logo

கவிச்சுடர் விருது


இந்த மாதத்திற்கான படைப்பின் கவிச்சுடர் விருதினை கோபி செட்டி பாளையம் அயலூர் கிராமம் மல்லிபாளையம் ஊரை சேர்ந்த கவிஞர் சே. தண்டபாணி தென்ற்ல் அவர்கள் பெறுகிறார் என்பதை மகிழ்வுடன் அறிவிப்பு செய்கிறோம்.

நவீன சிந்தனைகளுடன் புதுக்கவிதை வடிக்கும் கவிஞர் அவர்கள்  நுண்ணுயிரியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். இவரது கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியன எல்லாம் நிறைய அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. இது தவிர வினாடிவினா, நாடகம், தனி-நடிப்பு, paper,poster presentation, petri art, rangoli, dumb charades, போன்ற பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட பரிசுகள் பெற்றுள்ளார். 

கல்லூரி காலத்திலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிய கவிஞர்,
1. நிர்மலா கல்லூரி கோவை- பாரதிவிழா- கவிதையில்-மாநில அளவில் முதலிடம்- பாரதி கிருஷ்ணகுமாரிடம் பரிசும் தொகையும்.
2. தமிழ் வளர்ச்சித்துறை-கட்டுரை- மாவட்ட அளவில் முதலிடம்
3. மதுரை மருத்துவக் கல்லூரி- ஹைக்கூ கவிதைப்போட்டியில் முதலிடம்
4. பெண்கள்தினம்- தமுஎகச திருச்சி-கவிதைப்போட்டி மூன்றாமிடம்
5. நட்சத்திரக் கவிஞர் விருது- தமிழன்பன், பிறைசூடன், பிருந்தாசாரதி ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டு நக்கீரன் -இனிய உதயம் வழங்கியது
6. மட்குண்ணிகள் -அறிவியல் சிறுகதைக்கு வானதி விருது
7. நூல் அறிமுகம் - அந்திமழையில் சிறப்புப் பரிசு
8. படைப்பு குழுமம் நடத்திய வேர்த்திரள், கை கழுவிய காலம்-சிறப்புப் பரிசுகள்
என்று பல விருதுகளும் பரிசுகளும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இவரது நூல்களளாக, பிறை பதிப்பகம் வெளியிட்டில் லோலாயம் என்ற சிறுகதைத் தொகுப்பு ஒன்றும்  ஜீன் திருத்தம் என்ற அறிவியல் நூல் ஒன்றும் கிண்டிலில் கிடைக்கிறது
மேலும் கிண்டிலில் , வைரஸ்களாகிய நாம் - கொரோனா வைரஸ்களின் கதை என்ற நூல்களும் வெளியாகியுள்ளன. இவை வைரஸ்கள் குறித்து விரிவாக அலசும் நூலாகும். 

இவரது கவிதைகள் சற்று புரியாத் தன்மையாக வெளிப்பட்டாலும், அடர்த்தி மிகுந்திருக்கும். அரூபக் கூறுகளில் அமையும் இவரது வார்த்தையுக்திகள், இவரது கவிதைகளின் அடர்த்தியை மேலும் செழுமைப் படுத்துகிறது என்று சொல்லலாம். இனி இவரது கவிதைகள் சிலவற்றை காண்போம். 
..........        ........ .......

உயிரின் நெருக்கமாக இருப்பவர்கள் உடலின் அங்கங்களில் ஒன்றாகவே திகழ்வார்கள் என்பதுதான் இயற்கை நியதி. இங்கும் கவிஞர் தன் நெருக்கமான ஒருவரை தனது ஒவ்வொரு கவிதைகளில் ஏதாவதொரு சொல்லுக்குள் மறைமுகமாக மறைத்து வைப்பதாக சொல்கிறார். அவர் எவ்வளவு முக்கியமானவர் என்றால், நினைவுப் பாதையில் வருவோரெல்லாம் தன் கவிதையின் நிழலில் நிற்க, முக்கியமான அவர் மட்டும் மரத்தின் கிளைகளாக மாறி கைகளை அசைப்பதாக சொல்லி கவிதையை நிறைவு செய்கிறார்!


உயிர்த்தெழும்
ஒவ்வொரு கவிதையிலும்
எதாவதொரு
சொல்லுக்குள்
உன்னைப் பூட்டி வைத்திருக்கிறேன்.
நினைவுப் பாதைக்குள்
வருவோர்
நிழலில் நிற்கின்றனர்
மரத்தின் கிளைகளாக
உன் கைகளை
அசைத்தபடியே
நிறைவடைகிறது இக்கவிதை

______________________
 காதல் என்பதே நினைவுகளை சுமக்கும் ஓர் அழகியல். அதில் பிரிவு என்பதும் கூட கசப்பைத் தோய்த்த இனிப்பாகவே மாறிவிடும். இங்கே கவிஞர் காதல் நினைவை சமைக்கத் தொடங்குகிறார். வித்தியாசமாக இருக்கிறது அல்லவா! நினைவை எப்படி சமைக்கிறார் பாருங்கள் ... நீண்ட தனிமை தேவையாம்! ஒருமையாக நிற்கும் தனிமையை விறகாக வைத்து எரிக்க, அதில் கருகல் வாசனை வரும், பின்னர் பிரிவின் கண்ணீரைப் பதனமாக கலந்து அதில் விளாவினால் மழை பேதம் இல்லாத அன்பு கிடைக்குமாம்! இதோ கவிதை...

தற்சமயம்
நினைவைச் சமைத்தல்
சற்றே நீண்ட தனிமை
பின்பு ஒருமை விறகு
வெந்தபின்
கருகல்
கண்ணீர்
விளாவி பதனமாக
இறக்கியபின்
தெரியப்படாத நம் அன்பில்
ஏது
மழைப்பேதம்

-____________________

காதல் என்பது இனம் கடந்தது, மொழிக் கடந்தது என்றாலும், சாதிய வன்மங்கள் அதை வெட்ட அருவாளும் கொள்ளிக் கட்டைகளுடன்தான் திரிகிறது என்பது கசப்பான உண்மையும் கூட. சாதியைக் கடந்து காதலிப்பவள் குற்றவாளி ஆகிவிடுகிறாள்! இங்கும் அப்படிதான் ஒருவளை பழிக்காரியாக்கி கொன்று எரித்துவிடுகிறார்கள். ஆனால் அவளை எரிக்கும் நெருப்பு மதம், சாதி பார்ப்பதில்லை என்பதை கவிஞர் ஏதுமற்ற நெருப்பு என்ற ஒற்றைச் சொல்லில் அதனை அடக்கிவிடுகிறார். அப்படி எரிந்து காற்றாகி கலப்பவளை அவளின் காதலன் இப்போது மூக்கு வழியாக முழுமையாகத் தின்று இதயத்திற்குள் கடத்தி உயிர் கொடுக்கிறான்! அவள் இப்போது உயிருடன் இருப்பதால் , காதலனும் உயிரோடு இருக்கிறானாம்! இதோ அவர்களின் க(வி)தை!



குற்றங்களின் சாவிகளால்
நிரம்பியவளை
ஏதுமற்ற நெருப்பிற்குள் பூட்டி வைத்தார்கள்.
கட்டையைத் தின்று
வெளிக் கடிகைக்குள் மணல் காற்றாகி
மிதக்கத் துவங்கினாள்.
இம்முறை
மூக்குவழி தின்னத் துவங்கினான்.
நுரையீரல் வழி இதயம் சென்று
திசைமாற்றிய
நல்ல குருதியில்
அவள் உயிருடனிருந்தாள்.
அதனால் அவனுக்கும் உயிர் இருந்தது.

-_______________________
இதயத்திலிருந்து உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்தக் குழாய்கள், மகா தமனி (ஆர்ட்டெரி) எனப்படுகிறது. அப்படிப்பட்ட மகாதமனியின் குருதியில் மிதக்கும் மரம் என்றாகியவனின் சுவாசம் அவளையே போய் சேர்வதால் காதல் பச்சையம் கட்டுகிறது! 

ஆரிக்கிளில் கிளரும்
மகாதமனியின் குருதியில்
மிதந்திருக்கும்
ஓர் மரத்தின் சுவாசத்தை
உனக்குக்
கொடுக்கும் தருணம்
மிக்க அருகாமையை இலைகளில்
பச்சையமாக்கி வைத்திருக்கும்
நினைவுகள்
_________________________

கணிதவியலில் ஒரு குடி அடிமையின் நிகழ்வை பிரித்து வைக்கும் கவிஞர், அவர்களின்  தேர்வுக்கான தேர்வும் பேப்பரும் வீட்டில் இருக்கும் மகளிடம் இருப்பதாக உரைக்கும் கவிதை! 

குவாட்டர் பாட்டிலின்
பின்னணியில்
ஒளிரும் வானவில்லை
செவ்வகம் செவ்வகமாக
பெயர்த்தெடுத்து
நாசமாய்ப் போவதின்
பரப்பளவை சுற்றவுக்குத் திருகித் திருகி
வளைந்துபோன கரங்களைக் காம்பஸாக்கி
காலை ஊன்ற முயற்சித்துக்
கொண்டிருந்தார்கள்
தேர்வும் பேப்பரும்
வீட்டிலிருக்கும்
மகளிடமிருந்தது
-_______________________

அறிவியல் ஆர்வமும், படிம அரூபங்களில் நுழையும் நேர்த்தியுமாய் மிளிரும் கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:


மனிதர்களைக் கழித்த
கடவுளின் நோட்டு
திருடப்படுகையில்தான்
அவரவர்
கைப்பேசியில் பெண்களாகியிருந்தார்கள்

டாலடித்த தோழிகளின் முகத்தில்
குதித்த இதயச்சிவப்பின்
ஹீமோகுளோபினை
கதிர் அருவாளாக்கிய ஜீன்கள்
மனிதனுக்கானவையே

இருபால் ஊற்றிக் கிடந்த பொது இடங்களில் முகத்தை திருப்பியவர்களின் பிள்ளைகளின் பெயரில்
இன்னுமொரு நேர்த்திக்கடன்
மீதமிருந்தது

கணிதவியலை மறந்துபோன
கடவுளின் நினைவு நட்சத்திரங்களில்
மனிதப் பிறப்பின் வர்க்கமூலம் மிளிர
ரசிகக்கூட்ட ஆரவாரம்
காதைப் பிளக்க
சந்தடி நெரிசலைத் துளைத்து
வளர்ந்த கையொன்று
தற்போது
கடவுளின் ஜட்டியை இழுத்தது..

----




சே தண்டபாணி தென்றல்



கை கழுவிய காலம்

தரித்த வேலிமுள் தோண்டிய பள்ளங்களில் ததும்பும் ரத்த அணுக்களின் உறைதலில் திரளும் ரணம் பிரியட்ஸ் பேடின் நவகிரக சுற்றுகளுக்கு நொடிமுள்ளின் பதியப்படாத சுவடுகளை எண்ணி இன்டகரல் கழுத்துக்கு மணியடிக்கும்.

பூனைத் தொட்டியில் மீந்த பழுத்த அரிசியின் சிரித்த முகத்தை அலாசியபின் தீப்பற்றவைத்தல் மீயாவ் அலாரத்தின் வால்யூமைக் கொஞ்சம் குறைக்கும்.

புரட்டாசி மழையின் பசுங்கூந்தலைத் தின்றபின் நடுக்காட்டுப் பிரசவத்தின் குட்டிகள் கொடாப்பை நோக்கி சூடு தணியாது இரண்டிரண்டாக இரண்டு நடையில் நான்கு நேர்கோடுகளின் ஆறு வாய்களும் நிறையவே விழுங்கிவிட்டன.

பாசம் வாழும் கழுவப்படாத குடத்தில் மீந்த மொடக்குகளை அதிகரிக்கும் பொருட்டு அவற்றை நீண்ட நேரம் தூரியாட வைக்கனும்.

மியாவ்..., ம்மே......, ம்ம்மா....அதிகரித்துவிட்ட நாளொன்றில் இறங்கும் சலைன் பிறந்த கடலை வீட்டுக்குத் திருப்புவது பற்றிய யோசனை மட்டும்தான் நீர்க்கடிகாரம்போல் முன்னும் பின்னும் நெளிகிறது.

----





திருநீரில் இரண்டு தப்பி
மீந்தது போன்ற
சாலை
ஒரு தற்காலிக நகரத்தைக்
கொண்டுவந்து பொட்டு
வைத்திருக்கிறது.
அன்றாடம் செலவுக்காக
வாய் பிளக்கும்
மூட்டைப் பூச்சிகளால்
அவன் நிரம்பியிருக்கிறான்.
உறிஞ்சி மீந்த பாலை
சற்றேனும் காற்றின் அவரத்தை தணிக்கக் கோருகிறது.
நிரம்பி நெளியும் சாக்குகள்
அவ்வப்போது அங்கு
வருவதும் போவதும்
பல்லுள்ள கொசுக்களை நினைவுபடுத்துகிறது
இருவேறு உயிர்களின்
ரத்தங்கள்
தொடர்சூட்டால் வெளிறி வெளிறி
அவ்வப்போது
அம்மாவாசையற்ற போதும்
தோலுறிக்கின்றன
காலையில் சீரற்ற ஒழுங்கில் தொங்கவைத்த
வெண் முறுக்குகளை
கொத்தும் குருவிகளுக்கு
யாரேனும் சொல்லிக் கொடுப்பார்களா?
இங்கு முறுக்கு மற்றும்
சூடான டீ கிடைக்கும்
--




இந்தியன்
வெள்ளைக்காரனாகிறான்
------------------------

குறிஞ்சியெனும்
குறியீட்டினில் பையப் பைய
ஏறுகிறது கறுஞ்சர்ப்பம்
கூட்டுக் குடும்பமாய்
விதவித பாக்கெட்டுகளை
கட்டுச்சோறு கட்டிக்கொண்டு
உருளைத் தடியூணி
ஏற எத்தனிக்கின்ற
பேருந்தில் மழலையொன்று
புன்னகையுடன்
பாப்கார்னையும்
படையலாக்கி செல்கிறது
பூரிப்பில் பாக்கெட்டை தன்வசப்படுத்திய
வானரத்தின் மௌனம்
உச்சரிக்கிறது
"இதென்னடாது புதுசா இருக்கு"
புராதனத்தை வாயில் சொருகி
இருப்பிடத்தைச் சேர்ந்தவர்கள்
வெள்ளைக்காரனை விரட்டியடித்தோமென
மெச்சுவதில் தற்கேவலம்
உதிக்கிறது
அவன் ஊட்டி
வளர்த்துச் சென்ற
பூங்காவின்மூலமாய்;
சட்டை செய்யாது
போவோர் வருவோரையும்
உணர்வற்ற வாகனப்
பயணிகளையும் திரும்பிப்
பார்க்க வைத்த மலைகளின்
இளவரசி கொண்டையூசி
குத்திக் கொண்டிருக்க
பறந்து வந்த நெகிழிப்
பாடை அங்கங்கு
கிடக்க அதனுள்
மறைந்திருந்தது
நாளை பிணமாகும்
மலையின் உடல்
-------
-------
வனம் காப்போம்
பதாகை பதிந்த
கடையிலிருந்த ஆதி உயிர்களின்
மூத்திரத்தைக்
குடித்தபடி விரையும்
அஜீரண வாகனங்கள்
நிரம்பிய சாலையோர
புளியமரத்தில்
தொங்கும் டெட்டிபியரின்
உரிமையாளராய்
அமர்ந்திருக்கும் அசோகருக்குச்
சொந்தமாகியிருக்கிறது
யாரோ நாகரீகம்
பார்த்து வீசிய
நடைபயணம்
--
-சே. தண்டபாணி தென்றல்



------

மேட்டிலிருந்த பூலப்பூக்களிலிருந்து
நழுவும் அதிகாலை
முழு நாளையும்
மதியமாக்கி வைத்திருக்கிறது
வான்படர் கிளைகளை
புதிதாக பள்ளி சேர்ந்த சிறுமியின்
நோட்டில் வாட்டர் கலராகப்
பார்க்கிறேன்
விலங்கு ஆர்வலர்களுக்குத் தெரியாமல் சாட்ரூமுக்குள் வளர்ந்து கொண்டிருக்கிறது
அணில்கள் சரணாலயம்
கிணற்றின் தொண்டக்குழிக்குள்
ஒரு சிறு கல்லை
வீசுகிறேன்
எனது பால்யம் சலக்கென
மிதந்து வருவதை
நினைப்பதற்குள்
சதக்கென
எதிர்காலம்
வெறுமையின் ஓசைக்குள்
தன்னை
அடைத்துக் கொண்டது
--
-சே.தண்டபாணி தென்றல்

------

நிலம் கொத்திப் பறவை
--------------------
பனை மரத்தின் ஓலைகளால்
கட்டப்பட்டவை
அப்பறவைகளின்
கூடுகள்

குரங்குகள் கிழிக்கும் தூக்கணாங்குருவியின் சாதுர்யத்தில்
அவைகள் வசதியின்மையைக்
கிழிக்காமல் பார்த்துக் கொண்டன

பறவைகளின் இரண்டு இறப்பட்டைகளுக்கும் தலா ஐந்தே சிறகுகள்
அவையாவும் அலகுகளை பிடிக்கவே
பழக்கப் பட்டவை

கொத்து மம்முட்டி பிக்கோசு கொந்தாலம்
எனும் விதவித அலகுகளைத்
தனக்குத் தகுந்தாவாறு
ஏதாவதொன்றை மாட்டிக் கொண்டன

அவைகள் விதைக்க ஆயத்தமாகவும்
விதைத்ததில் முளைத்ததை
விட்டுவிட்டு விதைக்காதவை
முளைத்ததை
அகற்றப் பயன்பட்டன

சிலசமயம் அலகுகளின் பிடி அழுத்தம்
சிறகுகளைக் கொஞ்சம்
முளைக்க வைக்கும்

வெளியூர் பறவைகள் வாங்கியது
போக மீந்ததை
இப்பறவைகள் குருதுகளிலும்
குண்ணா மொடாவிலும் அந்த வருசத்துக்காக சேமித்துக் கொண்டன

திடீரென்று
பக்கத்தில் வசதி முளைத்த
பறவைகள் கூர் துப்பாக்கியால் தண்ணீரைக்
குறிவைத்தனர்

அன்றிலிருந்து
பொதுக்கிணறு வறண்டு பாங்கெணறு
என்ற பெயர் பெற்றதும்
பறவைகள் வலசை போக
ஆரம்பித்தன

நகரத்தின் இரைச்சலில்
எலிக்கறியின் மிச்ச உயிரில்
பிளாட்பாரத்தின் மூலை முடுக்குகளில்
சிறு பண்டங்களைக் கையில்
ஏந்தியபடி
தட்டுப்படும் அலகு தொலைத்த
பறவைகள்தான்
ஒருநாளில்
நிலம் கொத்திப் பறவைகள்

---
-சே. தண்டபாணி தென்றல்
-----


தற்சமயம்
நினைவைச் சமைத்தல்
சற்றே நீண்ட தனிமை
பின்பு ஒருமை விறகு
வெந்தபின்
கருகல்
கண்ணீர்
விளாவி பதனமாக
இறக்கியபின்
தெரியப்படாத நம் அன்பில்
ஏது
மழைப்பேதம்
------------------
கால நூலின் முதல் இழைப் பயணத் திரும்பல்
காலண்டரின் செவ்வக நாட்களின் இரட்டைச் ஜடை
காற்றில் மிதந்து உயர்கிறது.
முட்டை பப்ஸ் நோக்கி
குனிகிறேன்.
சூட்டில் பொடிந்ததும்
ஆவியின் விடுதலை
பால்யம் மஞ்சள் கரு.
------------
பானைத்தடத்தின்
ரேகை வழித்தடங்களுக்குள்
பாத்திரங்கள்
உருளும் சப்தம்
நீளும்
இவ்வுலகமயத்தில்
தொலைந்துபோகும் சுலபம்
அவரவர்
தனிமையின்

நினைவுகள் கோர்க்கும்
ப்ரிய மணிச் சட்டம்
வாழ்வின் கடைசி மாற்றம்
பொறுத்துத்திருந்த
இன்மை அமர்ந்த
நிசப்த வெளியில் தடந்தெரியா
பூஜ்ய நிலவை அழைத்துச் செல்வோம்.
மதிப்பாகும் பூஜ்யக் கவிதைக்கு
முன்
பிரிவற்ற எண் நீ.
குறுங்கனவு.


பகலியின் இரவிலி
ஒளியின் திசைவேக பின்னத்தில் உருளும் முடுக்கம்.
இருள் இட்லி பிய்த்து காலை தொட்டுக்க சூரியத் தேங்காய்.
சரிபாதி இருளொளி பூமி
யார் மூஞ்சியைப் பார்க்கும் சூரியன்.

-சே. தண்டபாணி தென்றல்
----

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.