞனுக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருதினை அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது மேலும் சிறந்த படைப்புகளை வழங்க பெருமையுடன் வாழ்த்துகிறது நம் படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

ஜபீர்


0   1218   0  
November 2018

ரவிச்சந்திரன்


0   227   0  
September 2023

ஷீபா ராணி


0   641   0  
August 2021