logo

கவிச்சுடர் விருது


============இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை திருநெல்வேலி, ஏர்வாடி என்ற ஊரைச் சேர்ந்த கவிஞர் சிந்தா மதார் அவர்கள் பெறுகிறார் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறோம்.

நல்லத் தமிழாசிரியரை வரமாக பெற்றதால் எழுதும் ஆற்றல் தனக்குள் உதித்ததாக சொல்லும் கவிஞர் தில்லியில் 23 வருடங்களாக பணியாற்றிவருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் அவர்கள், நமது படைப்பிலும் தொடர்ந்து பலகவிதைகள் எழுதியுள்ளார்.

பாதங்களால் நிறையும் வீடு கவிதைப் போட்டியில் பரிசுக்கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதைகளில் கவிஞரின் கவிதையும் ஒன்று.

காதல் கவிதைகளில் துவங்கிய இவரது எழுத்துப்பயணம் மெய்யியல் பற்றிய படைப்புகளையும் நோக்கி நகர்ந்து வருகிறது. இயல்பு நிலை நோக்கி பயணப்படும் இவரது கவிதைகள், இன்றைய சூழல் மாற்றங்களையும் சுமந்தே பயணப்படுவதும் மிகச் சிறப்பு!

இனி கவிஞரின் ஆன்மவரிகளில் நுழைந்து கருத்தியலை சுவாசிப்போம்..
@@@
நிலையாமையைப் பற்றி கவிஞர் அழகான எடுத்துக்காட்டுகளை நம்மிடம் அடுக்கி வைக்கிறார். இரவு துயிலும் போதே அந்த நாளின் தேதி கிழிகிறது,  பூக்கள் உதிர்ந்தவுடன் காம்புக்கா அவை சொந்தம்? அதன் நிறம் வாசம் இவையெல்லாம் எங்கே போயின? ஒவ்வொன்றும் அதன் இறுதி நாளை எழுதிக் கொண்டல்லவா இருக்கின்றன... இதோ கவிஞரின் ஆழமான வரிகள்!....

தினத்தின் மேல்
இருள் ஆடை..
போர்த்திக் கிடத்தும் பொழுதோடு
கிழித்தெறியப் படுகிறது
தேதித்தாளொன்று..

காற்றில் பறந்து,
கசங்கி  மட்கும்  தாளின்.
செய்தியே..
மரணத்தின் செய்திதானே?
.....

எந்தப் பூக்களும்..
காம்புகளில்
நிரந்தரமாய்
இடம் பெறுவதில்லை.
எங்கே செல்கின்றன
அதன் வண்ணங்களும்
வாசங்களும்?
.....
எந்தக் காற்றினால்
சுடர் விட்டடெரிந்ததோ..
அதே காற்றில்தான்..
சட்டென துடித்து
அணைந்து விடுகிறது தீபம்.

நீளும் புகையோடு தன்
இறுதித்தேடலை
நிறுத்திக்கொண்டது
சேர்ந்தே கருகிய திரி.

துளி சுடரின்  மரணத்தில்
கறுத்து மறைகிறது
வெளிச்சம்.
பார்வை ஒன்றிற்குள்
பத்திரமாக பதுங்குகின்றன
காட்சிகள்..

....
இருட்டில்
தீபம் எழுதிச் சென்ற
கவிதையை
வாசிக்க கற்றுத்தருகிறது
எதிர்ப்பட்ட மரணமொன்று.
......
ஆம்..!
கட்டவிழ்ந்து விழுகின்றது
யாக்கை.
.....
மட்கி, உரமாகி
விதையொன்றின் உணவாகி
செடியாகி நிற்கின்றது
தானென்று
சொல்லித்திரிந்த
இக்கொழுஞ்சதை.
.......

இன்னும் எனக்குள்
எழுகின்றன
என்னைப்பற்றிய
கேள்விகள்.
எங்கே சென்றிருப்பேன்
நான்…?
@@@

தொழுகை என்பது வெறும் இறைவனை மட்டும் வணங்கி , சொர்கத்தைப் பகரமாக கேட்பது மட்டும்தானா? இல்லை என்கிறார் கவிஞர்! தொழும் போது இடறும் நினைவுச் சீண்டல்களையும் விரட்டியடிக்கும் மனயுக்தி! கர்வத்தை விரிப்பில் வைத்து தாழ்ந்து வணங்கும் உயர்ச்சி!  பாவத்தை விரட்டும் ஆயுதம்! இதோ கவிஞரின் அற்புத வரிகள் தொழுகைக்கு மண்டியிடுகின்றன....

மொய்க்கும் நினைவுகளை
துரத்தியபடியே
தலைக்கும் தரைக்குமிடையில்
இடருற்று நிற்கின்றன
தொழுகைகள்.
......
தொழுகைக்காக
தூய்மையுற்றக் கரங்களின் கறைகளை
கழுவுகின்றன
தொழுகைகள்.
...
தொழுகையில் தான் வெற்றி.
தோற்று உதிரும் இச்சையுடன் தலை சாயும்
நெற்றி.
தொழுகையே
வெற்றி..
....
அத்தனையும்..
கட்டிக் கொண்டிருக்கிறேன்
எந்தக் கனி கொண்டு
ஏமாற்றுவாய் சாத்தானே?
...
உதறி மடிக்கும்
தொழுகை விரிப்புகளில் இருந்து
உருண்டோடுகின்றன
பாவத்தின் விம்மல்கள்..
..
அத்தனை பாவங்களையும்
உதறிவிட்டு செல்கிறேன்..
அள்ளிக் கொள்ளவாவது
ஆலயம் வா சாத்தானே..
...

சுமந்து வந்ததை
விட்டுச் செல்கிறேன்
சுமக்கப்பட்டுப் பின்
விட்டுச் செல்லும்முன்
@@@
ஆறுகள்தான் நாகரீகத்தின் கதையை எழுதின. அதன் கரைகளின் இடைவெளியை மனித நாகரீகம் எழுதித் தீர்த்தபின், கரைகளின் இடைவெளி உடைந்து... காரைகளின் கதைகளை எழுதத் தொடங்கிவிட்டன. ஆற்றின் நீர் புனிதமாகிறது, அதே நீர் குடி நீராகவும் இருக்கிறது, அந்த ஓடு நீரில்தான் கால் நடைகள் குளிக்கின்றன, ஏன் கால் கழுவவும் தேறுகிறது... இதனை எதில் ஒதுக்க முடியும்..கவிஞரின் சிந்தனை கடலில் கலக்கிறது....

ஆறு

இருகரைகளின்
இடைவெளியை
அதிகப்படுத்துகிறது
அடித்தோடும் ஆற்று வெள்ளம்..
....
வறண்டக் கோடைகளில்தான்
கரைகள் இணையும் போலும்.
...
கரைகளை ஒட்டிய
கதைகளின் கறைகளை..
கழுவிய ஆறொன்று
கடலில் தலைமுழுகிக் கொள்கிறது.
....

கரைகளுக்கும் சாதியுண்டு.

ஓருகரையில் ஸ்நானமெனில்
மறுகரையில் ..
எருமைகளுடனே ஒரு கூட்டுக்குளியல்..
...
இடுகாடு மயானம்
சுடுகாடு சமாதி என..
கரைகளும் காத்துக்கொள்கின்றன
சாதிய அடையாளங்களை.
...
குடமுழுக்கு நீருக்காய்..
குடங்கள் மூழ்குகையில்..
சிதைமூட்டிய விறகொன்று
மறுகரையில்
நனைகின்றது..
...
நீர்த்தொலைத்த கரைகள்
மிகவும் நெருங்கிவிடுகின்றன.
ஈரம் இல்லாத
ஆற்றின் வழித்தடத்தில்..
வெட்டிக்கிடத்தப்படும்..
சடலங்களின் ரத்தத்துளிகள்
துளி ஆறென்றே
ஓடி உலர்கின்றது.

இப்போதெல்லாம்.
ஆறுகளுக்கும் சாதி இருக்கின்றன.
@@@
யாசிப்பு என்பது பிச்சை எடுத்தல் என்று இழிவான சொல்லாடல் அல்ல!  தன்னைத் தாழ்த்தி உயர்த்திக் கொள்ளும் மாண்பு! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நாய்க்கு தண்ணீர் வைத்த தாசியும் சுவர்கம் செல்வாள்' என்று சொன்ன வாக்கியத்தையும், 'தாயின் காலடியில்தான் சுவர்கம் இருக்கிறது' என்று சொன்ன நன்மொழியையும் அழகாக இணைத்து இந்த யாசிப்பில் வார்த்தைகளை வளமாக்கிவிடுகிறார்...
யாசிப்புகள்

வேசியின்
முந்தானைகளிலும்..
சுவனத்தின் திறவுகோல்கள்
முடிந்துதான் உள்ளன.

தாகத்தில் தவிக்கும்
நாயொன்றினால் தான்
அவிழ்க்கப் படுகின்றன
அம்முடிச்சுகள்
.......
தண்டனைகளில்..
சிதறும் ரத்தத்துளிகள்
வைரங்களாக மின்னக்கூடும்
என்னை தண்டித்துவிடு..!

குற்ற உணர்வில்..
வழிந்தோடும் கண்ணீர்த்  துளிகள்
வற்றிப் போவதற்குள்.
.....
நாளும் சாத்தானுக்கு
கல்லெறிந்து விடுகிறேன்
இன்று பிறந்த
பாலகனே  நான்.

மூப்புற்ற தாயொருத்தியின்
தனித்த வீட்டில்..
மூத்திரக்காடாகிக் கிடக்கும்
முற்றத்தில்..
கேட்பாரற்று..கிடக்கிறது
சுவர்க்கத்தின்
'கவுசர்'த் தடாகங்கள்..

உணவுப் பொட்டலத்தை
பிரித்து..
நேசத்துடன் நோக்குகிறாள்
யாசிக்கும் சிறுமி..
மன்னு ஸல்வா.

இரண்டு சலாம்களுக்கு
பதில் பெறாது
தொழுதுவிட்டு
பள்ளிவாசலைக்
கடக்கையில்,
ஏளனமாய் சிரிக்கிறது.
பதிலளிக்காது
விட்டு வந்த
பக்கிரின்  சலாமொன்று.
@@@
ஈர நாட்கள் என்பது நினைவு அடுக்குகளில் கலையாதக் கோலங்கள்! வதை என்று உணராமல் தட்டான் வாலில் நூல் கட்டி அதை சிதைத்த நாட்கள் வலியென்றாலும், தவறை உணரும் போது ஆதுவும் ஈர நாள்தான். தொட்டி மீன் இறந்த போது பதைத்த அந்த பிஞ்சு உள்ளம் இன்னமும் மரிக்காமல்... கடல் ஒதுங்கும் அகதிகளின் சடலங்களைக் காணும் போதும் பதறுகிறது! வவுனியாக் காட்டில் செத்துகிடக்கும் ஒரு தாயிடம் பாலுக்காக முலைத் தேடும் குழந்தையைக் காணும் பதைப்பான ஈரம்... கவிஞரின் மனம் வலிகளின் ஈரத்தில் மூழ்குகிறது...
ஈர நாட்கள்

மழைத்துளியின் எடையில்
தலை சாய்த்து
கிளை உலுக்கி
இலைகளுக்கு தலைத்துவட்டி
நனைந்த நாட்கள்.
….
நூல் கட்டிய பொழுதுகளில்
வாலறுந்து பறந்த
தட்டான்களின்
வலிகளில்
வழிந்த விழிகளின்
அந்திப் பொழுதுகள்.
….
தொட்டிக்குள் புலம்பெயர்ந்த
ஆற்றுமீன்கள்
மரித்து மிதக்கையில்
மனம் பதைக்கும்
பிஞ்சு மழலை ,     
அகதிச் சடலமென
கரை ஒதுங்கிய
அக்காலைப் பொழுது..
..
கொத்துக் கொத்தாய்
வவுனியக் காடுகளில்              
விதையாகிக் கிடந்த
உடல்களுக்கிடையில்
தாயொருத்தியின்
மார்பில் பால்தேடும்
சிசுவின் கன்னங்களில்
பிசுபிசுத்த குருதியினால்
உறக்கத்தை தின்றொழித்த
உலரா இரவுகள்.

@@@
கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:

பாதங்களால் நிறையும் வீடு

கூட்டாஞ்சோற்றுப் பருக்கைகளுக்காய்
வந்தலையும் சிட்டுக்குருவிகளின்
பாதங்களால் நிறையும்
பள்ளிப் பருவத்தில்
ஒடைமரத்து மூடொன்றில்
எழுப்பிய முதல்வீடு..
…….
மூப்புற்ற காலமொன்றில்
தனித்து விடப்பட்டிருந்த
சுருக்கங்களின் புன்னகையாய்
பள்ளி விடுமுறையில்
வந்திறங்கும் மழலைகளின்
பாதங்களால் நிறையும் வீடு

கம்பிவேலிகளுக்கிடையில்
விண்மீன்களுக்கு வாசல் வைத்த
கூரையிடையே
அகதி என்ற சொல்லை மட்டும்
சுமந்து நிற்கும் உயிர்களின்
விழித் துடைக்க
தாய்மண்ணை சுமந்துவரும்
நினைவுகளின் பாதங்களால்
நிறையும் ஒரு வீடு.
……
அத்தனைப் போராட்டமும்
அலைகழிப்பில் முடிந்தபின்னே
ஒற்றைக் கயிற்றுக்குள்
உடல் தொங்கிய அன்றுதான்
பாதங்களால் நிறைந்தது
பார்வைக்கு வராத உழவனின் வீடொன்று.
@@@
உயிர்த்திசை

உயிர்த்திசை நெடுகிலும்..
ஒப்பாரி ஓசை..

ஏவுகணைத் தாக்குதலில்..
பார்வை இழந்த மகன்.

தடவித் தடவி தாய்க்கரம்
பற்றுகிறான்.

வழக்கத்திலும்
குளிர்ந்திருக்கும் அம்மெய்த்தீண்டலில்
வண்ணங்குழைத்து
அவள் விரல்பிடித்து வரைந்த
ஓவியங்கள்
நினைவில் வந்தன.

குளியலறையில் அடம்பிடிக்கையில்
கரம்பற்றி குளிப்பாட்டி
ஜைத்தூண் வாசங்களுடன்
அணைத்து வந்தவள்தான்..

தேன்தடவிய ரொட்டிகளை
தேடித்தேடி ஊட்டிய விரல்களின்
குளிர்ச்சியை  தீண்டுகிறான்.

நேற்றைய இரவில்..
முடியாமல் நின்ற அல்லாவுதீன்
கதைகள் அப்படியே நின்றுவிட்டன

அம்மாவின் மவுனத்தை
போர்விமான இரைச்சல்கள்
கலைக்கவே முடியவில்லை.

அம்மாவின் ஆடைகளில்
பிசுபிசுத்துக் கொண்டிருந்ததை
உதிரம் என்று
உணரத்துவங்கினான்.

அம்மாவும்
அல்லாஹ்வை போலவே
இருந்தும் இல்லாதிருந்தாள்.

இப்போதுள்ள கவலை
அவளுக்கான
இறுதித் தொழுகைக்கு
எத்திசையில் நிற்பதென்று
உயிர்த்திசை
நோக்கி நின்றான்.

அன்பும் நேசமும்.
புதைக்கப்படாமல்.
அவனைப் பார்த்த விழிகளும்
மூடப்படாமல்
அப்படியே கிடந்தது.
சிரியாவின் வீதிகளில்..
@@@
மீன்

உலர்ந்த ஆற்றின்
வெம்மைகளிலிருந்து
மீன்தொட்டிகளில்
புலம்பெயர்ந்த
கூழாங்கற்கள்
வரம் பெற்றவைகள்

தங்க மீன்களின்
முத்தத்தில்
நனையும் கூழாங்கற்கள்
மீன்முட்டைகளின்
கனவுகளை
கரைத்துக் கொண்டிருந்தன.

சிறு மீன்தொட்டிக்குள்
அழிந்துப் போன
ஆற்றின் நினைவுகளை
சுமக்க பழகி இருந்தது
வீடு.
…..
கண்ணாடித் தொட்டிக்குள்
இருந்து
கல்லெறிகின்றன மீன்கள்.
நொறுங்கி விழுகின்றன
மணல்வீடுகளை பற்றிய
நினைவுகள்.

மீன்பிடித்தாடிய
அப்பத்தாவின் முந்தானை வண்ணத்தை
எந்த மீனின் தோலில்
தேடிக்காண்பது ?

@@@
துறவு

இறகுகளுடன் சேர்த்தே
பறக்கும் ஆசைகளையும்
உதிர்த்து விடுகிறது
ஈசல்.
…..
வேர்களின்
வியர்வைக் கதைகளை
தளிர்களிடம் கிசுகிசுத்து
மறைகிறது
ஒற்றைப் பனித்துளி.
..
காற்றின் காலடிச்சுவடுகளை
பற்றிப் பிடித்து
கரையேறுகிறது
அலை
..
புனித தலமொன்றில்
தலைமுழுகியப் பின்னும்
வழிந்து கொண்டேதான்
இருக்கின்றன
பாவத்துளிகள்.
..
சத்தமிட தவளைகள் இல்லை
பாம்புகளுக்கு
கால் முளைத்து விட்டன.
….
அத்தனை கனவுகளின் வண்ணங்களை
அழித்துத் துடைக்கிறது
வெண்ணிற துணியொன்று.
..
விட்டுவிட மனதின்றி
ஈசலின் இறகுகளை
சுமந்துக் கொண்டலைகின்றது
காற்று.
@@@
மீள்ப் பிறப்பு

அருளெனும் தொப்புள் கொடி
அண்டத்தில்
நீந்துகின்ற குழந்தை.
..
இருள் என்று
கலையும் மென்று
விழிமூடும் நாளுக்காய்
பெருந்தவம்.
..
மண்ணறைக்குள்
புகும் நாளை
பேறுநாள் என்றே 
கூறிக்கொள்ளலாம்.
..
மண்ணறைத் தொட்டிலில்
மறுமைக் கனவுகளுடன்..
நித்திரைகள்.
தாலாட்டும் குரல்
கலிமா தையிபா.
..
அத்தாடகத்து பாலருந்தி
களைப்பகன்று..
மடிதேடி தவழ்கின்றது குழந்தை.

மடிநோக்கும் மழலையை
அந்நெருப்பு
என்ன செய்துவிடும்..?

கலிமா விரல் பிடித்து
மெல்ல நடைபயிலுகின்றன
பிஞ்சுப் பாதங்கள்
பேரொளி நோக்கி.

அண்டம் எனும் கருவறைக்குள்தான்
எத்தனைக் கனவுகள்.?

சுமப்பவளை காண்கின்ற
இன்பக் கனவுகளுடனேயே
நீந்துகின்றன
அத்தனை சிசுக்களும்.
@@@
தன்னை அறிந்த மரம்.

தன்னை அறிந்த மரம்
நோவாவின் படகானது.

தன்னை அறிந்த மரம்
நதியை பிளந்தது

நம்ரூத் எழுப்பிய நெருப்பில்
விறகான மரம் கூட
உன்னை அறிந்திருந்தது.

சிலுவையாகிய மரமொன்று
பாவமன்னிப்பு தேடியது.

இன்னும் சில மரங்கள்
ராதைகளுக்காய்
புல்லாங்குழலாகின.

வளைந்து வில்லாகி
லங்காவில் அம்பெய்தின.

புத்தனுக்கு போதியாகி
அன்பெய்தின

இன்னும் சில மரங்கள்
அகிம்சையாய் ஊன்றின

கல்லறைத்
தோட்டமொன்றில்
ஏதுமறியாமலேயே
பல மரங்கள்…
அடுக்கப்பட்டு கிடக்கின்றன.

இழிவடைந்த
மரங்கள் சில
பெருங்கலவரமொன்றில்..
உருட்டுக் கட்டைகளாக
உதிரம் புசிக்கின்றன

பாவம் அம்மரங்கள்
மரங்களாகவே இருந்திருக்கலாம்.
@@@
நான்

நான் என்ற ஒருமைக்குள்
பன்மையாகவே நான்.
என்னுள் அணிவகுக்கும்
என்னை
ஒருமையில் வைப்பதா?
பன்மையில் வைப்பதா?
பருவங்களின் கற்றைகளை
பற்றிப் பவனிவரும்
எத்தனையோ "நான்"களில்
எந்த "நானை"
எனதாக கொள்வது?

உயிர் ஒன்று அதனால் நீ ஒன்று
என்று எனை தேற்றி
எழுகையில்..
கோடிக்கணக்கான செல்களின்
கூட்டுக் கலவை நீ என
கூறிச் சிரிக்கிறது அறிவியல்.

ஒவ்வொரு செல்லிற்கும் உயிருண்டு
என்றால்..
கோடி உயிர்களின் கூட்டுத்தொகுப்பன்றோ நான்.

ஒற்றை செல்லுக்குள் தனித்தனியாய்
இயங்கும் நியுக்லசும் மைட்ரோக் கான்டிரியாவும் நானோ?
அதில்
மரபுகளை சுமந்து வரும் நியுக்லஸ் நானா?
தனக்கென்று மரபெழுதும்
மைட்டோக் கான்ரியா நானா?
இரண்டும் சேர்ந்தே கூட்டுக் கலவை நானா?

நான் என்ற ஒருமைக்குள்
புதைந்திருக்கும்
பன்மைகள்.
பற்பல பன்மைகளுடன்.
ஒருமையாகி ஒற்றையாகி
உடைந்து விழுவதுதான்
வாழ்க்கை என்பதோ.?

ஒருமைக்குள் உள்ளடங்கும்
பன்மை நானெனில்
பன்மைக்குள் அடங்கி நிற்கும்
ஒருமைதான்
பரம்பொருளோ..?

புழுக்கள் உண்ண
புலம் பெயரும் பன்மைகள்
மீண்டும் ஒரு ஒருமைக்கனவில்
வெந்துத் தனிந்திடுமோ?

தெளிக்கப் பட்டிருக்கும்
அத்தனை வினாக்களின்
ஒற்றை விடைதானோ
பன்மைக்குள் ஒருமையாகிய
பரம்பொருள் என்பது.
@@@
பெருங்கடல்
....................

எந்த நதி என்று
யாருக்கும் தெரியாமல்
வந்து விழுந்தது மழைத்துளி
….
தரையில் மோதி தன்
நீண்ட பயணத்தை முடித்துக்கொண்ட
பெருங்கடல்
மீண்டும் ஆறாக முயல்கிறது.
பிறவிப் பெருங்கடல்..

சுமை இறக்கிய
மேகங்களை
மேய்த்துக் கொண்டிருக்கிறது
காற்று.
..
மீண்டு வருவோமென்றே
விடைபெற்ற மழைத்துளிகளின்
விலாசம் தேடுகிறது
வானம்.
..
கருவறைக்குள் நுழையும்
சிறு துளியொன்றில்
ஏதோ ஒரு வானத்தின்
எதிர்பார்ப்பும் சேர்ந்தே
பயணிக்கின்றது
..

கடைசி மண்துகளால்
முகடாக்கப்பட்டு
தெளிக்கப்பட்ட
கண்ணீர்துளிகளின்
ஈரம் காயுகையில்
மீண்டும் வானம் பார்த்து
நிற்கும்..
புதைக்கப்பட்ட
அதே நீர்த்துளி.
@@@
இரவுமழை

விழித்தவருக்கு  மட்டுமே தெரியும்
இரவுமழை எத்தனை அழகென்று.
…...
காற்றுத் தீண்டிட
சாளரங்கள் இல்லாதிருந்தால்
இரவுமழை
எனக்கானதாகி இருக்காது..
…..
அலைநடுவில் தத்தளிக்கும்
சிறுபடகை போல்
மேகங்களுக்கிடையில்
அரைநிலவு.


மின்னல்களுக்கிடையில்
மேகம் வரைகின்ற
ஓவியங்கள்.
….
தெருவாசல் சோடியம் விளக்கில்
பொன்னென பூமியில் சிதறும்
சிறு சிறு துளிகளை நசுக்க

பாதங்களும் இல்லை.
பார்வைகளும் இல்லை.
****
மழையெனும் நூலில்
தைக்கப்படுகின்றது
பிரபஞ்சம்
****
இரவின் தூக்கத்தை
கலைக்கும்
துளிகளின் இசைகள்..
..
கூரைகளில் துளிகளின்
முத்தச்சத்தத்தில்
நாணித் தலைசாய்க்கும்
மழைக்கொதுங்கிய
சிறுபறவை..
..
நடைபாதையில் உறங்கிய
யாசகன் ஒருவனுக்கு
எப்படி இருக்கும் இப்பெருமழை?
,,,
ஒதுங்க அழைக்கும்
ஒருத்தி
ஒதுங்க இடம் தேடுகிறாள்
இரக்கமற்ற மழைக்கும்
அவள் முந்தானை
தெரிந்திருக்கிறது போலும்.
,,,

செம்புலம் பெயர்ந்தும்
சாம்பல்  நீறென சாறென
ஓடும் மழைநீர்.
.
மேலும் மழையை
அழகாக்கி கொண்டிருந்தது
சட்டென நிகழ்ந்த
மின்வெட்டு.
இப்போது மின்னல் வெட்டியது.
இன்னும் அழகானது
அவசியமுமானது.

சாலையோரத்தில்
ஒதுங்கி நின்றபடி
வீடுபேறுக்காக
காத்திருந்த பொழுதுகளும்
தவத்தில் சேருமா என்ன?

இரவு மழை வினாக்களோடு
இதயத்திலும் தூறலிட துவங்கியது
உன்னினைவுகளும்
இந்நேரந்தான்
வழிந்தோட வேண்டுமா?
..
உள்ளும் வெளியும்
மழையென்றானப்பின்
தொப்பலாக நனைந்தே விடுகிறேன்
விழியால் ஒருபுறம்
மழைத்துளியால் மறுபுறம்..
@@@
காத்திருப்புகள்

தவமிருக்கின்றன
வெற்றிக்கோடுகள்
தனைத் தாண்டும்
வீரனுக்காக

மடுவில் சுரந்த
தேன்துளி
உலர்வதற்கு முன்
வந்தடையுமா
வண்ணத்துப் பூச்சி?…
..
எழுத்துக்குள்
வந்தமராக் கவிதைகளை
பற்றித்தான்
எண்ணிக் கொண்டிருக்கின்றன
காகிதங்கள்.
..
இந்த மழையிலும்
உயிர்க்க வில்லை
ஈசல்,
தேம்பிக் கொண்டிருக்கிறது
மழை

ஒரு நாளுக்கான
பல்லாண்டு காத்திருப்புகள்
அந்த
"ஒற்றை நாளுக்கானது"
மட்டுமல்ல.


முகரப்படாது
புறக்கணிக்கப்பட்ட
மழைக்கு முன்னான
மண்வாசம்
இப்போது..
எட்டிப் பார்ப்பது கூட
இல்லை..
@@@
மனம்

மனதின் மீது
கல்லெறிகிறது
மவுனம்.
சலனத்தோடு
அலைஅலையாய்
பரவும் நினைவுகள்
தன் இருப்பை
உணர்ந்து உயிர்க்கின்றது
மனம்.

மீண்டும்..
உயிர்ப்பை உறுதி செய்ய
கல்லெறிகிறது
மவுனம்.
..

எறியப்பட்ட கல்லொன்றில்
கலைகிறது மரம்

சிதறுகின்றன தேனீக்கள்.
மறுபுறம்
சிறகடிக்கின்றன பறவைகள்.
காயம்பட்ட தேனடைகளில்
இருந்து
ஒழுகும் துளிகளை
எண்ணுவதா?

உடைபட்ட கூட்டி ன்
முட்டை ஓடுகளில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
துளிகளை எண்ணுவதா.?

அமைதி இழந்த
ஒற்றை மரத்தில் தான்
எத்தனை குமுறல்கள்..

ஓரத்தில் விழுந்து
வேடிக்கைப் பார்த்தது
வீசப்பட்ட
அச்சிறுகல்..
மீண்டும் ஒரு விரலுக்காய்
தவமிருக்க துவங்கியது.

வானில் பறக்கும்
ஏக்கம் அதற்கு.
...

இத்தனைக்கும் இடையில்
மரத்தின் அடியில்
சிலையாகிக் கொண்டிருந்தது
இன்னொரு கல்..
ஆசை துறந்த அக்கல்…
@@@
நீர்வழிப்படூஉம்

ஆற்றின்
அலைகளின் சிறுசிறு
வளைவுகளில்
துள்ளிக் குதித்து நீந்தும்
பூக்களின் மீது
பயணித்துக் கொண்டிருக்கும்
எழுத்துக்களை
கவிதை என்று
கரைத்து விடுவதில்லை நான்.

நீந்திக் கொண்டிருக்கும்
பூக்களின் மீது..
காத்துக் கொண்டிருந்த
பாறையின் சிறு கல்லொன்று
தெறித்து விட்ட திவலையை
பத்திரமாக ஏந்திக் கொண்டேதான்
நீந்துகின்றன பூக்கள்..

ஒட்டிக் கொண்டிருந்த
திவலைகள்
உடைந்துவிடக் கூடாதென்ற
அக்கறையோடு
அணைத்துக் கொள்கின்றன
எழுத்துக்கள்.
கவிதை என்று ஒரு ஏட்டுக்குள்
கட்டப்படக்கூடாதென்றே
கடல் நோக்கி பயணிக்கின்றன
எழுத்துக்கள்.

ஏதோ ஒரு மலைமுகட்டில்
வெளிச்சத்திற்கு வெட்கியோ
முகிலென்றின் வருடலில்
மெய்ச்சிலிர்த்தோ
உதிர்ந்து விழுந்த
மலர் தான் அதுவென்று
உறுதியாக ஒப்புவிக்கின்றன
எழுத்துக்கள்.

ஆற்றோரங்களில்
நீ வரும்போதெல்லாம்
அந்த எழுத்துக்களின்
பெருமூச்சை
அது
உச்சரிக்கும் கொண்டே இருக்கும்
மலர்களின்  கதைகளை
கட்டாயம்..நீ
செவிமடுப்பாய் என்றே..
கவிதையாகி விடாமல்
பாதுகாத்து
அனுப்பி வைக்கிறேன்..
கட்டாயம் ஒரு முறை
செவிமடுத்து விடு
அந்த காதல் கதையை.

@@@

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

நிஷா வெங்கட்


0   646   0  
June 2021

அழ. இரஜினிகாந்தன்


0   931   0  
September 2018

தங்கராஜ் பழநி


0   801   0  
January 2022

அஸிஸ் எம் பாயிஸ்


0   433   0  
December 2022

மா.காளிதாஸ்


0   914   0  
April 2020